சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 29, 2016

இருவேறு உலகம் – 10



க்ரிஷ் காணாமல் போனது பற்றித் துப்பறிய செந்தில்நாதனை முதலமைச்சர் நியமித்ததில் உதய்க்கு ஆரம்பத்தில் சிறிதும் உடன்பாடிருக்கவில்லை. தந்தையிடம் அவன் பொரிந்து தள்ளினான். “அவர் ஏன் அந்த ஆளையே இதில் நுழைக்கிறார். முதல்லயே அந்த ஆள் திமிர் பிடிச்சவன். இப்ப விசாரணைன்னு வந்து பந்தா பண்ணுவான்...

அண்ணன் எதையும் யோசிக்காம செய்ய மாட்டார்டா. யாரை எதுக்கு எப்படிப் பயன்படுத்தணும்னு முடிவெடுக்கறதுல அவர மிஞ்ச ஆள் கிடையாதுடா....”  என்று கமலக்கண்ணன் பொறுமையாகச் சொன்னார். உதய்க்கு அவர் சொன்னதில் இருந்த உண்மையை மறுக்க முடியவில்லை. ராஜதுரை அந்த விஷயத்தில் தனித்திறமை வாய்ந்தவர் என்பதில் அவனுக்கும் சந்தேகமில்லை. அவரது அரசியல் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் செந்தில்நாதனுடன் ஏற்பட்ட பழைய உரசலை மறப்பதும் உதய்க்கு சுலபமாக இல்லை. ஆனால் அந்த மலைக்குப் போய் திரும்பி வந்ததில் இருந்து மனம் படும் அவஸ்தையில் க்ரிஷ் திரும்பி வர செந்தில்நாதன் உதவ முடியும் என்றால் அந்த ஆள் காலில் விழுவது கூடத் தப்பில்லை என்று தோன்ற ஆரம்பித்தது.

தம்பியை உதய் அந்த அளவு நேசித்தான். தம்பியைச் சீண்டியும், கிண்டல் செய்தும், சண்டை போட்டும், சேர்ந்து விளையாடியும் வளர்ந்த நாட்கள் அவன் மனதில் இனிமை மாறாமல் இன்னமும் இருக்கின்றன. சந்தேகம் வரும் போதெல்லாம் நிவர்த்தி செய்த தம்பி, தவறு செய்த போதெல்லாம் சுட்டிக் காட்டிய தம்பி, கலப்படமில்லாத அன்பு காட்டிய தம்பி திடீர் என்று மாயமானதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த மலையடிவாரத்தில் நின்றிருந்த தம்பியின் பைக்கைப் பார்த்த போதும், மலையில் அவன் ஆட்கள் எடுத்து வைத்திருந்த தம்பியின் டெலஸ்கோப்பைக் கையில் வாங்கிக் கொண்ட போதும் அவனால் கண்கள் ஈரமாவதைத் தடுக்க முடியவில்லை.

அவன் பாராளுமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சை எழுதிக் கொடுத்தவன் க்ரிஷ் தான். “சும்மா ஏனோ தானோன்னு பேசக்கூடாது. பேசி அசத்தணும்என்றவன் அண்ணனுக்கு மிக நேர்த்தியான பேச்சை எழுதிக் கொடுத்து அதைப் பல முறை வீட்டிலேயே பேச வைத்தான். பேசும் போது உச்சரிப்புகளிலும், சொல்லும் முறைகளிலும் அங்கங்கே திருத்தம் செய்து திரும்பத் திரும்ப சொல்ல வைத்தான். உதய் பாராளுமன்றத்தில் தன் முதல் பேச்சைப் பேசி முடித்த போது கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் பாராட்டிக் கைதட்டினார்கள். பிரதமர் “யாரந்தப் பையன்?என்று தன் கட்சிக்காரர்களிடம் விசாரித்தார். பாராளுமன்ற ஜாம்பவான்கள் சிலர் நேரடியாக வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். மறுநாள் முக்கியப் பத்திரிக்கைகளில் அவன் புகைப்படத்தோடு செய்தி வந்தது. உதய்க்கு இந்த வகை அங்கீகாரம் புதிது. வீட்டுக்கு வந்தவுடன் தம்பியை  முத்தமிட்டு தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆடினான். கமலக்கண்ணனும், பத்மாவதியும் தங்கள் பிள்ளைகளை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி சந்தோஷத்தால் நிரம்பி இருந்த வீடு இப்போது சுடுகாடு போல் இருக்கிறது. பத்மாவதி சாப்பிடாமல் அழுதபடி இருந்தாள். கமலக்கண்ணன் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். உதய்க்கு அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தால் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. செந்தில்நாதன் தனக்குத் தரப்பட்ட வேலையை எப்போது எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த ஆள் உடனடியாக ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றியது....



ISTRAC யில் இருந்த அந்த ஆராய்ச்சியாளனுக்கு அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த அழைப்பு இரண்டு மணி நேரம் கழித்து தான் வந்தது. மறுபக்கத்துப் பெண்மணி “ஹலோ”  என்றவுடன் அவன் பரபரப்புடன் ஆங்கிலத்தில் கேட்டான். “எங்கே இருக்கீங்க?

அந்தப் பெண்மணியும் ஆங்கிலத்தில் பதிலளித்தார். “புனேயில். இப்ப தான் டைரக்டருடனான மீட்டிங் முடிஞ்சுது. உன் மெசேஜ் பார்த்தேன். நீ சொன்ன அசாதாரண நிகழ்வு நல்லதா, கெட்டதா?....

அவன் உண்மையைச் சொன்னான். “தெரியல.

“ஏனப்படிச் சொல்கிறாய்? என்ன விஷயம்....

அவன் அந்தப் புகைப்படங்களில் பார்த்ததை விவரமாகச் சொன்னான். எல்லாவற்றையும் இடைமறிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அந்தப் பெண்மணி கடைசியில் மெல்லச் சொன்னார். இதை டைரக்டரிடமும் தெரிவிக்கறது தான் நல்லதுன்னு தோணுது.... நான் அவர் கிட்ட பேசிட்டு உன்கிட்ட பேசறேன்....

அவளது மறு அழைப்பு பதினைந்து நிமிடங்களில் வந்தது. “டைரக்டர் அந்தப் படங்களைப் பார்க்கணும்கிறார்

அவன் மெல்லக் கேட்டான். “அவர் பர்சனல் மெயிலுக்கு அனுப்பட்டுமா?

அந்தப் பெண்மணி கோபித்துக் கொண்டார். “முட்டாள் மாதிரி பேசாதே. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த டேட்டாக்கள் வெளியே போகக்கூடாதுங்கறது நம்ம பாலிசி. அதை நாம அவருக்காகக் கூடத் தளர்த்தறத அவரே விரும்பல. ஹேக்கிங் எல்லாம் சர்வசகஜமாய் நடக்கிறது. ISTRAC க்குள்ள இருக்கற பாதுகாப்பு வசதி வெளியே இல்லை. அதனால அவரும் நானும் அடுத்த விமானத்துல பெங்களூர் வர்றோம். என்னேரமானாலும் நீ அங்கேயே இரு. .. பிறகு முடிவு செய்வோம்....

அவன் அவர்களுக்காகக் காத்திருந்தான்.


ஞ்சுத்தலையரிடம் அந்த இளைஞன் சொன்னான். முதல்வர் க்ரிஷ் காணாம போனதை ரகசியமா விசாரிக்க செந்தில்நாதனை நியமிச்சிருக்கார்

அந்தச் செய்தி பஞ்சுத்தலையருக்குக் கசந்தது. ‘இதென்ன கேள்விப்படுகிற எல்லாமே தலைவலி தருவதாகவே இருக்கின்றனவேஎன்று நினைத்துக் கொண்ட அவர் அந்த இளைஞனிடம் சொன்னார். “அந்த செந்தில்நாதன் ஒரு மாதிரி ராங்கி பிடிச்சவனாச்சே.  உதய் கிட்ட கூட எதோ ப்ரச்னை செஞ்சவன் தானே அவன். அவனை எப்படி இந்தக் கேஸ்ல ராஜதுரை ஒட்ட வெச்சான்... கமலக்கண்ணன் எப்படி ஒத்துகிட்டான்?

அவர் சொல்ற பேச்சுக்கு இவர் எப்ப மறுப்பு தெரிவிச்சிருக்கார்....

பஞ்சுத் தலையர் மனதில் ஒரு நப்பாசை எழுந்தது. அதை அவர் வாய்விட்டுச் சொன்னார். செந்தில்நாதனும், உதயும் இந்த விசாரணை நேரத்துல முட்டிகிட்டு அந்த ஆள் விசாரணல இருந்து விலகிட்டா நல்லது. செந்தில்நாதன் ஜாதகமே அப்படித்தான். எல்லா ஆட்சிலயும், எல்லாக் கட்சிலயும் அவனுக்குப் பிரச்சன தான்....

அவனுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. தலையசைத்து விட்டு மன ஆறுதலுக்காக அவரிடம் தன் பழைய சந்தேகத்தையே மறுபடியும் கேட்டான். “இதுல நம்மள அவங்க கண்டுபிடிக்க வாய்ப்பில்ல தானே...

பஞ்சுத்தலையர் சொன்னார். “முதல்ல இதுல நாம என்ன செஞ்சிருக்கோம்கிறது நமக்கே தெரியலையே. என்ன ஆச்சுன்னு தெரிஞ்ச அந்தப் பாழா போன வாடகைக் கொலைகாரன் செத்துத் தொலைஞ்சுட்டான். உன் ஃப்ரண்டு க்ரிஷ் செத்துத் தொலைஞ்சானா, சாகாமயே தொலைஞ்சானாங்கிறது நமக்கே விளங்கல. என்ன தான் நடந்துருக்குன்னு தெரியாம நாமளே குழம்பிகிட்டிருக்கைல அவனுக என்னத்த கண்டுபிடிக்கறது, நாம என்னத்தச் சொல்றது?

அவர் புலம்பியதில் இருந்த உண்மை அவனுக்கு வேடிக்கையாகவும் இருந்தது. கவலையையும் தந்தது. மிகவும் கச்சிதமாகத் தோன்றிய இந்தத் திட்டம் இப்படி வில்லங்கமாக மாறும் என்று யாருக்குத் தெரியும்? க்ரிஷை வேறு விதமாகக் கையாண்டிருக்கலாமோ என்று இப்போது தோன்ற ஆரம்பித்தது.  

அவனைப் போல் கவலையில் தங்காமல் பஞ்சுத்தலையர் அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தவராக செல்போனை எடுத்து ஒருவரிடம் பேச ஆரம்பித்தார். “என்ன சுந்தரம் சௌக்கியமா? ... ஏதோ இருக்கேம்ப்பா.... எனக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.... எனக்கு ஒரு நம்பர்ல இருந்து இன்னைக்கு நியூசன்ஸ் கால் ஒன்னு அடிக்கடி வருது... அந்தக் கால் எங்கே இருந்து வருதுன்னு கண்டுபிடிச்சு சொல்லணும்.... அதிகாரபூர்வமாவே கேக்க முடியும்னாலும் அது வேண்டாம்னு பாக்கறேன்.... அந்த நம்பரச் சொல்றேன் நோட் பண்ணிக்கோ...என்று சொன்னவர் அந்த எண்ணைச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “அடுத்த தடவை அந்த நம்பர்ல இருந்து கால் வர்றப்ப அதை ட்ரேஸ் செஞ்சு சொன்னாய்னா அத முறைப்படி நான் பாத்துக்கறேன்.... நான் சொன்ன நம்பரத் திரும்பச் சொல்லு பார்க்கலாம்....உம்... உம்.... கரெக்ட். தனியா உன்னை கவனிச்சுக்கறேன்... சரியா

பேசி முடித்து செல்போனைக் கீழே வைத்த போது அவருக்கு மனம் சற்று திருப்தி அடைந்திருந்தது. அவரது இந்த நடவடிக்கைக்கு அந்த இளைஞன் பார்வையாலேயே அவருக்கு சபாஷ் போட்டான்.

(தொடரும்)
என்.கணேசன் 


Tuesday, December 27, 2016

கவலை எதற்கு மானிடனே?

கவலைகள் மனதைக் கனமாக அழுத்தும் போதெல்லாம் இந்த உண்மைகளை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். மனதின் கனம் தானாகவே குறையும்.

அன்புடன்
என்.கணேசன்

காணொளியில் காண-



பவர் பாயிண்டில் பார்க்க-


Thursday, December 22, 2016

இருவேறு உலகம் – 9



செந்தில்நாதன் இதற்கு முன் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்தோ, பொது நிகழ்ச்சிகளிலோ தான் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தனியாக முதலமைச்சரை அவர் சந்தித்துப் பேசியதில்லை. அமைச்சர் கமலக்கண்ணனின் மகனுடைய அடியாட்களை அவர் கைது செய்த போது கூட, பதவி உயர்வும், இடமாற்றமும் வழக்கமான அதிகாரபூர்வ வழியில் வந்ததே ஒழிய, முதலமைச்சர் அவரை போனில் கூட அழைத்துப் பேசவில்லை. அதனால் முதலமைச்சரின் அழைப்பு அவரை ஆச்சரியப்படுத்தியது. அழைத்த காரணம் என்னவாக இருக்கும் என்றறிய முடியாமல் குழப்பத்துடன் தான் முதலமைச்சரைச் சந்திக்க அவர் போனார்.

ராஜதுரை அவரை நீண்டநாள் நண்பரை வரவேற்பது போல இன்முகத்துடன் வரவேற்றார். “வாங்க..... உட்காருங்க..... சௌக்கியம் தானே?

மரியாதையோடு வணக்கம் தெரிவித்து விட்டு எதிர் நாற்காலியின் நுனியில் செந்தில்நாதன் அமர்ந்தார். “சௌக்கியம் தான் சார்

ஓரிரு வினாடிகள் அவரைப் புன்னகையோடு பார்த்து விட்டு ராஜதுரை சொன்னார். “எதிர்பாராத விதமா திடீர்னு ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு. என்ன ஆயிருக்கும்னு புரியல. அதை ரகசியமா துப்பறிய வேண்டிய சூழல்.... அந்த வழக்கை நம்பிக்கைக்குரிய நேர்மையான புத்திசாலியான அதிகாரி ஒருத்தர் கிட்ட ஒப்படைக்க வேண்டிய நிலைமை வந்தவுடனே எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது உங்க பேர் தான்....

எடுத்தவுடனே இப்படித் தலையில் ஐஸ்கட்டியாய் வைக்கிறாரே என்று கூச்சப்பட்டாலும் கூட முதல்வர் வாயிலிருந்து இந்தப் புகழுரை வந்தது செந்தில்நாதனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பணிவுடன் “நன்றி சார்என்றார்.

ராஜதுரை நேரடியாக விஷயத்திற்கு வந்தார். க்ரிஷ் காணாமல் போனது பற்றியும், அது சம்பந்தமாக கமலக்கண்ணன் தெரிவித்த தகவல்களையும் சுருக்கமாகச் சொன்ன ராஜதுரை, “இதை நீங்கள் தான் ரகசியமாய் விசாரித்து உண்மையை அறிந்து சொல்ல வேண்டும்என்ற போது செந்தில்நாதன் முகம் சிறுத்துப் போனது. கமலக்கண்ணன் மகனின் அடியாட்களைக் கைது செய்த பின் அவருக்கு ஏற்பட்ட அவமானம் சிறியதல்ல. அந்த சம்பவத்தில் எதிர்பாராமல் பதவி உயர்வு கிடைத்தது ஒன்று தான் முழு அவமானமாக மாறி விடாமல் அவர் தன்மானத்தைச் சிறிதாவது காப்பாற்றியது. திரும்பவும் அந்தக் காட்டான்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில் அவருக்கு உடன்பாடில்லை.

செந்தில்நாதன் மெல்லச் சொன்னார். “சார் முதல்லயே அவங்களுக்கும் எனக்கும் இடையே மனக்கசப்பு இருக்கு.....

ராஜதுரை உடனடியாகச் சொன்னார். “நம்மள மாதிரி பொது ஊழியர்களோட வேலைல மனக்கசப்புகள் தவிர்க்க முடியாதது. அந்த மனக்கசப்புகள் நாம் செய்ய வேண்டிய கடமைக்குத் தடையாகறத நாம அனுமதிக்கக் கூடாது....

செந்தில்நாதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதல்வர் அவரையும்,  தன்னையும் சேர்த்தே பொது ஊழியர் என்று சொன்னதும், அதைத் தொடர்ந்து சொன்னதில் உள்ள நியாயமும் கறாராக மறுக்க உத்தேசித்திருந்தவரைத் தயங்க வைத்தது. அதே சமயத்தில் ஒத்துக் கொள்வதற்கும் அவர் தன்மானம் மறுத்தது. அவர் தயக்கத்துடன் சொன்னார். “அவங்களுக்கும் இந்த விசாரணையை நான் செய்யறதுல உடன்பாடிருக்காது.....

கண்ணன் கிட்ட சொல்லிட்டேன். அவரும் ஒத்துகிட்டாச்சு...என்று சொன்ன ராஜதுரை கமலக்கண்ணனும் இப்படியே தான் ஆரம்பத்தில் தயங்கினார் என்கிற விஷயத்தைச் சொல்லவில்லை.

கண்ணன் என்று அவர் கமலக்கண்ணனைத் தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள செந்தில்நாதனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. என்ன இப்படி தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறாரே என்று நினைத்த செந்தில்நாதன் பணிவான குரலில் சொன்னார். “பிடிக்காதவங்க விசாரிக்கப் போனா ஒத்துழைப்பு இருக்காது, மரியாதை இருக்காது.....

“இதுல உங்க உதவி அவங்களுக்குத் தேவைங்கறதாலயும், உங்கள நியமிச்சது நான்ங்கறதாலயும் அப்படியெல்லாம் நடக்காது. அதனால தயக்கமே தேவையில்லை.... ராஜதுரை ஆணித்தரமாகச் சொன்னார்.

செந்தில்நாதன் பேச்சிழந்து போனார். இனி சொல்ல அவருக்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்படி இருதரப்பினரையும் கட்டாயப்படுத்தி அவரையே முதல்வர் இதில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

ராஜதுரை மென்மையாகச் சொன்னார். “க்ரிஷ்ஷ அவன் பிறந்ததுல இருந்தே பார்த்துகிட்டு வர்றேன்.  ரொம்ப நல்ல பையன்.  ஜீனியஸ். அவன் இப்படி திடீர்னு காணாம போனது கண்ணனை மட்டுமல்ல என்னையே ரொம்ப கவலைப்பட வெச்சுடுச்சு.....

அவர் பேசப் பேச செந்தில்நாதனுக்கு சில மாதங்களுக்கு முன் க்ரிஷ் முதலமைச்சரின் திட்டம் ஒன்றை முட்டாள்தனம் என்று சொன்னதைப் படித்த ஞாபகம் வந்தது. பிறகு அலட்டாமல் முதல்வர் அதைச் சமாளித்த விதமும் நினைவுக்கு வந்தது. அவன் அப்படிச் சொல்லியும் அவன் மீது எந்தக் கோபமும், மனத்தாங்கலும் வைத்திருக்காமல் அவன் பற்றி நல்ல விதமாகவே மனப்பூர்வமாகச் சொன்னதும், அவனைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவதும் அவர் பார்வையில் முதல்வரை மேலே உயர்த்தியது.  

”.....வெளிப்படையான விசாரணை மீடியா கவனத்துக்கு வந்துடும். சர்க்குலேஷனுக்கும், ரேட்டிங்குக்கும் அவங்க செய்யற அலப்பறை தாங்க முடியாது. அதனால தான் ரகசியமா விசாரிக்க தீர்மானிச்சோம்.... க்ரிஷ் காணாம போனது சம்பந்தமா உங்க ஆரம்ப அபிப்பிராயம் என்ன? என்ன ஆயிருக்கும்னு நினைக்கிறீங்க?

செந்தில்நாதன் சில வினாடிகள் யோசித்து விட்டுச் சொன்னார். “இப்போதைக்கு கடத்தப்பட்டிருப்பான்னு தான் நினைக்கத் தோணுது. ஆனா பணத்துக்காக கடத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன்னா அதிகார வர்க்கத்து வீட்டு ஆள்களைப் பொதுவா யாரும் கடத்தறதில்லை. போலீஸ் தீவிரமா செயல்பட்டு, சகல வழிகளையும் கையாண்டு பிடிச்சுடும்னு அவங்களுக்கும் தெரியும்..... ஒன்னா முன்விரோதம் காரணமா இருக்கலாம்... இல்லைன்னா நம்ம கவனத்துக்கு வராத வேறெதாவது காரணம் இருக்கலாம்....

செந்தில்நாதன் தெளிவாகச் சொன்ன விதம் ராஜதுரையை மிகவும் கவர்ந்தது. செந்தில்நாதன் பற்றி பல மேலதிகாரிகள் சொல்லியிருந்த நல்லபிப்பிராயம் மேம்படுத்திச் சொல்லப்பட்டதல்ல என்பது உறுதியாகியது.

“சரி.... நீங்கள் இந்த விசாரணையை உடனடியாக ஆரம்பிக்கலாம். என்ன உதவி வேணும்னாலும் என் செக்ரட்டரி கிட்ட பேசுங்க..... நான் சொன்னபடி உங்க விசாரணை ரகசியமாவே இருக்கட்டும். முக்கியமா மீடியாவுக்கு தகவல் கசியக்கூடாது....  வாழ்த்துக்கள்என்று ராஜதுரை சொன்னார்.  

சந்திப்பு முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்த செந்தில்நாதன் வேறு வழியில்லாமல் எழுந்து வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகும் ராஜதுரை சிறிது நேரம் அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தார். க்ரிஷ் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்ட போதே இதன் பின்னணியில் ஏதோ மிகப்பெரிய சதி இருப்பதாக அவருடைய உள்ளுணர்வு எச்சரித்திருந்தது. அவர் தன் உள்ளுணர்வின் சின்னக்குரலை என்றுமே அலட்சியப்படுத்தியதில்லை. செந்தில்நாதனைப் போன்ற அதிநேர்மையும், அறிவுக்கூர்மையும் உள்ள ஒரு அதிகாரியிடம் இந்த வழக்கை ஒப்படைத்த பின்பு இப்போது தான் அவர் மனம் அமைதியடைந்திருக்கிறது. அவர் உதவியாளர் அடுத்த சந்திப்பு குறித்துச் சொல்ல உள்ளே வர, அவர் கவனம் க்ரிஷ் விவகாரத்திலிருந்து விடை பெற்றது.


பெங்களூருவில் பீன்யா பகுதியில் இயங்கும்  ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC) நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஆராய்ச்சியாளன் வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்பே தன் அலுவலக அறைக்கு வந்து விட்டிருந்தான்.  Astrosat என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் தினந்தோறும் அனுப்பும் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களையும், தகவல்களையும் முதலில் பார்வையிடுபவன் அவன் தான். அதில் அவனுக்கு ஆர்வம் இருக்கும் தகவல்களை மட்டும் அந்த தகவல்குவியலில் இருந்து நீக்கி எடுத்துக் கொள்வான். மீதமிருக்கும் தகவல் குறிப்புகள் மட்டுமே பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு சேமிப்பிற்கும் வினியோகத்திற்கும் போகும்.

இன்று அவன் சீக்கிரமாகவே வந்திருப்பதற்குப் பிரத்தியேக காரணம் இருந்தது. அவன் பரபரப்பில் இருந்தான். அவசர அவசரமாகத் தன் கம்ப்யூட்டரில் வந்து குவிந்திருக்கும் தகவல்களில், குறிப்பிட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் மட்டும் பார்த்தான். ஆரம்பத்தில் மேலோட்டமாகப் பார்த்தான். பின் மறுபடியும் கூர்ந்து பார்த்தான். பார்த்தவனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. கண்களை விரித்து திகைப்புடன் மூன்றாம் முறை பார்த்து விட்டு அவசரமாகத் தன் செல்போனில் ஒரு எண்ணை அழைத்தான். செல்போன் அடித்து ஓய்ந்ததே ஒழிய மறுபக்கத்தில் எடுத்து பேசப்படவில்லை. மூன்று முறை முயன்று சலித்துப் போனவன் செல்போனில் தகவல் அனுப்பினான். “தமிழகத்தில் நேற்றிரவு ஒரு அசாதாரண நிகழ்வு.  உடனே பேசவும்

அனுப்பி விட்டு எப்போது அழைப்பு வரும் என்று பொறுமையில்லாமல் காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்  

Tuesday, December 20, 2016

எதெல்லாம் இறைவன்?


கீதை காட்டும் பாதை 44

கவான் பக்தர்களின் உள்ளத்திலே தங்கி அஞ்ஞான இருளை நீக்கி வழி காட்டுவதாகக் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் மேலும் இறைவனை முழுமையாக அறிந்து கொள்ளவும், வணங்கவும் விருப்பம் கொள்கிறான். உடனே  “நீயே பரம்பொருள், நீயே பரஞ்சோதி, நீயே தூயவன், நீயே உயர்ந்தவன், நீயே நிலைத்தவன்......என்றெல்லாம் துவங்கி, “எந்த விபூதிகளால் (சிறப்புகளால்) இந்த உலகங்களை வியாபித்து நிற்கிறாயோ அந்தத் திவ்ய விபூதிகளை ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி அருள் புரிவாயாகஎன்றும் “பகவானே! பக்தி யோகம் கொண்டவனான நான் எப்பொழுதும் நினைவில் வைத்து உன்னை முழுவதும் எப்படி அறிவேன்? எந்தெந்த உருவங்களில் உன்னை நான் தியானிக்க வேண்டும்? என்றும் கேட்கிறான்.

இறைவனை அவ்வப்போது மறந்து விடுவது தான் மனிதனின் நெடுங்காலப் பிரச்னையாக இருக்கிறது. மீண்டும் இறைவனை நினைவில் கொண்டு வருவதற்குள் அவனுக்கு எத்தனை எத்தனையோ தடமாற்றங்கள், தடுமாற்றங்கள், எத்தனை  எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே இதையெல்லாம் தவிர்க்க எப்போதும் இறைவனை எப்படி நினைவு வைத்திருப்பது, எந்தெந்த உருவங்களில் வணங்குவது என்று அறியும் ஆர்வத்தில் அர்ஜுனன் கேட்டதற்கு ஸ்ரீகிருஷ்ணர், “விவரித்துச் சொன்னால் முடிவே இராது அதனால் முக்கியமானவைகளை மட்டும் சொல்கிறேன்என்று சொல்லி விவரிக்க ஆரம்பிக்கிறார்.

அர்ஜுனா! எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன். எல்லா உயிரினங்களின் முதலும், நடுவும், முடிவும் நானே.

ஜோதிகளுக்குள் ஒளிமிக்க சூரியன் நான், வேதங்களில் நான் சாம வேதம், மலைகளுக்குள் நான் மேருமலை, நீர்நிலைகளில் நான் சமுத்திரம், பொருளுள்ள சொற்களுக்குள் ஓரெழுத்தான பிரணவம் நான், நதிகளில் கங்கை நான், வித்தைகளுக்குள் ஆன்ம வித்தை நான், எழுத்துக்களுள் அகரம் நான், எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் மரணம் நான், பிறக்கப் போகிறவைகளின் பிறப்பு நான், காலங்களில் வசந்தம் நான், மாதங்களில் மார்கழி நான், ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான், வெற்றி நான், முயற்சி நான், வ்ருஷ்ணி குலத்தவர்களுக்குள் வாசுதேவன் நான், பாண்டவர்களுக்குள் அர்ஜுனன் நான், முனிவர்களில் வியாசர் நான், ரகசியங்களுக்குள் மௌனம் நான், ஞானிகளின் ஞானம் நான்

ஒவ்வொன்றிலும் எது சாராம்சமாக இருக்கிறதோ, எது மேன்மையிலும் மேன்மையாக இருக்கிறதோ அதெல்லாம் நானே என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர் இடையே, ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான் என்று சொல்வது பலருக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். அந்தக் காலத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளின் உச்சத்திறமை சூதாட்டத்திலேயே வெளிப்பட்டு வந்தது. இந்தக் காலத்தைப் போல பலப்பல ஏமாற்று வழிகள் அக்காலத்தில் இல்லை. அப்படிப்பட்ட சூதாட்டத்தில் கூட மனிதர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்றால் இறைவனின் ஏதோ ஒரு அம்சம் அதில் இருந்திருக்கிறது, அதுவே ஈர்த்திருக்கிறது என்றாகிறது.

சூதாட்டத்தினால் மனைவியை இழந்து, ராஜ்ஜியம் இழந்து, போர்க்களம் வரை வந்து நின்று கொண்டிருக்கிற அர்ஜுனனிடம் சூதாட்டமே நான் என்று சொன்னதோடு ஸ்ரீகிருஷ்ணர் நிற்கவில்லை. வாசுதேவன் நான், அர்ஜுனன் நான், வியாசர் நான் என்றும் கூறுகிறார். இங்கு கீதோபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறவர் பரம்பொருள் ஆனதாலேயே, வாசுதேவன் நான் என்று சொல்வதும், அர்ஜுனனை நீ என்று சொல்லாமல் மூன்றாவது நபர் போல பெயர் சொல்லிக் குறிப்பிடுவதும் அவசியமாக இருந்திருக்கிறது என்கிற சூட்சுமத்தை உணர வேண்டும்.

அது மட்டுமல்ல குருக்‌ஷேத்திரத்தில் நின்று கொண்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிற அர்ஜுனன், பரம்பொருளாக உச்சத் தியான நிலையிலே உபதேசித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீகிருஷ்ணர், இதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிற வியாசர் எல்லாமே நான் என்றால் இறைவனைத் தவிர, இறைவனின் லீலையைத் தவிர வேறெதுவும் அங்கில்லை என்றல்லவா ஆகிறது.   

இது வரை சொன்னதை எல்லாம் சேர்த்து ரத்தினச்சுருக்கமாகத் தொகுத்துக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தியுடையதோ அதெல்லாம் என் தேஜஸின் ஒரு அம்சத்தால் உண்டானதென்று அறிவாயாக.

எதிலாவது ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது இறைவனின் ஒரு அம்சத்தால் ஏற்பட்டிருக்கிறது என்கிறது கீதை. இறைவனின் அம்சம் இல்லாவிட்டால், அவன் அருள் இல்லா விட்டால் அந்தச் சிறப்பு அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதை மனப்பூர்வமாக உணர்ந்தவனுக்கு கர்வம் கொள்ளக் காரணம் இல்லாமல் போகிறது. எந்தத் துறையிலும், எந்த விஷயத்திலும், நமக்கென்று ஒரு தனித்திறமை இருக்குமானால் அது பரம்பொருளின் அம்சங்களில் ஒரு சிறு துளி நம்மிடம் அமைந்திருக்கிறது என்று பொருள். அதனால் பிரத்தியேகமாய் ஏதாவது சிறப்பு பெற்றிருப்போமானால் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய கர்வம் கொள்ளக்கூடாது.

பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

இவ்வாறு விரிவாக அறிவதன் தேவை தான் என்ன அர்ஜுனா? இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் என் யோகசக்தியின் ஒரு அம்சத்தினால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

ஒரு பிரம்மாண்டத்தை அடிப்படையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு அதன் அம்சங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்வதின் அவசியம் இல்லை. ஒன்றினுடைய சாராம்சம் புரிந்து விட்டால் அதைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பல நேரங்களில் ஆயிரக்கணக்கான தகவல்களை தனக்குள் திணித்துக் கொண்டு போகிறவன், ஒட்டு மொத்த சாராம்சத்தைத் தொலைத்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் என்னுடைய யோகசக்தியின் ஒரு அம்சத்தினாலேயே  தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிய ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஒன்றை அறிந்து கொள்வது போதும் என்று சொல்லி பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தை நிறைவு செய்கிறார்.

பாதை நீளும்....


என்.கணேசன்

Saturday, December 17, 2016

இலக்கை அடைந்தே தீர்வது எப்படி?

எவ்வளவு உயர்ந்த இலக்கானாலும் சரி இந்த 13 உண்மைகளை உணர்ந்து செயல்பட்டால் வெற்றியடைவது நிச்சயம். கனவு நனவாக இந்த உயர்ந்த உண்மைகளை உணருங்கள்....

என்.கணேசன்

காணொளியில் காண-



பவர் பாயிண்டில் பார்க்க-


Thursday, December 15, 2016

இருவேறு உலகம் – 8



செல்போனை வாங்கும் போது அந்த இளைஞனின் கைகளும் நடுங்கின. எச்சிலை விழுங்கி விட்டுப் பேசினான். “ஹலோ

மறுபக்கம் பேசவில்லை. இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. அவன் கைகள் நடுங்க செல்போனை அவரிடம் கொடுத்தான். “கட் பண்ணிட்டான்....

பஞ்சுத்தலையருக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. “யாராயிருக்கும்?என்று அவனைக் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியா விட்டாலும் அவன் தன் யூகங்களைச் சொன்னால் மேற்கொண்டு சிந்தித்து அலச உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்தார். அவன் புத்திசாலி. க்ரிஷின் நண்பனாக இருந்தவன்.... அவர் மனதிலும் பல யூகங்கள் உருவாகி இருந்தன. அவனும் சொன்னால் ஒத்துப் போகிறவற்றைப் பற்றி கூடுதலாக யோசிக்கலாம் என்று நினைத்தார்.

அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “தெரியல. யாரோ நம்ம கூட விளையாடறாங்க....

அவர் விடவில்லை. “க்ரிஷ்ஷா இருக்குமோ?”. அந்தக் கோணத்தை இப்போது அவரால் முற்றிலும் விலக்கி விட முடியவில்லை. அவன் பிணம் இன்னும் கிடைத்து விடவில்லை.....

க்ரிஷ் உயிரோடு இருக்கக்கூடும் என்று அவர் நினைப்பதே அவனுக்கு திகிலை ஏற்படுத்தியது. அவன் முகம் வெளிறியது. சில வினாடிகள் யோசித்து விட்டு உறுதியாகச் சொன்னான். “க்ரிஷ்ஷா இருக்க வழியே இல்லை. உயிரோட இருந்தான்னா முதல்ல அவன் வீட்டுக்குப் போன் பண்ணி சொல்லி இருப்பான்....

“பின்ன வேற யாரா இருக்கும்?

எழுந்த கோபத்தை அவன் அடக்கிக் கொண்டான். “எனக்கென்ன தெரியும்?

தெரியலைன்னு விட்டுடற நெலமையில் நாம இல்லை. யோசி. எதையாவது சொல்லு. பரவாயில்லை..... யோசிக்க யோசிக்க தான் ஏதாவது முடிவுக்கு வர முடியும்.... அவருக்கு நடந்து கொண்டிருப்பது பற்றி ஒரு தெளிவான அபிப்பிராயத்திற்கு வந்தால் மேற்கொண்டு எடுக்க  வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது வசதியாக இருக்கும் என்று தோன்றியது.

அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். க்ரிஷ் இல்லன்னா இதுல யாரோ மூனாவது மனுஷன் சம்பந்தப்படறான்னு அர்த்தம். ஒருவேளை அந்தக் கொலைகாரன் கொலை செஞ்சதப் பாத்த ஆளா கூட இருக்கலாம்...

“அந்த இடத்துக்கு க்ரிஷுக்கு அப்புறம் யாரும் போகலைன்னு என்னோட ஆளே சொன்னானே?

அவன் கேட்டான். “ஒருவேளை க்ரிஷுக்கு முன்னாடியே அந்த ஆள் வேற எதாவது காரணம் வச்சு அங்கே போயிருந்தா? அந்தக் கொலையப் பாத்துட்டு நம்ம வாடகைக் கொலையாளியையே ப்ளாக்மெயில் பண்ணியிருந்தா? அவன் கூட பேரம் ஒத்து வரலைன்னு அவன தீர்த்துக்கட்டிட்டு, வாடகைக் கொலையாளியோட செல்போன எடுத்துகிட்டு உங்க கிட்ட பணத்தைக் கறந்துறலாம்னு உங்களுக்குப் போன் பண்ண ஆரம்பிச்சிருக்கலாம்....

இவன் யூகங்களே வில்லங்கமாக இருக்கிறதே என்று நினைத்தாலும் அந்த யூகத்தை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட அவரால் முடியவில்லை. “அப்படின்னா அதையாவது கேட்டுத் தொலைய வேண்டியது தானே? பேசாமயே பயமுறுத்தறான்

“முதல்லயே பயமுறுத்தி வச்சா, பிறகு கேக்கற தொகைய அதிகப்படுத்தலாம்னு கூட நினைச்சிருக்கலாம்

அவருக்கு அதைக் கேட்கையிலேயே ரத்தம் கொதித்தது.  இதெல்லாம் பொதுவாக அவர் விளையாடும் விளையாட்டு. பயமுறுத்துவதும், அடுத்தவர் பயப்படுவதைப் பார்த்து ரசிப்பதும் அவருக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு. அப்படியெல்லாம் செய்து எத்தனையோ பேருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் அவர். அவரிடமேயா?

அப்படின்னா அவனுக்குக் கேடுகாலம் ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம்...என்று மனக்கொதிப்போடு சொன்னார். என் கிட்ட விளையாடினா என்ன ஆகும்னு அவன் தெரிஞ்சுக்குவான்.....சொல்லும் போதே வார்த்தைகளில் உஷ்ணத்தோடு குரூரமும் தெரிந்தது.

முதல்ல ஆள் யாருன்னு தெரியணுமே”  என்று சொல்லிப் பெருமூச்சு விட்ட அவன் தொடர்ந்து சொன்னான். “முதல்ல அந்த மலை மேல நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா தான் மத்த முடிச்சுகளை அவிழ்க்க முடியும்

பஞ்சுத்தலையர் சொன்னார். “அவங்க என்ன முடிவெடுக்கறாங்க, எப்படி விசாரணை பண்றாங்கன்னு பார்ப்போம்....  அதுல எதாவது தெரிய வரலாம்....

அவன் சந்தேகத்தோடு கேட்டான். “அதுல நம்மள அவங்க கண்டுபிடிக்க வாய்ப்பிருக்காதில்லையா...?

வாய்ப்பே இல்லைஎன்று அவர் வாய் சொன்னாலும், போன் செய்த மனிதன் அவர் மனதில் நெருடலை ஏற்படுத்தி விட்டிருந்தான்....


ராஜதுரையிடம் கமலக்கண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார். ...இல்லண்ணே. எத்தனையோ தடவ வெளியிடங்கள்ல அவன் ஆராய்ச்சில இருந்தப்ப, எதையாவது படிச்சுட்டு இருந்தப்ப அங்கேயே உலகத்தையே மறந்து இருந்ததுண்டு. ஆனா அதுல இருந்து வெளிய வந்தவுடனே முதல்ல அம்மாவுக்கு போன் பண்ணிடுவான். அம்மா வந்துட்டிருக்கேன்னோ, நாளைக்கு தான் வருவேன்னோ பொறுப்பா சொல்லிடுவான். இந்த தடவ போனும் வரல. ஆளும் அங்க இல்லை. அவன் பைக்கும் அங்கயே இருக்கு. அது தான் கவலையா இருக்கு.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல  சொல்லச் சொல்ல அவருக்குக் குரல் உடைந்தது.

அரசியலில் வேகமாக வளர்ச்சியடைந்து, ஆட்சியமைத்து, முதலமைச்சராக வெற்றிகரமாக நிர்வாகம் செய்து கொண்டிருந்த ராஜதுரை அடிப்படையில் மிக எளிமையானவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். முடிந்த வரையில் தெரிந்தவர்களுக்கு உதவக்கூடியவர். அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக மிகச்சிலரைக் கண்டு வைத்திருந்தார். அவர்கள் மீது அவர் பிரத்தியேக அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். அரசியல் வானிலைகளுக்கேற்ப மாறாமல், கிடைக்கும் லாபங்களுக்காக இல்லாமல் உண்மையாகவே அவரை நேசிப்பவர்கள் என்றும், எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் அவரை விட்டு விலகாதவர்கள் என்றும், அவருக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்றும் கணித்திருந்த அவர் அவர்களுக்காக தானும் எதையும் செய்வார்.  அந்த மிகச்சிலரில் கமலக்கண்ணனும் ஒருவர்....  

ராஜதுரை கேட்டார். “உன் பையனுக்கு எதிரிகள் இருக்காங்களா கண்ணன்?

“அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலண்ணே. தோணறதை பட்டுன்னு சொல்லிடுவானே ஒழிய பகைய வளர்க்கற ரகமல்ல அவன்...

உனக்கு எதிரிகள்?

“அரசியல்ல என்னத்த சொல்றதுண்ணேஎன்று கமலக்கண்ணன் யதார்த்தமாய் கேட்ட போது ராஜதுரை மெல்லியதாய் புன்னகை செய்தார்.

பின் யோசித்தபடி சொன்னார். “பத்மா சொன்னபடி அவனை யாராவது கடத்திட்டு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு.... ஆனா உனக்கு யாரும் போன் செய்யலை இல்லையா?

“இல்லைண்ணே

“அப்படின்னா பொறுத்துப் பார்ப்போம்.... வழக்கமான போலீஸ் விசாரணைன்னா மீடியா கவனத்துக்குக் கண்டிப்பா வந்துடும்.... மீடியா நமக்கு உபகாரமா இருக்கறத விட இந்த மாதிரி நேரங்கள்ல இடைஞ்சலா தான் இருக்கும். அதனால இப்போதைக்கு ஒரு திறமையான தனி போலீஸ் அதிகாரிய ரகசியமா துப்பு துலக்கச் சொல்லலாம்... என்ன சொல்ற கண்ணன்...?

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யலாம்ணே.....”

“இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் செந்தில்நாதன் பொருத்தமான ஆளுஎன்று ராஜதுரை சொன்னபோது கமலக்கண்ணன் தர்மசங்கடத்துடன் நெளிந்தார். சென்ற ஆண்டு தான் அவருக்கும் செந்தில்நாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. உதயின் அடியாட்கள் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ள அவர்களை செந்தில்நாதன் கைது செய்திருந்தார். உடனே உதய் செந்தில்நாதனிடம் போனில் பேசி அவர்களை விடுவிக்கச் சொன்னான். நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர் போன அவர் அது முடியாது என்று சொல்லவே, அவன் தன் எம்.பி பதவி போதவில்லையோ என்று நினைத்து தன் தந்தை தான் பேசச் சொன்னார் என்று சொல்லிப் பார்த்தான்.

“உங்கப்பா என்ன சட்டத்தை விடப் பெரிய ஆளா?என்று அவர் காட்டமாகக் கேட்ட போது உதய் ஆத்திரமடைந்து கமலக்கண்ணனிடம் சொல்ல கமலக்கண்ணன் ராஜதுரையைத் தொடர்பு கொண்டார். ராஜதுரை செந்தில்நாதனுக்குப் பதவி உயர்வு தந்து வேறு துறைக்கு உடனடியாக மாற்றினார். மறுநாளே உதயின் ஆட்கள் வழக்கில்லாமல் வெளியே வந்தார்கள்.

தன் உத்தேசம் நிறைவேறிய போதும் செந்தில்நாதனுக்குப் பதவி உயர்வு தந்தது உதய்க்கு பெரும் அதிருப்தியைத் தந்தது. “உங்கப்பா என்ன சட்டத்தை விடப் பெரிய ஆளா?என்று கேட்ட ஆளுக்குப் பதவி உயர்வா என்று கொதித்த அவன் உடனடியாக ராஜதுரையிடம் போனில் பேசினான். என்ன அங்கிள். அப்படி திமிரா பேசின ஆளுக்குப் பதவி உயர்வா?

“நேர்மையும் திறமையும் இருக்கற அதிகாரிங்க நிர்வாகத்தோட அஸ்திவாரம் மாதிரி. அவங்களை ஒரேயடியா அவமானப்படுத்தி ஒதுக்கிட்டா நிர்வாகம் ஆட்டம் கண்டுடும். உன் வேலை ஆயிடுச்சுல்ல. அதோட விட்டுடு உதய்என்று ராஜதுரை உறுதியாகச் சொல்லவே உதய்க்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.  ஆனால் தந்தையிடம் இரண்டு மூன்று நாட்கள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அதே அதிகாரியிடம் இந்த ரகசியத் துப்பறியும் வேலையை ஒப்படைப்பதா என்று தர்மசங்கடப்பட்ட கமலக்கண்ணன் தயக்கத்துடன் சொன்னார். “அண்ணே அந்த ஆளுக்கும் எங்களுக்கும் இடையில் போன வருஷம் தான் ப்ரச்ன வந்தது. இப்ப அவர் கிட்டயே...

“அதெல்லாம் அரசியல்ல சகஜம் தான். நமக்கு இப்ப வேண்டியது உச்சத் திறமை இருக்கற ஆளு. அவர் அதுல பொருந்தறார். அவ்வளவு தான்.

“அண்ணே அவர் ஒத்துக்குவாரா?கமலக்கண்ணன் அதே தயக்கத்துடன் கேட்டார்.

“அவர் அரசு ஊழியர். அரசாங்கம் சொல்றதைக் கேட்பார்என்று அது சம்பந்தமான பேச்சிற்கு ராஜதுரை முற்றுப்புள்ளி வைத்தார்.

(தொடரும்).

என்.கணேசன்