சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 29, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 4



எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?

கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?

பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?

சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?

வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.

பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

உடையவன் பாராத வேலை உருப்படாது.

தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.

எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை

ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


தொகுப்பு: என்.கணேசன்

Thursday, October 25, 2012

பரம(ன்) ரகசியம் 15



பார்த்தசாரதி ஆனந்தவல்லியிடம் கேட்டார். “ஆனந்தவல்லி அம்மா, உங்கள் மகனைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துட்டுப் போகிற அளவுக்கு அந்த சிவலிங்கத்துல ஏதோ இருக்கணும் இல்லையா அது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆனந்தவல்லி சொன்னாள். “அதுல ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை”.
“அப்படின்னா அதைக் கடத்திகிட்டு போக காரணமே இல்லையேம்மா

ஆனந்தவல்லி எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தாள்.

பார்த்தசாரதி சொன்னார். “ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம் மாதிரி இருந்திருந்தா நல்ல விலை போகும்னு அதை எடுத்துகிட்டு போயிருக்கலாம்னு சொல்லலாம். அதுக்குள்ளே வேற விலை உயர்ந்த பொருள் எதாவது ஒளிச்சு வச்சிருந்தா அதுக்காக கடத்தப்பட்டிருக்கிறதா சொல்லலாம்.... இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கணும்னா அவங்களோட நோக்கம் என்னன்னு முதல்ல தெரிஞ்சுகிட்டா தான் முடியும்.. சிவலிங்கம் வந்த காலத்தில் இருந்து இருக்கிறவங்க நீங்க... உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னா தான் உங்க மகனைக் கொலை செய்துட்டு சிவலிங்கத்தைக் கடத்தினவங்களைக் கண்டு பிடிக்க முடியும்....

ஆனந்தவல்லி கசப்பான மருந்தை சாப்பிடக் கொடுத்தது போல சங்கடப்பட்டாள். ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அந்த சிவலிங்கத்தைப் பிடித்ததில்லை. அவளிடமிருந்து அவள் மகனைத் திருடிய எதிரியாகவே அதை அவள் நினைத்து வந்தாள். அவள் மகனைக் கொல்லாமல் அந்த சிவலிங்கத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருந்தால் அவள் அதைப் பெரிய உதவியாகவே கூட நினைத்திருப்பாள்... அந்த சிவலிங்கத்தைப் பற்றி பேசக் கூட அவளுக்கு கசந்தது... ஆனால் அந்தப் போலீஸ் அதிகாரி சொல்வதிலும் உண்மை இருந்தது....

பார்த்தசாரதி விடவில்லை. “அந்த சிவலிங்கம் சக்தி வாயந்ததுன்னு சிலர் நினைக்கிறாங்களே அது உண்மையா?

ஆனந்தவல்லி காட்டமாகச் சொன்னாள். “அறுபது வருஷத்துக்கு மேல அதைப் பூஜை செய்துட்டு வந்தவனையே காப்பாத்தாத அந்த சிவலிங்கத்துக்கு வேற என்ன சக்தி இருக்க முடியும்?

அவள் பேச்சில் இருந்த யதார்த்த உண்மை பார்த்தசாரதியை யோசிக்க வைத்தது. ஆனால் அடுத்த கணம் அவர் தன்னையுமறியாமல் சொன்னார். மேற்கொண்டு உயிர் வாழ விரும்பாத மனிதனை எந்த சக்தி தான் காப்பாற்ற முடியும்?சொல்லி விட்டு அவரே ஒரு கணம் திகைத்தார். யாரோ அந்த வார்த்தைகளை அவர் வாயில் போட்டு வரவழைத்தது போலத் தோன்றியது.

ஆனந்தவல்லி அவரையே ஆழமாகப் பார்த்தாள்.

பார்த்தசாரதி சமாளித்துக் கொண்டு சொன்னார். “பத்மாசனத்துல இருந்தபடியே சாகறது சாதாரண விஷயமில்லை. அதுவும் கொலை செய்யப்பட்ட போது கூட அப்படியே இருக்க முடியறது அசாதாரணமான விஷயம். உங்க மகனுக்கு எழுபது வயசு ஆகியிருந்தாலும் நாற்பது வயசு மனிதனோட ஆரோக்கியம் இருந்ததாய் டாக்டர்ங்க சொல்றாங்க. அவர் ஹத யோகின்னும் கேள்விப்பட்டேன். அதனால அவர் நினைச்சிருந்தா அந்தக் கொலைகாரனை சுலபமா தடுத்து இருக்கலாம்....

ஆனந்தவல்லியின் முகத்தில் சோகம் படர்ந்தது. அவள் தலையை மட்டும் அசைத்தாள்.

பார்த்தசாரதி தொடர்ந்தார். “அந்த சிவலிங்கத்துக்கு சக்தி இருக்கோ இல்லையோ அது சக்தி வாய்ந்ததுன்னு சில பேரு நினைச்சிருக்கற மாதிரி தான் தெரியுது. அதைக் கொண்டு வந்து உங்க குடும்பத்துல சேர்த்தது ஒரு சித்தர்னு கேள்விப்பட்டேன். அந்த சித்தரைப் பத்தி ஏதாவது சொல்ல முடியுமா?

நான் அந்த ஆளைப் பார்த்ததே இல்லை

“அந்த சிவலிங்கத்தை அவர் எங்கே இருந்து கொண்டு வந்தார்னு தெரியுமா? அது பத்தி உங்க கணவர் ஏதாவது சொல்லி இருக்காரா?
ஆனந்தவல்லி ஒரு பெருமூச்சு விட்டாள். “அவர் அதைப் பத்தி என்னென்னவோ சொல்ல ஆரம்பிச்சப்ப எல்லாம் நான் கேட்கற மனநிலையில் இருக்கல. நல்லா திட்டி அவர் வாயை அடைச்சிருக்கேன்..
இந்தம்மாளிடம் அந்த மனிதர் படாத பாடு பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த பார்த்தசாரதி அந்த மனிதருக்காகப் பச்சாதாபப்பட்டார். சிறிது நேரம் இவளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் போது அவர் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தவராகக் கேட்டார். “அவர் என்ன சொல்ல வந்தார்?

ஆனந்தவல்லி தனக்குப் பிடிக்கா விட்டாலும் தெரிந்த்தைச் சொல்லி முடித்து விடுவது என்று முடிவுக்கு வந்தவளாக, பேசப் போகிற விஷயம் பிடிக்காதவளாக, லேசாக முகம் சுளித்தபடிச் சொன்னாள். “அந்த சிவலிங்கம் பல நூறு வருஷத்துக்கு முந்தினதாம். சித்தர்கள் பூஜை செய்துட்டு வந்ததாம். ஏதோ சோழ ராஜா கோயில் கட்டக் கேட்டுக் கூட சித்தர்கள் குடுக்கலையாம்.. அந்த சிவலிங்கம் யார் கிட்ட போய் சேரணும்னு முடிவு பண்ண ஒரு ரகசிய குழு இருக்காம்.... அது பசுபதி கிட்ட வந்ததும் அப்படித் தானாம்.... பசுபதி ரொம்ப புண்ணியம் செஞ்சவன், அதனால தான் அவனுக்கு அது கிடைச்சிருக்கு, அதனால நான் சந்தோஷப்படணுமே ஒழிய வருத்தப்படக் கூடாது அப்படி இப்படின்னு சொன்னார்....

பார்த்தசாரதிக்கு இந்தத் தகவலை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அவர் சொன்னது உண்மையாய் இருக்குமோ?
ஆனந்தவல்லி போலீஸ் அதிகாரி என்றும் பார்க்காமல் அவரைக் கடிந்து கொண்டாள். “அவர் தான் எவனோ மூளைச்சலவை செய்து சொன்னதை நம்பினார்னா உனக்கும் மூளை இல்லையா என்ன? இப்ப அந்த சிவலிங்கம் யார் கைல போய் சேரணும்னு முடிவு செஞ்சது யாரு அந்த ரகசியக் குழுவா? அந்தக் கொலைகாரக் கூட்டம் தானே முடிவு பண்ணி எடுத்துகிட்டு போனாங்க... அப்பவே நான் அவரை சத்தம் போட்டேன்.. அம்புலி மாமா கதைல வர்ற மாதிரி எவனாவது ஏதாவது சொன்னா நம்பிடறதா, அறிவு இல்லையான்னு....

‘ரொம்பக் கஷ்டம் தான்என்று தனக்குள் சொல்லிக் கொண்ட பார்த்தசாரதி பொறுமையுடன் சொன்னார். “நீங்க சொல்றது சரி தான்... அந்த ரகசியக் குழு எத்தனை பேரு, யார் யார்னு ஏதாவது சொன்னாரா?

அது அவருக்கும் தெரியலை... ஆனா அவர் கடைசி வரைக்கும் அப்படி இருக்கும்னு நம்பினார்..

நமக்கு நம்பக் கஷ்டமா இருக்கு... ஆனா  உங்க கிட்ட அந்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்த சித்தர் இப்பவும் இருக்கார்னும், உங்க மகன் பசுபதி செத்த பிறகு அந்த சித்தர் தோட்ட வீட்டுக்கு வந்ததைப் பார்த்த மாதிரி இருந்ததுன்னு பரமேஸ்வரன் சொன்னாரே.... ஒருவேளை அது பிரமையாய் இருக்குமோ

“பிரமையும் இல்லை, பொம்மையும் இல்லை... பரமேஸ்வரன் அப்படி எல்லாம் ஏமாந்துட மாட்டான். அவன் பார்த்தேன்னு சொன்னா பார்த்திருக்கணும்... எனக்கு மட்டும் அந்த ஆள் பார்க்கக் கிடைச்சிருந்தால் கேட்டிருப்பேன், ‘இப்ப திருப்தியா உனக்குன்னு...

‘அந்த சித்தர் தப்பிச்சுட்டார்என்று மனதில் சொல்லிக் கொண்ட பார்த்தசாரதி “உங்க கணவர் வேறெதாவது சொன்னாரா...?என்று கேட்டார்.
திரும்பத் திரும்ப அவர் சொன்னதெல்லாம் இது தான். அந்த சிவலிங்கம் சாதாரண லிங்கம் இல்லை... சக்தி வாய்ந்தது.... அதோட முழு சக்தியை புரிஞ்சுக்க நமக்கு ஞானம் போதாது அப்படி இப்படின்னு அந்த சித்தர் சொன்னதை எல்லாம் நம்பி எனக்கும் போதனை செய்ய முயற்சி செஞ்சார்...

அந்த சக்தி என்னன்னு சொன்னாரா?

நான் கேட்கலை.... கேட்டிருந்தா சொல்லி இருக்கலாம்....

””உங்க கொள்ளுப் பேரன் ஈஸ்வர் கிட்ட சிவலிங்கம் போய் சேரணும்கிறது தான் விதி.. சேர்த்துடுன்னு பசுபதி பரமேஸ்வரன் கிட்ட சொன்னது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன காரணம் இருக்கும்

இந்தக் கேள்வியைப் பல முறை அவளும் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். விடை பிடிபடவில்லை... சொன்னாள். தெரியலை...

“ஒரு வேளை உங்க பேரனும் பசுபதி மாதிரி ஆன்மிகத்துல அதிக நாட்டம் இருக்கிறவரோ?

ஆனந்தவல்லி இந்த இரண்டு மூன்று நாட்களில் தன் கொள்ளுப்பேரன் பற்றி ஒரு புத்தகமே எழுத முடிந்த அளவு தகவல்கள் சேர்த்திருந்தாள். மீனாட்சியை விடாமல் நச்சரித்து அவள் உதவியுடன் அவனது ஃபேஸ்புக் உட்பட இண்டர்நெட்டில் சகலமும் அறிந்திருந்தாள். அதனால் ஆணித்தரமாகச் சொன்னாள். “அவன் அந்த மாதிரி ரகம் இல்லை... ரோஷக்காரன்... நல்லா படிச்சவன்.. பெரிய ஆராய்ச்சியாளன்... இந்த சின்ன வயசுலயே பெரிய பெரிய விருது எல்லாம் வாங்கி இருக்கான்.... பார்க்க என் வீட்டுக்காரர் மாதிரியே அச்சாய் அழகாய் இருக்கான்...

பெருமிதம் கொப்புளிக்க மலர்ச்சியுடன் சொன்ன ஆனந்தவல்லியை பார்த்தசாரதி ஆச்சரியத்துடன் பார்த்தார். சற்று நேரத்திற்கு முன் கணவரை நன்றாகத் திட்டிய ஆனந்தவல்லி, அவரைப் போலவே தன் கொள்ளுப்பேரன் அழகாய் இருப்பதைப் பெருமையாகச் சொல்வதைப் பார்த்தால் அவள் கணவன் மீது காதலாகவும் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்தது... முக மலர்ச்சியோடு இருக்கும் போது இந்தக் கிழவியும் அழகாய் தான் தெரிகிறாள்.. ஆனால் முகம் மலர்வது மட்டும் அத்தி பூத்தது போலத் தான்... அவர் நினைத்து முடிப்பதற்குள் பழைய முகபாவத்துக்குள் வந்து விட்டிருந்தாள் ஆனந்தவல்லி.

“உங்க கணவரைத் தவிர வேற யாராவது அந்த சிவலிங்கத்தோட சக்தி பத்தி உங்க கிட்ட பேசியிருக்காங்களா?

இல்லை...

“உங்க மகன் பசுபதி?...

அவன் பேசறதே கம்மி தான்... நாம ஏதாவது பேசினால் கூட ஒருசில வார்த்தைல பதிலை முடிச்சுடுவான்... அவனாய் தொடர்ந்து அரை மணி நேரமாவது பேசினது நான் அவனைக் கடைசியா பார்த்தப்ப தான்.. அது தான் முதல் தடவை... அதுவே கடைசி தடவையும் கூட..சொல்லும் போது அவள் குரல் கரகரத்த்து. சொன்னதில் வலி தென்பட்டது.

கிட்டத்தட்ட அறுபது வருஷமா அந்தத் தோட்ட வீட்டுல இருந்த சிவலிங்கம் மேல இத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு யாரோ சிலருக்கு அக்கறை வரக் காரணம் என்னவாக இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

சற்று எரிச்சலோடு ஆனந்தவல்லி சொன்னாள். “எல்லாத்தையும் என் கிட்டயே கேட்டா எப்படி? நீங்க தான் அதை எல்லாம் கண்டுபிடிக்கணும்

பெருமூச்சு விட்ட பார்த்தசாரதி விசாரணையை அத்துடன் முடித்துக் கொண்டார். அவர் கிளம்பும் முன் ஆனந்தவல்லி கேட்டாள். “எத்தனை 
நாள்ல கண்டுபிடிப்பீங்க?

“சீக்கிரமா கண்டுபிடிச்சுடுவோம்....

சற்று நின்றால் அந்த உத்திரவாதத்தை கிழவி எழுதிக் கொடுக்கும்படி கேட்டாலும் கேட்பாள் என்று பயந்தவராக அவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார். சில கேள்விகளுக்கு பதிலை ஈஸ்வரிடத்திலும், சில சந்தேகங்களுக்குத் தெளிவை குருஜியிடத்திலும் அவர் எதிர்பார்த்தார். ஈஸ்வர் நாளை தான் வருகிறான் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்க எண்ணினார். குருஜி இன்று மாலை அவரை சந்திக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்....

குருஜி பார்த்தசாரதியைப் பார்த்ததும் தன் நீண்ட கால நண்பனைப் பார்ப்பது போல சந்தோஷம் காட்டினார். என்ன பார்த்தசாரதி எப்படி இருக்கீங்க?

வணக்கம் குருஜி. நல்லா இருக்கேன்

குருஜி சில நிமிடங்கள் குடும்பத்தினரையும், வேலையையும் பற்றி விசாரித்து விட்டு பின் சொன்னார். “நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு சொன்னீங்களாம். ரெண்டு நாளா ஓய்வே இல்லை. அதனால உங்களை சந்திக்க முடியலை... என்ன விஷயம் சொல்லுங்க
பார்த்தசாரதி சொன்னார். “சில நாளுக்கு முன்னால் ஒரு பெரியவரைக் கொன்னுட்டு அவர் பூஜை செய்துட்டு இருந்த சிவலிங்கத்தை தூக்கிகிட்டு போயிட்டாங்க குருஜி....

“....ம்ம்ம்... பேப்பர்ல படிச்சேன். பரமேஸ்வரனோட அண்ணாவோ தம்பியோ தானே அந்தப் பெரியவர்

“அண்ணா குருஜி

“சொல்லுங்க. இப்ப அந்தக் கேஸ் உங்க கிட்ட வந்திருக்கோ?

“ஆமா குருஜி... ஆன்மிகம், சக்தி இந்த ரெண்டு விஷயத்துலயும் உங்களுக்குத் தெரியாதது இருக்க முடியாதுங்கறதால சில சந்தேகங்களைத் தீர்த்துக்க உங்க கிட்ட வர முடிவு செஞ்சேன்... அந்த சிவலிங்கத்துல ஏதோ விசேஷ சக்தி இருக்கறதா பேசிக்கறாங்க... என்னடா ஒரு நாத்திகன் கேட்கற மாதிரி கேட்கறானேன்னு நினைச்சுடாதீங்க. உண்மையாவே அப்படி ஒரு சிலைல விசேஷ சக்தி இருக்குமா?

குருஜி அமைதியாகச் சொன்னார். “எல்லா சிலைலயும் சக்தி இருக்கும்னு சொல்ல முடியாது. சில சிலைகள்ல சக்தி இருக்கலாம்.

“இதுலயும் இருக்குன்னு தான் தோணுது. ஆனா இறந்து போனவரோட அம்மா ஒரு ஆணித்தரமான கேள்வி கேட்டாங்க. “அறுபது வருஷத்துக்கு மேல அதைப் பூஜை செய்துட்டு வந்தவனையே காப்பாத்தாத அந்த சிவலிங்கத்துக்கு வேற என்ன சக்தி இருக்க முடியும்?னு கேட்டாங்க

“நியாயமான கேள்வி தான்குருஜி சொன்னார்.

“அவங்க அப்படிக் கேட்டவுடனே என்னையறியாமல் நான் சொன்னேன். 
மேற்கொண்டு உயிர் வாழ விரும்பாத மனிதனை எந்த சக்தி தான் காப்பாற்ற முடியும்?அது சொல்லி முடிக்கிற வரைக்கும் நான் கொஞ்சம் கூட நினைக்காதது...

குருஜி கண்களை மூடிக் கொண்டு அந்த வார்த்தைகளை உள்வாங்கினார். பின் கண்களைத் திறந்தவர் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அவரை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார்.

பார்த்தசாரதியே தொடர்ந்தார். “ஆனால் நான் சொன்னதும் சரி தான். அந்தப் பெரியவர் நினைச்சிருந்தா அந்த கொலைகாரனை சுலபமா ஆக்கிரமிச்சிருக்கலாம். அவர் ஹத யோகி. கொலைகாரன் வந்தப்ப அவர் தூங்கிட்டும் இருக்கலை. சாகறப்ப கூட பத்மாசனத்தை விட்டு விலகாத அளவு சக்தி இருக்கிற அவர் அந்தக் கொலைகாரனுக்கு ஒத்துழைப்பு தந்த மாதிரி தான் தோணுது. என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல நான் இந்த மாதிரியான ஒரு தன்மைய பார்த்ததில்லை. அடுத்ததா இன்னொரு ஆச்சரியம் அந்தக் கொலைகாரன் செத்த விதம்.... அவன் பயம்னா என்னன்னே தெரியாதவன். அப்படிப் பட்டவன் பயந்தே செத்துப் போனதா போஸ்ட் மார்ட்டம் சொல்லுது. இந்த ரெண்டுமே யதார்த்தமா எனக்குத் தோணலை. என்ன தான் நடந்ததுன்னு தெரியலை... யோகா, அபூர்வ சக்திகள், பத்தியெல்லாம் நீங்க நிறையவே தெரிஞ்சு வச்சிருக்கிறவர். அதனால உங்க கிட்ட கேட்கறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க..   

இது வரை பார்த்தசாரதிக்கு என்னவெல்லாம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதை அறிய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த குருஜி “இதெல்லாம் எளிமையாய் சொல்லக் கூடிய விஷயம் இல்லை... முதல்ல அது சம்பந்தமான தகவல்கள் எல்லாம் தெரியணும்... தெரிஞ்சால் சொல்ல முயற்சி செய்யலாம்...

பார்த்தசாரதி குருஜி மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் என்றாலும் இது வரை சேகரித்த அனைத்து தகவல்களையும்  அவரிடம் சொல்லப் போகவில்லை. அமானுஷ்யமான விஷயங்கள் என்று நினைத்ததை மட்டும் குருஜியிடம் சொல்லி கருத்துகள் கேட்க முனைந்தார்.

“அந்த சிவலிங்கம் 60 வருஷத்துக்கு முன்னால் ஒரு சித்தரால் கொண்டு வந்து தரப்பட்டது. அந்த சித்தர் இன்னும் இருக்கிறாராம்... அவரை பரமேஸ்வரன், செத்த வீட்டில் பார்த்திருக்கிறார். இது உண்மை மாதிரி தான் தெரியுது. அந்த சிவலிங்கம் பற்றிக் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் கற்பனையோட உச்சக்கட்டமா இருக்கு... அந்த சிவலிங்கம் பல நூறு வருஷத்துக்கு முந்தினதாம். சித்தர்கள் பூஜை செய்துட்டு வந்ததாம். ஏதோ சோழ ராஜா கோயில் கட்டக் கேட்டுக் கூட சித்தர்கள் குடுக்கலையாம்.. அந்த சிவலிங்கம் யார் கிட்ட போய் சேரணும்னு முடிவு பண்ண ஒரு ரகசிய குழு இருக்காம்....

சிவலிங்கம் தந்த சித்தர் இன்னும் இருக்கிறார் என்ற தகவலும் சிவலிங்கம் யாரிடம் போய் சேர வேண்டும் என்று முடிவு செய்ய ஒரு ரகசியக் குழு இருக்கிறது என்ற தகவலும் குருஜியைத் தூக்கிவாரிப் போட்டன. சிந்தனை செய்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தசாரதியின் பார்வையில் இருந்து தப்பி மறுபக்கம் திரும்பியவர் மனதில் இது வரை குழப்பிக் கொண்டிருந்த சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது போல் இருந்தது. ஆனால் அவர் அந்தப் பதிலை ரசிக்கவில்லை.....

(தொடரும்)
-         என்.கணேசன்


Monday, October 22, 2012

என் புதிய நூல் - பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்




பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 

பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, October 18, 2012

பரம(ன்) ரகசியம் 14



ந்த வேத பாடசாலை பதினெட்டு ஏக்கரில் அமைந்திருந்த்து. அதனுள்ளே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு தனிக்கட்டிடத்தின் முன்பாகக் கார் கடைசியாக நின்ற போது தான் கணபதி கண்விழித்தான். கண்களைக் கசக்கிக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கிய அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வெகு தொலைவில் வகுப்பறைகளும், தங்கும் அறைகளும் இருந்தன. மற்ற இடங்களில் எல்லாம் பச்சைப் பசேலென்ற மரம், செடி கொடிகள், புல்வெளிகள் என்று அழகான இயற்கைக் காட்சிகள் தெரிய கணபதி ஒரு கணம் மெய் மறந்து நின்று அந்த அழகை ரசித்தான்.

உள்ளே வாங்கஎன்று பொறுமையிழந்த குரல் கேட்டது. கணபதி திரும்பினான். காரை ஓட்டி வந்தவன் கட்டிட முன் வாசற்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தான். இன்னொருவன் முன்பே உள்ளே போயிருந்தான். கணபதி தன் துணிப்பையை எடுத்துக் கொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தான்.  

உள்ளே ஒரு பெரிய ஹாலும் அதனைத் தாண்டி ஒரு பூஜை அறையும் இருந்தது. பக்கவாட்டில் ஒரு படுக்கை அறையும், குளியலறையும் இருந்தன.  பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தைத் தொலைவில் இருந்தே இருவரும் கை காட்டினார்கள். அபூர்வமான பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த சிவலிங்கத்தை ஆர்வத்துடன் கணபதி பார்த்தான். அந்த சிவலிங்கம் குருஜி சொன்னது போல சக்தி வாய்ந்தது போலத்தான் அவனுக்கும் தோன்றியது. ஏதோ ஒரு சிலிர்ப்பை அவன் உணர்ந்தான்.

அந்த சிலிர்ப்பை அவர்கள் இருவரும் சற்று பீதியோடு பார்த்தார்கள். ஆனால் அவன் முகத்தில் எந்த வித பய உணர்ச்சி தென்படாதது அவர்களுக்கு ஆசுவாசத்தை அளித்தது.

சுற்றும் முற்றும் பார்த்த கணபதி அருகில் இருந்த குளியலறையைக் கவனித்து சென்று கை கால் கழுவிக் கொண்டு வந்தான். 

காரோட்டி அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூடைப் பூக்களை எடுத்து கணபதியிடம் தந்து விட்டு சொன்னான். “பூஜைக்கு வேண்டிய மத்த சாமான் எல்லாம் உள்ளேயே இருக்கு. நீங்க போய் பூஜையை முடிச்சீங்கன்னா இந்த வேத பாடசாலையை உங்களுக்கு சுற்றிக் காட்ட குருஜி சொல்லி இருக்கார்....

குருஜிக்குத் தன் மீது இருந்த அன்பை நினைத்து ஒரு கணம் கணபதி நெகிழ்ந்தான். பூக்கூடையை வாங்கிக் கொண்டு பூஜை அறையை நோக்கி நடந்த கணபதியை அந்த சிவலிங்கம் காந்தமாக இழுப்பது போலத் தோன்றியது. மிகுந்த பக்தியுடன் அவன் அந்த சிவலிங்கத்தைப் பார்த்த அவன் பூக்கூடையை கீழே வைத்து விட்டு பூஜை அறைக்கு வெளியிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

“அப்பனே சிவனே. உன் சக்திக்கேத்த மாதிரியோ, எனக்குத் தினமும் கிடைக்கப் போகிற ஐநூறு ரூபாய்க்கேத்த மாதிரியோ எனக்கு பெரிசா எல்லாம் பூஜை செய்யத் தெரியாது. தெரிஞ்சதை பக்தி சிரத்தையா செய்யறேன். குற்றம் குறை இருந்தா தயவு செஞ்சு பொறுத்துக்கோ...மானசீகமாக வேண்டிக் கொண்டு எழுந்தவன் பூக்கூடையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

உள்ளே சிவலிங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அபூர்வப் பூக்களை எடுத்தபடியே கேட்டான். “இந்த மாதிரி பூக்கள நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லையே. இப்ப குடுத்த பூக்கூடைல கூட இந்த மாதிரி பூ இல்லையே. இந்தப் பூ எல்லாம் எங்கே வாங்கினது....?

நேத்து வேத பாடசாலைக்கு வந்த வடநாட்டுக்காரர் ஒருத்தர் குடுத்துட்டுப் போனார். அவருக்கு எங்கிருந்தோ கிடைச்சுதாம்....கூசாமல் ஒரு பொய்யைச் சொன்னான் காரோட்டி.

அந்தப் பதிலிலேயே திருப்தி அடைந்த கணபதி பூஜையை ஆரம்பிக்க, அவர்கள் இருவரும் அவனையே ஒருவித பரபரப்புடன் பார்த்தனர். அவன் என்னேரமும் ஓடிவந்து விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
அவர்கள் அவனையே பார்ப்பது கணபதிக்கு கூச்சமாய் இருந்தது. அவனுக்கு சரியாகப் பூஜை செய்ய வருகிறதா என்று அவர்கள் கண்காணிப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவன் லேசாக நெளிய அவர்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள். “என்ன ஆச்சு?”.  இதற்கு  முன் ஓடிப்போனவனின் அனுபவம் அறிந்திருந்த அவர்களுக்கு அவனது ஒவ்வொரு வித்தியாசமான அசைவும் சந்தேகத்தைக் கிளப்பியது...

“ஒண்ணுமில்லை... நான் உங்க மாதிரி அதிகமா எல்லாம் வேதம், பூஜை எல்லாம் படிக்கலை... அதனால் தெரிஞ்ச மாதிரி செய்யறேன்..என்று கணபதி வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் தலையாட்டினார்கள்.

“பிரச்சினை ஒன்னும் இல்லையே?காரோட்டி சந்தேகம் தீராமல் கேட்டான்.

எனக்கு ஒண்ணும் இல்லை... இவருக்கு எப்படின்னு தெரியலைஎன்று சிவலிங்கத்தைக் காட்டி விட்டு கணபதி கலகலவென்று சிரித்தான். அவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

அப்போது தான் தன் தவறை உணர்ந்த கணபதி மானசீகமாய் சிவனிடம் மன்னிப்பு கேட்டான். “மன்னிச்சுக்கோ. உன் பிள்ளை கிட்ட இப்படித் தான் கொஞ்சம் கிண்டலாய் பேசிகிட்டிருப்பேன். பழக்க தோஷத்துல அப்படியே சொல்லிட்டேன்...

பின் பூஜையை முழு மனதோடு செய்ய ஆரம்பித்த கணபதி பூஜை முடிகிற வரை அவர்கள் இருவர் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. குருஜி சொன்னது போல அவன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது அவர்கள் இருவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கணபதி பூஜையை முடித்த பிறகு காரோட்டி அவனை வேத பாடசாலையைச் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்ல, அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் ரகசியக் காமிராவைப் பொருத்த அவசர அவசரமாக இருவர் உள்ளே நுழைந்தனர்.


பார்த்தசாரதி பரமேஸ்வரனின் வீட்டுக்கு வந்து தனித்தனியாக இது வரை மூன்று பேர்களை விசாரித்து நான்காவதாக பரமேஸ்வரனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். விசாரித்து முடித்த மூவரான விஸ்வநாதன் – மீனாட்சி தம்பதியரும், அவர்கள் மகன் மகேஷும் பசுபதியிடம் பிரத்தியேகத் தொடர்பு வைத்திருந்தது போலத் தெரியவில்லை. மிக அபூர்வமாக அவர்கள் பரமேஸ்வரனுடன் சேர்ந்து போய் சம்பிரதாயமாக ஒருசில முறை பசுபதியைப் பார்த்து வந்திருக்கிறார்களே அல்லாமல் மற்றபடி எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை.

நான்காவதாக விசாரித்த பரமேஸ்வரன் தான் மாதம் ஒரு முறையாவது போய் அண்ணனைச் சந்தித்தவர். அதனால் அவரிடம் விசாரிக்க அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். அவரும் முன்பு விசாரித்த போலீஸ்காரர்களிடம் சொன்னதை மட்டுமே ஆரம்பத்தில் பார்த்தசாரதியிடம் சொன்னார். பின் கூடுதலாகத் துருவித் துருவிக் கேட்ட பிறகு தான் அவர் கடைசி சந்திப்பின் போது பசுபதி சொன்னதைச் சொன்னார். என்னேரமும் மரணம் வந்து விடலாம் என்றும், சிவலிங்கத்திற்கு ஏதாவது ஆகிவிடலாம் என்றும் முன் கூட்டியே தம்பியிடம் பசுபதி சொல்லி இருந்தது பார்த்தசாரதியை ஆச்சரியப்பட வைத்தது. அப்போது அண்ணன் சொன்னதைப் பெரிதாக பரமேஸ்வரன் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவருக்கு இயல்பாகவே தோன்றியது.

“உங்க பேரன் கிட்ட சொல்லச் சொன்னது எதற்காகன்னு நினைக்கிறீங்க? உங்க பரம்பரையிலயே சிவலிங்கம் இருக்கணும்கிறதற்காகவா, இல்லை வேறெதாவது காரணமும் இருக்கலாம்னு நினைக்கிறீங்களா?

“தெரியலை

“இதற்கு முன்னால் உங்க பேரன் அந்த சிவலிங்கத்தைப் பார்த்திருக்காரா?
பரமேஸ்வரன் லேசான தயக்கத்திற்குப் பின் சொன்னார். “என் மகன் காதல் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் என் குடும்பத்துக்கும் அவனுக்கும் எந்த்த் தொடர்பும் இருக்கலை. ஈஸ்வர் இந்தியாவுக்கு இது வரைக்கும் வந்தது கூட இல்லை...

“உங்க பேரன் கிட்ட விஷயம் சொன்னதுக்கு அவர் என்ன சொன்னார்?

நாளைக்கு வர்றான்?

“நீங்க சொன்னதை அவர் எப்படி எடுத்துகிட்டார்?

பதில் சொல்ல சில வினாடிகள் கூடுதலாக பரமேஸ்வரன் எடுத்துக் கொண்டார். அவனுக்கும்  அதிர்ச்சி தான்

நாளை வரப் போகிற ஈஸ்வரிடம் விசாரிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்ட பார்த்தசாரதி கேட்டார். “அப்புறம் வேறெதாவது இந்த வழக்குக்கு சம்பந்தமாய் நீங்கள் சொல்ல மறந்தது ஏதாவது இருக்கா? பெரிய விஷயம் இல்லைன்னு உங்களுக்குத் தோணறது கூட உண்மைல முக்கிய தகவலாய் கூட இருக்கலாம்.....

பரமேஸ்வரன் யோசித்தார். பிறகு அண்ணன் பிணத்தைப் பார்க்க வந்த மனிதர்கள் மத்தியில் பார்த்த சித்தரைப் பற்றிச் சொன்னார்.

பார்த்தசாரதி சந்தேகத்துடன் கேட்டார். இத்தனை வருஷத்துக்குப் பிறகு அந்த ஆள் உயிரோட இருந்திருப்பாரா? நீங்கள் பார்த்த்து அந்த ஆளாய் தான் இருக்குமா?

அந்த சித்தர் கண்களை என்னால் மறக்க முடியாது சார். நெருப்பாய் ஜொலிக்கிற கண்கள்... பார்த்தவுடனே மனசுல பதியறது அந்தக் கண்கள் தான். அதனால நான் பார்த்த்து கண்டிப்பாய் அவராய் தான் இருக்கணும்
பார்த்தசாரதிக்கு முனுசாமி ஒரு இரவில் பார்த்ததாய் சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படியானால் அவன் பார்த்தது போதையின் விளைவு அல்ல, நிஜமாகவே இருக்க வேண்டும்.

“அந்த சித்தர் அடிக்கடி உங்கண்ணாவைப் பார்க்க வருவாரோ?

“தெரியலை. இப்ப யோசிச்சுப் பார்க்கறப்ப அவர் வந்திருக்கலாம்னு தோணுது

பார்த்தசாரதி ஏழெட்டு மாதங்களுக்கு முன் பசுபதியைப் பார்க்க விரும்பிய  இரண்டு மர்ம நபர்களைப் பற்றி பரமேஸ்வரனிடம் சொன்னார்.

பரமேஸ்வரனுக்கு அந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. “அண்ணா அந்த சம்பவத்தைப் பற்றி என் கிட்ட சொல்லக் கூட இல்லை. அவசியம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம்.....

“ஒரு வெளிநாட்டு ஆசாமி உங்கண்ணாவைப் பார்க்க வர என்ன காரணம் இருக்கும்னு நினைக்கிறீங்க?

“தெரியலை

“அந்த சிவலிங்கம் தான் காரணமாய் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

இருக்கலாம்

“அந்த சிவலிங்கம் பத்தின முழு உண்மைகளும் வெளி வரலை. அது வந்தால் தான் இந்த வழக்குல நாம் முன்னேற முடியும்....சொல்லி விட்டு பார்த்தசாரதி பரமேஸ்வரனை ஆழமாகப் பார்த்தார்.

பரமேஸ்வரன் வெளிப்படையாகச் சொன்னார். “அந்த சிவலிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சவங்க எங்கப்பாவும், எங்கண்ணாவும் மட்டும் தான். ஓரளவு சிவலிங்கம் வந்தப்ப நான் சின்னவன். எனக்கு எட்டு வயசு தான் இருக்கும். அந்த சிவலிங்கம் பத்தி தெரிஞ்சுக்கற ஆர்வம் எனக்கு சுத்தமா இருக்கல....

“உங்கம்மாவுக்குத் தெரிஞ்சிருக்குமா?

அம்மாவுக்கும் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் இருக்கலை... எத்தனையோ தடவை அப்பா அது பத்தி அம்மா கிட்ட பேச ஆரம்பிச்சப்ப எல்லாம் அது அவங்களுக்குள்ளே சண்டைல தான் முடிஞ்சு இருக்கு. அண்ணா சாமியார் மாதிரி ஆனதுக்கு அந்த சிவலிங்கம் தான் காரணம்னு அம்மா நினைச்சதால அதைப் பத்தி கேட்கக் கூட அம்மாவுக்குப் புடிக்கலை....

“உங்கப்பா என்ன சொல்ல வந்தார்னு நினைவு இருக்கா?

“இல்லை... அவர் சொல்ல வந்தப்ப அம்மா போட்ட சண்டை தான் ஞாபகம் இருக்கு.. அப்படி சொன்னதைப் புரிஞ்சுக்கற வயசோ, ஆர்வமோ எனக்கு அப்ப இருக்கலை

“ஆனா உங்கப்பா என்ன சொல்ல வந்தாருங்கறதை உங்கம்மா நினைவு வச்சிருப்பாங்க இல்லையா?

“எங்கம்மாவுக்கு மறதிங்கறதே கிடையாது...

பரமேஸ்வரனை அனுப்பிய பார்த்தசாரதி அடுத்த்தாக ஆனந்தவல்லியை விசாரிக்கத் தயாரானார்.

ஆனந்தவல்லி வந்தாள். அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையும், ஏராளமான நகைகளும் ஏதோ கல்யாண வீட்டுக்கு அவள் போகத் தயாராக இருந்தது போன்ற அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியது. நடையில் தளர்ச்சி தெரிந்தாலும் முகத்தில் அது தெரியவில்லை. கண்களை லேசாகக் குறுக்கிக் கொண்டு அவரையே உற்றுப் பார்த்தபடி ஆனந்தவல்லி அவர் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

பார்த்தசாரதிக்கு அவரது ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையை ஆனந்தவல்லி நினைவுபடுத்தினாள். அவளும் இப்படித்தான் முகத்தில் சிறிதும் மலர்ச்சி இல்லாமல் மாணவர்களை உற்றுப் பார்ப்பாள். அமர்ந்தவுடன் அவரது அபிப்பிராயத்தை அவள் வலுவாக்கினாள். “ஏம்ப்பா... குற்றவாளியைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?

அவள் அவரை ஒருமையில் அழைத்து அப்படிக் கேள்வி கேட்டதை அவரால் ரசிக்க முடியவில்லை. “இன்னும் இல்லை....

‘என்ன வேலை பார்க்கிறீர்கள்என்பது போன்ற அதிருப்தியை ஆனந்தவல்லி படர விட்டாள். அது, கொடுத்த வேலையை சரிவரப் பார்க்கவில்லை என்று முதலாளி தொழிலாளி மீது காட்டும் அதிருப்தி போல பார்த்தசாரதிக்குத் தெரிந்தது. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்ற மரியாதை சிறிதும் அவளிடம் இல்லாமல் இருந்தது அவருக்கு எரிச்சலைத் தந்தது. பரமேஸ்வரன் கூட அவரிடம் அப்படி இருக்கவில்லை. பணிவு காட்டா விட்டாலும் அவரை கௌரவமாகத் தான் நடத்தினார். ஒரு ஜமீந்தாரின் மகள், ஒரு தொழிலதிபரின் மனைவி, ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் தாய் என்று ஆரம்பத்தில் இருந்தே மேலான அந்தஸ்தில் இருந்த திமிரோ இந்தம்மாளுக்கு?

ஆனந்தவல்லி அம்மா, உங்களுக்கும் இறந்து போன உங்கள் மகனுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்ததுன்னு கேள்விப்பட்டேனே? அது உண்மையா?பார்த்தசாரதி கேட்டார்.

ஆனந்தவல்லி கோபத்துடன் திரும்பக் கேட்டாள். “எவன் சொன்னது?

பார்த்தசாரதி திகைத்துப் போனாலும் சமாளித்தார். “விசாரணையில் கிடைக்கிற தகவல்கள் எங்கிருந்து கிடைச்சுதுன்னு நாங்க சொல்லக் கூடாது. அது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க.

ஆனந்தவல்லி இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா என்பது போல் பார்த்தாள். 

பார்த்தசாரதி சொன்னார். “உங்க மகனை நீங்க பல வருஷமாய் பார்க்கல, அவரு பிணத்தைப் பார்க்கக் கூட நீங்க போகல...

ஆனந்தவல்லி கண்களில் அக்னி தெரியக் கேட்டாள். “நீ கேட்கற கேள்விக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என் மகனை நானே கொன்னிருக்கலாம்னு நினைக்கிறியா?

ஆனந்தவல்லிக்கு வயது எண்பத்தி எட்டானாலும் கோபப்பட்ட போது சுமார் பதினெட்டு வயது குறைந்து தெரிந்தாள். அதிகாரியிடம் பேசும் போது முதலில் மரியாதை கொடுத்து பேசப் பழகுங்கள் என்று சொல்லத் தோன்றினாலும் இத்தனை வயதானவளிடம் அப்படி மரியாதையைக் கேட்டு வாங்குவதே அசிங்கமாக பார்த்தசாரதிக்குப் பட்டது. யோசித்த போது தான் கேள்வி கேட்ட விதமும் சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. எல்லாம் தோரணையாலேயே அவள் அவரை சண்டைக்கு இழுத்ததன் விளைவு....

பொறுமையை வரவழைத்துக் கொண்டு பார்த்தசாரதி சொன்னார். “ஆனந்தவல்லி அம்மா. நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். அசாதாரணமா தோணற எல்லா விஷயங்களுக்கும் காரணம் கேட்டுத் தெரிஞ்சுக்கறது எங்களுக்கு முக்கியம். ஏன்னா அதுல ஏதாவது துப்பு கிடைக்கலாம். அதனால தான் கேட்கறேன். ஒரு தாய் கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு மேல மகனைப் பார்க்காமல் இருக்கறதோ, மகன் செத்த பிறகு பிணத்தைப் பார்க்காமல் இருக்கறதோ இயல்பானதா இல்லைங்கறதால கேட்கறேன்....

ஆனந்தவல்லி ஓரளவு சமாதானமானவளாகச் சொன்னாள். “ஒரு தாய் தன்னை முதல் முதல்லா அம்மான்னு கூப்பிட்ட குழந்தையை எந்தக் காலத்துலயும் வெறுக்க முடியாதுப்பா. அதுலயும் பசுபதி மாதிரி பத்தரை மாத்துத் தங்கத்தை அவன் தாயாலயே வெறுக்க முடியுமா? அவன் சாமியார் மாதிரி மாறினது பிடிக்கலை. அந்த நிலைமைல பார்த்து அடிக்கடி மனசை ரணமாக்கிக்க பிடிக்காததால அவனைப் பார்க்காம இருந்தேன். கடைசியா அவனாவே என்னை வரச் சொல்லிக் கூப்பிட்டான். போனேன். அப்பவும் அவனை நல்லா திட்டினேன். அவன் அப்பவும் கோவிச்சுக்கல....

ஆனந்தவல்லி குரல் உடைந்து போனது. ஆனால் உடனடியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட அவள் மென்மையான குரலில் சொன்னாள். பொறுமையா இருந்தான்... உடம்பை எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு சொன்னான்.. அன்னிக்கு என் பிள்ளையா மட்டும் இருந்தான்.. அந்த நினைவோடவே மீதி வாழ்க்கைய முடிச்சுக்கணும்னு முடிவு செஞ்சுகிட்டேன். கடைசியா அந்த நினைவுக்கு மேல அவன் பிணத்தைப் பார்த்த நினைவை வச்சுக்க விரும்பலை... அதுவும் கொலை செய்யப்பட்ட கோலத்தைப் பார்க்கற சக்தி எனக்கு இருக்கலை... இல்லை..

முதல் முறையாக ஒரு தாயாக, மென்மையானவளாக அவளைப் பார்த்த அவருக்கு மனம் இளகியது. இவளிடம் எந்த முக்கியத் தகவலையும் கோபமூட்டி வாங்க முடியாது என்ற பாடம் கற்றவராய் பார்த்தசாரதி சிவலிங்கம் பற்றிய கேள்விகளை மென்மையாகக்  கேட்க ஆயத்தமானார். மறதி என்பதே கிடையாது என்று பெயரெடுத்த ஆனந்தவல்லிக்கு அது பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது.

(தொடரும்)

- என்.கணேசன்