சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 20, 2015

யோகியின் உடல் ஆதிக்க சக்திகள்!




20. மகாசக்தி மனிதர்கள்!

மென்னிங்கர் ஃபௌண்டேஷனில் தன் யோக சக்தியை விஞ்ஞானக் கருவிகளால் பரிசோதனை செய்ய அனுமதித்திருந்த யோகி சுவாமி ராமா யோக சக்தியால் இன்னும் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் சொல்லி இருந்தார். அவற்றில் முக்கியமானவை


1) இதயத்துடிப்பை நிமிடத்திற்கு இருபது வரை குறைத்து உடனடியாக அதை நிமிடத்திற்கு 250 வரை அதிகப்படுத்துவது.


2) இதயத்துடிப்பை ஒரேயடியாக ஒரு நிமிடத்தில் இருந்து மூன்று நிமிடம் வரை நிறுத்தி வைப்பது


3) உடலில் செயற்கையாய் அங்கங்கே கட்டிகளை ஏற்படுத்துவது, அந்தக் கட்டிகளைக் கரைக்கவும் முடிவது


4) உடலில் எந்தப் பகுதியில் ஊசியைக் குத்தினாலும் இரத்தம் வெளி வராதபடி இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது.



5) கண்களை மூடிக் கொண்டு படிக்க முடிவது, மூடிய புத்தகம் அல்லது உறையில் போட்டு மறைத்திருக்கும் கடிதத்தைத் தொட்டுப் படிக்க முடிவது. தூரத்தில் இருக்கும் பொருள்களை கண்களை மூடியே பார்க்க முடிவது


6) தொடாமல் பொருள்களை நகர்த்த முடிவது


7) பிராணசக்தியுடன் சூரிய சக்தியையும் இணைத்து அற்புதங்கள் செய்ய முடிவது.


இப்படி ஆராய்ச்சியாளர்களிடம் அவர் சொல்லி இருந்த போதிலும் பின்னர் அவரால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்தையும் செய்து காட்டும் விஞ்ஞான சூழ்நிலைகள் பல காரணங்களால் அமையவில்லை. ஆனால் அவர் இந்தியா திரும்பிப் போய் மறுபடி பல சொற்பொழிவுகள் ஆற்றவும், ஆன்மீகப் பணிகளுக்காகவும் அமெரிக்கா வந்த போது சில ஆராய்ச்சிகளை அவரால் செய்து காட்ட முடிந்தது. அவற்றையும் ”Beyond Biofeedback” நூலில் ஆராய்ச்சியாளர்கள் எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் (Elmer & Alyce Green) குறிப்பிட்டார்கள். அந்த சுவாரசியமான ஆராய்ச்சிகளையும் பார்ப்போம்.


ஒரு முறை எல்மர் க்ரீன் சுவாமி ராமாவிடம் உடலில் ஏற்படும் கட்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செயற்கையாய் உடலில் கட்டிகளை ஏற்படுத்தவும், அந்தக் கட்டிகளை கலைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுவாமி ராமா சொல்லி இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். உடனே தன் உடலில் நான்கு வினாடிகளில் ஒரு இடத்தில் ஒரு பறவையின் முட்டையின் அளவில் ஒரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். எல்மர் அந்த கட்டியைக் கையால் தொட்டுப் பார்த்தார். கட்டி உறுதியாக இருந்தது.


அதே போல் வேறொரு இடத்திலும் வேறு வடிவத்தில் இன்னொரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். அவற்றை உருவாக்குவது யோகசக்தியால் என்றாலும் கூட அந்தக் கட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை சுவாமி ராமாவால் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் கட்டிகளைக் கலைத்தும் காட்டினார்.


தன்னால் தொடாமல் பொருள்களை சுழல வைக்கவோ நகர்த்தவோ முடியும் என்று சொல்லி இருந்ததையும் சுவாமி ராமா செய்து காட்டினார். ஒரு பென்சிலைக் கயிறில் கட்டித் தொங்கவிட்டு அதை அருகில் உற்றுப் பார்த்து சில மந்திரங்களைச் சொல்லி சுழல விட்டார். ஆனால் எல்மர் க்ரீன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். மூச்சுக் காற்றால் கூட அப்படி சுற்ற வைக்க முடியும் என்று சொன்னார். உடனே சுவாமி ராமா ஆராய்ச்சிகூட சூழ்நிலையிலும் கூட தன்னால் அப்படி செய்து காட்ட முடியும் என்று சொன்னார்.


உடனே வேறொரு சிறிய ஆராய்ச்சிகூடத்தில் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறிக்கப்பட்டிருந்த ஒரு வட்ட அமைப்பில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தன.





ஐந்தடி தொலைவில் சுவரை ஒட்டி ஒரு கட்டிலில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி இங்கு காட்டப்பட்டுள்ளது போல் அவருக்குத் தரப்பட்டது.


முகமூடி இல்லாமலும் கூட வெறும் மூச்சுக் காற்றால் ஐந்தடி தூரத்தில் இருந்த இந்த ஊசிகளைச் சுழல வைப்பது முடியாத காரியமே அல்லவா?


அந்த முகமூடியை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா பத்து பத்து டிகிரிகளாக அசைத்துக் காட்டினார். இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சிக்கூடத்தில் ஆறு பார்வையாளர்கள் முன் நடந்தது.


ஒரு முறை சுவாமி ராமா எல்மர் மற்றும் அலைஸ் க்ரீனுடன் மதிய உணவருந்திக் கொண்டிருக்கையில் பேட் நோரிஸ் (Pat Norris) என்ற அவர்களுக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருத்தி சுவாமி ராமாவை சந்திக்க ஆர்வம் கொண்டு போன் செய்திருந்தார். எல்மர் க்ரீன் சுவாமி ராமாவிடம் தங்கள் நண்பரான அந்த பெண்மணியைச் சந்திக்க முடியுமா என்று கேட்க சுவாமி ராமா உடனடியாக சம்மதம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பேட் நோரிஸ் வந்து சேர்வதாகத் தெரிவித்தார்.


உணவருந்தி முடிந்ததும் சுவாமி ராமா ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டார். எல்மர் க்ரீன் அவர் கேட்டுக்கொண்டபடியே வெள்ளைத் தாளையும், பென்சிலையும் அவருக்குத் தந்தார். சுவாமி ராமா அந்த வெள்ளைத் தாளில் என்னவோ எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்து அதை மேசையில் கவிழ்த்து வைத்தார்.


பேட் நோரிஸ் வந்தவுடன் அவரிடம் சுவாமி ராமா தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்கச் சொன்னார். திடீரென்று அவர் கேள்வி கேட்கச் சொன்னதால் திகைத்த பேட் நோரிஸ் அவர் மேலும் வற்புறுத்தவே “என் மகனைத் தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்ப வேண்டுமா என்று கேட்டார்.


சுவாமி ராமா இன்னொரு கேள்வி கேட்கச் சொன்னார். பேட் நோரிஸ் “நான் பி.எச்.டி பட்டம் பெற கல்லூரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார். இப்படியே மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு கேள்வி என்று ஏழு கேள்விகளைக் கேட்கச் சொன்ன சுவாமி ராமா பேட் நோரிஸ் ஏழாவது கேள்வி கேட்டவுடன் தான் முன்பே எழுதி வைத்திருந்த தாளை எடுத்து அவரிடம் தந்தார்.


அந்தத் தாளில் சுவாமி ராமா ஏழு கேள்விகளுக்கு பதில் எழுதி இருந்தார். அவற்றில் ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் மிகத் துல்லியமாகவும், ஒரு கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்டதாகவும், ஒரு கேள்விக்கு பதில் சிறிதும் சம்பந்தமில்லாததாகவும் இருந்ததாக பேட் நோரிஸ் தெரிவித்தார்.


ஏழு கேள்விகளில் ஐந்து மட்டுமே மிகச்சரியாக இருப்பினும் கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறியாமலேயே, அவற்றிற்கு முன்கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியமே அல்லவா?

”Beyond Biofeedback” நூலில் சுவாமி ராமா செய்ய முடியும் என்று சொன்ன சில ஆராய்ச்சிகளை தங்களால் செய்ய முடியாமல் போனதற்கு எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.


ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாமல் போன ஆராய்ச்சிகளில் இரண்டு வேறு சில யோகிகளால் செய்து காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் நினைவுகூறலாம். குடா பக்ஸ் கண்களை மூடிக் கொண்டு படித்துக் காட்டியதும், சுவாமி விசுத்தானந்தர் சூரிய சக்தியைக் கொண்டு சில அற்புதங்களைச் செய்து காட்டியதும் முன்பே பார்த்திருக்கிறோமல்லவா?


இனி சுவாமி ராமா மற்றவர்கள் முன்னிலையில் செய்து காட்டிய சில அற்புதங்களைப் பார்ப்போமா?



-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 30.01.2015

1 comment: