சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 28, 2013

பரம(ன்) ரகசியம் – 73




கனை ஒரு கையில் அணைத்துக் கொண்டிருக்கையிலேயே ஆனந்தவல்லி விஷாலியை மறு கைப்பக்கம் நிறுத்தியதால் அதிகமாய் யோசிக்க முடியாத கனகதுர்கா விஷாலியைப் பார்த்துப் புன்னகைத்தபடி அவளையும் மறு கையால் அணைத்துக் கொண்டாள். ஈஸ்வருக்கு மிக அருகில் வந்ததால் விஷாலிக்கு முகம் சிவந்தது.

ஓ...இவள் தானா அந்தப் பெண்என்று நினைவு வந்தவளாக கனகதுர்கா விஷாலியைக் கூர்ந்து பார்த்தாள். அவளுக்கு விஷாலியை மிகவும் பிடித்துப் போனது. அவள் மகனைப் பார்த்தாள். ஈஸ்வர் விஷாலியின் அருகாமையால் பாதிக்கப்படாமல் இருக்க பாடுபட்டுக் கொண்டிருந்தான். மனதிற்குள் ‘யாரோ இவன்பாடல் தானாக ஒலிக்க அவன் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைத்திருந்தான். விஷாலி முகம் சிவக்கையில் கூடுதல் அழகாய் இருக்கிறாள் என்று மனம் சொல்ல அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

மகன் எப்போதும் தன் உணர்ச்சிகளை அதிகமாக வெளியில் காட்டிக் கொள்பவன் அல்ல என்றாலும் அவன் சாதாரணமாக இருக்கும் விதங்களிலேயே பல வித்தியாசங்களைப் படிக்க முடிந்த கனகதுர்காவுக்கு இந்தப் பெண் அவனை நன்றாக பாதிக்க முடிந்தவள் என்பது புரிந்தது.

ஆனந்தவல்லி அவர்களைப் பெருமிதத்தோடு பார்த்தாள். அம்மா-மகன்-மருமகள் என்று ஒரு அழகான குடும்பம் அவள் கண்முன் தெரிந்தது. தன் மகனைப் பார்த்தாள்.

பரமேஸ்வரனுக்குத் தாயின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாய் பட்டது. விட்டால் அம்மா ஈஸ்வர் மேலேயே அந்தப் பெண்ணைத் தள்ளி விடுவாள் போல இருக்கிறதே, என்ன ஆயிற்று இவளுக்கு? அம்மாவிடம் முணுமுணுத்தார். “அம்மா, உன் வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கோம்மா

ஆனந்தவல்லி மகனிடம் குறும்பு பொங்க முணுமுணுத்துச் சொன்னாள். “உன் பேரனைச் சீண்டறதுன்னா எனக்கு உங்கப்பாவைச் சீண்டற மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்குடா.  ஆனா அவர் கிட்ட என்ன பிரச்சினைன்னா அதிகமா கோபமே படமாட்டார். சில சமயம் மண்ணு மாதிரி இருப்பார். ஆனா இவன் அப்படி இல்லைடா... அதனால தான் இவனைச் சீண்டாமல் இருக்க முடியறதில்லை....

பரமேஸ்வரன் சின்னப் புன்முறுவலுடன் மௌனமானார். அவர் தாயின் எத்தனையோ பரிமாணங்களை அவர் இப்போது தான் பார்க்கிறார். ஈஸ்வரைக் கணவனின் மறு ஜென்மமாகவே நினைக்கிறதால் விஷாலியைத் தானாக நினைக்க ஆரம்பித்துத் தான் இப்படி அந்தப் பெண்ணுக்காக வரிந்து கட்டி இறங்குகிறாளோ என்று கூட அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. மனித மனதின் விசித்திரங்கள் தான் எத்தனை?

கனகதுர்கா விஷாலியைக் கேட்டாள். “அப்பா எப்படிம்மா இருக்கார்?

“சௌக்கியமா இருக்கார் ஆண்ட்டிஎன்றாள் விஷாலி.

“இந்தக் காலத்துக் குழந்தைகள் இந்தியால இருக்கற மாதிரியே பேசறதில்லை. ஆண்ட்டின்னு கூப்பிடறதுக்கு பதிலா அத்தைன்னு கூப்பிட்டா கேட்க எவ்வளவு நல்லா இருக்கும்என்று ஆனந்தவல்லி சொன்னாள்.

இத்தனை நாட்களாக மீனாட்சியை ஆண்ட்டி என்று தான் விஷாலி அழைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட ஆனந்தவல்லி இந்தக் கருத்தைச் சொன்னதில்லை.  விஷாலிக்கு ஆனந்தவல்லியின் பேச்சுக்கான அர்த்தம் புரியாமல் இல்லை. சில நாட்களாகவே ஆனந்தவல்லி நடந்து கொள்வதன் அர்த்தம் இப்போது தெளிவாகவே புரிந்தது. விஷாலிக்கு ஆச்சரியமாக இருந்தது. கௌரவம் பார்ப்பதில் பரமேஸ்வரனை மிஞ்சுபவள் ஆனந்தவல்லி. அப்படிப்பட்டவள் தன் கொள்ளுப்பேரனுடன் அவளை இணைக்க முயற்சிகள் எடுப்பது எதனால் என்று புரியவில்லை. அந்தக் குடும்பத்துக்கு நிகராக எந்த விதத்திலும் தாங்கள் இல்லை என்பது விஷாலிக்குத் தெரியும்.

ஆனந்தவல்லியிடம் விஷாலி மனதிற்குள் சொன்னாள். “அவருக்கு என்னைப் பிடிக்கலை பாட்டி. நீங்க செய்யற முயற்சிகள் எல்லாம் வீண். அந்தஸ்துல மட்டுமல்ல, அழகிலும் அறிவிலும் கூட அவருக்கு நான் பொருத்தம் இல்லாதவள்.... நான் அவர் கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு அவர் என்னைக் காறித் துப்பாததே பெரிய விஷயம்....

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் வேறு பக்கம் விஷாலி திரும்பிக் கொண்டாள்.

ஆனந்தவல்லியை முறைத்த ஈஸ்வரின் அலைபேசி இசைத்தது. அழைத்தது பார்த்தசாரதி தான். ஈஸ்வர் நீங்க எங்கே இருக்கீங்க?

ஏர்போர்ட்டுல இருக்கேன் சார். அம்மா வந்திருக்காங்க

“நம்ம கேஸ்ல ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு. உங்க கிட்டே பேச வேண்டி இருக்கு. நேர்ல வர முடியுமா?

“சாயங்காலம் வர்றேன் சார்


ரிராம் சிவலிங்கம் பற்றிய தன் கருத்தைச் சொல்லும் முன் போய் விட்டதால் கணபதி அவரிடம் மறுபடி கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான். மகேஷ் வந்து குருஜி அவரை அழைப்பதாகச் சொல்லி விட்டுப் போனதும் கிளம்பிப் போன ஹரிராம் நிறைய நேரம் வரவில்லை. ஆனாலும் கணபதி அன்று அவருக்காக ஆவலாகக் காத்திருந்தான்.

அவர் வந்த போது ஆவலாக அவர் முகத்தைப் பார்த்தான். அவனைப் பார்த்த பிறகு தான் ஹரிராமிற்கு அவன் கேள்வி நினைவுக்கு வந்தது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று ஹரிராமிற்குப் புரியவில்லை. கணபதி அவருக்குத் தன் கேள்வியை மீண்டும் நினைவூட்டினான். எங்க சிவனோட சக்தி பரவாயில்லைங்களா?

சற்று முன் அலெக்ஸியின் நிலைமையைப் பார்த்திருந்தால் இவனுக்கு சிவனின் சக்தி முழுவதுமாய் புரிந்திருக்கும் என்று ஹரிராமிற்குத் தோன்றியது. ஆனால் விசேஷ மானஸ லிங்கம் இவனுக்கு அந்த மாதிரி சக்தியைக் காட்டி இருக்க வாய்ப்பில்லை... 

ஹரிராம் அவனிடம் சொன்னார். “நான் இந்த மாதிரி அற்புதத்தை வேறெங்கேயும் பார்த்ததில்லை

கணபதிக்குப் பெருமை தாங்கவில்லை. அவன் மாதிரி அவர்கள் மந்த புத்திக்காரர்கள் இல்லை. அவர்கள் சரியாகத் தான் மதிப்பிட்டு இருப்பார்கள். பாவம் அப்படிப்பட்ட உயர்ந்த சிவலிங்கம் அவனைப் போன்று மந்திரமோ, பூஜா முறைகளோ சரியாகத் தெரியாத ஒரு தற்குறி பூஜை செய்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது என்றெல்லாம் தோன்றியது.

மானசீகமாக அவன் சிவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “என்னை மன்னிச்சு கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அப்புறம் நல்லபடியா பூஜை செய்யறவங்க உனக்குக் கிடைப்பாங்க. சரியா?

ஹரிராம் அவனைப் பிரமிப்புடன் பார்த்தார். ஒருவர் மனதில் ஓடும் சிந்தனைகள் அவருக்கு சத்தமாய் பேசுகிற மாதிரிஆனால் அவர் ஏன் அப்படி அவனைப் பார்க்கிறார் என்பது கணபதிக்குப் புரியவில்லை.

குழந்தையை அணைத்துத் தூக்கிக் கொண்டு வருவது போல அன்று காலை அவன் விசேஷ மானஸ லிங்கத்தைத் தூக்கிக் கொண்டு வர முடிந்தது அவருக்கு நினைவு வந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆராய்ச்சிக்கு உகந்தது சிவலிங்கம் மட்டுமல்ல, இந்த கணபதியும் தான். இவனும் விசேஷமானவன் தான்….

கண்பதி அவரிடம் ஆவலுடன் கேட்டான். “சார், நீங்க எல்லாம் சிவலிங்கத்தை மட்டும் தான் ஆராய்ச்சி செய்வீங்களா, இல்லை பிள்ளையார் சிலை மாதிரி மத்ததையும் செய்வீங்களா?

ஹரிராம் சொன்னார். “இந்த மாதிரி தெய்வ விக்கிரகங்களை ஆராய்ச்சி செய்யறது எங்களுக்கெல்லாம் இது தான் முதல் தடவை. ஏன் கேட்கறீங்க?

ஐயோ என்னைப் போய் நீங்க ஏன் பன்மையில பேசறீங்க. ஒருமையிலயே பேசுங்க. நீங்க எனக்கு அப்பா மாதிரிஎன்றவன் தன்னுடைய பிள்ளையாரைப் பற்றி அவரிடம் சொல்ல ஆரம்பித்தான். “நாகனூர் தான் எங்க கிராமம். அங்கே வரசித்தி விநாயகர்ங்கிற என்னோட பிள்ளையார் இருக்கார்.....

ஹரிராம் அவனையே சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். சிவனும் எங்க சிவன் தான், வினாயகரும் என்னோட பிள்ளையார் தான். இறைவனின் குடும்பமே இவன் குடும்பம் தான் போல் இருக்கிறது. கணபதி பேசும் போது அவருக்கு இன்னொரு உண்மை புரிந்தது. எண்ணும் எண்ணங்களுக்கும், பேசும் வார்த்தைகளுக்கும் இடையே கடுகளவும் வித்தியாசம் இல்லாத ஒருவனை முதல் முறையாக அவர் பார்க்கிறார். இந்த உலகத்தின் அழுக்கு இன்னமும் தொட்டு விடாத ஒரு ஸ்படிகத்தை அவர் பார்க்கிறார்.....

மகேஷ் குருஜியை பிறகு எச்சரித்தான். “அந்த கணபதியை ஹரிராம் கிட்ட பேச விடறது ஆபத்துன்னு நினைக்கிறேன். விடாம பேசிகிட்டே இருக்கான்....

குருஜி சொன்னார். “அவனுக்குப் பேச ஆள் வேணும் இல்லாட்டி அவன் விசேஷ மானஸ லிங்கத்து கிட்டயே போய் பேச ஆரம்பிச்சாலும் ஆச்சரியம் இல்லை. அவன் ஹரிராம் கிட்ட பேசறது ஆபத்து இல்லை. அவன் சொல்லாமயே அவருக்கு அதெல்லாம் தெரிஞ்சுடும். அவன் என்னத்தைப் பேசிடப் போறான். பேச்செல்லாம் அவனோட பிள்ளையார் புராணமா தான் இருக்கும்....

மகேஷ் ரகசியமாய் வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டான். கணபதி அவன் பிள்ளையார் புராணத்தைத் தான் சொல்லிக் கொண்டிருந்தான். குருஜி எவ்வளவு துல்லியமாய் இவனைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்று வியந்து விட்டு நகர்ந்தான்.


று நாள் அதிகாலையில் கணபதி பூஜை செய்கையில் சிவனிடம் ஹரிராம் சொன்னதை மனதிற்குள் தெரிவித்தான். அவர் உன்னை அற்புதம்னு சொன்னார். நீ பாஸாயிட்டே.  மத்தவங்க ரெண்டு பேர்கிட்டயும் கேட்கலாம்னா அவங்க பாஷை தெரிய மாட்டேங்குது.... அவர் கிட்ட உன் பையனைப் பத்தியும் சொல்லி இருக்கேன். பிள்ளையாரையும் ஆராய்ச்சி செய்வீங்களானு கேட்டேன். ஆனா அமெரிக்காவுக்கு எல்லாம் என் பிள்ளையாரை எடுத்துகிட்டு போக நான் விட மாட்டேன்னு தெளிவாய் சொல்லிட்டேன். அவரையும் எடுத்துட்டு போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லு.....

குருஜி வந்து தான் அவன் பூஜையை துரிதப்படுத்த வேண்டியதாயிற்று. அவன் பூஜையை முடித்த பிறகு சொன்னார். கணபதி உண்மையில இன்னைக்கு தான் ஆராய்ச்சியோட முதல் நாள். முக்கிய ஆராய்ச்சி நாளைல இருந்து தான் ஆரம்பிக்குதுன்னாலும் இன்னைக்கு தான் எங்களைத் தயார்ப்படுத்திக்கிறோம். உன் சிவன் தயாராய் இருக்காரா?

கடவுள் எப்பவுமே தயார் தானே குருஜி. மனுஷங்க தான் அவருக்குத் தயாரா இருக்கறதில்லை

குருஜி அவனையே பார்த்தார்.  கணபதிக்குத் திடீர் என்று வேறு நினைவு ஒன்று வந்தது. “இன்னைக்கு முதல் நாள்னு வேற சொல்றீங்க. சிவனுக்கு  கட்ட என் கிட்ட புது பட்டு வேஷ்டி இருக்கு. நான் கொண்டு வந்துட்டடுமா?”. கணபதி அவர் பதிலுக்குக் காத்திராமல் தனதறைக்கு ஓட குருஜி அருகே இருந்த ஜான்சனையும் பாபுஜியையும் பார்த்தார்.

பாபுஜி சொன்னார். “இவன் பார்க்க பாவமா இருந்தாலும் வில்லங்கமாயும் பேசறான். கடவுள் எப்பவுமே தயார், மனுஷங்க தான் தயாரில்லைன்னு சொல்றானே

குருஜி புன்னகை செய்தார். “சில சமயங்கள் குழந்தைகள் வாயில இருந்து பெரிய தத்துவார்த்தமான வார்த்தைகள் வந்துடறது இல்லையா? அப்படித் தான் இதுவும்...

அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவரும் தியான மண்டபத்திற்குள் நுழைந்தனர். ஜான்சன் அவர்களைப் பார்த்ததும் அவர்கள் அருகே விரைந்து சென்றார். “தயாராக இருக்கிறீர்கள் அல்லவா?என்று அவர்களைக் கேட்டார். அவர்கள் ஆம் என்றார்கள். இந்த ஆராய்ச்சிகளுக்காக அவர்கள் பல நாட்களாகத் தயார்ப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

ஜான்சன் சொன்னார். “இன்றைக்கு நீங்கள் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்து சிவலிங்க சக்தியோடு ட்யூன் ஆகிறதை உணர்கிற போது செய்ய வேண்டியவை இரண்டு. ஒன்று உங்கள் வலது சுட்டு விரலை மட்டும் மேலே நீட்டுங்கள். இரண்டாவது ரோஜாப்பூவை நினையுங்கள். சரியா?

அவர்கள் தலையசைத்தார்கள். மூவருக்கும் தலையில் மாட்டிக் கொள்ள வயர்லெஸ் EEG மெஷின் செட்கள் தரப்பட்டன. அவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.

கணபதி புதிய பட்டு வேட்டியுடன் தியான மண்டபத்திற்குள் ஓட்டமும் நடையுமாய் வந்தான். அதை விசேஷ மானஸ லிங்கத்திற்கு அணிவித்து விட்டு இரண்டடி பின்னுக்கு வந்து அந்த சிவலிங்கத்தைப் பெருமிதத்துடன் பார்த்தான்.   நல்லா அம்சமா இருக்குஎன்று நினைத்துக் கொண்டான்.

ஹரிராம் புன்னகைத்தார். மகேஷ் ‘இவன் என்ன லூஸா?என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். குருஜி தானும் வயர்லெஸ் EEG மெஷின் செட்டை தலையில் பொருத்திக் கொண்டார். பின் கணபதியிடம் கேட்டார். “கணபதி நீயும் இதைப் போட்டுக்கறியா?

எதுக்கு?கணபதி வெகுளித்தனமாய் கேட்டான்.

ஆராய்ச்சியில் உன்னையும் சேர்த்துக்கத் தான்

அந்த வயர்லெஸ் EEG மெஷின் எதை அளக்கிறது என்பது கணபதிக்குத் தெரியவில்லை. “இதை என் தலையில் மாட்டிகிட்டா உள்ளே இருக்கிற களிமண் தான் தெரியும்என்று சொல்லி விட்டு கலகலவென்று கணபதி சிரித்தான். மேலும் அவனுக்கு அதை மாட்டிக் கொள்வது ஆஸ்பத்திரி சூழலை நினைவுபடுத்தியது.

அவனை வற்புறுத்த குருஜி விரும்பவில்லை.

ஜான்சன் மகேஷைப் பார்த்து சைகை செய்ய மகேஷ் ஒரு மெஷினைக் கொண்டு வந்தான். தூரத்திலேயே நின்றான். குருஜி கணபதியிடம் சொன்னார். “கணபதி அந்த மெஷினை வாங்கி சிவலிங்கத்துக்கு ரெண்டடி தள்ளி அந்தப் பக்கம் வையேன்”.

ஓ சிவன் பக்கத்திலேயும் ஒரு மெஷின் இருக்காஎன்று கேட்டபடியே மகேஷிடம் இருந்து அந்த மெஷினை வாங்கிய கணபதி குருஜி கைகாட்டிய இடத்தில் வைத்தான். அந்த மெஷின் விலை உயர்ந்த மெஷினாக கணபதிக்குத் தோன்றியது. சிவன் பக்கத்தில் அதை வைப்பது சிவனுக்குப் பெருமை சேர்ப்பது போல அவனுக்குத் தோன்றியது. “பார்த்தியா உனக்காக என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்காங்க

அந்த மெஷின் ஜெர்மனியில் தயாரானது. ஃபவுண்டரிகளில் உலோகங்கள் உருக்கப்படும் போது ஏற்படும் வெப்பத்தை அளக்கும் ஒரு வகை ஆப்டிகல் பைரோமீட்டர் அது. அத்துடன் ஒளியின் தீட்சண்ணியத்தையும் அளக்கும் அமசத்தையும் சேர்த்து விசேஷ மானஸ லிங்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காகவே ஜெர்மனியில் பிரத்தியேகமாகத் தயாரித்திருந்தார்கள்.

மகேஷ் அந்த மெஷினை எப்படி வைக்க வேண்டும் என்று தூரத்தில் இருந்தே சொல்ல கணபதி அந்த மெஷினை வைத்த விதத்தை சரிப்படுத்தினான். அந்த மெஷினில் இருந்த லென்ஸ் பகுதி இப்போது சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருந்தது. கணபதி ஒதுக்குப் புறமாக நகர்ந்து ஒரு சுவரோரமாக நின்றான்.

மகேஷ் தியான மண்டபத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கம்ப்யூட்டர் திரைகளைப் பார்த்தான். நான்கு பேர்களுடைய வயர்லெஸ் EEG மெஷின்களின் அளவீடுகள் நான்கு திரைகளில் தெரிந்தன. ஐந்தாவது வயர்லெஸ் EEG மெஷின் அணியப்படாததால் ஐந்தாவது திரை மட்டும் காலியாக இருந்தது. ஆறாவது திரையில் சிவலிங்கத்தை அளக்கும் விசேஷ பைரோமீட்டர் அளவீடு தெரிந்தது. எல்லாம் வயர்லெஸ் மூலமாக முன்பே கம்ப்யூட்டர்களில் முன்பே இணைக்கப்பட்டிருந்தன. திரையில் தெரிவது மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர்களில் துல்லியமாகப் பதிவாகிக் கொண்டிருந்தன.

நான்கு பேருடைய மூளை மின்னலைகளும் பீட்டா அலைகளைக் காட்டின. (தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு: மூளையின் மின்னலைகள் ஒரு வினாடிக்கு எத்தனை சிபிஎஸ் CPS (Cycle per second) ஏற்படுகின்றன என்பதை வைத்து தான் அளக்கப்படுகின்றன.  பெரும்பாலும் நாம் இருப்பது பீட்டா (14க்கும் மேற்பட்ட சிபிஎஸ்) அலைகளில் தான். தியான நிலை அல்லது அரைத்தூக்க அமைதி நிலையில் ஆல்ஃபா (8 முதல் 13 வரை சிபிஎஸ்) அலைகளிலும், ஆழ்ந்த தூக்கத்தில் தீட்டா (4 முதல் 7 வரை சிபிஎஸ்) அலைகளிலும் இருக்கிறோம். சமாதி நிலைக்குச் செல்லக் கூடிய யோகிகள், சித்தர்கள் அதற்கும் அடுத்த நிலையான டெல்டா (4க்கும் குறைவான சிபிஎஸ்) அலைகளில் சஞ்சரிக்க முடிந்தவர்கள்.)

விசேஷ பைரோமீட்டரில் அறையின் வெப்ப நிலையும், அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் ஒளியளவும் தெரிந்து கொண்டிருந்தன.  மகேஷ் திருப்தியுடன் ஜான்சனைப் பார்த்துத் தலையாட்டினான். எல்லாம் சரியாக இருக்கின்றன என்று சைகையால் தெரிவித்தான்.

நால்வரில் குருஜியும், கியோமியும் ஆல்ஃபா அலைகளுக்கு சீக்கிரமே வந்தார்கள். அடுத்ததாக ஹரிராமும், அதற்கும் அடுத்ததாக அலெக்ஸியும் ஆல்ஃபா அலைகளுக்கு வந்தார்கள். ஆனால் சிவலிங்கத்திடம் எந்த மாற்றமும் இல்லை. பைரோ மீட்டர் பழைய அளவுகளையே காண்பித்தது.

திடீரென்று சிவலிங்கம் ஒளிர்ந்தது. விசேஷ பைரோமீட்டர் அதிக பட்ச அளவுக்குப் போய் உடனே டுப் என்ற சத்தத்தோடு பழுதாகியது.

அதையே பார்த்துக் கொண்டிருந்த கணபதிக்கு வருத்தமாயிற்று. சிவனின் மெஷின் பாழாகி விட்டதே என்று வருத்தப்பட்டவன் சத்தமாக அங்கலாய்த்தான். நல்ல மெஷினாய் வாங்கியிருக்கலாமே

(தொடரும்)
-என்.கணேசன்


  

Monday, November 25, 2013

அனைத்திலும் ஆண்டவன்!


கீதை காட்டும் பாதை 28


கவத் கீதையை சில அறிஞர்கள் நீயே அதுவாக இருக்கிறாய்என்ற மகா வாக்கியத்தின் சாரமாகவே கருதுகிறார்கள். அந்த மூன்று சொற்களின் “நீ சம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும், “அதுசம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் இரண்டாம் ஆறு அத்தியாயங்களும், இரண்டிற்கும் இடையே இருக்கிறதொடர்பான தத்துவ விளக்கங்கள் கடைசி ஆறு அத்தியாயங்களும் விளக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

அதன்படி பகவத் கீதையின் முதல் பகுதி முடிந்து இரண்டாம் பகுதி, அதன் ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில்,. ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருசேர அர்ஜுனனிற்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்குவதில்  ஆரம்பமாகிறது.

 “ஞானம், விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுவதுமாக நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை.

பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் சித்தி பெற முயல்கிறான். அப்படி முயற்சி செய்யும் பலரில் எவனோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்

ஞானம் மூலம் மட்டுமே இறைவனை அறியலாம் என்பதில்லை. விஞ்ஞானம் ஞானத்திற்கு எதிரானதும் அல்ல. இரண்டும் ஒரு உண்மையின் இரண்டு கோணங்கள்,  இரண்டு பக்கங்கள். குழப்பம் இல்லாமல், தவறான கண்ணோட்டம் இல்லாமல் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் உண்மை விளங்கவே செய்யும். ஒன்றின் மூலமாக மட்டுமே அணுகியவனுக்கு மற்ற கோணத்தில் பார்த்தால் வேறு விதமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். அந்த சந்தேகம் உறுதியான ஒரு நிலைப்பாடிற்கு வர முடியாதபடி ஒருவனைத் தடுக்கலாம். அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் இரண்டைப் பற்றியும் சொல்ல முனைகிறார். இரண்டிலுமே தெளிவைப் பெற்று விட்டால் சந்தேகம் வர வாய்ப்பில்லை. அதனால் மேலும் தெரிந்து கொள்ளவும் எதுவும் மீதமில்லை.

பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் மட்டுமே உண்மையாக இறைவனையும், உண்மையையும் நாடுபவனாக இருக்கிறான். அந்த உண்மையான முயற்சி அந்த அளவு அபூர்வமே. அப்படி முயற்சி எடுப்பவர்களிலும் எண்ணிலடங்கா மனிதர்களில் ஒருவனே இறைவனை, அந்தப் பேருண்மையை, உள்ளதை உள்ளபடி அறிகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆன்மிகப் பயணத்தில் பல கோடி பேர் பயணிப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அது ஆசைப் பயணமாகவும், அஞ்ஞானப் பயணமாகவுமே பெரும்பாலும் இருக்கின்றது. கேட்டதெல்லாம் தரும் இறைவனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ அதை எல்லாம் கேட்டு, அது கிடைத்து முடிந்த பின் அடுத்த ஒரு பட்டியலைக் கேட்டு, இந்த கேட்டுப் பெறலின் போது வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வைக் கேட்டு, பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கை ஆசை நோக்கியதாகவே இருக்கிறது.

இவர்களில் இருந்து வேறுபட்டு உண்மையை அறியவோ, இறைவனை அறியவோ முற்படும் அபூர்வ முயற்சியை சில நூறு பேர் மட்டுமே மேற்கொள்கிறார்கள். அவர்களிலும் “உள்ளதை உள்ளபடிஅறிய முடிவது ஓரிருவருக்கு மட்டுமே சித்திக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஏனென்றால் அறிய முற்படுபவர்களில் கூட, பலரும் உண்மையை தங்கள் முந்தைய அபிப்பிராயங்களுக்கு ஏற்ப அதை வளைத்துப் பார்க்கவோ, தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றிப் பார்க்கவோ முற்படுகிறார்கள். அதனால் அவர்கள் அறியும் ஆண்டவனும், உண்மையும் அவர்களின் தன்மைகளுக்கேற்ப தெரியும் பிரமையே ஒழிய உண்மை அல்ல. உள்ளதை உள்ளபடி அறிய முடிவது பல கோடிகளில் ஒருவருக்கே சித்திக்கின்றது.

புத்தரின் தம்மபதமும் இதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறது. “மனிதனாகப் பிறப்பது கடினம். மனிதனாய் வாழ்வது மிக மிக கடினம். தர்ம நெறியைக் கேட்பது கடினம். ஆனால் புத்தராய் பிறப்பதும், புத்தரின் நிலையை அடைவதும் மிக அபூர்வமாகும்

அடுத்ததாக விஞ்ஞானக் கோணத்தில். தன் இயற்கையின் இரு வகைகளின் வெளிப்பாடாகவே இந்த உலகம் இருக்கின்றது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்:

பூமி, நீர், நெருப்பு, காற்று, வான், மனம், அறிவு, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை (பிரகிருதி) பிரிந்து தோன்றுகிறது. 

இது என் கீழ் இயற்கை. இதைக் காட்டிலும் உயர்ந்ததாகிய என் மேலான இயற்கையை அறி.  அதுவே உயிராவது.  பெருந்தோளாய், அதனாலேயே இவ்வுலகு காக்கப்படுகிறது.

எல்லா உயிர்களுக்கும் அந்த இரண்டுமே காரணம் என்று உணர்ந்து கொள். . அதனால் உலகம் முழுமைக்கும் நானே ஆக்கமும் அழிவும் ஆவேன்.

இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கீழான இயற்கை மேலான இயற்கை என்று சொல்வது குறைத்தோ, மேம்படுத்தியோ ஒப்பிட்டு சொல்லப்படுவது அல்ல. ஏனென்றால் இயற்கையில் கீழ், மேல் என்றெல்லாம் இல்லை. நமக்குப் புலப்படும் அளவில், புரிந்து கொள்ளும் நிலையில் இலகுவாக இருப்பது கீழ்நிலை. புலப்படாத அளவில், சூட்சும நிலையில் இருப்பது மேல்நிலை. இப்படி எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

பஞ்ச பூதங்களுடன் நம் மனம், புத்தி, நான் என்ற பிரித்துணரும் தன்மை எல்லாம் சேர்வது தான் உலக சிருஷ்டிக்கு அடித்தளமாக இருக்கின்றன. நாம் காணும் உலகத்தின் தோற்றம் எல்லாமே இந்த எட்டின் கூட்டணிக்குள்ளேயே அடங்குகிறது. ஆனால் அது ஜட உலகம் மட்டுமே. அதன் உயிராக, சாராம்சமாக இறைவனின் சூட்சும சக்தி உள்புகும் போது தான் அது இயங்கும் உலகமாக ஆகிறது. அந்த சூட்சும சக்தி இல்லாமல் உலகம் இல்லை, அதன் இயக்கமும் இல்லை.

ஜட உலகமும் இறைவனே, அதன் உயிர்ப் பொருளும் இறைவனே என்றாலும் உயிர்ச் சாரமாய் இருக்கும் இறைவனின் மேலான தன்மையே பொதுவாக நம்மால் இறைவனாக கருதப்படுகிறது. அந்த சூட்சும சக்தியே படைப்பிற்கு மட்டுமல்லாமல் அழிவிற்கும் காரணமாக அமைந்திருந்திருக்கிறது.

பகவத் கீதையில் ஏழாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் இந்த விஞ்ஞான உண்மையைத் தான் சமீப காலங்களில் விஞ்ஞானிகள் கடவுள் துகள் என்ற கண்டுபிடிப்பில் எட்டி இருப்பதாகத் தோன்றுகிறது.

சிறு கல் முதல் பெரிய  நட்சத்திரங்கள் வரை அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் துகள்களைக் கண்டுபிடித்திருந்த விஞ்ஞானிகளுக்கு அந்த்த் துகள்கள் மட்டுமே உலகம் இயங்கப் போதுமானதாக இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது. இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போகிறது என்றும் அவர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள் இருந்தால் மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி. அதை சமீபத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன் என்ற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

ஹிக்ஸ் போஸன் என்ற அந்த நிறைமிகு துகளின் இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப்  பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.  ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) துகள் அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளைக் கடவுள் துகள் என்று அழைக்கின்றனர்.

ஒரு விஞ்ஞானப் பத்திரிக்கை இப்படி எழுதியது:
As it turns out, scientists think each one of those fundamental forces has a corresponding carrier particle, or Higgs- boson, that acts upon matter. That's a hard concept to grasp. We tend to think of forces as mysterious, ethereal things that straddle the line between existence and nothingness, but in reality, they're as real as matter itself.

கடவுள் துகள் ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடைந்து விடவில்லை. பல ஆராய்ச்சிகளுக்கு வித்திடும் திருப்புமுனையாக கடவுள் துகள் இருக்கின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இது வரை இவர்கள் எட்டி உள்ள புரிதல் நிலையும், பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதும் ஒரே தொனியில் இருப்பது சுவாரசியமாக உள்ளதல்லவா?


பாதை நீளும்....

-          என்.கணேசன்

Thursday, November 21, 2013

பரம(ன்) ரகசியம் – 72




விமான நிலையத்தில் கனகதுர்காவிற்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஈஸ்வருக்கு பரமேஸ்வரனும் ஆனந்தவல்லியும் கூட அந்த அதிகாலையில் எழுந்து தயாராகி வந்தது மனநிறைவை ஏற்படுத்தி இருந்தது. அவன் அம்மாவிற்கு மறுபடியும் அந்த வீட்டிலும், வீட்டு மூத்தவர்களிடமும் அங்கீகாரம் கிடைத்தது மட்டுமல்ல நேசத்தோடு அவளை வரவேற்கவும் வந்திருப்பது இப்போதும் கனவு போல் நம்ப சிரமமாகத் தான் இருந்தது. பெருமிதத்தோடு பரமேஸ்வரனையும், ஆனந்தவல்லியையும் பார்த்தான்.

ஆனந்தவல்லியோ பின்னால் தள்ளி நின்றிருந்த விஷாலியை “நீ ஏன் அங்கே நிற்கறே. நீ எங்க வீட்டுப் பொண்ணு தான். என் பக்கத்துல வந்து நில்என்று அழைப்பதில் மும்முரமாக இருந்தாள்.

விஷாலி தயக்கத்துடன் ஈஸ்வரை ஓரப்பார்வை பார்த்தாள். அவனுக்கு அவள் வந்ததே பிடிக்கவில்லை என்று தெரியும். ஆனந்தவல்லி தான் அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தாள். அதனால் தான் வேறு வழியில்லாமல் வந்த அவள் முடிந்த வரை விலகியே இருக்க நினைத்தாள். ஆனால் ஆனந்தவல்லி அதற்கும் அனுமதிக்கவில்லை.

ஈஸ்வர் முகத்தைக் கடுகடுவென்று வைத்திருந்தான். அதைக் கவனித்த பரமேஸ்வரன் தாயிடம் தாழ்ந்த குரலில் சொன்னார். “நீ ஏன் அவளைக் கட்டாயப்படுத்தறே. அவனுக்குப் பிடிக்கலை பார்

ஆனந்தவல்லி தாழ்ந்த குரலில் மகனிடம் சொன்னாள். உன் மருமகள் என்னைப் பார்க்க வர்றதை விட அதிகமாய் அவள் மருமகளைப் பார்க்க தான் வர்றா. அதனால் தான் அவளைப் பக்கத்துல கூப்பிடறேன். உன் பேரனைப் போகச் சொல்லு

நீ இத்தனை நாள் அவன் கட்சில இருந்தே. இப்ப விஷாலி பக்கம் சேர்ந்துட்டே. என்ன ஆச்சு?

“நான் எப்பவுமே அவன் பக்கம் தான். அவன் காதலியை அவன் கூட சேர்த்து வைக்கத் தாண்டா இந்தப்பாடு படறேன். மனசுல இருந்து அவளை எடுக்க முடியாமல் அவன் தவிக்கிறான். பிடிக்காத மாதிரி நடிக்கிறான். லூஸுடா உன் பேரன்...சொல்லிக் கொண்டே விஷாலியைக் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டாள்.

பேரனை லூஸு என்று அழைத்ததற்காகத் தாயைக் கோபத்துடன் பரமேஸ்வரன் பார்த்தார். ஆனந்தவல்லி வேறு பக்கம் வேடிக்கை பார்த்தாள். ‘இவன் நேசிக்கிறவர்களை யாரும் ஒரு வார்த்தை தாழ்த்திச் சொல்லிடக்கூடாது

ஈஸ்வருக்கு அன்று விஷாலி தனி அழகோடு இருப்பதாக மனம் சொன்னது. அவள் மட்டும் அன்று அவனை அநியாயமாக அவமானப்படுத்தி இருக்கவில்லையானால் கண்டிப்பாக அவளை ஆனந்தவல்லி பக்கம் நிற்க அனுமதித்திருக்க மாட்டான். தன் பக்கம் அவளை இருக்க வைத்திருப்பான். அவளை அம்மாவிடம் அறிமுகப்படுத்த துடித்திருப்பான். “எப்படி இருக்கிறது எங்கள் ஜோடிப்பொருத்தம் என்று ஆவலோடு கேட்டிருப்பான்.  ஒரு அழகான உணர்வை விஷாலி அவமானப்படுத்தி விட்டாள். ஒரு முறை உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது....

அவன் மனம் அந்த உவமானத்தை ஏற்க மறுத்தது. அது வேறு உவமானம் சொன்னது. நீரடித்து நீர் விலகாது என்றது. அந்த உவமானத்தைச் சொன்னதற்காகவும், அவள் அழகாக இருப்பதை ரசிப்பதற்காகவும் அவன் மனதையே அவனுக்குப் பிடிக்கவில்லை.

கனகதுர்காவின் விமானம் வந்தது. எல்லோரையும் விட அதிகமாக மீனாட்சி பரபரத்தாள். மனதிற்குள் அண்ணனிடம் சொன்னாள். “அண்ணா உன் மனைவியை வரவேற்க அப்பா, பாட்டி எல்லாம் வந்திருக்காங்க பார்த்தாயா? நீயும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...”  நினைக்க நினைக்க அவள் கண்கள் கலங்கின.

கனகதுர்கா விமான நிலையத்தில் தன் மகனையும் மீனாட்சியையும் மட்டுமே எதிர்பார்த்திருந்தாள். மாமனாரையும், ஆனந்தவல்லியையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருவரும் வயதானவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள். அதையும் மீறி அவர்கள் அங்கு அவளை வரவேற்க வந்திருந்தது அவள் மனதை நெகிழ வைத்தது. அவளாலும் அந்தக் கணத்தில் கணவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “பார்த்தீங்களா யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு..!

வந்தவள் விமானநிலையம் என்றும் பார்க்காமல் மாமனார் காலைத் தொட்டு வணங்கினாள். பரமேஸ்வரன் கண்கலங்கினார். மருமகளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட மருமகளைப் பூவும் பொட்டுமாகப் பார்க்கும் பாக்கியத்தை தன் வறட்டு கௌரவத்தால் இழந்து விட்டோமே என்ற பச்சாதாபம் அவருக்குப் பலமாக எழுந்தது. கனகதுர்காவிற்கும் கண்கள் ஈரமாகின.

ஆனந்தவல்லியையும் காலைத் தொட்டு வணங்கிய அவளுக்கு இந்தப் பாட்டி சாகப் போகிற நிலையில் இருப்பதாகத் தெரியவில்லையே என்ற எண்ணம் வந்தது. அதை உணர்ந்தது போல ஆனந்தவல்லி சொன்னாள். “நீ வர்றதா கேள்விப்பட்டதுமே என் உடம்பு நல்லாயிடுச்சு
மீனாட்சி அண்ணியைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். ஈஸ்வர் தாயைப் பெருமிதத்தோடு பார்த்தான். கனகதுர்காவுக்கு மகனைப் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. என்ன தான் தினமும் போனில் பேசினாலும் இந்த சில நாட்கள் பிரிவே அவளுக்கு கஷ்டமாகத் தான் இருந்திருந்தது. மகனை ஒரு கையால் இழுத்து அணைத்துக் கொண்டாள். அவளது மறு கைப்பக்கம் ஆனந்தவல்லி விஷாலியை லேசாகத் தள்ளினாள்.

“இது விஷாலி! தென்னரசு பொண்ணு

குருஜி வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் அந்த ஆறு பேருடன் பேசிக் கொண்டு இருந்தார். அந்த அறுவர் முகமும் தெளிவாகத் தெரியாதபடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடம் அலெக்ஸி விவகாரத்தை பாபுஜி சொல்லி இருந்ததால் எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்திருந்தது. அவர்கள் குருஜி வாயால் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். உதயன் தயவால் போலீசார் பார்வையில் இருந்து தப்பி விசேஷ மானஸ லிங்கத்தைப் பத்திரமாக அங்கு கொண்டு வந்து சேர்த்ததை பாபுஜி அவர்களிடம் முன்பே தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வு அவர்களுக்கு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது என்றால் அலெக்ஸியின் அனுபவம் அவர்களுக்கு கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

அமெரிக்கர் குருஜியிடம் வெளிப்படையாகச் சொன்னார். “குருஜி. எங்களால் அந்த சிவலிங்கத்தைப் புரிந்து கொள்ல முடியவில்லை

குருஜி அமைதியாகச் சொன்னார். “உங்களால் புரிந்து கொள்ள முடிந்திருந்தால் அது விசேஷ மானஸ லிங்கமாக இருந்திருக்காது. அதன் விசேஷமே அறிவால் உணர முடியாமல் இருப்பது தான்

இஸ்ரேல்காரர் சொன்னார். “ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு சிவலிங்கம் பற்றி கிடைத்திருக்கும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறது குருஜி. ஒரு பக்கம் பார்த்தால் அது சுயமான சக்தி படைத்ததாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் அப்படி இல்லை என்று தோன்றுகிறது. அதனால் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் பசுபதியைக் கொல்லும் போது சிவலிங்கம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. ஏன் பசுபதியே தடுக்கவில்லை... அப்போது சாதுவாக இருந்த சிவலிங்கம் திடீரென்று அந்தக்  கொலைகாரனைக் கொன்றிருக்கிறது....   நீங்கள் அதை எடுத்துக் கொண்டு வந்த போது ஒன்றும் செய்யாத சிவலிங்கம் இப்போது அலெக்ஸியை இழுத்திருக்கிறது. சரியான நேரத்துக்கு நீங்களும், ஜான்சனும் போயிருக்கா விட்டால் அலெக்ஸி இன்னேரம் செத்தே போயிருக்கலாம். அந்த சிவலிங்கத்தை மிகப்பெரிய சக்தியாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அது இத்தனை காலம் பூஜை செய்த பசுபதியைக் கூட காப்பாற்றவில்லை... சரி சக்தியே இல்லையா என்றால் இன்னும் நீங்கள் கூட அதை நெருங்க முடியவில்லை.... எங்களுக்கு எப்படி எடுத்துக் கொள்வது என்று ஒன்றும் விளங்கவில்லை

ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். “அந்த சிவலிங்கம் கல்லா, கடவுளா, வெறும் சக்தியா, இல்லை சித்தர்கள் செய்து வைத்த ஒரு ப்ரோகிராமா?

குருஜி புன்னகைத்தார். கடைசியாக அந்த ஜெர்மானியப் பெண்மணி உபயோகித்த வாக்கியம் முன்பு ஈஸ்வர் அவரிடம் சொன்னது தான். கண்டங்களைக் கடந்தும் மனிதர்கள் மூளை ஒரே  அனுமானத்திற்கு எப்படி தான் எட்டுகிறதோ!

குருஜி அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னார். “விசேஷ மானஸ லிங்கம் கடவுள் அல்ல. அதாவது உலகங்களை உருவாக்கியும், பாதுகாத்தும் வருகிற சக்தியைத் தான் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நான் இதை உறுதியாய் சொல்ல முடியும். இந்த விசேஷ மானஸ லிங்கம் உருவாவதற்கு முன்பும் இந்த உலகம் இயங்கிக் கொண்டு தான் இருந்தது. ஆதி அந்தம் இல்லாதவன் இறைவன் என்று எங்கள் வேதங்கள் சொல்கின்றன. அது உண்மை தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.... இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கு ஆரம்பம் உண்டு. ஒரு நாள் ஒரு முடிவும் உண்டு. அதனால் கண்டிப்பாக அது கடவுள் இல்லை.

“அது கண்டிப்பாகக் கல் அல்ல. நீங்களே சுட்டிக் காட்டியபடி அதை நெருங்க எங்களாலும் முடியவில்லை. நெருங்கிய ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறான். நெருங்கப் போகும் போதே மிரண்டு போனவன் பற்றியும் உங்களிடம் பாபுஜி சொல்லி இருப்பார். அது ஒரு மகாசக்தி. அப்படி இல்லா விட்டால் அதை இத்தனை கஷ்டப்பட்டு நாம் கடத்தி இருக்க மாட்டோம். கல் அல்லாத, கடவுளும் அல்லாத, அந்த மகாசக்தி சித்தர்களால் உருவாக்கப்பட்டது ஒரு ப்ரோகிராமா, அவர்கள் நினைத்தபடி தான் இயங்குமா என்றால் இதற்கு ஒரே வார்த்தையில் ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லி முடித்து விடுவது கஷ்டம்...

குருஜி நிறுத்தி விட்டு சிறிது தண்ணீர் குடித்தார். வேறு வேறு நாடுகளில் இருந்து அவர் சொல்வதைக் கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அறுவரைப் போலவே ஜான்சனும், தென்னரசுவும், பாபுஜியும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  மகேஷிடம் மட்டும் அந்த ஆவல் இருக்கவில்லை. அவனுக்கு லேசான பயமும், சலிப்பும் மட்டுமே இருந்தது. அவன் குருஜியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்...

குருஜி தொடர்ந்தார். தொடர்ந்து சிந்தித்து, தியானத்தில் ஆழ்ந்து சில முடிவுகளை அவரால் எட்டியிருக்க முடிந்திருந்தது. எனவே முன்பிருந்த ஒருசிலக் குழப்பங்கள் இப்போது தெளியப்பட்டு இருந்தன. எனவே சொல்வதை ஆணித்தரமாகச் சொன்னார். “....விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கிய சித்தர்கள் தங்கள் சக்திகளை எல்லாம் திரட்டி அதில் ஆவாகனம் செய்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் மனித சமுதாயம் பெரிய மாற்றத்தைச் சந்திக்கும், அந்த சமயத்தில் அந்த சக்தி அந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்றி வழிகாட்டும் என்பது தான் அவர்கள் நோக்கம்... அவர்கள் கணக்கு, அப்படியொரு காலம் வரும் போது அது மனிதர்கள் வசம் போகும் என்பதாக இருந்தது. அப்படிக் கை மாறும் விதம் இயற்கையாக இருக்காது என்று அவர்கள் அன்றைக்கே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அதை சிலர் எழுதி வைத்து விட்டும் போயிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடியும் விதி வசமாக நம் கையில் கிடைத்திருக்கிறது....

“விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி தேவைப்படும் வரை, அல்லது அதன் சக்தி பூரணமாய் முழுமையாகும் வரை, அது புனிதமானவர்களால் பூஜிக்கப் பட வேண்டும் என்று நினைத்த அவர்கள் மூன்று பேரை நியமித்து அது வழி வழியாகக் கடைபிடிக்கப்பட்டும் வந்திருப்பது உங்களுக்கும் தெரியும்... கடைசியாக அக்னி நேத்ர சித்தர், பசுபதி, சிதம்பரநாத யோகி என்ற மூன்று பேரிடம் வரும் வரை இந்த நியமனப்படியே நடந்து வந்தது.  கிட்டத்தட்ட பசுபதியும் சித்தருக்கு சமமானவர் தான். சிதம்பரநாத யோகியையும் அப்படியே சொல்லலாம். அந்தக் காலம் வரை தான் சித்தர்கள் ஆரம்பத்தில் முடிவு செய்த நியமன முறை வேலை செய்தது. முழுவதுமாக மனிதர்கள் கையில் அந்த சிவலிங்கம் மாறும் இந்தக் காலம் வந்த போது, மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்த உலகம் வந்திருக்கிற போது, யாரால் அந்த சக்தி முழுமையாக உபயோகப்படுத்த முடியுமோ அவர்கள் கைக்கு அந்த சிவலிங்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இது தான் விதி. இது தான் அந்த சித்தர்களின் நோக்கம். இது தான் உங்கள் நவீன வார்த்தையில் சொல்வதானால் சித்தர்களின் ப்ரோகிராம்...

உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்த எகிப்தியர் கேட்டார். “ஆனால் பசுபதி அவர் தம்பி பேரன் ஈஸ்வரை நியமித்திருக்கிறார்.... சிதம்பரநாத யோகி கணபதியை நியமித்திருக்கிறார். அவனையே தான் விதிவசமாக நீங்களும் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். மூன்றாவது ஆள் என்று ஒரு ஆளை அவர்கள் நியமித்திருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இங்கே தான் எங்களுக்குக் குழப்பம் வருகிறது.

தென்னாப்பிரிக்கரும் சொன்னார். “ஆமாம்

குருஜி லேசாக சிரித்துக் கொண்டே சொன்னார். “அர்த்தபூர்வமாகச் செய்யும் காரியங்கள் வெறும் சம்பிரதாயமாக மாறிவிடும் போது அர்த்தம் இழந்து போகிறது. அந்தத் தவறைத் தான், ஈஸ்வரைத் தேர்ந்தெடுத்து, பசுபதி செய்து இருக்கிறார். அக்னி நேத்ர சித்தருக்கு மூன்றாவது ஆளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. சிதம்பரநாத யோகி நியமித்திருக்கிற கணபதிக்கோ எந்தப் பெரிய விஷயத்தையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியே இல்லை. பின் எப்படி அவன் மாதிரி ஆளால் உலகத்தைக் காப்பாற்றவோ, வழி நடத்தவோ முடியும். இப்படி இருக்கிறது அவர்கள் நியமனக் குழப்பம்….. அந்த நியமன முறை காலாவதியான பிறகும் அவர்களால் விட முடியவில்லை....

“அப்படியானால் இன்னும் அந்த கணபதி மாத்திரம் தான் அதைத் தொட முடிகிறது என்பது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?–இஸ்ரேல்காரர் மறுபடியும் கேட்டார்.

குருஜி பாபுஜியிடம் முன்பு விவரித்த தீ-பாத்திரம் உதாரணத்தையும், மின்சாரம்-மரக்கட்டை உதாரணத்தையும் மறுபடியும் அவர்களிடம் சொல்லி விளக்கினார். அவர் சொன்னதில் அதற்கு மேல் அவர்களால் தவறு காண முடியவில்லை.

குருஜி தொடர்ந்து சொன்னார். “நாளை காலை மறுபடியும் ஆராய்ச்சிகளைத் தொடரப் போகிறாம். நாளை தியானம் செய்யும் போது மன அலைகளை அளக்கப் போகிறோம்.... விசேஷ மானஸ லிங்கத்துடன் ட்யூன் ஆக முடிவது எந்த அலைகளில் சாத்தியமாகப் போகிறது என்று குறித்துக் கொள்ளப் போகிறோம். நாளை மறு நாள் பிரதானமான ஆராய்ச்சி ஆரம்பமாகப் போகிறது....

அமெரிக்கர் சொன்னார். “நாங்கள் பிரதான ஆராய்ச்சியை இங்கிருந்தே பார்க்க ஆசைப்படுகிறோம். அது உங்கள் ஆராய்ச்சிக்குத் தடங்கல் ஆகாதே

குருஜி பின்னால் திரும்பி ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன் சொன்னார். “எந்த வித சத்தமும் உங்கள் பக்கம் இருந்து வராத வரை பிரச்சினை இல்லை

குருஜி மகேஷிடம் கேட்டார். “சத்தமே செய்தாலும் அது நமக்குக் கேட்காதபடி செய்ய முடியாதா என்ன?

மகேஷ் சொன்னான். “அதை ம்யூட் செய்து விடலாம். பிரச்சினை இல்லை.

குருஜி சொன்னார். “அப்படியானால் நீங்கள் அங்கிருந்தே தாராளமாய் பிரதான ஆராய்ச்சிகளை நாளை மறு நாள் முதல் பார்க்கலாம்

ஜெர்மானியப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டாள். “நாளை மறுநாள் ஆரம்பிக்கும் பிரதான ஆராய்ச்சி என்ன குருஜி?

“நாளை சாயங்காலம் சொல்கிறோம்என்றார் குருஜி. அந்த அறுவராலும் காத்திருக்க முடியவில்லை. அதை அமெரிக்கரும், ஜெர்மானியப் பெண்மணியும் வாய் விட்டே சொன்னார்கள்.

பிரதான ஆராய்ச்சியின் ஆரம்பம் என்ன என்பதை குருஜியும், ஜான்சனும் தான் விவாதித்துக் கொண்டிருந்தார்களே ஒழிய அதை அவர்கள் இன்னும் முடிவு செய்திருக்கவில்லை. எனவே பாபுஜி, தென்னரசு, மகேஷ் உட்பட மற்றவர்கள் யாருமே அறியவில்லை என்பதால் அவர்களும் அதை அறிய பரபரப்போடு காத்திருந்தார்கள்.

(தொடரும்)
-என்.கணேசன்  



Monday, November 18, 2013

சாபமாகும் வரங்கள்!



தீயதை நல்லதாக்கிக் கொள்ளவும், நல்லதைத் தீயதாக்கிக் கொள்ளவும் முடிந்த விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும், குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நாம் கண்டிருக்கிறோம். அதே போல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், அனுகூலமான அம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடித்து பாழாய்ப் போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட மனிதர்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழாய்ப் போவதைப் பார்க்கிற போது ஏற்படாத பெரும் வருத்தம், ஒரு தலைமுறையில் கணிசமான நபர்கள் சீரழிவதைப் பார்க்க நேர்கிற போது நம்மிடம் ஏற்பட்டுத் தங்கி விடுகிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் இணையற்ற அற்புதங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். ஒன்று இண்டர்நெட் மற்றது செல்போன். இவற்றை வரப்பிரசாதங்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் எதைப் பற்றியாவது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைப் பற்றித் தெரிந்தவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களிடம் போய் கேட்போம். அல்லது நூலகங்களிற்குப் போய் அது சம்பந்தமாய் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களையும், அது பற்றி பத்திரிக்கைகளில் வந்திருந்தால் அவற்றையும் தேடிப் படிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படிப் பெறும் அறிவும் சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நபர்களிடம் கேட்டும், புத்தகங்களில் படித்தும் நாம் அறியும் எத்தனையோ தகவல்கள் பழையனவாக இருக்கக் கூடும். அதற்குப் பின் எத்தனையோ மாற்றங்கள் சம்பந்தப்பட்ட துறையில் நிகழ்ந்திருக்கக் கூடும். எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு, நாம் கேட்டும் படித்தும் அறிந்து கொள்ளும் விஷயங்களின் உபயோகத்தன்மை காலாவதியாகி விட்டிருக்கவும் கூடும். சில சமயங்களில் சிலவற்றைக் கேட்டறிந்து கொள்ள சரியான ஆட்களும் கிடைக்க மாட்டார்கள், படித்துத் தெரிந்து கொள்ள சரியான புத்தகங்களும் கிடைக்காமல் போய் விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் பழைய காலாவதியான அறிவைக் கூட நாம் பெற முடியாமல் போய் விடும்.
இன்று எதையும் அரைகுறையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் இண்டர்நெட்டில் முறையாகத் தேடினால் போதும். முழுவதுமாக ஒருவர் விரும்பியதை அறிந்து கொள்ள முடியும். நாம் அறிய விரும்பும் விஷயங்களை சமீபத்திய மாற்றங்கள் உட்படத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மனிதனின் அறிவுதாகத்திற்கு இண்டர்நெட் ஒரு ஜீவ நதி என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் விரல்நுனியில் உலகத்தை இண்டர்நெட் கொண்டு வந்து தருகிறது. பயணித்து செய்து முடிக்கிற பல காரியங்களை இருந்த இடத்திலேயே முடித்துக் கொள்ளும் மிகப்பெரும் வசதியை மனிதனுக்கு இண்டர்நெட் செய்து தந்திருக்கிறது.
அதே போல் தகவல் தொடர்பு என்பது ஒரு காலத்தில் சுலபமானதாக இருக்கவில்லை. ஒருவர் இறந்து போனால் வெளியூர்களில் இருக்கும் அவருடைய உற்றாரும் உறவினரும் அறிந்து கொள்ள பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் ஆகி விடும். தந்தி மூலம் தகவல் போய் சேர்ந்து அவர்கள் வருவதற்கு முன் இறந்தவரின் அந்திமக் கிரியைகள் முடிந்து விட்டிருப்பதும் உண்டு. அதே போல் பயணம் போன ஆட்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. தபாலில் தகவல் வந்தால் தான் உண்டு. அப்படி வருவதும் பழைய தகவலாக இருக்கும்.  இல்லா விட்டால் பயணம் போன நபரே வந்து சொன்னால் தான் உண்டு.
இன்று செல்போன் தயவால் யாரையும் எப்போதும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் சௌகரியம் இருக்கிறது. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரங்களும் ஒருவரை நாம் உடனே தொடர்பு கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பதும், பெற்றுக் கொள்வதும் மிக மிக எளிதான விஷயங்களாக மாறி விட்டன. இதனால் எத்தனை டென்ஷன் குறைகிறது, எத்தனை வேகமாகவும், சுலபமாகவும் பல வேலைகள் நடக்கின்றன என்பதைப் பார்க்கும் போது செல்போனும் இன்றைய விஞ்ஞானம் தந்த மிகப் பெரிய வரப் பிரசாதமே.  
ஆனால் இத்தனை அருமையான வரப்பிரசாதங்கள் சாபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. இண்டர்நெட்டை தகவல் அறியும் சாதனமாய், அறிவூட்டும் நண்பனாய், தங்கள் வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளும் ஒரு நல்ல ஊடகமாக மட்டும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேர் அதனைத் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நல்ல விஷயங்களை விட அதிகமாய் கலாச்சாரச் சீரழிவுக்கான விஷயங்களே இண்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுவதாகவும், இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இண்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய இளைஞர்களிடம் கண் முன் உள்ள யதார்த்த உலகத்தில் பங்கு கொள்வது குறைந்து கொண்டு வருகிறது என்பதையும், இண்டர்நெட் மூலமாக மட்டும் உலகைக் காண ஆரம்பிக்கும் போக்கு வளர ஆரம்பித்துள்ளது என்பதையும் பார்க்கும் போது கவலை எழுகிறது.
இது ஒரு நோயாகவே மாறி விட்டிருக்கிறது என்று கூறும் அமெரிக்க உளவியல் கழகம் (American Psychiatric Association)  அந்த நோயிற்கு இண்டர்நெட் உபயோக சீர்குலைவு  (Internet Use Disorder or IUD) என்று பெயரிட்டிருக்கிறது. இண்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இண்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இண்டர்நெட் தடைப்படும் போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல் அந்த வேலை நேரத்தையும் இண்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கூடப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் அரட்டை(chatting), விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டுமே. இன்றைய இளைஞர்களில் மிக அதிகமானோர் வெட்டிப் பேச்சுக்குத் தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் பெரிசுகளைப் பலரும் கிண்டல்  செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல் அவர்களால் உருவாக்கப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.
எந்த அளவில் செல்போன் இளைஞர்களை ஆபத்தில் உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பதை சமீபத்தில் நேரிலேயே பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு கல்லூரி மாணவி செல்போனில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறார். இடையே ஒரு சாலையை அவர் கடக்க வேண்டி இருந்த போதும் கூட அவர் சாலையின் இருபக்கமும் பார்க்கும் சிரமத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸிக்காரர் அந்தப் பெண்ணை இடிக்கிற அளவு வந்து வண்டியை நிறுத்தி வசை பாடினார். அதைக் கூட அந்தப் பெண் கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் டாக்ஸி அந்தப் பெண்ணை இடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். கைகால் முறியவோ, உயிருக்கே ஆபத்தாகவோ கூட வாய்ப்பிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பித்து இருக்கிறோம் என்ற அறிவும் கூட இல்லாமல் செல்போனில் பேச்சை நிறுத்த முடியாமல் போய்க் கொண்டே இருந்த அந்த இளம் பெண் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாகனத்தை ஓட்டும் போது கூட பலரால் செல்போனில் பேசாமல் இருக்க முடிவதில்லை. எத்தனையோ விபத்துகள் இதன் காரணமாக தினந்தோறும் நடந்து எத்தனையோ அப்பாவிகள் அநியாயமாக அதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தும் அலட்சியமாய் நடந்து கொள்வது சிறுமையே அல்லவா?
அறிய வேண்டியவையும் செய்ய வேண்டியவையும் எத்தனையோ இருக்க சதாசர்வ காலம் செல்போனில் பேசிக் கொண்டும், SMS அனுப்பிக்கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது முட்டாள்தனத்தில் முதலிடம் பெறும் தன்மை அல்லவா? நேரடி வெட்டிப் பேச்சுகளில் கூட அந்தப் பேச்சு ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைவது உண்டு. அவரவர் வீட்டுக்கு சாப்பிடவோ, உறங்கவோ போகும் நேரம் உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவிற்கு வருவதும் இல்லை. 
இளைஞர்களே இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் அது தான். இந்தக்காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையுமே, யாரையுமே நீங்கள் அனுமதிக்காதீர்கள். இண்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். ஆனால் அதன் பயன்பாட்டில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். தேவைப்படும் போது வேண்டியதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கருவிகளாக அவற்றை வைத்திருங்கள். மாறாக அவற்றின் கருவிகளாக மாறி, அடிமைப்பட்டு அழிந்து போகாதீர்கள்!
-என்.கணேசன்
நன்றி: தி இந்து