சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 18, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 12



லாய் லாமாவின் கடிதம் படித்த பிறகு அக்‌ஷய் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்தது. அவர் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று அவன் இன்னும் முடிவு செய்திராத போது அவர் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நாங்கள் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்என்று எழுதியது அவன் மனதை என்னவோ செய்தது. ஒருவேளை அவன் மறுத்து விட்டால்....?

அவர் அந்தக் கடிதத்தில் உடனடியாக என்பதை அடிக்கோடிட்டு அவசரத்தின் தன்மையைச் சுட்டிக் காட்டியதால் போகிறதா வேண்டாமா என்பதை உடனடியாக முடிவெடுத்து தெரிவிக்க வேண்டியது தான் தர்மம் என்று தோன்றியது. அதனால் உடனே புத்தகயாவுக்குப் போகத் தயாரானான்.

ஆனந்த் சோம்நாத் தந்திருந்த ஒரு அலைபேசி எண்ணை அவனிடம் தந்து சொன்னான். “இனி இந்த விஷயமாக என்ன தேவை இருந்தாலும் இந்த எண்ணை நீ தொடர்பு கொண்டால் போதும், அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். செலவு பற்றியோ, போன் செய்கிற நேரம் பற்றியோ நீ யோசிக்க வேண்டியதில்லை. பேசும் போது அவன் பேரை நீ கேட்க வேண்டாம். உன் பேரையும் சொல்ல வேண்டியதில்லை. உன் குரலை வைத்தே இந்த எண்ணில் இருப்பவன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான்....

அக்‌ஷய் ஆனந்தை சிறிது யோசனையுடன் பார்த்து விட்டு தன் அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தான். மூன்றாவது சுற்றில் அந்த அலைபேசி எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. அக்‌ஷய் சொன்னான். “எனக்கு கோயமுத்தூரில் இருந்து உடனடியாக விமானத்தில் புத்தகயா போக டிக்கட் ஏற்பாடு செய்ய வேண்டும்...

“சரிஎன்று ஒரு ஆண் குரல் சொல்லி இணைப்பைத் துண்டித்தது. 

அடுத்த பன்னிரண்டாவது நிமிடம் அந்த எண் அழைத்தது. “சார் கோயமுத்தூரில் இருந்து புத்தகாயாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் முதலில் மும்பைக்கும் அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் உங்கள் புத்தகயாவுக்கும் டிக்கெட் செய்திருக்கிறோம். மும்பை விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பும். கோவை விமான நிலையத்தில் உங்களுக்காக டிக்கெட்டோடு “புத்தகயா சுற்றுலாஎன்ற பெயர் பலகை கையில் வைத்துக் கொண்டு நம் ஆள் காத்திருப்பார். நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்திய உளவுத்துறை ஆட்களின் உடனடி செயல்பாட்டை நினைத்து அக்‌ஷய் வியந்தான்.     

லீ க்யாங் முன்னால் இந்தியாவில் விமான நிலையங்களுக்கு அருகில் இருக்கிற புத்த மடாலயங்களின் பட்டியல் இருந்தது. வாங் சாவொ அனுப்பி இருந்தான். அந்தப் பட்டியலில் பதினோரு புத்த மடாலயங்கள் இருந்தன. எல்லாம் விமான நிலையத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மடாலயங்கள். அவற்றை கூர்ந்து பார்த்து விட்டு மூன்று பெயர்களுக்கு அடிக்கோடிட்டான் லீ க்யாங்.

முதலாவது திக்‌ஸே புத்த மடாலயம், லடாக். (அங்கு மைத்ரேய புத்தர் ஆலயம் இருப்பதையும் வாங் சாவொ சுட்டிக் காட்டியிருந்தான்).
இரண்டாவது மைண்ட்ரோலிங் புத்தமடாலயம், டேஹ்ராடூன்.
மூன்றாவது புத்தகயா. அங்கு திபெத் சம்பந்தப்பட்ட புத்தமடாலயங்களே மூன்று இருந்தன. டெர்கார், செச்சென் டென்யி, கர்மா தார்ஜே மடாலயங்கள்.

சிறிது யோசித்து விட்டு திக்ஸே புத்தமடாலயத்திற்கு அருகே கேள்விக்குறி ஒன்றைப் போட்டு விட்டு லீ க்யாங் வாங் சாவொவிற்கு போன் செய்து பேசினான்.

“வாங் சாவொ, தலாய் லாமாவின் அந்த ஆள் இந்திய ராணுவத்தில்  இருப்பவனாக இருந்தாலோ, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவனாக இருந்தாலோ தான் லடாக்கில் இருக்கும் திக்ஸே புத்தமடாலயத்திற்கு சுலபமாக வர முடியும். அதுவும் சீதோஷ்ண நிலை மோசமாக இருந்தால் அங்கே வர விமான போக்குவரத்தும் கஷ்டம் தான். நம் எல்லையில் வேறு அது இருக்கிறது. அதனால் திக்ஸே மடாலயத்தில் மைத்ரேய புத்தர் ஆலயம் இருந்தால் கூட அங்கு ஆசான் இருப்பது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் நம் ஆட்களை அங்கே கண்காணிக்க அனுப்பலாம். முக்கியமாய் டேஹ்ராடூன் மற்றும் புத்தகயா இரண்டு இடங்களில் எங்காவது தான் ஆசான் இருக்கலாம். அங்கே நம் ஆட்களை அதிகமாக அனுப்பி கண்காணிக்க ஏற்பாடு செய்.  அந்த ஆள் என்று யாரை சந்தேகப்பட்டாலும் உடனடியாகப் புகைப்படம் எடுக்கச் சொல். தவறான ஆட்களாக இருந்தாலும் தப்பில்லை. நிஜமான ஆள் நம் ஆட்கள் பார்வையில் இருந்து தப்பி விடக்கூடாது.

னந்த் கிளம்புவதற்கு முன்பும் தன் தம்பியை ஒருமுறை எச்சரித்து விட்டுப் போனான். நீ இப்போது தனிமனிதன் அல்ல. உன்னை நம்பி ஒரு அன்பான குடும்பம் இருக்கிறது. அதனால் உன் உயிரைப் பணயம் வைத்து நீ யாருக்கும் எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்த தேசத்திற்கு நீ ஏற்கெனவே பெரிய சேவை செய்திருக்கிறாய். அடுத்த தேசத்திற்கும் செய்ய வேண்டியது உன் கடமை என்று நினைக்காதே. வருண் சொன்னது போல் அவர்களது மூடநம்பிக்கையாகக் கூட இந்த மைத்ரேயர் புத்தர் விவகாரம் இருக்கலாம். நன்றாக யோசித்து முடிவெடு...

அண்ணன் சொன்னதற்கு அக்‌ஷய் தலையாட்டினான். அவன் தலையாட்டல் ஆனந்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவன் தம்பியை சற்று கண்டிப்பான பார்வை பார்த்தான்.

அக்‌ஷய் அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான். தம்பியின் புன்னகையின் வசீகரம் காலம் பல கழிந்தாலும் குறையவில்லை என்று ஆனந்துக்குத் தோன்றியது.

அக்‌ஷய் அண்ணனிடம் சொன்னான். “நான் வருணிடம் வெறுமனே வாக்குத் தரவில்லை அண்ணா. யாரோ தவறாக நம்புகிறார்கள் என்பதற்காக நான் எதற்கு ஆபத்தான வேலையில் இறங்க வேண்டும். நான் நூறு சதவீதம் நம்பாமல் கண்டிப்பாக இதில் ஈடுபடப்போவதில்லை. நீ கவலைப்படாதே

ஆனந்துக்கு நிம்மதியாக இருந்தது. அவன் போக வேண்டிய விமானம் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இருந்ததால் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அக்‌ஷய் கிளம்ப சஹானா அவனது துணிமணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.  

அவளையே பார்த்துக் கொண்டு நின்ற அக்‌ஷய்க்கு அவள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவன் பயணத்திற்கு ஆயத்தம் செய்வதைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது. இந்த பதிமூன்று கால தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு முறை கூட அவள் முகம் சிணுங்கியோ, அவனிடம் மனஸ்தாபம் செய்தோ அவன் பார்த்ததில்லை. அவனை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அன்பை மட்டுமே தர முடிந்த அவளைப் போன்ற ஒரு மனைவியை அடைய அவன் கண்டிப்பாக முந்தைய பிறவிகளில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அவள் செய்யும் பயண ஆயத்தத்தை நிறுத்தி அன்பாக அவளை இறுக்க அணைத்தபடி அவன் கேட்டான். “சஹானா நீ எதுவும் சொல்ல மாட்டாயா?

அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு சஹானா ஆத்மார்த்தமாகச் சொன்னாள். “நீங்கள் என்ன செய்தாலும் யோசிக்காமல் செய்ய மாட்டீர்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது?

அவன் கண்கள் ஈரமாயின. பேச்சிழந்து போனான்....

ஒரு மணி நேரத்தில் அக்‌ஷய் விமான நிலையத்திற்குக் கிளம்பினான்.  

சான் மனம் தியானத்தில் லயிக்கவில்லை. மனம் அமானுஷ்யன் என்ற அந்த மனிதன் வருவானா மாட்டானா என்ற கேள்வியிலேயே திரும்பத் திரும்ப நிலைத்தது. டெர்கார் மடாலயத்தில் தியான மண்டபத்தில் இருந்த பெரிய புத்தர் சிலையைப் பார்த்து மனதிற்குள் கேட்டார். உங்கள் சித்தம் என்ன போதிசத்துவரே?”. போதிசத்துவர் புன்னகையுடன் மௌனம் சாதித்தார்.

தீபங்களின் மங்கலான வெளிச்சத்தில் புதிய நிழல்கள் தெரிந்தன. வெளியே இருந்து பார்வையாளர்கள் சிலர் புதிதாக நுழைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அது புதிதல்ல. புத்தகயாவிற்கு வரும் யாத்திரீகர்கள் முக்கியமாய் போதிமரம் இருக்கும் மகாபுத்தர் ஆலயத்திற்கு கண்டிப்பாக செல்பவர்களாக இருந்தாலும், அவர்களில் சிலர் புத்தகயாவில் இருக்கும் மற்ற புத்த மடாலயங்களுக்கும் செல்வது வழக்கம் தான். ஆனால் ஆசானின் அனுபவ உள்ளுணர்வு வந்தவர்களில் தவறான நபர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

மெல்ல அவர் தன் பார்வையைத் திருப்பினார். தியான மண்டபத்தின் நுழைவாயிலில் வந்திருந்த ஆறு ஆட்களில் நான்கு பேர் அங்கு புத்தபிக்குகள் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு அவர்களும் அப்படியே உட்கார்ந்து கொண்டார்கள். இரண்டு பேர் மட்டும் அந்த தியான மண்டபத்தை கூர்மையாகப் பார்வையிட்டார்கள். அவர்கள் இருவரும் உண்மையான யாத்திரீகர்கள் போல அங்கிருந்த பிரதான புத்தர் சிலையைப் பக்தியுடனோ, ஆர்வத்துடனோ பார்ப்பதற்குப் பதிலாக அமர்ந்திருந்த புத்தபிக்குகளை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அமர்ந்திருந்தவர்களில் யாரையோ தேடுவது போல.....

இது போன்ற ஏராளமான ஆட்களை தன் வாழ்க்கையில் ஆசான் சந்தித்திருக்கிறார். அவர்களில் பலரை விளையாட்டாக அலைக்கழித்திருக்கிறார். பலரை அலட்சியப் படுத்தியிருக்கிறார். பலரிடம் பேச்சுக் கொடுத்து குழப்பி இருக்கிறார். வாழ்நாளில் பெரும்பகுதியை அவர்கள் ஊடுருவலின் மத்தியில் கழித்துள்ளதால் அவர்கள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் அவர்களின் திடீர் வரவை, அமானுஷ்யனை எதிர்பார்த்துக் கொண்டு அவர் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவர்களை இங்கே அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களை இங்கே வரவழைத்திருப்பது என்னவாக இருக்கும் என்று அவர் ஆழமாய் யோசித்துப் பார்த்தார். யோசனையின் முடிவாக இப்படி இருக்கலாம் என்ற அனுமானத்தில் கிடைத்த பதில்கள் எல்லாமே தற்போதைய சூழ்நிலைக்கு சாதகமாக இருக்கவில்லை.     

ஆசான் ஆபத்தை உணர்ந்தார்.  

(தொடரும்)

என்.கணேசன்

  (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

7 comments:

  1. சூப்பராய் போகிறது. ஆடுபுலி ஆட்டம் செம!

    ReplyDelete
  2. Li kyang's reasoning power is amazing. He is a worthy adversary to Amanushyan. Great going

    ReplyDelete
  3. It soooo hard to wait for next week sir. ... .

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. ஆசானே ஆபத்தை உணரும்போது அமனுஷ்யன் அவர்கள் கண்ணில் மண்ணை தூவும் நேரத்திற்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. Palaiya suspense ah sollittu ippa puthu supence vaikiringa

    ReplyDelete