சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 25, 2012

புரிவது போல் வாழ்க்கை!



ஒரு தாவோ கதை!

பழங்கால சீனாவில் இருந்த ஒரு தாவோ ஞானியிடம் பலரும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவார்கள். அவர் அதிகம் பேச மாட்டார். பிரச்சினைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு ஒரு சில சொற்களாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சொற்களில் எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அருமையான பதில் இருக்கும்.

ஒரு நாள் அவரைத் தேடி இரண்டு இளைஞர்கள் வேறு வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள். அவருக்காகக் காத்திருக்கும் போது அவர்கள் பேசிக் கொண்ட போது இருவருடைய பிரச்சினையும் ஒன்று தான் என்பதைக் கண்டு கொண்டார்கள். இருவருக்கும் அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்த வேலை பிடிக்கவில்லை. அவர்களை அவர்களுடைய மேலதிகாரிகள் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. தினமும் மன உளைச்சல் மற்றும் நிம்மதியில்லாத சூழ்நிலை. இதிலிருந்து விடுபடத் தான் அந்த ஞானியிடம் ஆலோசனை கேட்க அவர்கள் வந்திருந்தனர்.

ஞானி அவர்களைச் சந்தித்த போது இருவரும் ஒருசேரத் தங்கள் பிரச்சினையைச் சொன்னார்கள். கேட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் இருந்து விட்டு அவர் சொன்னார். “எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக!

அவ்வளவு தான் பதில். தாவோயிசத்தில் பெரிய விளக்கங்கள் கிடையாது. ஒரு விஷயம் சுட்டிக் காண்பிக்கப்படும். அவ்வளவு தான். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள்.

‘எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக என்ற பதிலை ஆழமாக யோசித்த போது எல்லாமே ஒரு ஜாண் வயிற்றுக்காக என்றும் வேலையே வயிற்றுப் பிழைப்புக்காக என்றும் இருவருக்கும் புரிந்தது.

“உயிர் வாழத் தேவையான சம்பாத்தியத்தைத் தருவது தான் வேலை, அதை விட அதிக முக்கியத்துவம் அதற்குத் தர வேண்டாம் என்று அவர் சொல்கிறார்என்று சொன்னான் ஒரு இளைஞன்.

மற்றவனுக்கும் அது உண்மை என்றே தோன்றியது. “ஆமாம். அதை விட அதிகமாக வேலையில் இருந்து எதிர்பார்க்க ஒன்றும் இல்லை என்றே அவர் சுட்டிக் காட்டுகிறார்என்று அவனும் சொன்னான்.

இருவரும் பிரிந்து சென்றார்கள்.

முதலாம் இளைஞன் வேலையை அந்த அளவுக்கு சீரியஸாக நினைக்க ஒன்றும் இல்லை என்று ஞானி உணர்த்துவதாகப் புரிந்து கொண்டான். உயிர் வாழ வேலை செய்தாக வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்கிற போது சலித்துக் கொண்டும், அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டும் மனவருத்தம் அடைவதில் அர்த்தமில்லை என்று எண்ணிய அவன் அந்த வேலையிலேயே தொடர்ந்து நீடித்தாலும் மனப்பக்குவத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தான். சின்னச் சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொண்டு வேலை செய்தான். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் நாளடைவில் அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஓரு தனி மரியாதையை ஏற்படுத்தியது. அவன் வேலையில் நேர்த்தியும், மேன்மையும் தெரிய ஆரம்பித்தது. உத்தியோக உயர்வுகள் விரைவாகக் கிடைக்க ஆரம்பிக்க சீக்கிரத்திலேயே மேல் நிலைக்கு வந்து விட்டான்.

இரண்டாம் இளைஞன் வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக பிடிக்காத வேலையில் நீடிப்பது தான் பிரச்சினை என்று அந்த ஞானி குறிப்பிடுவதாக நினைத்தான். உயிர் வாழ சம்பாத்தியத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது மரியாதையோ, நிம்மதியோ இல்லாத இடத்தில் தொடர்ந்து கஷ்டப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக வேலையை விட்டு விட்டு சொந்தமாக வியாபாரம் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தான். சுதந்திரமாக, யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் வியாபாரம் செய்வதில் மகிழ்ச்சி இருந்தது. உற்சாகமாகவும், புத்திசாலித்தனமாகவும் அவன் உழைத்ததில் அவன் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடைய ஆரம்பித்தது. அவனும் சீக்கிரத்திலேயே செல்வந்தனாகி விட்டான்.

இருவரும் சில காலம் கழித்து சந்திக்க நேர்ந்தது. இருவருமே வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருந்த போதும் அந்த ஞானி சொன்ன ஒரே உபதேசம் வேறு வேறு விதமாகத் தங்கள் வாழ்க்கையை மாற்றி விட்டதை எண்ணி ஆச்சரியப்பட்டார்கள். இருவர் வாழ்க்கையில் யார் வாழ்க்கை அந்த ஞானி சொன்ன அர்த்தத்தில் அமைந்திருக்கிறது என்று அறிய ஆசைப்பட்டு இருவரும் அந்த ஞானியை மறுபடியும் சந்தித்தார்கள்.

“ஐயா நீங்கள் அன்று எங்களுக்கு உபதேசித்ததின் உண்மையான அர்த்தம் என்ன என்று இன்று எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் உபதேசித்ததின் உண்மைப் பொருளைத் தயவு செய்து தெளிவுபடுத்துங்களேன்

ஞானி சிறிது நேரம் மௌனம் சாதித்து விட்டு சொன்னார். “புரிந்து கொள்வதில் தான் எல்லா வித்தியாசங்களும்!

உண்மையில் இது தான் ஒரே வழி, இது தான் ஒரே தீர்வு என்று எதையும் ஆணித்தரமாகச் சொல்வது சரியல்ல. ஒரே பிரச்சினைக்கு பல தரப்பட்ட தீர்வுகள் இருக்கலாம். இருக்க முடியும். அந்த வழிகளில் தங்களுக்கு அதிகமாகப் பொருந்துகிற ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயணிக்கும் மனிதன் கண்டிப்பாக தன் லட்சியத்தை சிரமமில்லாமல் அடைகிறான். மேலே சொன்ன உதாரணத்தில் தன் மனநிலையை மாற்றிக் கொண்டு அதே வேலையில் முதலாமவன் நீடித்ததும் சரியே. அதே போல தன் மனநிலைக்கு ஒத்துக் கொள்ளாத வேலையை விட்டு விட்டு தன் மனநிலைக்கு ஏற்ற வியாபாரத்தில் இரண்டாமவன் ஈடுபட்டதும் சரியே. இரண்டும் அவர்களை வெற்றிக்கே அழைத்துச் சென்றன.

மனமும், செயலும் ஒன்றுக்கொன்று எதிராக இயங்காமல், ஒத்துப் போகும் போது பிரச்சினை முடிந்து தீர்வு ஆரம்பிக்கிறது. வேறு வேறு விதங்களில் இருவரும் மனம்-செயல் இரண்டும் முரணாக இயங்காமல் பார்த்துக் கொண்டதால் தான் அவர்களால் வெற்றி அடைய முடிந்தது. அந்த நல்லிணக்கம் மனதுக்கும், ஈடுபடுகின்ற தொழிலுக்கும் இடையே இருக்காத வரை எந்த மாற்றமும் நிம்மதியையோ, வெற்றியையோ தராது.

இரண்டாவதாக அவர் சொன்னது போல ஒவ்வொருவர் வாழ்க்கையையும் வித்தியாசப்படுத்துவது அவரவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விதங்களே. புரிந்து கொள்ளும் விதம் சிறிது மாறினாலும் வாழ்க்கையில் அது பெரிய மாறுதலுக்கு வழி வகுக்கிறது.


எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடிவதும், மேலும் சிக்கலாக்குவதும் அதைப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. முன்னதாகவே ஒரு முடிவெடுத்து விட்டு குறுகிய பார்வையில் எதையும் பார்ப்பவன் தவறாகவே புரிந்து கொள்கிறான். தவறாகவே எதையும் ஆக்கியும் விடுகிறான். அப்படிப்பட்டவன் தானாக துளியும் மாறாமல் நின்று தன் விருப்பப்படி அனைத்தையும் மாற்ற முனைகிறான். அனைத்துடனும் பிணக்கம் கொள்கிறான். காலச் சூழலை எதிர்க்கும் அவன் பின்னுக்குத் தள்ளப்படுவதோடு அல்லாமல் நிம்மதியும் இன்றி தவிக்கிறான்.

சரியாகப் புரிந்து கொள்ளும் விதமோ சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு அமைதியாக திறந்த மனதுடன் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிவதில் தான் ஆரம்பிக்கிறது. அப்படிப் பார்க்க முடிபவன் தேவைப்படும் போது சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. உலகத்தோடு அவன் யுத்தம் செய்வதில்லை. அதனுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறான். அனைத்தையும் துணையாக்கிக் கொண்டு அழகாக வாழ்ந்து முன்னேறுகிறான்.

வாழ்க்கையை ஒரு பிரச்சினையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறவன் அப்படியே தன் அனுபவங்களைக் காண்கிறான். சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள், எல்லாமே பிரச்சினைகளாக உருவெடுக்க, அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை துக்கமயமாகவே அமைந்து விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாக சந்திக்கும் விதத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான். ஒவ்வொரு பிரச்சினையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகிறது.


எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.!

- என்.கணேசன்

Monday, June 18, 2012

உண்மையான துறவி யார்?


கீதை காட்டும் பாதை 18
உண்மையான துறவி யார்?

ர்ம யோகத்தைப் பற்றி விவரித்த ஸ்ரீகிருஷ்ணர் கர்மத்தைத் துறந்த ஞானத்தைப் பற்றியும் பெருமையாகவும், உயர்வாகவும் சொல்லக் கேட்ட அர்ஜுனனின் இந்தக் கேள்வியோடு பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயமான கர்மசன்னியாச யோகம் ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். அதோடு கர்மயோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இந்த இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாக, சந்தேகத்திற்கிடமில்லாமல் எனக்கு சொல்

உண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித இயல்பாக இருக்கிறது. செயல் சிறந்தது என்றால் செயலைத் துறந்த ஞானம் சிறந்ததாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு இயற்கையாக வர இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாகச் சொல்லுமாறு பொறுமை இழந்து ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்கிறான்.

பகவத்கீதை குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனனிற்கு மட்டும் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் அல்ல. தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அவ்வப்போது சந்தித்து குழப்பம் அடையும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்பட்டது. அதனாலேயே உண்மையின் பல பரிமாணங்களை அறிவுபூர்வமாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்கும் சிரமத்தை மேற்கொள்கிறார். இரண்டில் ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டதற்கு இரண்டுமே மோட்ச நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்வன என்றாலும் இரண்டில் கர்மயோகமே சிறந்தது என்று சொன்னதோடு இரண்டையுமே விளக்கவும் முற்படுகிறார்.

“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும். தோள் வலிமை படைத்தவனே! அத்தகையவன் இரட்டை நிலைகளை நீக்கியவனாக இருப்பதால் எல்லாத் தளைகளில் இருந்தும் சுகமாக விடுபட்டவனாக இருக்கிறான்.

ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். நன்றாக அறிந்தவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.

புஜபலமிக்கவனே! கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்

இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது. துறவு என்பது மனதில் உண்மையாக நிகழ வேண்டும். அப்படி நிகழாத வரை அந்தத் துறவுத் தோற்றம் கேலிக் கூத்தாகவே இருக்கும்.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

(வஞ்சனை பொருந்திய மனத்தைக் கொண்டவனது பொய் ஒழுக்கத்தைக் கண்டு அவனுள்ளே இருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே ஏளனமாக சிரித்துக் கொள்ளும்).

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான். ஆனால் அது முடியாத விஷயம் என்பதை புத்தியுள்ளவன் சீக்கிரமே கண்டு பிடித்து விட முடியும். விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போதோ, அதற்கு எதிர்மாறானது கிடைக்கின்ற போதோ வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.

இப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு சுகம் காண ஆசைப்படுவது இயற்கைக்கு எதிர்மாறான ஒன்று. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு. இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை.  துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுகானுபவம். இதில் புறத் தோற்றத்தை மட்டும் உருவாக்கி உள்ளுக்குள் எதிர்மாறாக இருப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களை ஏமாற்றுவதை விட அதிகமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். திருவள்ளுவர் கூறுவது போல அவர்களுக்கு உள்ளே ஆட்சி செய்யும் ஐம்புலன்களும் “நீ எங்களுக்கு அடிமைஎன்று எள்ளி நகையாடும் பரிதாப நிலையில் தங்கி இருந்து விடுகிறார்கள்.

உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறும் மனிதர்களும் கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது போல செயல்படாமல், செயல்களால் பரீட்சிக்கப்படாமல் யாரும் ஞானத்தை அடைந்து விட முடியாது. மேலும்
கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.

29 வயது வரை அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தர் இல்லற வாழ்வைத் துறந்து ஆறு வருட ஞானத் தேடலின் முடிவில் தன் 35 வயதில் ஞானோதயம் பெற்றார். அவர் தனக்குக் கிட்டிய ஞானத்தில் அமைதியடைந்து அந்த உயர் உணர்வு நிலையில் அமைதியாக மீதி வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். ஆனால் தான் அடைந்த ஞானத்தை, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தான் கண்ட விடையை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் துடித்தது அவர் கருணை உள்ளம். அரசர்கள், பிரபுக்கள் போன்றோருக்கு மட்டுமல்லாமல் பிச்சைக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் போன்றவர்களுக்கும் கூட உபதேசித்து அவர்களுக்கு உயர் வழியைக் காட்டினார். உடலை விட்டுப் பிரிந்த 80ஆவது வயது வரை தன் போதனைகளைத் தொடர்ந்து உலகிற்குத் தந்து கர்மயோகியாகவே அவர் வாழ்ந்தார்.

அதே போல ஞானத்தைத் தேடி திருவண்ணாமலைக்கு இளமையிலேயே வந்த ரமண மகரிஷி கடைசி வரை ஞான நிலையிலேயே தான் அதிகம் இருந்தார் என்றாலும் அவரால் ஈர்க்கப்பட்டு ஞான வேட்கையால் தேடி வந்த பக்தர்களை அவரது நிர்விகல்ப சமாதிக்குத் தொந்திரவாக எண்ணி துரத்தி விடவோ, அங்கிருந்து ஓடி விடவோ இல்லை.  பலருக்கு ஞான விளக்காக இருந்து வாழ்ந்து மறைந்தார். ஞான உபதேசம் தந்தது மட்டுமல்லாமல் ரமணாஸ்ரமத்தில் காய்கறிகள் நறுக்கும் வேலைகளைக் கூட தானே ஏற்றுக் கொண்டு செய்யும் கர்மயோகியாக அவர் வாழ்ந்தார்.

இவர்கள் தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் பெற்ற ஞானத்தை விலை பேசி மக்களிடம் விற்கவில்லை. பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஞானமடைந்து விட்டதால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் இனி எந்த வேலையும் செய்யத் தேவையற்றவர்கள் என்றும் காட்டிக் கொள்ளவில்லை. செயல்படும் அவசியத்தை உணர்ந்த போது அதிலிருந்து தப்பிக்க முனையவில்லை.

அதே போல ஜனகர் போன்ற கர்மயோகிகளும் உலக வாழ்க்கையில் தங்கள் சுதர்மத்தை முறையாகச் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் மனதளவில் தாமரை இலையில் தண்ணீர் போல பற்றறவர்களாகவே வாழ்ந்தார்கள். கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையில்லாமல் நிறைவாகச் செய்வதும் தன் பகுதி முடிவடையும் போது எந்த வித வருத்தமுமில்லாமல் மேடையில் இருந்து விலகத் தயாராக இருக்கும் விஷயத்தில் ஞானிகளாகவே இருந்தார்கள்.

இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.

பாதை நீளும்....

- என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, June 11, 2012

இன்றைய தேவை கருணைக் கோயில்கள்!



னித சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய் மகனே!என்று இறக்கும் வரை மகனிடம் அந்தத் தந்தை அடிக்கடி சொல்வார். அந்தத் தந்தை ஒரு சாதாரண லஸ்ஸிகடையை நடத்தி வந்தவர். ஆனால் மகன் தேர்ந்தெடுத்த தொழிலோ சூதாட்ட க்ளப். சூதாட்ட க்ளப்பில் ஏராளமான சொத்துக்கள் சேர்த்த மகனின் மனதில் தந்தை சொன்னது நீண்ட நாளுக்கு ஒரு உறுத்தலாக இருந்தது. மனித சமூகத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக மனித சமூகத்தைப் படுகுழியில் தள்ளும் சூதாட்டம் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறோமே என்ற உறுத்தல் நாளாவட்டத்தில் அதிகமாகவே அந்தத் தொழிலிற்கு முழுக்குப் போட்ட மகன் சம்பாதித்த பணத்தை தந்தை சொன்னபடி மனித குலத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்த தீர்மானித்தார். அவர் பெயர் பிக்காபாய் சாதியா. குஜராத்தில் பாவநகர் மாவட்டத்தில் உள்ள பாலிடானா நகரைச் சேர்ந்தவர்.

என்ன செய்வது என்று யோசித்த சாதியா ஒரு கோயில் கட்டத் தீர்மானித்து பாதி கட்டியும் முடித்து விட்டார். அந்த சமயத்தில், 2002ஆம் ஆண்டில், போலீசாரால் கற்பழிக்கப் பட்ட மனநிலை குன்றிய பெண் ஒருத்தியைப் பற்றி பத்திரிக்கைச் செய்தியில் படித்தார். வசிப்பிடம், ஆதரவு இல்லாமல் மனநிலையும் சரியில்லாமல் தெருக்களில் திரியும் மனிதர்களின் நிலைமை அவரை மனதைப் பெரிதும் பாதித்தது. கோயில் வேலையைப் பாதியில் நிறுத்திய சாதியா அதை இது போன்ற ஆதரவில்லாமல் மனநிலை குன்றியவர்களின் காப்பகமாகக் கட்டி முடித்தார். அதைத் தானே பராமரிக்கவும் முடிவு செய்தார்.

கைவிடப்பட்ட அத்தகைய மனநிலை குன்றிய நபர்களைக் காப்பகத்திற்கு அழைத்து வரும் ரிக்‌ஷாக்காரர்களுக்கு ஆரம்பத்தில் நூறு ரூபாய் ஊக்கப் பணமாகவும் கொடுத்தார். இன்று வரை அவரது காப்பகம் 180 நபர்களுக்கு அன்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறது.

மனநிலை குன்றியவர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது மிக மிக கஷ்டமான காரியம். அதற்கு நிறைய பொறுமையும், அதீத அன்பும் தேவை. பிக்காபாய் சாதியாவிடம் பணத்தைப் போலவே அன்பும், பொறுமையும் கூட அதிகமாக இருந்தன.  அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் அவரது தினசரி வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஆனால் அனாதரவாக நின்ற மனநிலை குன்றிய மக்களைத் தன் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்து அவர்களில் பலரைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதிலும், பலரை அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதிலும் கிடைத்த நிறைவைப் பெரியதாக அவர் நினைத்தார். அவர் காப்பகத்திற்கு வந்த 180 பேரில் 60 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் சூரத்தில் நிர்க்கதியாகத் திரிந்த தாரா என்ற பெண்ணை அழைத்து வந்து அவருடைய காப்பகத்தில் சிகிச்சை செய்ததில் இரண்டு வருடம் கழித்து அந்தப் பெண் குணமானார். அவருக்கு மராத்தி மட்டுமே தெரியும். மராத்திய மொழி அறியாத சாதியா அம்மொழி அறிந்த வங்கி அதிகாரி ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணின் சொந்த கிராமம் பூனாவின் அருகில் இருந்த சதாரா என்ற கிராமம் என்பதை அறிந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்திருக்கிறார்.

அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் தலாஜா என்ற நகரத்தில் நிர்வாணமாக, இடது கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மனநிலை குன்றிய பெண் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து விரைந்து சென்று அவளை தன் காப்பகத்திற்கு அழைத்து வந்து, அதிர்ச்சி மனநிலையில் இருந்த அப்பெண்ணிற்கு சிகிச்சை தந்து சில வாரங்களில் அவளைக் குணப்படுத்தி இருக்கிறார். பின் அந்தப் பெண்ணிடம் விலாசம் பெற்று குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். கணவருடன் ஷப்னம் என்ற அந்தப் பெண் நல்ல முறையில் டில்லியில் வாழ்கிறார். ஷப்னம் இப்போதும் அவருடன் போனில் பேசுவதுடன் காப்பகத்திற்கு வந்தும் போகிறாராம்.

(கடந்த 31-05-2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பிக்காபாய் சாதியா பற்றிய கட்டுரை வந்துள்ளது.)

சாதாரண கோயில் கட்ட நினைத்து கருணைக் கோயில் கட்டி முடித்த பிக்காபாய் சாதியாவின் தந்தை இப்போது இருந்திருந்தால் மகனின் சேவையில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 180 பேருக்கு அபயம் கொடுத்து அதில் 60 பேருக்கு மறுவாழ்வும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்றும் மனிதம் இங்கு மரித்து விடவில்லை என்பதைக் காட்டி இருக்கிறார்.

கோயில்கள் அவசியம் தான். ஆனால் ஒரே பகுதியில் ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டிக் கொண்டே போவதைக் காட்டிலும் பிக்காபாய் சாதியா கட்டியது போல காப்பகங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக் கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக் குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

-          என்.கணேசன்


Monday, June 4, 2012

ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 16
ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள்

சிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்ற எகிப்தியர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஞானம் பெற்ற அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அடுத்தவர்களுக்குத் தெரிவிக்கும் அவசியத்தை அவர்கள் உணரவில்லை, அல்லது வரலாற்றை பதிவு செய்வது முக்கியம் என்பதை அவர்கள் முக்கியமாக நினைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பண்டைய கிரேக்க மேதைகள் பலர் ரகசிய தீட்சை பெற்றது அவர்களுடைய வரலாறில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் அபுல்லியஸ் (Apulleius), ப்ளேடோ (Plato), ஹோமர் (Homer), பித்தகோரஸ் (Pythagoras), தேல்ஸ் (Thales), லிகர்கஸ் (Lycurgus), சோலோன் (Solon), லம்ப்லிசஸ் (lamblichus), ப்ரோடஸ் (Produs), ப்ளூடார்க் (Plutarch) மற்றும் ஹெரொடோடஸ் (Herodotus).

வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெரொடோடஸ் ஓசிரிஸ் கோயில் ரகசியங்கள் அனைத்தும் நான் அறிந்தவன் என்றாலும் அவற்றை என் உதடுகள் உச்சரித்து விடாமல் ஆன்மிகப் பிரமாணம் என்னைத் தடுக்கிறதுஎன்றார். மற்றவர்களும் தாங்கள் எடுத்திருந்த ரகசியப் பிரமாணத்தை மீறவில்லை என்றாலும் அவர்களில் சிலர் ரகசிய தீட்சை உண்மையானது, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவர் போன்றவற்றையும் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றிய சொல்லக் கூடிய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.

அபுல்லியஸ் என்ற மேதை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். லத்தினில் பல புத்தகங்கள் எழுதியவர். அவர் படைப்புகளில் முழுமையாக பிற்காலத்தவர்களுக்குக் கிடைத்தது தங்கக் கழுதை (The Golden Ass)என்ற  நாவல். லூசியஸ் என்ற அந்த நாவலின் கதாநாயகன், மேஜிக் மற்றும் ரகசிய வித்தைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன் இளமையிலேயே பல் வேறு இடங்களுக்குச் சென்று கழுதையாக மாறி விடுகிறான். பிறகு பல கஷ்டங்களுக்குப் பிறகு மனிதனாக மாறி அறிய வேண்டிய ரகசியங்களுள் மிக உயர்ந்த ரகசியம் என்று கருதப்பட்ட ஓசிரிஸ் கோயில் ரகசியத்தை அடைந்து உயர்வதாகக் கதை முடிகிறது. அந்த நாவல் நிஜமும் கற்பனையும் சேர்ந்து எழுதப்பட்ட கதை என்றும் அதில் லூசியஸ் பெற்ற ரகசிய தீட்சை அபுல்லியஸின் சொந்த அனுபவமே என்றும் கருதப்படுகிறது.

லூசியஸ் மூலமாக அவர் இப்படி சொல்கிறார். “நான் தினமும் ஓசிரிஸ் கோயிலின் தலைமை குருவை சந்தித்து எனக்கும் தீட்சை தர வேண்டுவேன். அவர் பெற்றோர் குழந்தைகளிற்கு சில விஷயங்களை மறுப்பது போல பொறுமையுடன் மறுப்பார். எந்த உண்மையும் தகுந்த காலம் வராமல் யாருக்கும் உபதேசிக்கப்படுவதில்லை. யாருக்கு எந்த நேரத்தில் தகுந்த உண்மை உபதேசிக்கப்பட வேண்டும் என்பதை தேவதைகள் மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்று சொல்வார்.

அந்தப் பேருண்மைகளை அறியாமல் நாட்டுக்குத் திரும்பக் கூடாது என்று விடாப்பிடியாக நான் அடிக்கடி சென்று வேண்டிய போது அவர் சொன்னார். “அளவுக்கு மீறிய அவசரமும், தாமதமும் மனிதனின் உண்மையான எதிரிகள். அவை இரண்டையும் உன்னிடமிருந்து நீக்குவது மிக முக்கியம். உனக்கு சந்தர்ப்பம் வரும் முன் அவசரப்படுவதும், உனக்கு சந்தர்ப்பம் வரும் போது தயார் நிலையில் இல்லாமல் தாமதிப்பதும் கூடாது. எனவே தகுதிகளை வளர்த்துக் கொண்டு பொறுமையாக, தயாராகக் காத்திரு

இறைவனிடம் அந்த தீட்சைக்காக உளமாரப் பிரார்த்தனை செய்து கொண்டு சில காலம் காத்திருந்த நான் ஒரு நாள் இரவு நேரத்தில் உறக்கத்திலிருந்து விழித்து ஒரு பெரும் உந்துதலால உந்தப்பட்டு நேராக ஓசிரிஸ் கோயிலுக்குச் சென்று தலைமை குருவை சந்தித்தேன். அவர் என்னை எதிர்பார்த்தது போலக் காத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம்  என்ன ஆனாலும் சரி நீங்கள் என்னை தீட்சைக்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவர் தனக்கும் உத்தரவு வந்து விட்டது என்று கூறி சில உபதேசங்கள் செய்து இன்னும் பத்து நாட்கள் மது, அசைவம் இரண்டையும் விலக்கி மனதையும் சுத்தமாக வைத்திருந்து விட்டு வரும்படி ஆணையிட்டார்.  

அப்படியே பத்து நாட்கள் இருந்து விட்டு நான் அங்கு சென்றேன். தீட்சையும் பெற்றேன். அதன் பின் நான் அறிந்தவற்றையும், உணர்ந்தவற்றையும் சொல்ல விடாமல் நான் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணம் தடுக்கின்றது. முழுமையாகச் சொல்ல முடியாது. சொன்னாலும் மற்றவர்களுக்குப் புரியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். மரணத்தின் விளிம்பு வரை சென்றேன். பல உலகங்களுக்குச் சென்றேன். படைப்பின் பரிமாணங்களை உணர்ந்தேன். இரவிலும் பிரகாசிக்கும் சூரியனைக் கண்டேன். திரும்ப இவ்வுலகத்திற்கு எல்லாம் கண்டவனாக, எல்லாம் உணர்ந்தவனாக வந்தேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று நம் முன்னோர் சுருக்கமாகக் கூறிய அதையே தான் அவரும் இந்த அனுபவத்தில் கூறுகிறார்.

ரகசிய தீட்சை பெற்ற இன்னொரு அறிஞரான ப்ளூடார்க் கூறுகிறார். “ரகசிய தீட்சையின் போது மனித ஆத்மா மரணத்தின் போது அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றது. அறிய வேண்டிய அனைத்தையும் அறிகின்றது. ஆனால் ஓசிரிஸ் குறித்து நடந்ததாக சொல்லப்பட்ட கதையை உண்மையாக நடந்தது என்று அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்தக் கதைகள் பாமரர்களுக்காக புனையப்பட்டவை. அவைகளுக்குப் பின்னால் உள்ள தத்துவார்த்தமாக இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டால் போதும். தீமைகளாலும் தவறுகளாலும் உண்மைகளை அழித்து விட முடியாது. உண்மை பன்மடங்கு பலத்தோடு மீண்டு வரும் என்று அறிந்தால் போதுமானது.

அதன் பிறகு இன்னொரு இடத்தில் கூறுகிறார். “அறியாமையில் இருந்து மனித ஆன்மா விடுபடுகையில், மகத்தான உண்மைகளை உணரும் போது உருவமில்லாத, மாற்றமில்லாத, பரிசுத்தமான இறைவனை அறியும் போது ஏற்படுகிற பேரானந்தத்தையும், காணும் பேரழகையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

லம்ப்லிசஸ் கூறுகிறார். “இறை நிலையிலிருந்த மனிதன் விதியாலும் அறியாமையாலும் பற்பல சங்கிலிகளால் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். அந்த சங்கிலிகளை உடைத்துக் கொண்டு விடுதலையாகி தன் இறைநிலையை உணரும் நிலைக்கு ஓசிரிஸ் தீட்சை ஒருவரை அழைத்துச் செல்கிறது

மேலே குறிப்பிட்ட அறிஞர்கள் மட்டுமல்லாமல் பைபிளில் குறிப்பிடப்படும் மோசஸ் கூட ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றவர் என்று கூறப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் பைபிள் “மோசஸ் எகிப்தின் எல்லா ஞானத்தையும் போதிக்கப்பட்டிருந்தார்என்று கூறுவது முக்கியமாக இந்த ரகசிய தீட்சை ஞானத்தையே என்று சிலர் கூறுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த உலகத்தில் அவர்கள் மூழ்கியிருந்த  அறியாமையை முற்றிலும் விலக்கி விட்டு அவர்கள் இறைவன் படைப்பின் ரகசியங்கள், தத்துவங்களை அனைத்தும் அறிந்து புதிய மனிதர்களாக திரும்பி வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஓசிரிஸ் கோயில் மதகுருக்கள் ரகசிய தீட்சை பெற முடியாத பொதுமக்களையும் புறக்கணித்து விடவில்லை. கடவுள்களையும், வரலாற்று நாயகர்களையும் மையமாக வைத்துப் பல விதமான பழங்கதைகள், நாடகங்கள் படைத்து அவற்றை பொதுமக்களிடையே பரப்பினார்கள். அந்தக் கதைகள் அனைத்தும், தீமை தற்காலிகமாக வெல்வது போல தோன்றினாலும், கடைசியில் நிரந்தரமாக வெல்வது நன்மையே என்ற செய்தியையே கருவாகக் கொண்டிருந்தன. மிக மேலான ஞானத்தைப் பெற முடியாவிட்டாலும், உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை, பொய்ம்மையால் என்றும் நன்மை இல்லை என்பது மட்டும் சாதாரண மனிதன் மனத்தில் உறுதியாகப் பதிந்து விட்டால் கண்டிப்பாக பின் அவன் அதற்கு மேற்பட்ட நிலைகளை உணர்ந்து கடைத்தேறுவான் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது.

- என்.கணேசன்