சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 80


திடீரென்று மறைவில் இருந்து வந்து எதிரில் நின்று தன் பெயரை ஒரு ஆள் அழைத்ததும் வருண் திடுக்கிட்டான். ஆள் முகம் அரையிருட்டில் சரியாகத் தெரியவில்லை. குரல் மட்டும் பரிச்சயமான குரலாய் தோன்றியது. ஒரு காலத்தில் அதிகமாய் கேட்டுக் கொண்டிருந்த குரல்.....

“யாரது?” வருண் இதயம் படபடத்தது.

“அப்பா....டா” என்று சொன்னபடியே சேகர் மேலும் அதிக வெளிச்சத்திற்கு வந்தான்.

வருணின் இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. பேய் இல்லை என்று அறிவியல் பேசிக் கொண்டிருந்தவன் இப்படி ’அந்த ஆளின்’ ஆவியை ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டி வரும் என்று கற்பனை கூடக் கண்டிருக்கவில்லை. பாட்டி அவனது சிறுவயதில் அடிக்கடி சொல்வாள். ’கந்தர் சஷ்டி கவசம் சொன்னால் எந்தப்பேய் பிசாசும் நெருங்காது’. அது நினைவுக்கு வர மனம் தானாகச் சொல்ல ஆரம்பித்தது. “துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்....”

வருண் அங்கிருந்து ஓடிப்போக நினைத்தான். ஆனால் கால்கள் நகர மறுத்தன. சத்தமாகவே அவன் கந்தர் ச்ஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தான். “சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்....”

சேகருக்கு மகன் தன்னைப் பேய் என்று நினைத்துக் கொண்டு விட்டான் என்பது அப்போது தான் புரிந்தது.

பிள்ளையை தைரியமான ஆண்மகனாக வளர்ப்பதை விட்டு விட்டு பயந்தாங்கொல்லியாய் வளர்த்திருக்கிறாள் சஹானா என்று மனதிற்குள் நகைத்துக் கொண்ட அவன் வாய் விட்டு மகனுக்குத் தைரியம் சொன்னான். “வருண். நான் பேய் அல்ல. உயிரோடிருக்கும் அப்பா தான். நான் சாகவில்லை”

வருண் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் ஒரு கணம் அதிர்ச்சியுடன் சேகரைப் பார்த்தான். இந்த ஆள் உயிரோடிருப்பதற்குப் பதில் அந்த ஆவியே பரவாயில்லை என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. எதிரே இருந்த ஆளை மிகவும் கூர்மையாகப் பார்த்தான். தலைமுடி குறைந்து வழுக்கை விழ ஆரம்பித்ததைத் தவிர தோற்றத்தில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. அப்படி என்றால் இந்த ஆள் மருத்துவமனையில் நடந்த தீவிபத்தில் கருகிச் சாகவில்லையா?... இவன் மூலமாகத் தான் வந்தனாவுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்திருக்க வேண்டும்.... அவன் பயம் குறைய ஆரம்பித்து ஆத்திரம் அதிகமாகியது. அக்‌ஷய் தான் அவனுடைய அப்பா.... அந்த இடத்திற்கு இந்தப் பொருத்தமில்லாத ஆள் என்றுமே வர முடியாது. வருண் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அத்தனை ஆத்திரத்தையும் குவித்து “ஏன் சாகவில்லை?” வருண் என்று அலட்சியமாகக் கேட்டான்.

சேகருக்குத் தன் காதில் விழுந்தது சரியாக இருக்காது என்று தோன்றியது. யாரும் இப்படிக் கேட்க மாட்டார்கள். வருண் அதிர்ச்சியில் ஏதோ கேட்க நினைத்து எதையோ கேட்கிறான். சிரித்துக் கொண்டே சேகர் கேட்டான். “என்ன கேட்டாய்?”

சிரிக்காமல் வருண் தன் கேள்வியை மறுபடி கேட்டான். “ஏன் சாகவில்லை.”

”அன்று தீ விபத்தில் சாகாமல் எப்படி தப்பித்தீர்கள் என்று தானே கேட்கிறாய்” என்று கேட்ட சேகர் சாமர்த்தியமாகச் சொன்னான். “அது ஒரு பெரிய கதை.....” அந்த ரகசியத்தை அவன் இப்போது மகனிடம் சொல்ல விரும்பவில்லை.

வருண் சொன்னான். “கதை எல்லாம் எனக்கு வேண்டாம். என்றாவது போலீஸ் உன்னைத் தேடி வரும் போது அவர்களே விவரமாய் கேட்டுக் கொள்வார்கள். அன்றைக்கு ஏன் போனாய்? இன்றைக்கு ஏன் வந்திருக்கிறாய்? அதை மட்டும் சுருக்கமாய் சொல் போதும்....”

’கிராதகி மகனையும் தன்னைப் போலவே அகங்காரமாய் வளர்த்திருக்கிறாள். போலீஸ் தேடி வரும் என்று பயமுறுத்தி ஒருமையில் கறாராய் வேறு பேசுகிறானே...’ என்று மனதினுள் சஹானாவையும் மகனையும் சேர்ந்து கரித்துக் கொட்டிய சேகர் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொன்னான். “உனக்கு நம்பக் கஷ்டமாக இருக்கலாம். அன்றைக்கு உன் அம்மாவின் சித்திரவதை தாங்க முடியாமல் போனேன். ஆனால் உன்னை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை. பாசம் இழுத்ததால் உன்னைத் தேடி அலைந்து இன்றைக்கு வந்திருக்கிறேன்....”

“என் அம்மாவா, சித்திரவதையா?....” வருணின் குரலில் உஷ்ணம் தெரிந்தது.

சேகர் மிகவும் பொறுமையுடன் புரிய வைக்க முயலும் தொனியில் சொன்னான். “உன் அம்மா உன்னிடம் காட்டும் முகம் வேறு, என்னிடம் காட்டி இருந்த முகம் வேறு.... அந்தக் கேவலங்களை எல்லாம் சொல்ல எனக்கே வாய் கூசுகிறது.”

வாய் கூசுகிறது என்று சொல்லிக் கொண்டே கூசாமல் பேசுகிற அந்த ஆளைப் பார்க்கவே வருணுக்கு அருவருப்பாக இருந்தது. வார்த்தைகளை வளர்த்து விவாதித்துக் கொண்டிருக்காமல் இந்த ஆளை சீக்கிரமாய் கத்தரித்து விலகி விட வேண்டும் என்று எண்ணிய அவன் “சரி என்ன வேண்டும் சொல். பணம் ஏதாவது வேண்டுமா?”

சேகருக்கு அவன் அப்படிக் கேட்டது பெருத்த அவமானமாக இருந்தது. எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான். ”வருண். பணம் என்னிடம் லட்சக்கணக்கில் இருக்கிறது. உன் வளர்ப்பு அப்பன் வாங்கிக் கொடுத்திருக்கும் பழைய பைக்கை நீ ஓட்டிச் செல்வதைப் பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. உனக்குப் புதிய மாடல் கார்களில் எதை வேண்டுமானாலும் வாங்கித் தர என்னால் முடியும். எந்தக் கார் வேண்டும் கேள்......!”

“எனக்கு எதுவும் வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் என்று இப்படி வந்து தொந்தரவு செய்கிறாய் அதைச் சொல்....”

“மகனே எனக்கு நீ மட்டும் தான் வேண்டும்....” சேகர் முன்பே ஒத்திகை பார்த்து வைத்திருந்த உடைந்த குரலில் சோகமாகச் சொன்னான்.

வருண் உடல் கோப மிகுதியில் லேசாக நடுங்கியது. கடும் வெறுப்புடன் சொன்னான். “எங்களுக்கு உன்னிடம் நல்லதாக நினைக்க இருந்த ஒரே விஷயம் நீ செத்தது தான். இப்போது அதுவும் பொய் என்றாகி விட்டது... நாங்கள் என்றைக்கோ உனக்குத் தலைமுழுகியாகி விட்டது. இப்போது உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. என் அப்பா ஊரில் இருந்து வருவதற்கு முன் ஓடிப் போய் விடு.... அவர் கையில் நீ சிக்கினால் சாவே பரவாயில்லை என்று நினைக்க வேண்டி வரும்.... சத்தியமாய் தான் சொல்கிறேன்....

சொன்னவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. அங்கிருந்து வீடு நோக்கி ஓட ஆரம்பித்தான். சேகர் முகம் சிவக்க அவனை வன்மத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.... வருண் எவனோ ஒருவனை என் அப்பா என்று பெருமையுடன் அவனிடமே சொன்னது தான் அவனுக்கு எல்லாவற்றையும் விட அதிக அவமானத்தைத் தந்தது. அந்தக் குடும்பத்திற்கே பெரிதாக வலிக்கிற மாதிரி ஏதாவது செய்யாமல் கோயமுத்தூரை விட்டுப் போக மாட்டேன் என்று அவன் உறுதி பூண்டான்.


ன்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவு வரையும் அக்‌ஷய் பைனாகுலர் வழியாக பக்கத்து மலையான நேபாள எல்லையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.  அந்த மலை உச்சி எல்லையில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. சரியாக இருபது நிமிடத்திற்கு ஒரு முறை துப்பாக்கி ஏந்திய எல்லைக்காவல் படை வீரர்களில் ஒருவன், அக்‌ஷய் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து கண்காணித்து விட்டுப் போனான். இரவு பத்து மணிக்கு மேல் கண்காணிப்பு வீரன் வருவது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாக மாறியது.   

பகலில் அவன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் தியானத்திலும், சிறிது நேரம் ஆட்டுக்குட்டிகளுடன் ஆன விளையாட்டிலும் கழித்த மைத்ரேயன் பின் அக்‌ஷயிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“உங்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்.?

அக்‌ஷயை அவன் திடீர்க் கேள்வி ஆச்சரியப்படுத்தியது. முன்பு கௌதம்  பற்றி அவன் கேட்ட போது அக்‌ஷய் பிடிகொடுத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. அதன் பின் இப்போது மறுபடியும் மைத்ரேயன் அவன் குடும்பம் பற்றிக் கேட்கிறான். பைனாகுலரில் இருந்து கண்ணை எடுக்காமலேயே பதில் சொன்னான். “என் பெரியம்மா, என் மனைவி, என் இரண்டு மகன்கள்...

உங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்?

பெரியவன் மருத்துவப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். சிறியவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

“உங்கள் பிள்ளைகள் பெயர்கள் என்ன?

“பெரியவன் வருண். சின்னவன் கௌதம்....

உங்கள் சின்னப் பையன் எப்படி?

அக்‌ஷய்க்கு மகனின் நினைவு சின்ன புன்முறுவலை வரவழைத்தது. “என்னேரமும் விளையாட்டு.... விளையாட்டு.... விளையாட்டு....! விளையாடும் நேரங்களில் அவனுக்குப் பசியே தெரியாது. படிக்க ஆரம்பிக்கிற நேரங்களில் தான் அவனுக்கு அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். ஏதாவது சாப்பிடக் கேட்டுக் கொண்டே இருப்பான்.....

சொல்லி விட்டு பார்வையை பைனாகுலரிலிருந்து திருப்பி மைத்ரேயனை அக்‌ஷய் பார்த்தான். மைத்ரேயன் அவன் சொன்னதை வைத்து மனதில் கற்பனை செய்து கௌதமைப் பார்க்கிறானா, இல்லை நேராகவே ஞான திருஷ்டியில்  அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று தெரியவில்லை. ஆனால் மைத்ரேயன் முகத்தில் அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே புன்னகை தவழ்ந்தது.  

“அங்கு போனவுடன் எனக்கு அவனுடன் விளையாட வேண்டும்என்று மைத்ரேயன் சொன்ன போது அக்‌ஷய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இவனை அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக நினைத்து விட்டானா என்ன?

“உன்னை என் வீட்டுக்கு அழைத்துப் போக ஆசான் விட மாட்டார்....என்று அக்‌ஷய் மெல்லச் சொன்னான். மைத்ரேயனை எந்த மடாலயத்துக்கு அழைத்துப் போக ஆசான் நிச்சயித்திருக்கிறாரோ?

மைத்ரேயன் சொன்னான். “யார் எங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் நிச்சயிப்பதில்லை....



ம்யே மடாலயம்.

ஓட்டமும் நடையுமாய் வந்து தன்னை எழுப்பிய பிரதான சீடனை தலைமை பிக்கு தூக்கக்கலக்கத்துடனும் கேள்விக்குறியுடனும் பார்த்தார்.

பிரதான சீடன் சொன்னான். “கோங்காங் மண்டபத்தில் இன்று இரவுக் கண்காணிப்பு இல்லை....  முக்காடு போட்டுக் கொண்டு இரண்டு பேர் மண்டபத்திற்குள்  நுழைவதை இப்போது தான் பார்த்தேன்.....

தலைமை பிக்கு கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டே கால். லீ க்யாங் எதிரியானாலும் கோங்காங் மண்டபத்தை இரவு வேளையில் வேவு பார்க்க ஏற்பாடு செய்திருந்தது பெரிய உபகாரமாகவே அவர்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கண்காணிப்பு இல்லாமல் போனது தீய சக்திகளின் பிடி இறுக ஆரம்பிப்பதற்கு அறிகுறி தான் என்பதை உணர்ந்த அவர் பெருமூச்சு விட்டார். ‘அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் இயங்க ஆரம்பித்து விட்டார்கள்!

 (தொடரும்)
என்.கணேசன்


7 comments:

  1. வருண் இடத்தில் நானே இருந்தது போலிருந்தது.....செம....

    ReplyDelete
  2. மதிவதனிJanuary 7, 2016 at 7:05 PM

    அருமை சார். படிக்க ஆரம்பித்தால் தொடரும் என்ற வார்த்தை வரும் வரை முழுவதுமாய் மூழ்கி விடும்படியாக கதைக்களமும் எழுத்து நடையும் வசப்படுத்தி விடுகிறது.

    ReplyDelete
  3. சுந்தர்January 7, 2016 at 7:22 PM

    ஒவ்வொரு கேரக்டரையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது உங்கள் எழுத்து. அவர்கள் எண்ண ஓட்டமும் கச்சிதமாய் தந்திருக்கிறீர்கள். அடுத்த வியாழன் சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வாரமும. விறுவிறுப்பு. கூடி கொண்டே போகிறது .

    ReplyDelete
  5. அருமை, கதை அட்டகாசமாக போகிறது.

    ReplyDelete