Monday, May 21, 2012

பிரச்சினைகளை வளர்த்தாதீர்கள்!




ண்டைய சீனத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வடக்கு சுங் வம்ச சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது. ஒரு எல்லை மாகாணத்தில் கான் யுவான் (Con Yuon) என்ற அதிகாரி மேயராகப் பொறுப்பேற்ற போது மாகாணத் தலைமையிடத்தில் போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் யாருமே இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவரது அதிகாரிகளை விசாரித்த போது இராணுவமும், போலீஸும் மாகாணத்தின் ஒரு எல்லையில் மூண்ட கலவரத்தை அடக்கச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.


அவர் பொறுப்பேற்ற மூன்றாவது நாளில் இன்னொரு எல்லையில் உள்ள, அவரது மாகாண அதிகார வரம்புக்கு உட்பட்ட, பழங்குடி மக்கள் ஈட்டி, வில் போன்ற ஆயுதங்களுடன் நகர வாயிலில் குவிந்து இருக்கும் செய்தி வந்தது. கான் யுவான் தன் துணை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். துணை அதிகாரிகள் நகரத்தின் பிரதான கதவை இழுத்து மூடி பக்கத்து மாகாணங்களிடம் இருந்து இராணுவ உதவி பெறுவதே உத்தமம் என்றார்கள். அப்படி இராணுவ உதவி வரும் வரை தாக்குப் பிடிக்க முடிந்தால் அது பெரியதொரு அதிர்ஷ்டம், அதைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள்.
கான் யுவான் கேட்டார். “அந்தப் பழங்குடியினர் திடீர் என்று போராடக் காரணம் என்ன?
அவரது துணை அதிகாரிகள் படிப்பறிவற்ற பழங்குடி மக்களுக்கு அதற்கெல்லாம் காரணம் பெரியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள். அற்ப சொற்ப காரணங்களுக்காகக் கூட அவர்கள் போராடத் துணிபவர்கள் என்று சொன்னார்கள். அதனால் முதல் வேலையாகப் பக்கத்து மாகாணங்களில் இருந்து இராணுவ உதவி பெற ஆளனுப்ப அவசரப்படுத்தினார்கள்.


கான் யுவானோ முதலில் பழங்குடி மக்களைச் சந்திக்க ஆளனுப்புவதே சரி என்று சொன்னார்கள். காரணம் அறியாமலேயே அவர்களை அடக்கி போராட்டத்தைத் தோல்வியடையச் செய்தாலும் இது போன்ற புரட்சிகள் மறுபடி வெடிக்க சாத்தியமுண்டு என்பதால் முதலில் யாராவது சென்று அவர்களைச் சந்தித்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளச் சொன்னார். பழங்குடி மக்களைச் சென்று சந்திப்பதில் சிறிதும் நாட்டமில்லாத அவர்கள் அவர் சொல்லுவது யதார்த்தத்திற்கு ஒத்து வராதது என்று கருதினார்கள். யாரும் போவதற்குத் தயங்கினார்கள். ஒரு சிலராகப் போய் பழங்குடியினரைச் சந்திப்பது ஆபத்தானது என்றார்கள்.


அவர்கள் தயக்கத்தைக் கண்ட மேயர் கான் யுவான் தானே சென்று பழங்குடியினரைச் சந்திப்பதாகச் சொன்னார். அவர்கள் அவரைக் கூடுமான வரை தடுக்க முயன்றார்கள். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. துணைக்கு இரண்டு வயதான வேலையாட்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார். அவரது துணை அதிகாரிகள் இந்த முட்டாள் மேயர் திரும்பவும் உயிரோடு திரும்ப மாட்டார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஒரு படையை எதிர்பார்த்திருந்து அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்த பழங்குடி மக்கள் ஒரு தனிமனிதர் குதிரையில் இரு வேலையாட்களுடன் வந்த போது ஆச்சரியப்பட்டார்கள்.


கான் யுவான் அவர்களிடம் சொன்னார். “நான் இந்த மாகாணத்திற்கு புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டவன். உங்களுடைய போராட்டத்திற்குக் காரணத்தை அறிய விரும்புகிறேன். தயவு செய்து தங்கள் தலைவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்


அவர்கள் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. அவர்கள் அவரை அவர்களுடைய தலைவரிடத்தில் அழைத்துச் சென்றார்கள். நகர எல்லையைக் கடந்து காட்டிற்கு பழங்குடியினர் தலைவரை சந்திக்கச் செல்வதில் ஆபத்தை உணர்ந்த அவருடைய வயதான வேலையாட்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி நின்று விட்டார்கள். ஆனால் கான் யுவான் தனியாகவே பழங்குடியினர் தலைவரை சந்திக்க குதிரையில் பயணத்தைத் தொடர்ந்தார்.


பழங்குடியினர் தலைவருக்கும் இவரைக் கண்டவுடன் வியப்பு. அவரிடம் கான் யுவான் சொன்னார். “நான் புதியதாக மேயராக பதவி ஏற்றவன். முறைப்படி தாங்கள் தான் என்னை வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவசர நிலைமை காரணமாக நானே இங்கு வர வேண்டியதாகி விட்டது. பரவாயில்லை. உங்கள் இன மக்கள் திடீர் என்று போராட்டம் நடத்தக் காரணம் என்ன?


அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்த பழங்குடி மக்கள் தலைவர் முந்தைய மேயரின் ஆட்சியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர் நடத்திய முறைகேடுகளையும், பழங்குடி மக்களுக்கு விதித்த அநியாய அதிக வரிகளையும், அதனால் அவர்களுக்கு வரப்போகும் பனிக்காலத்திற்குத் தேவையான உணவின்மையையும், ஆடுமாடுகள் இல்லாததையும் விளக்கினார்.


கான் யுவான் அவர்கள் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்தார். “முந்தைய மேயர் உங்களிடம் அநீதியாக நடந்து கொண்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இப்போது நீங்கள் என் பொறுப்பில் உள்ளவர்கள். உங்களுக்கு நல்லபடியாக வாழ வழி செய்து தருவது என் கடமை. நான் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன். இப்போது இருட்டி விட்டது. அதனால் இன்று உங்களுடன் தங்கி விட்டு நாளை காலை செல்கிறேன். என்னுடன் உங்கள் ஆட்களை அனுப்பினால் அவர்களுடன் உணவுப் பொருள்களையும், கால்நடைகளையும் அனுப்பி வைக்கிறேன்


அன்று அவர்களுள் ஒருவராக அவர்களுடனே தங்கி மறு நாள் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு கான் யுவான் நகரத்திற்குத் திரும்பினார். அவர்களுடன் அவர் வருவதைக் கண்ட அவருடைய துணை அதிகாரிகள் அவரைப் பணயக்கைதியாக அந்தப் பழங்குடியினர் அழைத்து வருவதாக எண்ணிக் கொண்டு அவர்களைத் தாக்க ஏற்பாடுகள் செய்தார்கள். ஆனால் கான் யுவான் அவர்களைத் தடுத்து உண்மையை விளக்கி பல டன்கள் உணவு தானியங்களையும், நூற்றுக் கணக்கான ஆடுமாடுகளையும் அந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அவரைத் தெய்வமாகப் போற்றிய பழங்குடி மக்கள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும், என்ன உதவி அவருக்குத் தேவைப்பட்டாலும் தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்வோம் என்று வாக்குறுதி தந்தனர். அது போலவே அவர் மேயராக இருந்த வரை நன்றியுடன் இருந்தார்கள்.


பல சமயங்களில் பிரச்சினைகளுக்கு உண்மையான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு சரிவர அணுகினாலே அவற்றில் பாதிக்கு மேல் சரியாகி விடும். நேரடியான அறிவு பூர்வமான அணுகுமுறையால் மலை போன்ற பிரச்சினைகளும் நம்மால் சரி செய்யக் கூடிய அளவுக்கு இலகுவாகி விடும். அதே நேரத்தில் சிறிய பிரச்சினைகள் கூட மனிதர்களின் அலட்சியத்தாலும், ஈகோவினாலும், முட்டாள்தனத்தாலும் பூதாகரமாக மாறி விடுவதுண்டு.


இந்த உதாரணத்தில் தன் துணை அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு கான் யுவான் படை திரட்டி அந்தப் பழங்குடி மக்களை ஒடுக்க நினைத்திருந்தால் ஏராளமான உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் நிகழ்ந்திருக்கும். அப்படியே அவர்கள் ஒடுக்கப்பட்டாலும் கூட அது தற்காலிகமாகவே இருந்திருக்கும். சரியான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அரசாங்கத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே என்றும் இருந்திருப்பார்கள். கான் யுவான் தன் தலைமைப் பண்பினாலும், அறிவு கூர்மையாலும் பெரிய பிரச்சினையை சமாளித்ததோடு அவர்களைத் தனக்கு உதவக்கூடிய பெரும்பலமாக ஆக்கிக் கொண்டதில் இராஜதந்திரியாகயாகவும், நல்ல தலைவனாகவும் மாறி விட்டார். அவருடைய துணை அதிகாரிகள் ஆரம்பத்திலும் சரி, கடைசியிலும் சரி தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருந்தாலும் அதை அனுமதிக்காமல் சரியாக பிரச்சினையை கான் யுவான் அணுகியதால் அப்போதைக்கு மட்டுமல்லாமல் பிற்காலத்திலும் பழங்குடி மக்கள் மூலமாக வர முடிந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி அவர் வைத்து விட்டார். 


எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. பல சமயங்களிலும் எதிர்ப்பிற்கு வலுவான நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும். அதை அலட்சியம் செய்வது யாருக்கும் நல்லதல்ல. உண்மையைக் காண மறுப்பதும், ஒரு சூழ்நிலை பிரச்சினையாக மாற அனுமதிப்பதும் முட்டாள்தனம். சிறியதாக இருக்கையில் கையால் கிள்ளி விடுவதை விட்டு விட்டு மரமாக அனுமதித்துப் பின் கஷ்டப்பட்டு கோடாரியால் வெட்டி வீழ்த்துவது அறிவுடமையும் அல்ல, இனிமையானதுமல்ல.


சிந்தித்துப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கோபித்துக் கொதித்தெழுவது எந்தப் பிரச்சினையையும் வளர்த்திக் கொண்டே போகுமே ஒழிய தீர்த்து வைக்காது. எந்தப் பிரச்சினையிலுமே அதன் மூல காரணத்தைத் தெரிந்து கொள்வதும், அதைச் சரி செய்யத் தேவையானதைத் தயக்கமில்லாமல் செய்யத் துணிவதுமே மிக முக்கியம். வேரை அழிக்காமல் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தால் திரும்பத் திரும்ப அதை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.


அதே போல சில பிரச்சினைகளை சுற்றி வளைத்து அணுகாமல் நேரடியாக அணுகினால் அவற்றை சீக்கிரமாகவே தீர்த்து வைக்க முடியும். ஆனால் பிரச்சினைகளால் அதிகம் பாடுபடுவர்கள், பிரச்சினைகளிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள் பிரச்சினையே அவர்களிடம் இந்த நேரடி அணுகுமுறை இல்லாதிருப்பது தான். அவர்கள் எதையும் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசித் தெரிந்து கொள்ளவோ, தெரிவிக்கவோ மாட்டார்கள். இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் மூலமாகவே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். எப்போதுமே சுற்றி வளைத்துப் போகும் கருத்துக்கள் உள்ளது போலவே போய்ச் சேர்வதில்லை. அந்த இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் நேர்மையானவராகவும், நல்ல எண்ணம் கொண்டவராகவும் இல்லா விட்டாலோ அது கண்டிப்பாக பிரச்சினைகள் இன்னும் பெரிதாக்குவதாகவே இருக்கும்.


எனவே பிரச்சினைகளை கான் யுவான் போல அணுகுங்கள். பிரச்சினைகள் தீர்வது மட்டுமல்ல அவை அனுகூலமாக மாறவும் கூடும்.

-என்.கணேசன்


Monday, May 14, 2012

வாழ்க்கைப் பயணத்தில் …



 
வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே!

                   - என்.கணேசன்

Monday, May 7, 2012

ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15
ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு

சிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.

பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.

(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).

சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.  

பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.

கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.

அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மிபோலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.

அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.

அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 

சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.

மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.

ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?

(தொடரும்)

- என்.கணேசன்

Monday, April 30, 2012

கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!




கீதை காட்டும் பாதை 17
கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!

செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம், விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை விளக்க ஆரம்பிக்கிறார்.

கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன் இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும், கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.

ஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன் செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.

தானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும் பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.

செயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன் விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது  முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத  காரியமாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

மனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ஈகோ தான். எது உண்மையான நான் அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ஈகோ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும். அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே அவனை அமைதியடைய விடாது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோவினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோவிற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.

ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று  
பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து  எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.


ப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான்  உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும். (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின் கருத்து இது என்பதை நினைவில் கொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)


அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும்,  ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும்  உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.

அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.

அர்ஜுனா! நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.

ஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.

ஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான். சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை, சுகமும் இல்லை.

இந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால் சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில் நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.

பரதபுத்திரனே! எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு!

உண்மையான நான் என்பது அழிவில்லாத, தனிப்பட்ட அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம். அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும் தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க முடியும்?

முழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில் கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை, மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.

எதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன் சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும். இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

அறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம். ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீறிய ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக் கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள், ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும் கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும் மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.

ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?

இத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்
-          நன்றி:விகடன்

Monday, April 23, 2012

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14

முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.

ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.    

அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.

எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.

எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.

வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.

அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.

(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)

அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக்  கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.

ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?


(தேடல் தொடரும்)

- என்.கணேசன்
    

Monday, April 16, 2012

அட ஆமாயில்ல! 3




கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
                  - போவீ


ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
                                        - தோரோ


உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
                                       - டாமிஸ்டீல்


பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
                                      - ஷேக்ஸ்பியர்


மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
-         கோல்டன்


அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.

-         ஸர் தாமஸ் ப்ரௌன்


அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
-         ஃபீல்டிங்


தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-         போப்


ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
-         பாஸ்கல்


தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
-         ஆல்காட்


அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
-         கோல்டுஸ்மித்

ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
                                         - யங்

தொகுப்பு - என்.கணேசன்
                                 


Monday, April 9, 2012

கோபத்தையும் பயன்படுத்தலாம்!



சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஎன்று திருவள்ளுவர் கூறுவார். பொதுவாக, கோபம் எங்கே எல்லாம் சேர்கிறதோ அங்கேயெல்லாம் அழிவு தான். முக்கியமாய் அழிந்து போவது மன நிம்மதி. அதன் பின் கோபத்தால் உந்தப்பட்டு செய்யும் செயல்கள் எல்லாமே மேலும் அதிக அழிவை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டே தணியும். இது பொது விதி. ஆனால் கோபம் கூட முறையாகப் பயன்படுத்தப்பட்டால் நல்ல மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. அது எப்படி என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

1943ல் ஒரு நாள் அமெரிக்க கருப்பர் இனத்தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), டூப்ளின் நகரில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அட்லாண்டாவிற்கு பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவருடைய ஆசிரியை ஒருத்தியும் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சில வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் போகவே பஸ் டிரைவர் மார்ட்டின் லூதர் கிங்கையும், அவரது ஆசிரியையும் எழுந்து அந்த வெள்ளையர்களுக்கு உட்கார இருக்கையை விட்டுத் தரச் சொன்னார். மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அது அநியாயமாகவும், அவமானம் தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அது அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்ச்சி ஆனதால் அவருடைய ஆசிரியை உடனடியாக எழுந்து விட்டார். மார்ட்டின் லூதர் கிங் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் எழுந்தார். அவர் எழத் தாமதமானதால் பஸ் டிரைவர் அவரைக் கடும் வார்த்தைகளால் திட்டினார். அது அவரை மேலும் கோபமூட்டியது. 90 மைல் தூரத்தை அவர் பஸ்ஸில் நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி தன் சுயசரிதையில் பிறகு எழுதிய போது மார்ட்டின் லூதர் கிங் இப்படி குறிப்பிட்டார். “என் வாழ்வில் நான் மிக அதிக கோபம் கொண்ட நாள் அது. அந்த இரவை என்னால் என்றுமே மறக்க முடியாது”. ஒடுக்கப்படும் கருப்பு இன மக்களுக்காக அவர் குரல் கொடுக்க அந்த நிகழ்ச்சி ஒரு விதையாக அமைந்தது என்றால் அது தவறாகாது.

அந்தக் கோபத்தை அவர் தணித்துக் கொள்ள அவர் பலரும் நாடும் வழிகளை மேற்கொள்ளவில்லை. தானும் கண்டபடி திருப்பி அந்த டிரைவரைத் திட்டவோ, தாக்கவோ முனையவில்லை. ஒரு மத போதகராக வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு அந்த வழிகளில் மனம் செல்லவில்லை. தனிப்பட்ட விதத்தில் அதை எடுத்துக் கொள்ளாமல் கருப்பர்களுக்கு தொடர்ந்து நிகழும் அவமானமாகக் கண்ட அவர் கோபம் அந்த தவறான அநீதியான முறையையே ஒழிக்க வழிகளைத் தேடியது. 1955ல் மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தைத் தலைமை தாங்கி பெருமளவில் நடத்திய அவர் பல எதிர்ப்புகளைக் கண்டார். அரசாங்கம் சின்ன சின்ன வழக்குகளிலும் அவரை சிக்க வைத்து தடை செய்யப்பார்த்தது. அவருடைய சக கருப்பர் தலைவர்களோ அவரது அறப்போராட்டம் பிடிக்காமல் அவரை எதிர்த்தனர்.

இரண்டு பக்கங்களிலும் எதிர்ப்பு அதிகமாக இருந்தது போதாது என்று வெள்ளைத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். 1956 ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பினார்கள் என்றாலும் அவர் கோபம் அதிகரித்தது. கருப்பர்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராக அவரும் மாறி விடும் படியான மனநிலைக்குத் தானும் வந்து விடுமோ என்று கூட சந்தேகப்பட்டதாக அவர் தன் சுய சரிதையில் சொன்னார்.

ஆனால் அந்தக் கோபத்தையும் தனிப்பட்ட விதத்திலும், தனிப்பட்ட மனிதர்கள் மீதும் எடுத்துக் கொள்ளாமல் அப்போதிருந்த சமூக முறையிலேயே குற்றம் கண்ட அவர் அந்த முறையை சமூகத்திலிருந்து அகற்ற போராட்டத்தில் இறங்கினார். அதில் கடைசியில் வெற்றியும் கண்டார். 1964 ஆம் ஆண்டு சத்தியாகிரக வழியில் அவர் அந்த சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி கண்டதற்காக சமாதான நோபல் பரிசு பெற்றார். 1968 ல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதும் அவர் தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதை வரலாறு இன்றும் பாராட்டுகிறது.

(அவருக்கு சத்தியாகிரக வழியில் வழிகாட்டியாக இருந்தவர் நம் மகாத்மா காந்தி. இதை மார்ட்டின் லூதர் கிங் பல முறை குறிப்பிட்டு உள்ளார். மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அதில் பயணித்த போது வெள்ளையரான ஒரு ரயில்வே அதிகாரியால் இறக்கி விடப்பட்டது நினைவிருக்கலாம்.  தன் அறப்போராட்டத்தை தென்னாப்பிரிக்கையில் தொடங்கியதற்கு அந்த நிகழ்ச்சி தான் விதையாக இருந்தது.)

பஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்க வைத்த டிரைவரை வாயிற்கு வந்தபடி திட்டியோ, இறங்கிய பிறகு கல்லெடுத்து எறிந்தோ, பிறகு எதாவது ஒரு வெள்ளையருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தோ தன் கோபத்தை அவர் தீர்த்துக் கொண்டிருந்தால் தனிமனித கோபத்தைத் தீர்த்துக் கொண்ட ஒரு சராசரி மனிதனின் செய்கையாய் போயிருந்திருக்கும். அமெரிக்க கருப்பர்களுக்கு சம உரிமை கிடைத்த சரித்திரம் உருவாகி இருக்காது.

கோபம் நம்முள் பெரியதொரு சக்தியை உருவாக்க வல்லது. உறுதியாகச் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்தது. கோபம் இருக்கும் நேரத்தில் செயல்படாமல் இருப்பது தான் மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அந்தக் கோபமும் நல்ல சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.


இது பெரும் தலைவர்களுக்குத் தான் முடியும் என்பதல்ல, சாதாரண மனிதர்களுக்கும் முடிந்தது தான். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர். அவருக்கு உதவி செய்து வந்தவருடைய மகன் ஒருமுறை அவரிடம் பலர் முன்னிலையில் “எங்கள் தயவில்லாமல் நீங்கள் இருக்க முடியாதுஎன்று சொல்லிக் காட்ட அவருக்கு அது  ரோஷத்தைக் கிளப்பி விட்டது. உங்கள் தயவில்லாமல் உங்களை விட உயர்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுச் சென்றவர் பத்து வருடங்களில் அப்படியே சாதித்தும் காட்டினார். அவருக்குள்ளே சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற  ஒரு வேகத்தை அந்தக் கோபம் கிளப்பி விட்டது போல இருந்தது. சிறிது காலத்தில் அவர் வாழ்க்கை முறையே மாறிப் போனது.  

பல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா?

- என்.கணேசன்