சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 30, 2013

பரம(ன்) ரகசியம் – 46




து பழைய காலத்து நூலகம். உள்பரப்பே சுமார் 4700 சதுர அடிகள் இருந்தது. அடுத்த வருடம் 85ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அங்கு மிகப் பழைய அபூர்வ புத்தகங்களும் கிடைக்கும்,  இரண்டு நாள் முன்பு வெளியான பிரபல புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் வயதானவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், பொழுது போக்கு புத்தகங்கள் படிப்பவர்கள் என்று எல்லா தரப்பு உறுப்பினர்களையும் கொண்டது. பார்த்தசாரதி நூலகம் திறக்கப்படுவதற்காக வெளியே காத்திருந்தார். அவரை இந்த நூலகம் வரை வர வைத்தது ஒரு மனக்கணக்கு தான்.

விசேஷ மானஸ லிங்கம் பற்றிய தகவல்கள் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பே எழுதப்பட்ட புத்தகத்தில் இருந்திருக்கிறது. அது அடிக்கடி திடீர் என்று ஒளிரும் தன்மை கொண்டிருக்கிறது என்ற தகவலும் அதில் இருக்கிறது. ஆனால் பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ லிங்கம் என்பது வெளியுலகம் இத்தனை காலமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கமும் அடிக்கடி ஒளிர்வதை ஒருசிலர் பார்த்து இருக்கிறார்கள். அந்தத் தகவலும் இந்தத் தகவலும் யாரோ சிலருக்கு சமீபத்தில் தெரியவர, பசுபதி பூஜை செய்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ லிங்கமாக இருக்க வேண்டும் என்று அனுமானித்திருக்கலாம் என்ற சந்தேகம் பார்த்தசாரதிக்கு வந்தது. 

அதனால் சமீப காலமாக யார் எல்லாம் அந்தப் புத்தகம் படித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தால் ஏதாவது துப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று எண்ணினார். அதைப் படித்த ஆட்கள், பசுபதியின் சிவலிங்கம் பற்றியும் தெரிந்த ஆட்களாய் இருந்தால் அதை வைத்து ஏதாவது துப்பு துலக்கலாம் என்று தோன்றியது. இதில் ஒரு துப்பும் கிடைக்காமலும் போகலாம், இந்தக் கணக்கே தப்பாக இருக்கலாம் என்றாலும் இப்படிப்பட்ட கணக்குகளில் தான் அவர் பல வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்திருக்கிறார். நீலகண்ட சாஸ்திரியின் மகன் தன்னிடமுள்ள புத்தகத்தை பத்து வருடங்களுக்கு மேலாக யாரிடமும் தரவில்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைப் பற்றி யாரிடமாவது பேசி அதற்கும் அதிக காலமாகி விட்டது என்று சொன்னார். அதனால் அவர் மூலமாக இந்தச் செய்தி பரவி இருக்க வாய்ப்பில்லை...

நேற்று காலையில் நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஆன்மிக பாரதம்என்ற பழைய காலத்துப் புத்தகம் நகரத்தில் எந்தெந்த நூலகங்களில் இருக்கின்றன என்பதை விசாரிக்க ஆரம்பித்தார். மாலையில் தான் இரண்டு நூலகங்களில் அந்தப் புத்தகம் ஒவ்வொரு பிரதி இருப்பது தெரிய வந்தது. மாவட்ட மைய நூலகத்திலும், இந்த நூலகத்திலும் இருப்பது தெரிந்ததும் முதலில் மாவட்ட மைய நூலகத்திற்குச் சென்றார்.

நீலகண்ட சாஸ்திரியின் ஆன்மிக பாரதம்தூசி, சிலந்தி வலையுடன் ஆன்மிகப் பிரிவு அலமாரி ஒன்றில் இருந்தது. வருடக்கணக்கில் அந்த நூல் படிக்கப்படவில்லை என்பது அதைப் பிரிக்கும் போதே தெரிந்தது. பிரித்து 178வது பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டு வைத்தார். நூலக கம்ப்யூட்டரில் அந்தப் புத்தகத்தை கடைசியாகப் படிக்க எடுத்துச் சென்றது ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்கு முன்பு என்று குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இந்த நூலகத்திற்கு நேற்று மாலையே வருவதாக இருந்தார். ஆனால் நூலகம் மூடப்படும் நேரமாகி விட்டிருந்தபடியால் காலையில் வந்திருக்கிறார்.

நூலகம் திறக்கப்பட்டவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பார்த்தசாரதி நூலக அதிகாரி உதவியுடன் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துப் பார்த்தார். புத்தகத்தில் தூசி, சிலந்தி வலை இல்லை. தனியார் நூலகம் என்பதால் அடிக்கடி தூசி தட்டி துடைத்து வைக்கும் பழக்கம் இருக்கிறதோ என்று எண்ணியவராக புத்தகத்தைத் திறந்து பார்த்தார். புத்தகத்தின் உள்ளே முதல் பக்கத்தில் ஒட்டி இருக்கும் நூலகக் குறிப்புக் காகிதம் இல்லை. நூலக உறுப்பினர் எண், புத்தகம் திருப்பித் தர வேண்டிய தேதி ஆகியவை எழுதி வைக்கப்படும் தாள் கிழிக்கப்பட்டிருந்தது. பார்த்தசாரதி அதைக் காண்பித்து விட்டுச் சொன்னார். “இந்தப் புத்தகத்தை இந்த ஒரு வருஷ காலத்தில் யாரெல்லாம் படிச்சிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டி இருந்தது. அந்தப் பக்கத்தையே கிழிச்சிட்டாங்களே

ஆச்சரியப்பட்ட நூலக அதிகாரி சொன்னார். “கொண்டு போகிற புத்தகத்தைப் பத்திரமாய் வைக்கிற பழக்கம் பல பேர் கிட்ட கிடையாது. குழந்தைகள் கைல கிடைக்கிற மாதிரி புத்தகத்தை வச்சிடறாங்க. குழந்தைகள் கிழிச்சிடறாங்க... பரவாயில்லை. இந்தத் தகவல் எங்க கம்ப்யூட்டர்ல இருக்கும். வாங்க பார்த்துச் சொல்றேன்.

அவர் பார்த்தசாரதியைத் தனதறைக்கு அழைத்துச் சென்றார். கம்ப்யூட்டரில் தேடிய அதிகாரி முகத்தில் திகைப்பு பெரிய அளவில் தெரிந்தது.

பார்த்தசாரதி கேட்டார். “என்ன ஆச்சு?

“ஏதோ வைரஸ் அட்டேக் போல இருக்கு. எந்தப் புத்தகம் எடுத்ததற்கும் ரிகார்டு இங்கே இல்லை. எல்லாம் அழிஞ்சு போயிருக்கு... நேற்றைக்கு வரைக்கும் சரியாய் தானே இருந்துச்சு...

பார்த்தசாரதியின் சந்தேகம் உறுதிப்பட்டது. புத்தகத்தில் ஒட்டி இருக்கும் தாளும் கிழிந்து போய் கம்ப்யூட்டரில் உள்ள ரிகார்டுகளும் அழிந்து போய் இருப்பது இயல்பாக இல்லை. அவர் நேற்று போட்ட மனக்கணக்கை யாரோ தெரிந்து கொண்டு வேகமாக இயங்கி இருக்கிறார்கள்.....

“இப்படி ஆகிறது உண்டா?பார்த்தசாரதி கேட்டார்.

“என் சர்வீஸ்ல இப்படி ஆனதில்லை சார்

“நான் இந்தப் புத்தகம் பற்றிக் கேட்டதை நீங்கள் யார் கிட்டயாவது சொன்னீங்களா?

“இல்லையே சார். நானே தான் கம்ப்யூட்டரில் தேடிப்பார்த்து இருக்கிறதைக் கண்டு பிடிச்சு சொன்னேன்....

பார்த்தசாரதிக்கு அவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது. அப்படியானால் அவருடைய ஆபிசில் இருந்து தான் தகவல் கசிந்திருக்க வேண்டும். சென்ற முறை சீர்காழியில் அந்த இளைஞனைத் தேடிப் போன போதும் இதே தான் நிகழ்ந்திருக்கிறது....

பார்த்தசாரதி கேட்டார். “புத்தகங்களை எடுத்துப் படிச்சவங்க பத்தின தகவல்கள் மட்டும் அழிஞ்சிருக்கா? இல்லை உங்க உறுப்பினர்கள் பத்தின தகவல்கள் எல்லாம் சேர்ந்து அழிஞ்சு போயிருக்கா?

“புத்தகங்களை எடுத்துப் போனதும், திருப்பித் தந்ததுமான தகவல்கள் மட்டும் அழிஞ்சு போயிருக்கு சார்.  உறுப்பினர் பத்தின தகவல்கள் எல்லாம் அப்படியே இருக்கு

“எத்தனை உறுப்பினர்கள் இருக்காங்க?

“இன்றைய தேதியில் 18365 பேர் இருக்காங்க சார். இதில் 12000 பேர் ரெகுலரா வந்து போறவங்க

பரமேஸ்வரன் வீட்டு விலாசத்தைத் தந்த பார்த்தசாரதி இந்த விலாசத்துல ஏதாவது உறுப்பினர் இருக்காங்களான்னு பாருங்கள்”.

அந்த நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார். மீனாட்சிங்கறவங்க பேர் இருக்கு. இது தொழிலதிபர் பரமேஸ்வரன் ஐயா பொண்ணு. அவங்க அடிக்கடி இங்கே வர்றவங்க. அவங்க நல்ல மாதிரி ...

பார்த்தசாரதி தலையாட்டினார். அவங்க இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிப்பாங்களா?

அவங்க அதிகம் நாவல்கள் தான் படிப்பாங்க. எப்பவாவது பக்திக் கதைகளும் படிப்பாங்க. இந்த மாதிரி சீரியஸான புத்தகங்கள் எல்லாம் எடுத்துகிட்டு போனதாய் எனக்கு நினைவில்லை....

வேறு யாரெல்லாம் இதைப் படித்திருக்கலாம் என்று தெரியவில்லையே என்று பார்த்தசாரதி யோசித்தார். புத்தகத்தை எடுத்துப் போய் தான் படித்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இங்கேயே படிக்கிற ஆள்களும் உண்டு. அப்படி யாராவது படித்திருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.

பார்த்தசாரதி எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். தென்னரசுவைப் பார்க்கப் போக வேண்டும்.... திடீர் என்று நூலக அதிகாரியிடம் கேட்டார். “உங்க உறுப்பினர்கள்ல தென்னரசுங்கற பேர் இருக்கான்னு பாருங்கள்

நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார். “இருக்கு சார். அந்தம்மா அளவுக்கு இல்லைன்னாலும் இவரும் அடிக்கடி வர்றவர் தான்

“இவர் எந்த மாதிரியான புத்தகங்கள் படிப்பார்?

நூலகர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “இவர் கொஞ்சம் சீரியஸ்  ரீடிங் தான். அதிலும் இலக்கியம் அதிகம் படிப்பார்.

“இவர் இந்த ஆன்மிக பாரதம் புத்தகத்தைப் படித்திருக்கலாமா?

நூலகருக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

பார்த்தசாரதி அவருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார். ஈஸ்வரின் தந்தையுடன் சேர்ந்து சிறிய வயதிலேயே சிவலிங்கம் ஒளிர்வதைப் பார்த்த நபர் தென்னரசு...... பரமேஸ்வரன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்....

ணபதி அதிகாலையில் இருந்தே நிறைய யோசித்தான். அரக்கு வைத்து மூடிய உறையில் வந்த அந்த பத்தாயிரம் ரூபாயை பிள்ளையாருக்கு எப்படி செலவழிப்பது என்கிற யோசனை தான் அது. பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருந்தாலும் இந்த பத்தாயிரம் ரூபாயில் அதிகபட்சமாய் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். பிள்ளையாருக்குச் செலவு செய்யப் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்தான்.

நேற்று மீதி வைத்திருந்த அம்மாவின் சீடைகளைச் சாப்பிட்டுக் கொண்டே பிள்ளையாரிடம் பேசினான்.  “பிள்ளையாரே, நான் இங்கே உங்கப்பாவுக்குப் பூஜை செய்ய வந்த பிறகு நம் ரெண்டு பேருக்குமே யோகம் அடிக்க ஆரம்பிச்சிருக்குன்னு தான் சொல்லணும். எனக்கும் உனக்கும் பட்டுவேஷ்டி கிடைச்சுது. எனக்கு நாள் ஒண்ணுக்கு ஐநூறு ரூபாய் குருஜி தர்றதா சொல்லி இருக்காரு. எனக்கு கிடைக்கிற மாதிரி உனக்கும் மொத்தமா பணம் கிடைச்சிருக்கு பாரேன்...

மணியைப் பார்த்தான். மணி 8.55. ஐந்து நிமிடங்களில் ருத்ர ஜபம் செய்ய ஐந்து நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்று நினைத்தவன் கை கால் கழுவிக் கொண்டு வந்து அந்த செக்கை எடுத்து இன்னொரு தடவை மகிழ்ச்சியாகப் பார்த்து விட்டு அந்த செக்கை சிவலிங்கத்தின் அடியில் வைத்து எல்லாம் உன் கிட்ட வந்த ராசிஎன்று சொல்லி சாஷ்டாங்கமாக வணங்கினான்.

கண்களை மூடி வணங்கி எழுந்தவன் கண்களைத் திறந்த போது சிவலிங்கம் திடீர் என்று ஒரு கணம் ஜோதியாய் ஒளிர்ந்தது. மறு கணம் பழைய நிலையிலேயே சிவலிங்கம் இருக்க கணபதிக்கு தான் கண்டது பிரமையா உண்மையா என்கிற சந்தேகம் வந்தது. அவன் உடலில் இன்னும் மயிர்கூச்செறிந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது பார்த்த காட்சி உண்மை போல இருந்தது. கணபதி திகைப்போடு சிவலிங்கத்தைப் பார்த்தான். குருஜி இதைச் சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

அவன் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் நான்கு வேதபாடசாலை மாணவர்கள் ருத்ர ஜபம் செய்ய வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் முதலில் கதவை மூடிப் பிறகு ஜன்னல்களை எல்லாம் மூடினார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கணபதி ஜன்னல் வழியாகக் கூட ஈஸ்வரைப் பார்த்து விடக்கூடாது, வெளியேயும் வந்து விடக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தது.

“ஏன் கதவையும் ஜன்னல்களையும் மூடறீங்க?கணபதி குழப்பத்துடன் கேட்டான்.

ருத்ர ஜபம் பண்றப்ப வேற எந்த சத்தமோ தொந்திரவோ வந்துடக் கூடாதுன்னு குருஜி சொல்லி இருக்கார். 

கணபதி தலையாட்டினான். அவர்கள் பூஜை அறையில் இருந்தே பத்தடி தள்ளி உட்கார மறுபடி குழப்பம் அடைந்த கணபதி சொன்னான். “இது ஏன் இவ்வளவு தள்ளி உட்கார்ந்து ஜபம் செய்யறீங்க. பக்கத்துல வாங்களேன்

இதற்குப் பதில் உடனடியாக வரவில்லை. சிறிது கழித்து பலவீனமாய் அவர்களில் ஒருவன் சொன்னான். “பரவாயில்லை...

அவர்கள் ருத்ரஜபம் ஆரம்பிக்க கணபதி சிவலிங்கத்திற்கு அருகில் ஒரு ஸ்தோத்திர புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். ஆனால் மனம் ஸ்தோத்திரத்தில் இசையவில்லை. சற்று முன் ஒளிர்ந்த சிவலிங்கம் பற்றியும், இப்போது தள்ளி உட்கார்ந்திருந்து ருத்ர ஜபம் செய்யும் வேதபாடசாலை மாணவர்கள் பற்றியும் மனம் யோசித்தது.

‘இந்த சிவலிங்கத்தின் சக்தி தெரிந்து தான் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் தள்ளி பயபக்தியுடன் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது. இதன் சக்தி தெரியாமல் நான் தான் கொஞ்சம் கூட பயபக்தி இல்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறேனோ

அம்மா தந்தனுப்பிய சீடையை நேற்றும் இன்றும் இறைவன் முன்னாலேயே கொறித்தது நினைவுக்கு வர அவனுக்கு அவமானமாக இருந்தது. மேலும் ஏதோ கிழவி கதைப்பது போல தினமும் இந்த சிவலிங்கம் முன்னால் உட்கார்ந்து கதைக்கிறோமே இது நியாயமா என்று மனசாட்சி கேட்க அவனுக்குப் பெரியதாக குற்ற உணர்ச்சி பிறந்தது.

சிவனிடம் மனதாரச் சொன்னான். சிவனே என்னை மன்னிச்சுடு. எனக்கு படிப்பு மட்டுமல்ல, அறிவும் கிடையாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் எங்கம்மா, அக்காங்க, பிள்ளையார் இவங்க நாலு பேர் தான். சின்ன வட்டத்துலயே இருந்துட்டேன். இந்த மரியாதை, சுலோகம், ஜபம் இதெல்லாம் எனக்கு பிடிபட மாட்டேன்குது. இத்தனையும் மீறி நீ எனக்கு இது வரைக்கும் நல்லதே செய்திருக்கிறாய். பெருந்தன்மையாய் இருந்திருக்கிறாய். இனி மேல் நான் உன் கிட்ட ஒழுங்கா நடந்துக்கறேன். இது வரை நடந்துகிட்டதைப் பொறுத்துக்கோ. முக்கியமாய் சீடையை உலகத்தில் முதல் தடவை பார்க்கிற மாதிரி உன் முன்னாலேயே வாயில் போட்டுகிட்ட்து மகா தப்பு தான். ...பக்தியை விட நாக்கு முந்திகிட்டது தப்பு தான் மன்னிச்சுக்கோ. அம்மா சீடையை நல்லா செய்வா. அதான் அப்படி...

சிவலிங்கத்திடம் கணபதி பேசிக் கொண்டிருக்கையில் ஈஸ்வரின் கார் வேதபாடசாலைக்குள் நுழைந்தது. அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த குருஜி ஜன்னல்  வழியாக மறைவில் நின்று ரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈஸ்வர் காரை விட்டு இறங்கப் போன போது காலடியில் சிவலிங்கம் தெரிய பதறி போய் காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அந்தரத்தில் தெரிந்த சிவலிங்கம் இன்று வேதபாடசாலை மண்ணில் அவன் இறங்கப் போகும் இடத்தில் தெரிந்தது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. அவன் மறுபடி கீழே பார்த்தான். இப்போது சிவலிங்கம் காட்சி அளிக்கவில்லை.

ஆனாலும் சிவலிங்கம் பார்த்த இடத்தில் காலை வைக்க ஈஸ்வருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு கணம் யோசித்தவன் குனிந்து அந்த மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு இறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்  


Monday, May 27, 2013

உபவாசம் எதற்காக?




அறிவார்ந்த ஆன்மிகம் - 6


ல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.  கிறிஸ்துவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள். எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பிடத்தைப் பெற்று இருப்பது தெளிவாகிறது.

சமஸ்கிருதத்தில் உபஎன்றால் அருகில் என்று பொருள். வாசம்வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். ஆகவே உபவாசம் என்பதற்கு இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள் சொல்லப்படுகின்றது. சிலர் இறையருளைப் பெறவும் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கிறார்கள். சிலர் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள்.

உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கிடத்தல் என்றாலும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருப்பதிலிருந்து குறிப்பிட்ட உணவை மட்டும் உண்டு அல்லது குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தவிர்த்து உபவாசம் இருப்பது வரை பல வித உபவாசங்களும் உபவாசமாகவே கருதப்படுகின்றன.

நமது நேரமும், சக்தியும் உணவைத் தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம். இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்படுகின்றன. புத்தி கூர்மையாகிறது. மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது.

எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங்களுக்கு அடிமையாகி செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் வேட்கையும் தூண்டுதலும் அதிகரிக்கும். உண்ணா நோன்பு இருக்கையில் புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. அதனால் ஆசைகளும், விருப்பங்களும் கீழ்நிலையிருந்து விலகி உன்னதமானவையாக மாறுகின்றன. இறைவனை நினைக்கவும் சிந்திக்கவும் இதை விடச் சிறந்த சூழல் வேறென்ன இருக்க முடியும்?

ஆனால் உபவாசம் இருப்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல என்பதில் எல்லா மதங்களும் உறுதியாக இருக்கின்றன. உபவாச காலத்தில் மனதைக் கட்டுப்படுத்தி காம குரோதங்களை விட்டொழித்து முழு மனதையும் இறைவனிடத்திலும் உயர்ந்த விஷயங்களிலும் இருத்த வேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்துவதாக இஸ்லாம் கூறுகிறது. “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒருபடி போய் நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கிறார். ரம்ஜானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரம்ஜானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் அதன் பொருள். எனவே அத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. விரதம் முடிந்த பின் நாக்கின் தீவிர வேட்கைக்கு ஆளாகி விடக்கூடாதென்றும், உண்ணா நோன்பின் நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும் இஸ்லாம் கூறுகிறது.

உணவின்றி உபவாசம் இருத்தல் அதிக நேரம் ஜெபத்தில் இருக்கவும், சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் உதவும் ஆன்மிக வழிமுறையாக கிறிஸ்துவம் கருதுகிறது. ஆனால் அது சம்பிரதாயமாகவும், போலித்தனமாகவும் மாறி விடக் கூடாதென்று இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார். “உபவசிக்கும் போது மனுஷருக்குக் காணப்படாமல் அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவுக்கு மட்டும் காணும்படியாகஇருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் மெய்ஞானத்தை அடைய வேண்டுமென்றால் சில உடல், மனக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன் ஒரு பகுதி தான் உபவாசம். எந்த ஒரு எந்திரமும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்க நேரிடும் சீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க நேரிட வேண்டியுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்குகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம்.

அப்படிப்பட்ட ஓய்வு உடலுக்கு உபவாச காலத்தில் கிடைப்பதால் உண்ணா விரதம் இருப்பது ஆரோக்கிய ரீதியாகவும் பயனளிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  தொடர்ச்சியாக விரதங்களைக் கடைப்பிடிப்பவர்களின் இதயத்துக்கு உபவாசம் நன்மை செய்கின்றதாக அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. உதா (Utah) மாநிலத்தில் மருத்துவர்கள் 200 நோயாளிகளிடம் நடத்திய அந்த ஆய்வில் விரதம் கடைப்பிடித்த நோயாளிகள் விரைவில் இருதய நோய்களில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனை ஆஞ்சியோகிராம், இரத்த நாளங்களின் எக்ஸ்-ரே போன்றவற்றின் ஊடாக உறுதியும் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மோர்மோன் என்னும் மதப்பிரிவினர் மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உபவாசம் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். இப்படியாக அந்த நோன்பு இருப்பவர்களுக்கு பிற நோயாளிகளைக் காட்டிலும் 58 சதவீதம் இதய நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பதும கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக இன்னொரு ஆய்வு மூலமாக அமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கார்டியோலஜி  தகவல் வெளியிட்டள்ளது. இருப்பினும் இந்த ஆய்வில் எவ்வளவு கால நோன்பு எப்படியான இதய ஆரோக்கியத்துக்கு வழி செய்கின்றது என்பதை உறுதியாக இன்னும் ஆராய்ந்து அறிய முடியவில்லை என மருத்துவர் பெஞ்சமின் டி. ஹோர்ன் தெரிவித்திருக்கிறார்.

"நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே"

என்று பாடுகிறான் பாரதி.  அதாவது நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன என்று வியக்கிறான் பாரதி. உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மையடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதியும் சுட்டிக் காட்டுகிறான். ‘லங்கணம் பரம் ஔஷதம்என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து என்பது தான்.

இப்படி ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பயனளிக்கும் உபவாச விரதத்தை நாமும் இருந்து இரு வகையிலும் பயனடையலாமே!

-          என்.கணேசன்
-          நன்றி:  தினத்தந்தி – ஆன்மிகம் - 16-04-2013



Thursday, May 23, 2013

பரம(ன்) ரகசியம் – 45




குருஜி அனுப்பிய ஆள் காமாட்சியிடம் இருந்து அரக்கு வைத்து மூடிய அந்த உறையை வாங்கிக் கொண்டு வந்தான். அவன் வரும் வரை பொறுமை இல்லாமல் காத்திருந்த குருஜி அவனிடம் கேட்டார். “அந்தம்மா எதாவது சொன்னாங்களா?

“இல்லை குருஜி. கணபதிக்கு கொஞ்சம் சீடையும் கொடுத்து அனுப்பி இருக்காங்க. கணபதிக்கு சீடைன்னா இஷ்டமாம்

அவன் அந்த உறையோடு சீடையையும் தர குருஜி பொறுமை இழந்தவராக முகம் சுளித்தார். ‘சீடையை அவன் கிட்டயே அப்புறமா குடு.

உறையை வாங்கிக் கொண்டு அவர் அவனைக் கால் மணி நேரம் கழித்து வரச் சொன்னார். அவன் போன பின் அந்த உறையை அவசரமாகப் பிரித்தார்.

அதன் உள்ளே பழுப்பேறிய வெள்ளைத் தாளில் எழுதி இருந்த கடிதத்தைப் படித்தார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,

அநேக ஆசிர்வாதம்.

இந்தக் கடிதம் உனக்கு விந்தையாக இருக்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் இந்த விவரங்கள் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனாலும் இதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பதை நீ தினமும் பக்தியுடன் வணங்கும் பிள்ளையார் மீது ஆணையாக நான் கூறுகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் இதில் சொல்லப்பட்டுள்ள இரகசியத் தகவல்களை உன் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் நீ சொல்லக் கூடாது என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்களால் ஒரு சிவலிங்கம் உருவாக்கப்பட்டது.  தங்கள் ஞானதிருஷ்டியால் எதிர்காலத்தில் கலி முற்றிப் போய் ஏற்பட இருக்கும் சீரழிவுகளை அறிந்த அந்த  சித்தர்கள் அக்காலத்தில் மனித குலத்தைப் பேரழிவில் இருந்து காக்கும் எண்ணத்தில் தங்களிடம் இருக்கும் அபூர்வ சக்திகளை எல்லாம் அந்த சிவலிங்கத்தில் ஆவாஹனம் செய்து அதை வணங்கினார்கள். விசேஷ மானஸ லிங்கம் என்று நாமகரணம் சூட்டிய அந்த சிவலிங்கத்தை  இரகசியமாய் மிகுந்த பக்தியுடன் பூஜித்து வந்தார்கள்.

அவர்கள் காலத்திற்குப் பின் தகுதி வாய்ந்த அடுத்த மூவர் குழுவிற்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கத் தந்து விட்டுச் சென்ற அந்த சித்தர்கள் பிற்காலங்களிலும் அதே போல் தூய்மையான பக்தி, கூர்மையான அறிவு, ஞானசித்தி பெற்றிருந்தவர்களுக்கே அந்த விசேஷ மானஸ லிங்கம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விதியை விதித்து விட்டுச் சென்றனர். ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே அந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்து வந்தது. தொடர்ந்து பூஜை செய்த சித்தர்களும் அந்த லிங்கத்திற்கு சக்தி சேர்த்து வந்தார்கள்.

ஒரு கால கட்டத்தில் தற்செயலாக அந்த விசேஷ மானஸ லிங்கம் பூஜிக்கப்படுவதைக் காண நேர்ந்த சோழ மன்னன் முதலாம் இராஜாதி இராஜ சோழன் அதனால் ஈர்க்கப்பட்டு அதற்கு தன் பாட்டனார் இராஜ இராஜ சோழனை விடப் பெரிய கோயில் ஒன்றை கட்ட ஆசைப்பட்டு விசேஷ மானஸ லிங்கத்தை சித்தர்களிடம் கேட்டான்.

எதிர்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வியாபாரத் தலங்களாக மாறி விடும் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்திருந்த சித்தர்கள் அதை மன்னனுக்குக் கூடத் தர சம்மதிக்கவில்லை. உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்ட அவர்களும், அந்த சிவலிங்கத்தை வழிவழியாக பூஜித்து வந்தவர்களும் பொது மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாய் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வந்தார்கள்.

ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே இருந்த விசேஷ மானஸ லிங்கம் பின்பு தகுதி வாய்ந்த மற்றவர்களிடமும் கூடச் சென்றது. ஆனால் அதை ரகசியமாகவும், தூய பக்தி குறையாமலும் பூஜிக்கும் தன்மை உள்ளதா என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டே அவர்களுக்குத் தரப்பட்டது. அதில் இக்காலம் வரை எந்தச் சிறு விலகலும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

இதை எல்லாம் உன்னிடம் நான் தெரிவிக்கக் காரணம் என்ன என்று நீ வியக்கலாம். அதன் காரணம் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் பெரும் பாக்கியம் உனக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது தான். இந்தக் கடிதம் உன்னை வந்தடையும் காலத்திற்கு சற்று முன்னதாகவோ, சற்றுப் பிந்தியோ வர இருக்கும் இந்த வாய்ப்பை நீ ஏற்றுக் கொண்டு முறையாகவும், ரகசியமாகவும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வருவாயாக!

சாதாரணமானவனாகவே உன்னை நீ நினைத்துக் கொண்டு இருப்பதால் இதற்குப் பொருத்தமானவன் தானா என்று உன்னையே நீ சந்தேகிக்கலாம். சுபாவத்தில் எளிமையானவனும், தூய்மையானவனுமான உனக்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் முழுத்தகுதியும் உண்டு. அதனால் தான் நீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள். விசேஷ மானஸ லிங்கத்தின் மற்ற இரண்டு பாதுகாவலர்களை இன்னேரம் நீ சந்தித்திருக்கலாம், அல்லது விரைவில் சந்திக்கலாம்.

உன்னிடம் விசேஷ மானஸ லிங்கம் வந்து சேரும் போது அது முழுமையான சக்திகளைப் பரிபூரணமாய் பெற்று இருக்கும். இனி அதற்குத் தேவை சக்தி வாய்ந்த, சக்தி சேர்க்கும் சித்தர்களோ, பூஜிப்பவர்களோ அல்ல. அதற்குத் தேவை அதை நன்மை நிறைந்த மனதுடன் தூய்மையாய் பூஜிப்பவர்களே.

விசேஷ மானஸ லிங்கம் தன் சரித்திரத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் உன்னிடம் வந்துள்ளது. பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அப்படி நேராமல் காக்கின்ற பொறுப்பு உங்கள் மூவருக்கு உண்டு. அந்த சிவலிங்கத்தின் அருகிலேயே எப்போதும் இருக்க முடிந்த உனக்கு பொறுப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

உன்னால் முடியுமா என்று நீ சந்தேகிக்க வேண்டியதில்லை. முடியாத பொறுப்புகள் அறிஞர்களால் தரப்படுவதில்லை. உனக்கு விசேஷ மானஸ லிங்கம் நிறைய கற்றுத் தரும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்....

குருஜி படித்துக் கொண்டிருக்கையில் ஜன்னல் வழியே திடீரென பெரும் காற்று வீசியது. அவர் சுதாரிக்கும் முன் அவர் கையில் இருந்த அந்தக் கடிதம் நழுவி காற்றில் பறந்தது. ஜன்னல் வழியே ஒரு பெரும்சக்தி அந்தக் கடிதத்தை வெளியே இழுத்தது போல் இருந்தது. குருஜி வேகமாய் அந்தக் கடிதத்தைக் கைப்பற்றும் முன் கடிதம் ஜன்னல் வழியே காற்றில் பறக்க ஆரம்பித்தது.

திகைத்துப் போன குருஜி அதி வேகமாக வெளியே ஓடினார். ஆனால் அந்தக் கடிதம் காற்றில் பறந்து சென்று தூரத்தில் சருகுகளை எல்லாம் சேர்த்து இரண்டு மாணவர்கள்  எரித்துக் கொண்டு இருந்த தீயில் விழுந்தது. அந்தக் காகிதம் எரிந்து கருகுவதையே பார்த்துக் கொண்டு குருஜி நின்றார்.  

குருஜியைக் கண்டதும் சருகுகளை எரித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் பயபக்தியுடன் எழுந்து நின்றனர். தீயில் விழுந்த அந்தக் காகிதம் அவருக்குத் தேவைப்பட்ட முக்கியக் காகிதமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. “குருஜி இந்தக் காகிதம்.....என்று ஒருவன் இழுத்தான்.

தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு குருஜி புன்னகைத்தார். “வேண்டாத காகிதம் தான்.

சொல்லி விட்டுத் திரும்பினவருக்கு அந்தக் கடிதம் மேற்கொண்டு சொல்ல வந்தது என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது. எத்தனை சிந்தித்தும் அவரால் கணபதிக்குச் சொல்லப்பட்ட அறிவுரை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.

அரக்கு வைத்து மூடிய உறையையும், முன்பு எப்போதோ எழுதியது போல் தெரிந்த பழுப்புக் காகிதத்தையும், அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது என்று அவர் காமாட்சியிடம் சொன்னதையும் வைத்துப் பார்த்தால் யாரோ முன்பே அவருக்குக் கொடுத்து வைத்த உறையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மேலும் மூளை வேலை செய்த போது ஜோதிடரின் குருநாதர் சிதம்பரநாத யோகி சாவதற்கு முன் கொடுத்து விட்டுப் போன உறையாகத் தான் இருக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

கணபதியை அவர்கள் முன்பே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நினைக்கையில் குருஜிக்கு சுருக்கென்றது. அவர் தானாகக் கணபதியைத் தேர்ந்தெடுத்தது போல நினைத்திருக்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஆளை அவர் தேர்ந்தெடுத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தது அவரால் சகிக்க முடியாததாக இருந்தது.

விசேஷ மானஸ லிங்கத்திடம் அவர் கேட்ட கேள்விகள் இப்போது அவர் செவிகளை அறைந்தன. “என் குருநாதர் போன்ற பெரிய சித்தர்கள் பூஜை செய்த உன்னை இப்போது கணபதி என்கிற ஒன்றும் தெரியாத ஒரு பையன் பூஜை செய்வது உனக்கு எப்படி இருக்கிறது. மௌனமும் அமைதியுமாக உன்னைப் பூஜித்து வந்தவர்களுக்குப் பிறகு இப்போது சலிக்காமல் எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பையன் கிடைத்திருப்பது எப்படி இருக்கிறது. உனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாததால் நீ ஒரு சலனமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணபதியைத் தேர்ந்தெடுத்து நான் உன்னைப் பூஜை செய்ய வைத்திருப்பதற்கு என் குருநாதர் என்ன நினைப்பார்? இது வரை பூஜை செய்வது யார் என்பதை தீர்மானம் செய்தது அவர்கள் கூட்டமாகத் தான் இருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை நான் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன?....

இந்தக் கடிதம் இன்னொரு முக்கியக் கேள்வியை அவர் மனதில் எழுப்பியது. இரண்டு முறை கணபதியைச் சந்தித்த அவருடைய குருநாதரான சித்தர் ஏன் நேரடியாகச் சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லவில்லை. தக்க சமயத்திற்காகக் காத்திருந்தாரா? இல்லை வேறெதாவது காரணமா?

தனதறைக்குள் திரும்ப வந்து அமர்ந்த குருஜி ஜன்னல் வழியாகப் பார்த்தார். சற்று முன் அத்தனை பலமாகக் காற்றடித்ததின் அறிகுறியே காணோம். காற்று தற்செயலானது என்றோ, சரியாக முக்கியக் கட்டம் படிக்கும் முன் அந்தக் காற்றில் கடிதம் பறந்ததும், தீயில் விழுந்து எரிந்ததும் இயல்பானது என்றோ அவர் நினைக்கவில்லை. அவருடைய குருநாதர் சித்தர் தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அவர் அறிவார். நேரில் தரிசனம் தரா விட்டாலும் குருநாதரின் இருப்பை இந்த நிகழ்ச்சியில் அவர் உணரவே செய்தார்.

ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் முன் குருநாதரைக் கட்டுப்படுத்தி வைக்கா விட்டால் எதுவும் நினைத்தபடி நடக்காது என்பதை அவர் அறிவார்.  கண்களை மூடிக் கொண்டு அவர் யோசிக்க ஆரம்பித்தார்.... தடைகள் என்றுமே அவரைத் தடுத்து நிறுத்தியதில்லை. இனியும் அப்படித் தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்க மாட்டார்.  எல்லா மோசமான சூழ்நிலைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கவே செய்கிறது. தீர்வு இல்லாத பிரச்சினை இல்லை. சொல்லப் போனால் பிரச்சினையும் தீர்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்கவே செய்யும்....

குருஜி கண்களைத் திறந்த போது என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசித்து முடித்திருந்தார். கணபதி வீட்டுக்குப் போய் அந்தக் கடிதம் வாங்கி வந்தவனை உடனே வரவழைத்தார். கணபதிக்குத் தர ஒரு புதிய கடிதம் உடனே தயார் செய்யச் சொன்னார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,
நாங்கள் ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தர்ம ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் வரசித்தி விநாயகர் கோயிலிற்கு இத்துடன் ரூ.10000/- நன்கொடையாக அடுத்த மாதம் முதல் தேதியிட்ட காசோலை மூலம் அனுப்பி உள்ளோம். இப்பணத்தை கோயில் திருப்பணிகளுக்கு உபயோகித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
பாரதீய ஆன்மிகப் பேரவை

பாரதீய ஆன்மிகப் பேரவை அவர் ஆதரவில் நடக்கும் பல டிரஸ்டுகளில் ஒன்று. அந்தப் பேரவையின் செக் ஒன்றை ரூ.10000/-க்கு எழுதி அக்கடிதத்துடன் இணைத்து அதை ஒரு உறையில் வைத்து உண்மையான உறையில் இருந்தபடியே விலாசம் எழுதி அரக்கு வைத்து மூடி விட்டு கணபதியை அழைத்து வரச் சொன்னார்.

கணபதி வந்தான்.

புன்னகையுடன் அவனை வரவேற்ற குருஜி சொன்னார். “...இந்தா கணபதி. உனக்கு வந்த லெட்டர்... கூடவே உன் அம்மா சீடையும் தந்து அனுப்பிச்சு இருக்காங்க... உனக்கு சீடை ரொம்பப் பிடிக்குமோ...

கணபதி வெட்கப்பட்டான். ‘..இந்த அம்மாவுக்கு நான் இன்னும் சின்னப் பையன்னே நினைப்பு.. லெட்டர் கூட சீடையை யாராவது அனுப்புவாங்களா... ஆனா அம்மா செய்யற சீடையே தனி ருசி தான்...’ நினைக்கும் போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. கடிதத்தையும், சீடையையும் வாங்கிக் கொண்டான்.

குருஜி சொன்னார். “கணபதி, நாளைக்கு சிவனுக்கு விசேஷமான நாள். தொடர்ச்சியாக சில மணி நேரம் சிவலிங்கம் முன்னாடி இருந்து ருத்ர ஜபம் செய்ய இந்த வேதபாடசாலை மாணவர்கள் சிலர் கிட்ட சொல்லி இருக்கேன். நீயும் அந்த நேரத்துல சிவனுக்கு பூஜை செய்துகிட்டு இரு. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே...

கணபதிக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சீடையோடும், கடிதத்தோடும் அவன் போன பிறகு தன் ஆளை அழைத்துச் சொன்னார். “உண்மையான பக்தி இருக்கிற நாலு பசங்களை ருத்ர ஜபம் செய்ய நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு அனுப்பு. அவர்களை பூஜை அறையில் இருந்து பத்தடி தள்ளி உட்கார்ந்து மௌனமாய் ருத்ர ஜபம் செய்யச் சொல்லு. எந்தக் காரணத்தை வைத்தும் மதியம் ரெண்டு மணி வரை கணபதி வெளியே வராத மாதிரி பார்த்துக்கோ. காலைல ஒன்பதரை மணிக்கு ஈஸ்வரை வேதபாடசாலைக்கு வரச் சொல்லி இருக்கேன். அவனை ஒன்றரை மணிக்குள் வெளியே அனுப்பிடறேன்....

அவர் ஆள் போனபின் தன் உதவியாளனுக்குப் போன் செய்து நாளை மறுநாள் அதிகாலையில் ரிஷிகேசம் செல்ல தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யச் சொன்னார். ரிஷிகேசத்தில் மலைக்காட்டுப் பகுதியில் பயணம் செய்யத் தகுந்த ஜீப் ஒன்றையும் தயார் செய்யச் சொன்னார்.

போன் பேசி முடித்த போது அவருக்குப் பழைய தன்னம்பிக்கை திரும்ப வந்திருந்தது. மறுபடியும் அந்தக் கடித வரிகளை ஆரம்பத்தில் இருந்து மனதிற்குள் படித்துப் பார்த்தார். ஆர்வத்தோடு படிக்கும் விஷயங்களை அவர் ஒரு முறை படித்தாலே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் தனித்தன்மை பெற்றிருந்தார் என்பதால் மறுபடி நினைவுபடுத்திக் கொள்வதில் அவருக்குச் சிரம்ம் இருககவில்லை. அதில் சில வரிகள் அவரைப் புன்னகை பூக்க வைத்தன.


”...பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை....

அப்படி நடக்கும் சாத்தியம் உண்டு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பயம் இருக்கிறது.... சிவலிங்கம் இன்னும் அவர் வசம் தான் இருக்கிறது.... கூடவே கணபதியும் தான்.....

நினைக்க நினைக்க குருஜிக்கு தன்னம்பிக்கை மேலும் வளர்ந்தது. அவர் புன்னகை பூத்தார். குருவிடம் அவர் மானசீகமாகப் பேசினார். “....கணபதிக்கு என்ன அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியா விட்டாலும் பரவாயில்லை குருவே. அதை இனி அவனும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவனுக்கு நேரடியாகவே சொல்ல முடிந்த இரண்டு சந்தர்ப்பங்களை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் குருவே. இனி நீங்கள் எப்போதும் தனியாக அவனை சந்திக்கப் போவதில்லை. அவனிடம் அதைச் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் இனி எப்போதும் என் ஆட்கள் பார்வையிலேயே அவன் இருப்பான்...

குருஜி திருப்தியுடன் எழுந்தார். ரிஷிகேசம் போய் வந்த பின் எல்லாம் இனி அவர் கட்டுப்பாட்டில் வரப் போகிறது. அவர் விதியின் கைப்பாவை அல்ல. அவர் ஒரு விதி செய்வார்....

(தொடரும்)

-என்.கணேசன்



Monday, May 20, 2013

அட ஆமாயில்ல! – 9




உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் தேவை இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சுடுகாடு தான். அந்த இடத்தில் தான் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது.
                   -மேக்ஸ்வெல் மால்ட்ஸ்


நேரம் என்பது திரும்பி வராத அம்பு.
                    -ஜோஷுவா லோத் லிப்மென்


அனைவரிடமும் கர்வம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பிச்சைக்காரன் கூட திருடுவதில்லை என்று கர்வம் கொள்கிறான்.
                     -ஜப்பான் நாட்டுப் பழமொழி


செய்து வரும் வேலையை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.
                     -ஹெர்பெர்ட் கேஸன்


மக்களுடைய பிரதிநிதிகளுடன் பழகியதிலிருந்து நான் நாய்களை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
                      -கேம்ரடீன்


கோபத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அருமையான பிரசங்கம் ஒன்றை உங்களால் செய்ய முடியும். ஆனால் நீங்கள் செய்த அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்.
                      -ஸ்டேன்லி ஜோன்ஸ்


தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
                    -லில்லியன் வைட்டிங்


இந்த உலகில் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு சிறுபகுதி நிச்சயம் இருக்கிறது. அந்த சிறுபகுதி நீங்கள் தான்.
                     -ஹக்ஸ்லீ

பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான்.
                   -பெர்னார்டு ஷா


நீங்கள் நினைத்தபடி மற்றவர்களை மாற்ற முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். ஏன் என்றால் நினைத்தபடி நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
                    -தாமஸ் கெம்பிஸ்



தொகுப்பு – என்.கணேசன்



Thursday, May 16, 2013

பரம(ன்) ரகசியம் – 44



“ஹலோ அம்மா நான் கணபதி பேசறேன்

மகன் குரலைக் கேட்டதும் காமாட்சிக்கு அழ வேண்டும் போல இருந்தது. ஏன் என்று அவளுக்குத் தெரியவில்லை. கண் கலங்க கேட்டாள். “கணபதி எப்படிடா இருக்கே?

அவள் துக்கம் அவள் குரலில் பிரதிபலித்ததால் கணபதி கவலையுடன் கேட்டான். அம்மா உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே? அக்காங்க ரெண்டு பேரும் நல்லா தானே இருக்காங்க

நானும் அக்காங்களும் நல்லா தான் இருக்கோம். நீ எப்படிடா இருக்கே?

கணபதி சந்தோஷமாகச் சொன்னான். “குருஜி தயவுல நான் ராஜா மாதிரி இருக்கேன். நேத்து கூட ஏ.சி. கார்ல பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். எனக்கு ஒரு அண்ணா கிடைச்சிருக்கார். எனக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை எல்லாம் வாங்கி தந்திருக்கார். நம்ம பிள்ளையாருக்கும் கூட பட்டு வேஷ்டி வாங்கித் தந்திருக்கார். சரி பிள்ளையார் எப்படி இருக்கார்?

அவருக்கென்ன. நல்லாத்தான் இருக்கார்?

“நீ தினம் போய் பார்க்கிறியா இல்லையா?

“தினம் போய் பார்த்து உனக்காக வேண்டிகிட்டு தான் இருக்கேன்.

எனக்காக எதுக்கு வேண்டறே. ரெண்டு அக்காக்களுக்கும் வேண்டு. நல்ல மாப்பிள்ளைகளாய் கிடைக்கணும்னு வேண்டு.

காமாட்சிக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ‘தனக்கென்று எதுவும் கேட்கத் தெரியாத இந்தக் குழந்தைக்காக நானாவது வேண்டிக் கொள்ள வேண்டாமா?

அவள் எதுவும் சொல்லாததைக் கூட கணபதி கவனிக்கவில்லை. “சுப்புணி பிள்ளையாருக்கு ஒழுங்காய் பூஜை செய்யறானா?

ஏதோ செய்யறான். பிள்ளையாருக்கு உன் அருமை தெரியணும்னா இவன் மாதிரி ஆள்கள் இடையில் சில நாள் பூஜை செய்தால் போதும்

கணபதிக்கு வருத்தமாய் இருந்தது. சரி சில நாட்களுக்குத் தானே. பிள்ளையாரே கொஞ்சம் பொறுத்துக்கோ’.  “நீ எனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கிறதாய் சொன்னாயாம். அட்ரஸை நல்லா பார்த்து சொல்லு. எனக்கு வந்தது தானா?

“ஒரு பெரியவர் நேராய் வந்து தந்துட்டு போனார்டா. உன் பேர் தான் போட்டிருக்கு. கணபதி, அர்ச்சகர், வரசித்தி விநாயகர் திருக்கோயில், நாகனூர்னு தெளிவாய் எழுதி இருக்கு.

“அந்த பெரியவர் யாரும்மா?

சுப்பிரமணியன்னு பேர் மட்டும் சொன்னார்.

சரி அதுல என்ன தான் எழுதி இருக்குன்னு பிரிச்சு தான் பாரேன்

“அந்தப் பெரியவர் உன்னைத் தவிர வேற யாரும் பிரிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்கார். அதனால பிரிக்கலை

அம்மா அது ஏதோ கோயில் கும்பாபிஷேக நோட்டீசாய் இருக்கப் போகுதுஎன்று சொல்லி கலகலவென்று கணபதி சிரித்தான்.

காமாட்சிக்கு மகனுடைய கலகல சிரிப்பைக் கேட்ட போது மனம் நிறைந்தது. எத்தனை துக்கம் இருந்தாலும் மகன் அப்படி சிரிப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு அவை எல்லாமே மறந்து போகும். “அப்படி எல்லாம் இருக்காதுடா. அரக்கு வச்சு மூடின கவர்டா. அந்தப் பெரியவரும் சாதாரண ஆளா தெரியலை. அவர் சொன்னதை வச்சு பார்த்தா முக்கியமாய் இருக்கும்னு தோணுது. நீ வாயேன். வந்து படிச்சுட்டு போயேன். எனக்கும் உன்னை ஒரு தடவை பார்க்கணும்னு தோணுது.

கணபதி யோசித்தான். பிறகு சொன்னான். “நான் எதுக்கும் குருஜி கிட்ட பேசிப் பார்க்கறேன்ம்மா. பிறகு உன் கிட்ட பேசறேன். சரியா? கணபதி போனை வைத்து விட்டான்.

உள்ளே குருஜியும் போனை வைத்து விட்டார். அவர் மனதில் பல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்தன. பெரிய திகைப்பில் அவர் மூழ்கிப் போனார். சுப்பிரமணியன் என்ற பெயருடைய பெரியவர் என்றதும் அந்த ஜோதிடர் நினைவு அவருக்கு வராமல் போகவில்லை. அந்த ஆள் அவசரமாக ஏதோ வெளியூர் போனது கணபதியை அவன் ஊரில் சந்திக்கத் தானா? அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? அதை அரக்கு வைத்து மூடக் காரணம் என்ன? அந்தக் கடிதத்தை அவராகக் கொண்டு போய் தந்திருக்கிறாரா இல்லை யாராவது தரச் சொல்லி அவர் போயிருக்கிறாரா? அவருக்கு கணபதியை எப்படித் தெரியும்?....

கணபதி அவர் அறை வாசலில் தயக்கத்துடன் நின்றான்.

“வா கணபதி. அம்மா என்ன சொல்றாங்க? வந்திருக்கிறது என்ன லெட்டராம்?குருஜி கேட்டார்.

கணபதி தாய் சொன்னதைச் சொன்னான்.

குருஜி அவன் தாய் அவனை வரச் சொன்னதையும், அவனைப் பார்க்க விரும்புவதாய் சொன்னதையும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

“உனக்கு வந்த லெட்டரை நீயே படிக்க வேண்டும் என்று உன் அம்மா நினைக்கிறார்கள். அவ்வளவு தானே? கவலையை விடு. நானே ஆள் அனுப்பி அந்த லெட்டரை வாங்கிக் கொண்டு வந்து உன்னிடம் தரச் சொல்கிறேன். சரியா?

முக்கியமாய் யாரிடமோ பேச வேண்டி இருப்பது அப்போது தான் நினைவு வந்தது போல அவர் செல்போனை எடுத்து எண்களை அழுத்த ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் கணபதி அங்கிருந்து கிளம்பினான். தனக்கு இத்தனை உதவி செய்யும் அந்த மனிதரிடம் குழந்தைத் தனமாய் என் அம்மாவைப் பார்த்து விட்டு நானே அந்தக் கடிதத்தை வாங்கி வருகிறேன் என்று சொல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அந்தக் கடிதத்தை வாங்கி வர ஆள் அனுப்புகிறேன் என்று அவர் சொன்னதே அவரின் பெருந்தன்மை என்று தோன்றியது. அவன் அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அவன் தலை மறைந்தவுடன் குருஜி சுறுசுறுப்படைந்தார். போன் செய்து கட்டளை பிறப்பித்தார். “உடனடியாய் கணபதி வீட்டுக்குப் போய் அவன் அம்மாவிடம் இருந்து அரக்கு வைத்து மூடிய கவர் ஒன்றை வாங்கி விட்டு வா. அதைத் தப்பித் தவறி கூட அவன் கண்ணில் காட்டி விடாதே. அப்படியே என்னிடம் கொண்டு வந்து தா. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்

கேஷ் விஷாலியிடம் இப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே சமீபத்தில் மலர்ந்த பூவைப் போல இருக்கக் கூடியவள் அவள். எத்தனை வேலைப் பளு இருந்தாலும் எத்தனை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் அவள் முகத்தின் மலர்ச்சியை அவை பாதித்து அவன் பார்த்ததில்லை. ஆனால் அதெல்லாம் இப்போது அடியோடு மாறி விட்டது.

ஈஸ்வரைப் பற்றி அவதூறு சொல்லி விட்டு வீட்டுக்குப் போன மகேஷ் அங்கு ஈஸ்வரிடமும் வாட்டத்தைப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் சீக்கிரமே அதில் இருந்து மீண்டவனாக அவனுக்குத் தெரிந்தான். ஆனந்தவல்லியிடமும், மீனாட்சியிடமும் சிரித்துப் பேச ஆரம்பித்து விட்டான். பாட்டு மட்டும் நின்று போனதே ஒழிய மற்றபடி அவனிடம் பெரிய மாற்றம் எதுவும் பிறகு தென்படவில்லை.

ஆனால் விஷாலி அப்படி துக்கத்தில் இருந்து மீளவில்லை. மகேஷ் மறுநாள் அவள் வீட்டிக்குப் போன போது பலவந்தமாய் அவனைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க முயன்றாள். ஆனால் அந்தப் புன்னகை மானசீகமாக இருக்கவில்லை. அந்தப் புன்னகையில் ஒரு வலி தெரிந்தது. வழக்கம் போல் அவனிடம் அவள் கதை பேசவில்லை. அவன் பேசினதற்கும் சுருக்கமாய் ஒரு வரி பதில்கள் சொன்னாள். அவன் மறு நாள் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தான்.

மறு நாள் வந்த போதும் அவள் நடைப்பிணமாய் தான் அவள் தெரிந்தாள். செயற்கையாய் ஒரு புன்னகையும், எந்திரத்தனமாய் பேச்சுக்களும் அவளிடம் இருந்து வந்த போது அவனால் தாங்க முடியவில்லை. இரண்டே நாளில் இந்த அளவு ஈஸ்வர் அவள் மனதில் வேரூன்றி இருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஈஸ்வர் மீது அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. ‘என்னடா செய்தாய் என் விஷாலியை!

மகேஷ் விஷாலியிடம் கேட்டான். “என்ன ஆச்சு விஷாலி உனக்கு?

ஒன்னும் இல்லை மகேஷ்

இந்த அளவுக்கு நான் சொன்னது உன்னைப் பாதிக்கும்னு தெரிந்திருந்தா நான் உன் கிட்ட ஈஸ்வர் சொன்னதை சொல்லியே இருக்க மாட்டேன் விஷாலி

ஒரு நல்ல நண்பன் அதை சொல்லாமல் இருக்க முடியாதுன்னு எனக்கு புரியுது மகேஷ். நீ சொன்னது நல்லது தான். எனக்கு தான் ஜீரணிக்க கஷ்டமாய் இருக்கு. காலப் போக்கில் சரியாயிடும்...”  விஷாலி சொன்னாள். ஆனால் காலப் போக்கில் கூட சரியாகும் என்று அவளாலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவு அவன் அவள் மனதில் இடம் பிடித்து இருந்தான். என்ன தான் மகேஷ் சொன்ன விஷயங்களை மனதில் இருந்த ஈஸ்வர் பிம்பத்தில் அவள் ஒட்ட வைக்க முயன்றாலும் அவை ஒட்ட மறுத்தன.

அவன் சிரிப்பு, அவன் பேச்சுக்கள், அவனுடன் இருந்த அழகான நினைவுகள் எல்லாம் அவள் மனதை விட்டு அகல மறுத்தன. அவனை மறக்க பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். தூக்கம் இமைகளை அழுத்தும் வரை அந்த வேலைகளில் மூழ்கினாள். ஆனால் கனவிலும் அவன் வந்தான். அவளிடம் பேசினான். சிரித்தான். அவள் கை விரல்களைப் பிடித்தான். கனவிலும் கூட அதெல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு அதை நினைக்கையில் அவள் மீதே வெறுப்பு வந்தது.

அவளுக்கு யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. தனிமை தேவலை என்று இருந்தது. எப்போதுமே மகேஷிடம் அதிகமாகப் பேசுபவள் இரண்டாம் நாள் கூட அவனிடம் அதிகம் பேசவில்லை. வெளியே ஏதோ வேலை இருக்கிறது என்று போய் விட்டாள். மகேஷ் இதை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரிடம் உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அவன் கணக்குப் போட்டிருந்தானே ஒழிய அவள் தன்னிடமும் இப்படி விலகி இருப்பாள் என்று அவன் எண்ணிப் பார்க்கவே இல்லை.

அவன் தென்னரசுவின் அறைக்குப் போனான். அவர் மகள் போவதையே ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் சொன்னார். விஷாலி அவங்கம்மா இறந்தப்ப கூட இவ்வளவு சோகமாய் இருந்து நான் பார்க்கலை. இந்த ரெண்டு நாளாய் அவளைப் பார்க்க சகிக்கலை

மகேஷ் மனதார சொன்னான். “எனக்கும் அவளை இப்படிப் பார்க்க கஷ்டமாய் இருக்கு அங்கிள்

அவனை உட்காரச் சொல்லி விட்டு அவரும் அவனருகே உட்கார்ந்தார். “அவள் கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டுப் பார்த்துட்டேன். அவள் பதில் சொல்லலை. ராத்திரி எல்லாம் தூங்காமல் முழிச்சிருக்கா. சில நேரம் ரகசியமா அழறா. அப்படி எல்லாம் மன தைரியம் இழக்காத பொண்ணு அவள் மகேஷ். எனக்குத் தாங்க முடியலை மகேஷ்சொல்லும் போது அவர் கண்களும் ஈரமாயின.

பின் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனிடம் அவர் கேட்டார். “அவள் இப்படி இருக்கக் காரணம் உனக்குத் தெரியுமா?

மகேஷ் ஜாக்கிரதையானான். சரியாத் தெரியலை. ஆனால் ஈஸ்வர் காரணமாய் இருக்கலாம்னு நினைக்கிறேன்.

தென்னரசு அவனையே வெறித்துப் பார்த்தபடி சொன்னார். “ஒருத்தரை மனசுல உள்ளே அனுமதிக்கறது சுலபம். ஆனால் மனசுக்குள்ளே வந்த ஆளை வெளியே அனுப்ப முடியறது நம்ம கைல இல்லை

மகேஷுக்கு சுருக்கென்றது. விஷாலி ஈஸ்வரைக் காதலிப்பதை தென்னரசு கவனித்து இருக்கிறார்....  எப்படி அவர் கவனிக்காமல் இருந்திருக்க முடியும். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் விதத்தைக் கண்டால் சாதாரண அறிவு உள்ளவனுக்குக் கூடத் தெரியாமல் போகாது... நினைக்க நினைக்க மகேஷிற்குத் தாங்கவில்லை.

மகேஷ் மெல்ல சொன்னான். “அவன் திமிர் பிடிச்சவன். அவள் கிட்ட என்ன சொன்னான், எப்படி நடந்துகிட்டான்னு தெரியலை.... அது அவளை காயப்படுத்தி இருக்கலாம்....

அவங்கப்பா சங்கர் கிட்ட சொல்லி பெருமைப்பட எத்தனையோ விஷயங்கள் இருந்துச்சு. ஆனால் எனக்குத் தெரிஞ்சு அவன் பெருமையாய் சொன்னது தன் மகன் ஈஸ்வரைப் பத்தி தான்

மகேஷ் வெளிப்பார்வைக்கு இயல்பாக இருந்தாலும் அவனுக்கு உள்ளே ரத்தம் கொதித்தது. விட்டால் இங்கே எல்லாரும் ஈஸ்வருக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவார்கள் போல இருக்கிறது... மகேஷ் சொன்னான். “ஈஸ்வருடைய இன்னொரு முகம் தெரியணும்னா அவன் எங்க தாத்தா கிட்ட நடந்துக்கறதைப் பார்க்கணும். அவன் அந்த முகத்தை விஷாலி கிட்ட காண்பிச்சு இருக்கலாம்....  

“என்ன காரணம்னு தெரியலை. ஆனால் அவள் என்கிட்ட கூட சொல்லாத அளவுக்கு அதைப் பர்சனலா நினைக்கிறாள் போல் இருக்கு

“விஷாலி சீக்கிரமே பழைய விஷாலியாயிடுவாள் அங்கிள். நீங்கள் கவலைப்பட வேண்டாம்

தென்னரசு அதை நம்பியது போல தெரியவில்லை. மகேஷையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த அவர் முகத்தில் இன்னும் மகள் பற்றிய கவலை தெரிந்தது. அப்படி ஆகலைன்னா என்னால தாங்க முடியாது. இந்த உலகத்துல அவளோட சந்தோஷத்தை விட முக்கியமானது எனக்கு எதுவுமே இல்லை

எதுவுமே என்ற சொல்லுக்கு அவர் அதிகமாகவே அழுத்தம் தந்ததை மகேஷ் கவனித்தான். “ஈஸ்வர் ஒரு மாதம் தான் லீவு போட்டிருக்கிறான்னு கேள்விப்பட்டேன். ஐந்து நாள் முடிந்தாச்சு. இன்னும் 25 நாள்ல போயிடுவான். அப்புறம் எல்லாம் சரியாயிடும்

அவன் போறப்ப என் பொண்ணோட சந்தோஷத்தையும் சேர்த்துக் கொண்டு போயிடாமல் இருக்கணும்கிறது தான் என் கவலை மகேஷ்

மகேஷ் அவர் அறையில் மாட்டி இருந்த விஷாலியின் புகைப்படத்தைப் பார்த்தான். முகமெல்லாம் மலர்ச்சியாக கண்களில் நட்சத்திரங்கள் மின்ன அவள் அதிலிருந்து அவனைப் பார்த்தாள். தென்னரசுவிற்கு என்ன சொல்லி தைரியப்படுத்துவது என்பது அவனுக்குத் தெரியவில்லை. எத்தனையோ விஷயங்களைப் பற்றி இருவரும் பேசினாலும் கூட விஷாலியைப் பற்றிப் பேசுவதில் ஏதோ ஒரு அசௌகரியத்தை அவர்கள் உணர்ந்ததால் அவனும் அவரும் அதிகமாக விஷாலியைப் பற்றி பேசியது இல்லை.

ஒரு பெருமூச்சு விட்ட தென்னரசு வேறு ஒரு முக்கியமான விஷயத்திற்கு மாறினார். “நாளைக்கு காலைல என்னைப் பார்க்க பார்த்தசாரதி வர்றதாக சொல்லி இருக்கார்....

மகேஷும் ஒரு கணம் விஷாலியை மறந்தான். “அந்த ஆள் எதற்கு உங்களைப் பார்க்க வரணும்?

“ஏதோ கேட்கணுமாம்

மகேஷ் அவரைத் திகைப்புடன் பார்த்தான்.

தென்னரசு அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னார். “அவர் வர்றப்ப உன்னை இங்கே பார்க்கறது நல்லது இல்லை. அதனால் ரெண்டு நாளைக்கு நீ இங்கே வராமல் இருக்கிறது நல்லது.

அவன் மெல்ல தலையாட்டினான். அவன் முகம் வெளிறிப் போனது.

(தொடரும்)

-          என்.கணேசன்