சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 11, 2007

உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்


அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?

- என்.கணேசன்

12 comments:

  1. சத்யகாம ஜாபாலா'வைப் பற்றியெல்லாம் இணையத்தில் எழுத ஆள் இருக்கும் என நினைக்கவில்லை..
    (தெரிந்தும் எனக்கு எழுதத் தோன்றவில்லை,ஆதலால் கூடுதலாக ஒரு ஷொட்டு)
    நல்ல பதிவு !

    ReplyDelete
  2. ஓஹோ உண்மையைப்பேசறதே உயர்ந்த சிந்தனைங்கிறீங்களா? அதுவும் சரிதான்.

    ReplyDelete
  3. கணேசன் சார், அருமையான கட்டுரை. இது போன்ற நல்ல கருத்துகளை எழுதுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  4. //உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே//

    உண்மையை தம் வசதிக்காக திரிக்கிற மறைக்கிற மற்றவாளெல்லாம் சும்மா சொல்லிண்டு திரியறவாள். அது போல இங்கே எத்தனை அலையுதுகள்!

    ReplyDelete
  5. முதல் முறையாக இதை கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
  6. ஜாபாலா வாழ்ந்த இடம்தான் இன்றளவும் ஜபல்பூர் என்று வழங்கப்படுகிறது.

    ReplyDelete
  7. அண்ணே,
    நல்லது கெட்டது சேர்ந்ததுதான் வாழ்க்கை. உபனிஷதத்துலயும் நல்லது இருக்கும்போல. வேலையோட வேலையா நம்ம கவிதை07 க்கு ஒரு விசிட் அடிச்சு கீதைல இருக்கிற நல்ல விஷயங்களை சொல்லலாம்ல‌

    ReplyDelete
  8. உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?.

    அருமையான பகிர்வு .பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அப்பா பேரை இனிஷியலாகப் போட்டுக் கொள்வது இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கூட இந்த வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை, நான் பார்த்தவரை Surname தான் எல்லா இடங்களிலும் உள்ளது. தமிழ்க் காரனுங்களுக்கு இந்த வழக்கத்தை யார் சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியல, அதுக்கேன்னவோ இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. புராணங்களில் தாயின் பெயரை தனது பெயருக்கு பின்னால் போடுவதை விட பெயரையே, இன்னாரது மகன் என்று பொருள் படும்படி வைத்துக் கொள்வதும் உண்டு. உதாரணம்: யசோதா நந்தனா, [யசோதையின் மைந்தன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்], கௌந்தேயா [குந்தியின் மகன் அர்ஜுனன்], ஆஞ்சநேயா [அஞ்சனாவின் மைந்தன்] இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  11. Good post sir. For our children we gave both the initials.

    ReplyDelete
  12. மெய்சிலிர்க்கும் பதிவு.
    Congratulations 🎊 👏 💐

    ReplyDelete