சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, February 20, 2009

ஆன்மீகவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை!

இன்று ஆன்மீகம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைப் பலரும் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்களும், கேலிக்கூத்துகளும் தினம் தினம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மேஜிக் வித்தை காண்பிப்பவர்கள் சக்தி வாய்ந்த சாமியார்களாக வணங்கப்படுகிறார்கள். நான் தான் கடவுள் என்று யார் யாரோ பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அவர்களை ஓடிச் சென்று வணங்க மக்கள் கூட்டம் தயாராகவே இருக்கிறது.

இந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமி. எத்தனையோ மதங்கள் இங்கு ஜனித்திருக்கின்றன. எத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆன்மீகத் தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடை கண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த தேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.

தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும் தூசியே. எல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடைய, அழிய முடிந்த இந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும் கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா?) இதுவே உண்மையான துறவிகள், மகான்களுடைய அளவுகோல். இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.

ஆன்மீகவாதிகளே! இன்றைய பெரும்பாலான சாமியார்கள், கடவுள்களாக பிரகடனப்படுத்திக் கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள். சென்று வணங்குபவர்களிடம் வசூல் செய்பவர்கள், விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும், புகழாசையும் துறக்க முடியாதவர்கள் தானே? நம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்க என்ன இருக்கிறது?

இன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மாயமாக என்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம். இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களும் கூட செய்கிறார்களே. அவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களா? இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள் பக்தர்களாக மாறுவது எதற்காக? அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால் அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக் கொடுத்தால் என்ன? உண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.

சிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள் காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள். மனப்பாடம் செய்வதெல்லாம் பெரிய விஷயமல்ல. இன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள். கஷ்டமான பகுதி வாழ்ந்து காட்டுவது தான். நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று முதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். பின் வணங்க முற்படுங்கள்.

உண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள். படிப்படியாக ஆசைகளை அறுத்தல், சுயநலமொழித்தல், அன்பே வடிவமாதல், விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல், எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின் அடையாளங்கள். இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும், கடவுளாகவும் ஆக்கி விடாதீர்கள். ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானது. எனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.

-என்.கணேசன்

9 comments:

  1. //ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார். //


    அப்படிப் போடுங்க சார் அரிவாள. ஒண்ணா கடவுள் இல்லைங்கற கூட்டம். இல்லையா இந்த ஏமாந்த பக்திக் கூட்டம். உண்மையான ஆன்மிகம் என்னன்னு சொல்ற நிடுநிலையான நேர்மையான கருத்தை நல்லா அடிச்சு சொல்லியிருக்கீங்க. பாராட்டறேன்.

    ReplyDelete
  2. எப்போதும் போல் நல்ல நல்ல கருத்துக்களை வாரி வழங்கி இருக்கின்றீர்கள். மிக அருமை நண்பரே.

    நல்ல கொடுப்பார். கொள்வோம் வாருங்கள் வலையுலகினரே.

    ReplyDelete
  3. //எனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.//

    நம்மில் 99 வீதமானோர்; சோனகிரியாக சாமியார் கொழுக்க உழைக்கிறோம். இதுதான் உண்மை..

    ReplyDelete
  4. நல்ல செய்தி. இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் சென்றடையவேண்டிய செய்தி. தங்களை தொழவும் வழிபடவும் நினைக்கும் யாரும் ஆண்மீகவாதியாக முடியாது.

    ReplyDelete
  5. நல்ல செய்தி. இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் சென்றடையவேண்டிய செய்தி. தங்களை தொழவும் வழிபடவும் நினைக்கும் யாரும் ஆண்மீகவாதியாக முடியாது.

    ReplyDelete
  6. நறுக்கென்று உள்ளது தங்களின் வரிகள். இன்றைய உலகில் மதவாதிகளும், கடவுளின் பெயரால் சதிராடும் கூட்டங்களின் முகத்திரையும் நன்றாக கோடிட்டு காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
  7. தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும் தூசியே.

    Appadi podungga saar. Namma inam IRUNTHA MAATHIRIYUM ILLE, Ippo THARIKETTU pona nilai polum ille.

    Iruka-iruka innum munneranum-athuthaan Azhalu. Aanaal nam nilai thalaikeelaai pindhu iruku.

    Enna aagumo, ethu aagumo nu bayama irukku ingga.

    ReplyDelete
  8. pls visit at www.aanmigakkadal.blogspot.com

    ReplyDelete