சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 25, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 13


ந்த இரண்டு பேரும் இன்னும் உட்காரவில்லை என்பதை ஆசான் கவனித்தார். அவர்கள் சுவரில் இருக்கும் ஓவியங்களை ரசிப்பவர்கள் போல் பின்னால் அங்குமிங்கும் நகர முடிந்த வரை சென்று அங்கு அமர்ந்திருந்த பிக்குகளைக் கூர்ந்து கவனித்தார்கள். ஆசான் தன் முதுகில் அவர்கள் பார்வையை உணர்ந்தார். நிறைய  பேர் அந்த இடத்தை அடைத்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திரா விட்டால் அந்த இருவரும் ஏதாவது சாக்கில் முன்னால் அமர்ந்திருக்கும் ஆசான் அருகே வரை வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தியானம் முடிந்த போது அத்தனை பேரும் எழுந்தார்கள். ஆசானும் எழுந்தார். ஆனால் பழைய ஆசானாக அல்ல. கூன் விழுந்த வயதான பிக்கு போல் வளைந்து எழுந்தார். மடாலயத்தில் தியானமண்டபத்திற்குப் பின்புறம் இருக்கும் புத்தபிக்குகளின் தங்குமிடத்திற்கு பிக்குகளுடன் சேர்ந்து முதலில் போய் சேர்ந்தார். பார்வையாளர்களுக்கு அங்கு அனுமதி இல்லாததால் அந்த இரண்டு பேரால் அங்கு வரை தொடர முடியவில்லை.

அவர்கள் இருவரும் மற்ற பார்வையாளர்களுடன் சேர்ந்து டெர்கார் மடாலயத்தில் மற்ற பகுதிகளை வேடிக்கை பார்ப்பது போல் அங்கெங்காவது ஆசான் தென்படுகிறாரா என்று பார்த்தார்கள். ஆசான் அகப்படவில்லை.

வெளியே வந்த பின் இருவரில் ஒருவன் சொன்னான். “முன் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த பிக்கு ஆசான் போலவே தான் தெரிந்தார். ஆனால் ஆசானுக்கு கூன் கிடையாது....

இரண்டாமவன் சொன்னான். “ஆசான் நடிப்பதில் கூட கெட்டிக்காரர். அது ஆசானாக கூட இருக்கலாம். நம்மை ஏமாற்றக் கூட அப்படி நடித்திருக்கலாம்.

“நாம் வந்திருப்பது அவருக்கு எப்படித் தெரியும். நாம் மற்ற ஆட்களோடு சேர்ந்து தானே உள்ளே வந்தோம்....

“அந்த ஆள் லேசாகத் திரும்பியது போல் இருந்தது...

“ஆனால் அந்த ஆளுக்கு நாம் யார் என்று தெரிய வாய்ப்பே இல்லையே?

ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருவரும் வெளியே போய் டெர்கார் மடாலயத்தைக் கண்காணிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள்.

ஆசான் ரகசியமாய் அவர்களை ஒரு ஜன்னல் வழியே பார்த்தார். உளவாளிகள் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களை அவர் அதற்கு முன்பு பார்த்ததில்லை. இருட்ட ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் டெர்கார் மடாலயத்தைப் பார்க்கக்கூடிய இடங்களிலேயே இருந்தார்கள்....

வாங் சாவொ லடாக்கில் உள்ள திக்‌ஸே புத்த மடாலயம், டேஹ்ராடூனில் உள்ள மைண்ட்ரோலிங் புத்தமடாலயம், புத்தகயாவில் உள்ள மூன்று புத்தமடாலயங்கள் என ஐந்து இடங்களிலும் கண்காணிப்பில் இருக்கும் தன் ஆட்களிடம் போன் செய்து நிலவரத்தைக் கேட்டறிந்தான். டேஹ்ராடூனில் கிட்டத்தட்ட ஆசானைப் போல் தோற்றமுள்ள ஒரு பிக்குவைப் பார்த்ததாகச் செய்தி வந்தது.  டெர்கார் மடாலயத்திலும் கிட்டத்தட்ட ஆசானைப் போல் தோற்றமுள்ள, ஆனால் கூன் விழுந்த ஒரு பிக்குவைப் பார்த்ததாகச் செய்தி வந்தது.  இரண்டு இடங்களுக்கும் கூடுதல் ஆட்களை வாங் சாவொ அனுப்பி வைத்தான். இரண்டில் ஒரு இடத்தில் இருப்பது ஆசானாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அதைத் தெரிவித்து விட்டு “கிழவர் சகலகலா வித்தகர். ஜாக்கிரதையாக இருங்கள். அவர் அங்கே இருந்து, அவரைப் பார்க்க வரும் ஆள் தான் இப்போது நமக்கு மிக முக்கியம். அவனை எல்லாக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்து அனுப்புவது மிக முக்கியம்....என்று வலியுறுத்திச் சொன்னான்.

ள்ளிரவில் ஆசானின் தனி அலைபேசிக்கு தலாய் லாமா அனுப்பிய குறுந்தகவல் வந்து சேர்ந்தது. “சில விவரங்களைக் கேட்டறிந்த பிறகு தான் ஒத்துக் கொள்வதா வேண்டாமா என்று அவன் முடிவு செய்வானாம். அதற்காக தங்களிடம் அவன் என்னேரமும் வரக்கூடும்.”  உறங்காமல் விழித்திருந்த ஆசானுக்கு இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என விளங்கவில்லை.

ரகசியமாக ஜன்னல் வழியே ஆசான்  வெளியே பார்த்தார். அந்த நள்ளிரவிலும்  எதிரணி ஆட்கள் கூடுதலாகவே பல வேடங்களில் மடாலயத்தைச் சுற்றி இருந்தார்கள். அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்து ஓடிப்போவது அவருக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால் அமானுஷ்யன் வந்தால் அவனைச் சந்தித்துப் பேசாமல் அங்கிருந்து போக முடியாமல் தவித்தார். அவன் அவர்கள் பார்வையில் படுவதை அவர் விரும்பவில்லை. என்ன செய்வது என்று யோசித்தார். அன்றிரவு அவரால் உறங்க முடியவில்லை.  இந்த உளவாளிகளுக்குத் தெரியாமல் அமானுஷ்யனைச் சந்திக்க முடியுமா, அப்படி முடிந்தால் அமானுஷ்யன் என்ன விவரங்கள் கேட்பான், கேட்டு விட்டு என்ன முடிவெடுப்பான் என்கிற வகையில் சிந்தனைகள் ஓடின....

க்‌ஷய் புத்தகயாவிற்கு அதிகாலை நேரம் போய் சேர்ந்தான். அவன் விமானநிலையத்தில் இருந்து நேராக டெர்கார் மடாலயத்துக்குச் செல்லவில்லை. புத்தகயாவில் ஜப்பானியக் கோயிலுக்கு அருகே இருந்த ஹோட்டல் புத்தா இண்டர்நேஷனல் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து குளித்து உடை மாற்றிக் கொண்டு காலை டிபன் சாப்பிட்டு விட்டு தான் டெர்கார் புத்தமடாலயத்திற்கு கால்நடையாகச் சென்றான்.

புத்தகயாவிற்கு இதற்கு முன் இரண்டு முறை அவன் வந்திருக்கிறான். புத்தபிரான் ஞானம் பெற்ற அந்த திருத்தலத்தில் இன்னும் அந்த அவரது ஞான அலைகள் காற்றில் பரவிக்கிடப்பதாய் அவன் நம்பினான். அங்கு வந்த முந்தைய இருமுறையைப் போலவே இப்போதும் அந்த அலைகளைத் தனக்குள் வாங்கிக் கொள்வதாக நினைத்தான். அது கற்பனையோ, நிஜமோ, மனம் அமைதியில் திளைக்க ஆரம்பித்தது. மனதின் அமைதிக்கு எதிர்மாறாக இருந்தது வெளிப்புற சூழ்நிலை. புழுதியும், ஜன நெரிசலும், சத்தமுமாக இருந்தது அந்தச் சிறுநகரம்.

டெர்கார் புத்தமடாலயத்திற்கருகே நெருங்கிய போது தான் அந்த உளவாளிகளை அவன் கவனித்தான். அந்த உளவாளிகள் மடாலயத்திற்கு உள்ளே செல்லும் ஆட்களை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பல் உள்ளே நுழைந்த போது ஒரு ஆள் ரகசியமாக அந்தக் கும்பலைப் புகைப்படம் எடுத்ததையும் அக்‌ஷய் பார்த்தான். அப்படியே பின் வாங்கி அவர்களை தொலைவில் இருந்து கண்காணித்தான். உள்ளே போகும் யாத்திரீகர்களில் அவர்கள் அதிகம் கவனித்தது இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் தான். அந்த அளவு அவர்கள் பெண்களையும், முதியவர்களையும் கண்காணிக்கவில்லை.

நிலவரத்தின் தன்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு மறுபடி ஓட்டலில் தனதறைக்குத் திரும்பியவன் தன் சூட்கேஸில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் சில மாறுவேஷப் பொருள்களை எடுத்தான். அடுத்த கால் மணி நேரத்தில் அவன் அறையை விட்டு ஒரு வயதான கிழவர் தோற்றத்தில் வெளியே வந்தான். தோற்றம் மட்டுமல்லாமல் நடையும், தோரணையும், தடுமாற்றமும் கூட ஒரு முதியவருடையதாக இருந்தது.  

வெளியே வந்த முதியவர் ஓட்டலில் இருந்து ஒரு ஆட்டோரிக்‌ஷா பிடித்துக் கொண்டு டெர்கார் மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் கீழே இறங்க அந்த ஆட்டோரிக்‌ஷா டிரைவரின் உதவி தேவைப்பட்டது. எப்போதும் யாத்திரிகர்களிடம் அதிக தொகையை வசூலிக்கும் அந்த டிரைவருக்கு அந்த முடியாத முதியவரிடம் அதிக தொகை வசூலிக்க மனம் வராமல் நியாயமான பணத்தை வாங்கினான். உள்ளே வரை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வரட்டுமா என்று அவன் கேட்டதற்கு நன்றி சொல்லி மறுத்து விட்டு மிக நிதானமாக நடந்து டெர்கார் மடாலயத்திற்குள் நுழைந்த கிழவரைப் பார்த்துக் கொண்டே நின்ற போதும் உளவாளிகளுக்கு சந்தேகம் எழவில்லை.  

புத்தமடாலயத்தின் படிகளில் ஏறும் போதும் தடுக்கி விழப் போன அவர் சுவரைப் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார். தங்கள் பார்வையிலேயே மிக அதிக நேரம் இருந்த அந்த முதியவரைப் பார்த்து உளவாளி ஒருவன் தன் சகாவிடம் சொன்னான். “இந்த நிலைமையில் உடல் இருக்கையில் கிழத்துக்கு யாத்திரை தேவையா?

உள்ளேயும் இரு உளவாளிகள் இருந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக உள்ளே வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்து விட்டு அடுத்த இருவர் வந்த பிறகு வெளியேறுவது என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். ஆசான் போல தெரிந்து கூனல் விழுந்த பிக்கு இன்று காலை முதல் கண்களில் படவில்லை. அந்த கூனல் பிக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளேயே படுத்துக் கிடக்கலாம். அது ஆசானாக இருந்தால் கண்டிப்பாக அவரைத் தேடிவரும் ஆளைப் பார்க்க வெளியே வந்து தானாக வேண்டும். அல்லது அந்த வெளியாள் உள்ளே போய் தான் ஆக வேண்டும். அந்த சந்திப்புக் காட்சியைத் தவறவிட அவர்கள் விரும்பவில்லை.

உள்ளே நுழைந்த முதியவர் புத்தர் சிலையைப் பார்த்து கைகூப்பி ஒரு நிமிடம் அமைதியாக நின்றார். இப்போது தியானம் செய்பவர்கள் அதிகம் இருக்கவில்லை. சிலர் மட்டும் தியான முயற்சியில் இருந்தார்கள். மற்றவர்கள் அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டும், சுவரில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துக் கொண்டும் இருந்தார்கள்.

புத்தர் சிலையை வணங்கி நின்ற முதியவர் அங்குள்ளவர்களை சுற்றும் முற்றும் பார்த்தார். ஆசானை இதற்கு முன்னால் பார்த்தது இல்லை என்றாலும் அவர் அங்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தலாய் லாமாவின் குருவாக இருக்க முடிந்த வயதான பிக்கு அந்த தியான மண்டபத்தில் யாருமில்லை. புத்தர் சிலை அருகே அமர்ந்திருந்த குரு ஸ்தானத்தில் தெரிந்த பிக்குவும், அங்கிருந்த மற்ற பிக்குகளும் ஏதோ அசௌகரியத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. உளவாளிகளின் வரவு தான் காரணமாக இருக்க வேண்டும். ஆசான் உள்ளே ஒளிந்திருக்கலாம், அல்லது உளவாளிகளைப் பார்த்த பின் இடம் மாறியும் இருக்கலாம்.

முதியவர் பின் சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்து புத்தர் சிலை அருகே அமர்ந்திருந்த குரு பிக்குவைச் சென்றடைந்தார். அப்போது அந்த பிக்குவை ஒரு யாத்திரிகர் வணங்கி ஆசி வாங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் தானும் வணங்கக் காத்திருந்தார். அவருக்கும் பின்னால் போய் நின்ற முதியவர் இப்போதும் சுவரில் இருந்து கையை எடுக்கவில்லை. அவருக்கு மூச்சிறைத்தது. அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டார்.

அவருக்கு முன்னால் இருந்த ஆளும் போய் வணங்கி ஆசிபெற்று நகர்ந்த பின்பு, முதியவர் கஷ்டப்பட்டு முன்னேறினார்.

(தொடரும்)   

-          என்.கணேசன்



5 comments:

  1. அர்ஜுன்September 25, 2014 at 6:25 PM

    வியாழக்கிழமை ஆறு மணியாகும் வரை வெய்ட் செய்து இதை படித்து விட்டால் அடுத்த வியாழக்கிழமை எப்ப வரும்னு மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறது. அமானுஷ்யன் ஆசான் சந்திப்புக்காக வெய்ட்டிங்.

    ReplyDelete
  2. Ganesan sir. the novel goes superbly. can u write this novel twice in a week.

    ReplyDelete
  3. Enna nadakumo....? Theriyalaiye...!

    ReplyDelete
  4. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. akshai oru nimidaththil nilaiyai unarthu thannai maatrikkonda vitham super innum akshayin saagasaththirkku kaaththirukkirom

    ReplyDelete