சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, June 26, 2009

கஷ்ட காலங்களில் கடவுள்

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால்தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்பகாலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடிசுவடுகளைக் காணமுடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக்கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவமடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை வையாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்டகாலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

- என்.கணேசன்

Monday, June 22, 2009

காது கொடுத்துக் கேளுங்கள்!


டுத்தவர் சொல்வதை முழுவதுமாகக் காது கொடுத்துக் கேட்பது ஒரு அற்புதமான கலை. வார்த்தைகளை மட்டும் கேட்பதல்ல அது. வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள மனதைப் புரிந்து கொள்ளும் கலை அது. பாதி மனதை வேறெங்கோ அலைய விட்டு, சொல்வதை அரைகுறையாகக் கேட்பதல்ல அது. ஒருவர் பேசப் பேச இடைமறித்து நம் கருத்தைச் சொல்லி, பின் நம் அனுபவங்களைச் சொல்லி, அவர் சொல்ல வந்ததை மறக்கடிப்பதல்ல அது. முழு மனதுடன் பொறுமையாக, அமைதியாகக் கேட்கும் கலை அது. ஆனால் இந்தக் கலை இன்று அபூர்வமாகி விட்டது. அதற்குக் காரணம் இரண்டு.

முதலாவதாக இன்றைய மனிதர்களில் பெரும்பாலோருக்கு மிகவும் பற்றாக்குறையாக இருப்பது நேரமே. அவசர வாழ்க்கை ஓட்டத்தில் எதற்குமே அதிக நேரம் இருப்பதில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தை டெலிவிஷன் எடுத்துக் கொள்கிறது. வார்த்தைகள் தந்தி வாசகங்களாக மட்டுமே குடும்பத்தினுள்ளே பேசப்படுகின்றன. அதற்கு மேல் சொல்லவும் நேரமில்லை. கேட்கவும் நேரமில்லை.

அடுத்தது மனப்பற்றாக்குறை. தன்னையே மையப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழும் மனநிலை. அடுத்தவர்களை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தேவை இருப்பதாக எண்ணாத மனோபாவம்.
இதில் இரண்டு வகை உண்டு. சிலர் தாங்களும் தங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தவர்கள் பற்றி கேட்கும் ஆர்வமும் இவர்களுக்கு இருக்காது. இதில் இரண்டாவது வகை
தங்களைப் பற்றியே பேசி ஆனந்தப்படும் மனிதர்கள். இவர்களுக்கு தாங்கள் பேசுவதை அடுத்தவர்கள் கேட்க வேண்டும். அடுத்தவர்கள் பேச ஆரம்பித்தாலோ போரடித்து விடும்.

இந்த இரண்டு பற்றாக்குறைகளையும் விட்டொழிக்கும் போதே கேட்கும் கலை கைகூடுகிறது.

மனிதர்கள் தீவுகள் அல்ல. தீவுகளாக அவர்கள் வாழ்ந்து விடவும் முடியாது. குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவரது மகிழ்ச்சியும், துக்கமும் அடுத்தவரைப் பாதிக்காமல் இருக்க முடியாது. குடும்ப மற்றும் சமூக நலனும், மகிழ்ச்சியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே முக்கியமாக இருக்கிறது. அப்படி புரிந்து கொள்வது ஒருவர் சொல்வதை மற்றவர் காது கொடுத்து மனமாரக் கேட்கும் போதே சாத்தியமாகிறது.
முக்கியமாக ஒருவர் பிரச்சினைகளின் கனம் தாளாமல் தள்ளாடும் போது இந்த 'கேட்கும் கலை' பேருதவியாகி விடுகிறது.

என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொன்னார். அந்தக் குடும்பம் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாத குடும்பம். குடும்பத் தலைவி சமைத்து விட்டு வேலைக்கு சென்று விடுவார். ஒவ்வொருவரும் அவரவர் நேரங்களில் தாங்களே எடுத்து சாப்பிட்டுக் கொண்டு விட்டு அவரவர் அறைக்குள்ளோ, வெளியிலோ சென்று விடுவார்கள். சில நேரங்களில் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அப்போதும் கூட அந்த நிகழ்ச்சிகளைப் பற்றி கருத்துகள் பரிமாறிக் கொள்வதும் கிடையாது.

அந்த வீட்டின் கடைசி பிள்ளை அப்போது தான் ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். நிறைய பணம் கொடுத்து ஒரு பிரபல கல்லூரியில் சேர்த்திருந்தார்கள். சேர்ந்த சில நாட்களில் அவன் ஒருவித மன உளைச்சலுடன் இருந்திருக்கிறான். அவனுடைய தாயார், இரண்டு சகோதரர்கள் அதைக் கவனிக்கக்கூட இல்லை. இரண்டு மூன்று முறை தந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்த போது அவன் வந்து வந்து போயிருக்கிறான். மகனிடம் என்ன விஷயம் என்று தந்தை கேட்டு இருக்கிறார். அவன் ஒரு நிமிடம் தயங்கி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லி இருக்கிறான். சுவாரசியமாக டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த தந்தை அதோடு விட்டிருக்கிறார்.

மறு நாள் அந்த இளைஞன் தூக்கில் தொங்கி இருக்கிறான். கல்லூரியில் ராகிங் கொடுமையாம்.

மகனின் பிணத்தருகே அந்தத் தந்தை கதறியழுதது கல்லையும் கரைய வைக்கும் என்கிறார் என் நண்பர். "ரெண்டு மூணு தடவை என் மகன் என் கிட்ட வந்தானே, ஒரு மாதிரியாய் இருந்தானே, அந்த டிவியை ஆ·ப் செய்துட்டு, வாடா என்னடா விஷயம்னு கேட்டுருந்தா சொல்லியிருப்பானோ என்னவோ?". அது காலம் கடந்து பெற்ற ஞானோதயம் அல்லவா? அந்த வீட்டில், தாய் தந்தை இரண்டு சகோதரர்கள் என நால்வர் கூட இருந்தும் மனம் விட்டுத் தன் பிரச்சினையைச் சொல்ல ஏற்ற நபராக ஒருவரைக் கூட அந்த இளைஞன் எண்ணாததும், அந்த சூழ்நிலையில் குடும்பம் இருந்ததும் துர்ப்பாக்கியமே அல்லவா?

இப்படி இறப்பது மட்டுமே கொடுமையான விஷயம் அல்ல. பல சமயங்களில் இறக்க முடியாமல் இருக்க நேர்வதும் அதை விடப் பெரிய கொடுமையே. அதை மனமும், நேரமும் இருந்தால் நீங்கள் உங்களைச் சுற்றி நிறைய காணலாம். முக்கியமாய் வயதான காலங்களில் அதிகமாய் பணமோ, உணவோ தேவைப்படாமல் எப்போதாவது சில முறையாவது சில நிமிடங்களை நமக்காக நம் குடும்பத்தினர் ஒதுக்க மாட்டார்களா என்று மட்டும் ஏக்கப்படும் முதியவர்களெத்தனை பேரிருக்கிறார்கள்?

இப்படி பிரச்சினைகளைக் கொண்ட இளையவர்கள், இலையுதிர்காலத்தில் முதியவர்கள் என்று மட்டுமல்லாமல் நம்மில் ஒவ்வொருவரும் கூட ஒருசில சந்தர்ப்பங்களில் பொறுமையான காதுகளுக்காக ஏங்கியிருக்கக் கூடும். மனச்சுமைகள் அதிகமாகி விடும் சில நேரங்களில் அவற்றை இறக்கி வைக்கவும், ஆறுதல் பெறவும், நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் நல்ல இதயங்களைத் தேடி நிற்கும் பலவீனமான தருணங்கள் நமக்கும் வருவதுண்டு. அந்த நேரத்தில் நமக்கு ஒருவர் செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதே. பிற்பாடு நாம் சுதாரித்துக் கொண்ட பின் நம் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தி விட்டோமே, சொல்லி இருக்கத் தேவையில்லையோ என்று நம்மில் சிலர் நினைத்தாலும் கூட அந்த இக்கட்டான நேரத்தில் அந்த ஒருவரிடம் உள்ளதைக் கொட்டி நாம் பெற்ற ஆசுவாசத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

எனவே காது கொடுத்துக் கேளுங்கள் நண்பர்களே. மேல் போக்காக அல்லாமல் முழு கவனத்தையும் வைத்து சொல்வதைக் கேளுங்கள். குடும்பத்தினுள்ளேயும், வெளியேயும் பிரச்சினைகளால் நிரம்பி வழியும் மனிதர்கள் ஏதாவது சொல்ல முன் வந்தால் தயவு செய்து நேரம் ஒதுக்கி பொறுமையாகக் கேளுங்கள். முடிவில் அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள். அப்படி இல்லையென்றாலும் நல்ல மனதுடன் ஆத்மார்த்தமாக "எல்லாம் சரியாகி விடும், கடவுள் கண்டிப்பாக ஏதாவது வழி விடுவார்" என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லுங்கள். பல நேரங்களில் அதை விடப் பெரிய உதவி வேறு இருக்க முடியாது.

- என்.கணேசன்


Friday, June 19, 2009

எல்லைகள் இல்லா உலகம்!


மனிதனுடைய சாதனைகளுக்கு எல்லைகள் இல்லை. நேற்றைய எல்லைச்சுவர்கள் இன்றைய மைல்கல்களாய் உருமாறுவதை நாம் காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் எல்லை எனப்படுவது சாதனை மனிதர்களால் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது. எனவே எல்லைகள் நிலையான இடத்தைப் பிடித்து நிற்க ஒருசில மனிதர்கள் அனுமதிப்பதில்லை. அந்த மனிதர்களே சரித்திரத்தின் திருப்புமுனைகளாக இருக்கிறார்கள். பாதைகள் இல்லா பிரதேசங்களில் முதல் பாதையைப் போட்டு மற்றவர்கள் தொடர வாய்ப்பளிக்கிறார்கள். இதுவும் முடியும் என்று செய்து காட்டி வளரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

பிற்காலத்தில் அவர்களை சரித்திரமாகப் போற்றும் உலகம் சமகாலத்தில் அவர்களை அடக்கி வைக்கவே பார்க்கிறது. அவர்கள் சிறகுகளைக் கிள்ளவே முனைகிறது. 'எல்லோரையும் போல் நீயேன் இருக்க மறுக்கிறாய்?' என்று குமுறுகிறது. வித்தியாசப்படுவதை அத்துமீறலாக அர்த்தப்படுத்திக் கொள்கிறது. கண்டிப்பு, விமரிசனம், ஒதுக்கி வைத்தல், ஏளனம் செய்தல் என்று ஏகப்பட்ட கணைகளைத் தொடுத்து மகிழ்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்தும் மனிதர்கள் வாழ்ந்த சுவடில்லாமல் போய் விட, பொருட்படுத்தாமல் சாதிக்கும் மனிதர்களே காலத்தை வென்று சரித்திரமாகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ரிச்சர்டு பாக் (Richard Bach) என்ற எழுத்தாளர் 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' (Jonathan Livingston Seagull) என்ற ஒரு அருமையான புத்தகமாக எழுதியுள்ளார். (முழுமையான அழகுடன் சொல்லப்பட்ட அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இது இணையாகாது என்றாலும் கதைச் சுருக்கம் இது தான்.)

அது ஜொனாதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவையின் கதை. மற்ற எல்லா கடற்பறவைகளும் கரையிலிருந்து பறந்து செல்வதே உணவுக்காகத் தான். அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று மீன்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் வசிப்பிடத்திற்கு வந்து உண்டு வாழ்வது தான் அவை செய்யும் ஒரே வேலை. ஆனால் ஜொனாதனுக்கு நீண்ட தூரங்களுக்குச் செல்வதிலும், பறப்பதில் தன் வேகத்தைக் கூட்டுவதிலும், பறக்கும் போது பல வித்தைகளைச் செய்வதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பறப்பதில் அதற்கு எல்லையில்லாத ஆனந்தம். அதிலும் எத்தனையோ வலிகளும் அசௌகரியங்களும் அதற்கு இல்லாமல் இல்லை. ஆனால் அதையும் மீறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய வித்தையைக் கற்றுக் கொள்வதிலும், பறக்கும் வேகத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொள்வதிலும் அது பேரானந்தத்தைக் கண்டது.

ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் செல்லாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வராமல் ஜொனாதன் இருப்பது மற்ற பறவைகளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. முதலில் ஜொனாதனின் பெற்றோர் மூலம் புத்திமதி சொல்லிப் பார்த்தன. இப்படி வரைமுறை இல்லாமல் தொலைதூரங்களுக்குப் போவதும், மற்றவர்கள் யாரும் செய்யாத வித்தைகளை செய்து பார்ப்பதும் தவறு, முட்டாள்தனம், ஆபத்தானது என்று ஜொனாதனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஜொனாதனுக்கு அவர்கள் சொல்வது சரியே என்று கூடத் தோன்றியது. சில நாட்கள் மற்ற பறவைகளைப் போலவே ஜொனாதனும் இருந்து பார்த்தது. ஆனால் அந்த நாட்களில் அதற்கு சிறிதும் சந்தோஷம் இருக்கவில்லை. ஏதோ இழந்தது போல ஒரு சோகம். அதனால் தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. எல்லைகளை சுருக்கிக் கொள்ளப் பிரியப்படாத ஜொனாதன் ஒரு நாள் மறுபடி தனது பயணத்தை மேற்கொண்டது. எப்போதையும் விட அதிக உயரத்தில் அதிக வேகத்தில் வானில் பறந்தது. கீழே எல்லாமே புள்ளிகளாய் தெரிய, பரந்த ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த அந்தக் கணம் தான் வாழும் கணமாக அதற்குத் தோன்றியது. சூரியாஸ்தமனம் முடிந்து நிறைய நேரம் கழித்துத் திரும்பியது.

அது திரும்பி வந்த போது மற்ற பறவைகள் கூடி அதை ஒதுக்கி வைக்கத் தீர்மானித்தன. பொறுப்பும், கட்டுப்பாடும் இல்லாத ஜொனாதனுக்குத் தங்கள் மத்தியில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தன. 'வெறுமனே உண்டு மடிய நாம் பிறக்கவில்லை. புதிது புதிதாய் கற்கவும், கண்டுபிடிக்கவும், சாதிக்கவும் தான் நாம் பிறந்திருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். நான் என்னவெல்லாம் கற்றிருக்கிறேன், கண்டு பிடித்திருக்கிறேன் என்று காட்டித்தருகிறேன்" என்று ஜொனாதன் மன்றாடியது. மற்ற பறவைகள் அது சொல்லும் எதையும் கேட்கத் தயாராய் இல்லை.

ஜொனாதன் வருத்தத்துடன் மற்ற பறவைகளைப் பிரிந்து சென்றது. அது மீண்டும் தொடுவானத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது. வெகுதூரம் சென்ற பிறகு அது தன்னைக் காட்டிலும் அதிகத் திறமை வாய்ந்த இரண்டு கடற்பறவைகளை சந்தித்தது. அவைகள் அதனிடம் "நீ சிலவற்றைக் கற்றுத் தேர்ந்து விட்டாய். ஆனால் கற்பதற்கு எல்லையில்லை. நீ கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது." என்று சொல்லி இன்னொரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றன. ஜொனாதன் இன்னும் புதிய புதிய திறமைகளைக் கற்றுத் தேர்ந்தது. அந்தக் கூட்டத்திலேயே திறமை மிக்க பறவையாய் ஆனது.

காலம் பல கழிந்த பின் ஒருநாள் அது தன் பழைய பறவைக் கூட்டத்தை வருத்தத்துடன் நினைத்துப் பார்த்தது. இப்போது உள்ள கூட்டத்தின் முன்னேற்றத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பழைய பறவைக் கூட்டத்திடம் இல்லாததை எண்ணிப் பார்த்து ஒரு முறை அங்கு சென்று வருவதாக மற்ற பறவைகளிடம் கூற "உன்னை வெறுத்து ஒதுக்கிய கூட்டத்திற்கு ஏன் செல்கிறாய்?" என்று அவை கேட்டன. "இல்லை. என்னைப் போலவே ஏதாவது ஒரு பறவை அந்த அர்த்தமற்ற வாழ்க்கையில் வெறுப்படைந்து, மாறவும் வழி தெரியாமல், கற்றுக் கொடுக்கவும் ஆளில்லாமல் அங்கு சோர்ந்திருக்கக் கூடும். அப்படியொரு பறவை இருந்தால் அதற்கு உதவ நினைக்கிறேன்"

ஜொனாதன் பழைய கூட்டத்தருகே வந்து பார்த்த போது அப்படியொரு பறவை தனிமைப்படுத்தப்பட்டு தன்னம்பிக்கை இழந்து தாழ்வுமனப்பான்மையோடு சோகமாக இருக்கக் கண்டது. ஜொனாதன் அதை அழைத்துச் சென்று பொறுமையுடன் தான் கற்றதை எல்லாம் சொல்லித் தருகிறது. கடைசியில் அந்தப் பறவையும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து ஒரு பேருண்மையை உணர்கிறது. "உண்மையில் எல்லைகளே இல்லை. மனமே எல்லைகளை உருவாக்குகிறது". இப்படி பற்பல பறவைகளுக்குக் கற்றுத் தர புதியதொரு தலைமுறை உருவாகிறது....

இந்தக் கதையைப் பிரசுரிக்க ஆரம்பத்தில் எந்தப் பிரசுரமும் முன் வரவில்லை. கடைசியில் ஒரு பிரசுரம் பிரசுரிக்க முன்வர இப்புத்தகம் மிகப் பிரபலமாகி பல பதிப்புகள் கண்டது. கதையை நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான ஜொனாதன் கடற்பறவைக்கு ரிச்சர்ட் பாக் அர்ப்பணித்துள்ளார். (To the real Jonathan Seagull, who lives within us all.)

அவர் நம்பும்படி நமக்குள்ளும் ஒரு ஜொனாதன் கடற்பறவை வாழ்கிறதா? நம்முள் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா? உள்ளே ஒலிக்கும் அந்த ஆத்மாவின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா? வாழ்க்கையில் அர்த்தமும் அழகும் காண்கிறோமா? இல்லை, நாம் எந்திரங்களாக மாறி விடுகிறோமா? சமூகம் ஒரே வார்ப்பில் எல்லோரையும் ஒரு போலவே வார்த்து விடச் செய்யும் முயற்சி நம் விஷயத்திலும் வெற்றி பெறுகிறதா?.... சிந்திப்போமா?

- என்.கணேசன்

Monday, June 15, 2009

ஆஹா.... தருணங்கள்.


உங்கள் வாழ்க்கையில் முழு மன நிறைவான தருணங்கள் இருந்திருக்கின்றனவா? வார்த்தைகளால் விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்த தருணங்கள் இருந்திருக்கின்றனவா? அப்படி இருந்திருக்கவில்லை என்றால் நீங்கள் வாழ்க்கையின் சாராம்சத்தை ஒரு போதும் கண்டதில்லை என்றே பொருள். ஏனென்றால் வாழ்க்கையின் உண்மையான அழகே, அர்த்தமே அது போன்ற தருணங்களில் தான் இருக்கிறது.

மிக அற்புதமான இசை வெள்ளத்தில் மூழ்கும் போது அதை நீங்கள் உணர முடியலாம். மிக அருமையான உன்னதமான எழுத்துக்கள் உங்கள் இதயத்தைத் தொடும் போதோ, உங்கள் அறிவுக்கண்ணைத் திறந்து மேலான உண்மைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் போதோ அந்த நிறைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம். மிக அழகான இயற்கையழகில் உங்களை மறந்து லயிக்கும் தருணம் அந்தத் தருணமாக இருக்கலாம். சில உயர்ந்த செயல்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கையில் அந்த உணர்வை நீங்கள் அடைந்திருக்கலாம். சுயநலமில்லாமல் ஒரு சேவை செய்து அதன் பயனடைந்தோரின் மகிழ்ச்சியைக் கண்டு களிக்கும் போது அதை நீங்கள் உணரலாம். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அந்தத் தருணங்கள் உங்கள் இயல்பையும், உங்கள் ரசனையையும் பொறுத்து அமைகின்றன.

இவைகளில் பலவும் பெரிய செலவில்லா தருணங்கள். ஆனால் இவை தரும் அமைதியையும், நிறைவையும், ஆனந்தத்தையும் நீங்கள் எத்தனை செலவு செய்தும் எளிதில் பெற்று விட முடியாது என்பது மட்டும் நிச்சயம். இவை மட்டுமே ஒவ்வொரு மனிதனும் உண்மையாக வாழும் தருணங்கள். வாழ்க்கையின் ஆழத்தைத் தொடும் தருணங்கள் அவை. பிரபஞ்சத்தின் ரகசியங்களை உணரும் தருணங்கள் அவை. அந்தத் தருணங்களில் பூரணத்துவம் நிறைந்திருக்கும். குறைபாடில்லாத, வேண்டுதல் இல்லாத, உயிர்ப்புள்ள முழுமையான தருணங்கள் அவை. தன்னை அடையாளம் காணும் தருணங்கள் அவை. "ஆஹா... இதுவல்லவோ ஆனந்தம்" என்று உணரும் தருணங்கள் அவை.

மனிதர்கள் எந்திரத்தனமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகையில் இந்த ஆஹா... தருணங்களை அனுபவிக்கத் தவறுகிறார்கள். அடுத்தவர் பார்வைக்குத் தெரியாத இந்தக் கணங்களை, அடுத்தவர் பார்வைக்காகவே வாழ்பவர்கள் அடையாளம் காணவே தவறி விடுகிறார்கள் என்று கூட சொல்லலாம். ஒரு அழகான சூரியாஸ்தமனத்தின் அழகில் மனதைப் பறி கொடுத்து மெய் மறந்து நிற்பவன் ஆனந்தத்தை ரசனையே இல்லாதவனுக்குப் புரிய வைக்க முடியாது. ஒரு உன்னதமான படைப்பைப் படைத்த பின் ஒரு கலைஞன் பெறும் நிறைவை அவனுடைய அக்கௌண்டண்டினால் கணக்கில் குறித்துக் கொள்ள முடியாது.

இந்த ஆஹா... தருணங்கள் எல்லாமே குறுகிய காலம் மட்டுமே பெரும்பாலும் தங்குகின்றன என்றாலும் அவை மனிதனுக்கு வாழ்க்கையின் அழகும் அர்த்தமும் இன்னதென்று அடையாளம் காட்டுகின்றன. மீண்டும் இந்த உலகின் ஓட்டத்தில் அவனும் அந்த அமைதியை இழந்து ஓட ஆரம்பித்தாலும் அவன் மனதின் மூலையில் அந்த அமைதியான நிறைவின் நினைவுகள் தங்கி விடுகின்றன. அவன் புத்திசாலியாக இருந்தால் அந்தத் தருணங்களை அடிக்கடி தன் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறான்.

உங்கள் வாழ்நாளில் அப்படி நீங்கள் சந்தித்திருந்த அழகான தருணங்கள் உள்ளனவா என்று நினைவுபடுத்திப் பாருங்கள். அவை தற்செயலாக நடந்திருக்கலாம். அதற்கு நீங்கள் பிறகு அதிக முக்கியத்துவம் தராது மறந்தும் இருக்கலாம். ஒருசில அபூர்வ தருணங்கள் நம் வாழ்வில் திரும்பத் திரும்ப நிகழ்வதில்லை என்றாலும் பெரும்பாலான தருணங்களை நாம் மனம் வைத்தால் திரும்பவும் வரவழைக்க முடியும். நேரமும் முயற்சியும் மட்டுமே அதற்கு முக்கியம். "நான் நிறைய 'பிசி'. எனக்கு நேரமே கிடைப்பதில்லை" என்று நொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்.

அடிக்கடி இது போன்ற அழகான தருணங்களை சந்திக்கும் மனிதன் அதிகமாக மன அழுத்தம், மன உளைச்சல், எந்திரத்தனம், உற்சாகமின்மை, வெறுமை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. நாளடைவில் அவன் அது போன்ற நோய்கள் தீண்ட முடியாத பக்குவமான மன ஆரோக்கியம் பெற்று விடுகின்றான். எனவே இது போன்ற ஆஹா... தருணங்களை உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக அதிகமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முடிவில் நீங்கள் உண்மையாக வாழ்ந்த காலங்கள் அவையாக மட்டுமே இருக்கப் போகின்றன.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Wednesday, June 10, 2009

திட்டமிட்டு வாழுங்கள்


ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்?

ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் வசதி இல்லை. இங்கு ஆரம்பித்த பின் தான் அவ்வப்போது திட்டமிட்டு பயணிக்க வேண்டி இருக்கிறது. சுற்றுலாப் பயணத்தில் பயணம் எப்போது முடிவடையும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் ஆரம்பத்தைப் போல முடிவு தேதியும் நாம் அறியாதது.

மற்றபடி இரண்டு பயணங்களிலும் திட்டம் முக்கியமே. புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவன் அதை அப்படியே பின்பற்றுவானானால் நிறைய இடங்களுக்கு சௌகரியமாகச் சென்று திருப்தியாகத் திரும்ப முடியும். வாழ்க்கைப் பயணத்திலும் திட்டமிட்டு வாழ்ந்தால் நிறைய சாதித்து திருப்தி பெற முடியும். இரண்டு பயணங்களிலும் திட்டமிடாத போது அர்த்தமில்லாமல் அலைகிறோம். அலைபாய்கிறோம். அடுத்தது என்ன என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பத்திலேயே நிறைய காலம் வீணாக்குகிறோம். தேவையில்லாமல் சுற்றுகிறோம். அடுத்தவர்கள் எங்கு போகிறார்களோ நாமும் அங்கு போகிறோம். பயணம் முடியும் போது தான் சாதித்ததை விட அர்த்தமில்லாமல் அலைந்தது அதிகம் என்ற உண்மை சம்மட்டி அடியாக நமக்கு உறைக்கிறது.

எனவே நிறைவாக வாழ விரும்பினால், நிறைய சாதிக்க விரும்பினால் திட்டமிட்டு வாழுங்கள். என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னவாக விரும்புகிறீர்கள் என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கான விடையை ஒட்டி உங்கள் திட்டங்கள் இருக்கட்டும். குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என இரண்டு வகைத் திட்டங்கள் தீட்டுங்கள். இப்போதைய தேவைகளை ஒட்டி உங்கள் குறுகிய காலத் திட்டங்கள் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை ஒட்டி உங்கள் நீண்ட காலத் திட்டம் இருக்கட்டும்.

உங்கள் வாழ்வில் இந்த இரண்டையும் செயல்படுத்தும் விதமாய் உங்கள் நிகழ்கால வார அல்லது மாதத் திட்டங்கள் இருக்கட்டும். இப்போதைய தேவைகளுக்கு 60-75% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குவீர்களானால் நீண்ட காலத் திட்டங்களுக்கு 40-25% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குங்கள். பலரும் இப்போதைய தேவைகளுக்கான அவசரமான வேலைகள் செய்வதிலேயே இருப்பதில் முக்கியமான தங்கள் நீண்ட காலக் கனவுகளுக்கான செயல்களைச் செய்யாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள். 'அலை ஓய்வதெப்போது, தலை முழுகுவதெப்போது' என்பது போல இப்போதைக்கு செய்ய வேண்டிய அவசர வேலைகள் என்றும் ஓய்வதில்லை. அதன் நடுவில் உங்கள் நீண்டகால வாழ்க்கை லட்சியத்திற்கான செயல்களையும் புகுத்தி செய்து கொண்டிருங்கள். குறுகிய காலத் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிக்கையில் நீண்ட கால லட்சியத்திற்கான செயல்களையும் செய்து கொண்டே இருப்போமானால் வாழ்க்கையின் முடிவில் இந்த இரண்டிலுமே நிறைய சாதித்திருப்போம்.

'பல தடவை திட்டம் போட்டு பார்த்து விட்டேன். நினைத்தபடி எதுவுமே நடப்பதில்லை. அதனால் இப்போது திட்டமிடுவதையே விட்டு விட்டேன்' என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நினைக்கிற படி ஒவ்வொன்றும் நடந்து விடுவதில்லை என்பது உண்மையே. எத்தனையோ எதிர்பாராத சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் குறுக்கிடும் போது பல சமயங்களில் திட்டப்படி நடக்க முடியாமல் போவது இயற்கையே.

நமது கவனம் இலக்குகளில் இருக்குமானால் அந்த எதிர்பாராத சூழ்நிலைகளிலும் முடிந்த வரை ஏதாவது செய்வதும், அந்த சூழ்நிலைகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே. அதையும் மீறி திட்டமிட்டு செயல்பட்டாலும் பல விஷயங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த படி ஆவதில்லை என்றால் கூட அதில் பலவற்றை சாதிக்க முடிகிறது, திட்டமே இல்லாமல் போனால் எதையுமே சாதிக்க முடியாமல் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஓடும் வெள்ளத்தில் போடப்பட்ட துரும்பாய் இலக்கில்லாமல் அடித்து செல்லப்படும் நிலை தான் திட்டமிடாத வாழ்க்கையின் முடிவு. கடைசியில் எங்கே போய் சேர்வோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நாம் நினைத்தபடி வாழ வேண்டுமா, இல்லை ஓடும் வெள்ளத்தில் விழுந்த துரும்பாய் எப்படி, எங்கு போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லையா? திட்டமிட்டு வாழ வேண்டுமா, இல்லை திட்டமே தேவை இல்லையா? முடிவு நம் கையில் இருக்கிறது.

-என்.கணேசன்

Friday, June 5, 2009

இறைவனின் கணக்குப் புத்தகம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.

மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.

மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான். மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.

பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான். அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.

அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி "இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்" என்றான்.

எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.

இறைவன் "ஈகோ" இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை. இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.

இராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள். புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.

மனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது. சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.

கட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.

நாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும். ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.

ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.

இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Monday, June 1, 2009

மனம் விட்டுப் பேசுங்கள்!

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

-என்.கணேசன்.