சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 14, 2016

முக்காலமும் அறிந்த ஞானக்குழந்தை!

மகாசக்தி மனிதர்கள்-52

மிழகம் ஈன்றெடுத்த தவயோகிகளில் மிக முக்கியமானவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள். சாட்சாத் அருணாச்சலேஸ்வரரே மனித வடிவில் பிறவி எடுத்து வந்ததாகப் பலரும் அவரை நம்பி வணங்கினார்கள். இன்றும் அவர் ஜீவசமாதியில் ஆன்மிக அலைகள் பெரும் சக்தியுடன் மையம் கொண்டிருப்பதாக பல பக்தர்கள் அனுபவித்து உணர்ந்து குறிப்பிடுகிறார்கள். அவர் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எந்த விதத்திலும் சாதாரணமாக இருந்து விடாமல் அற்புதங்களின் அணிவகுப்பாகவே இருந்திருக்கிறது. சுமார் 35 ஆண்டு காலமே வாழ்ந்த அந்த யோகியின் வாழ்க்கையையும், அதில் நடந்த சுவாரசியமான அற்புதங்கள் சிலவற்றையும் பார்ப்போம்!  

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சைவ சமயத்தில் மிகுந்த பற்று கொண்ட சிவசிதம்பரம் பிள்ளை, மீனாம்பிகை என்ற தம்பதியர் புத்திர பாக்கியம் இல்லாமல் மனக்கிலேசத்துடன் திருச்சிக்கு அருகில் கீழாலத்தூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார்கள். சில காலம் கழித்து அவர்கள் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கி விரதம் இருந்த பிறகு அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் (சுமார் கி.பி 1800 ஆம் ஆண்டு) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அருணாச்சலம் என்று பெயர் வைத்தார்கள். அடுத்த வருடமே இன்னொரு ஆண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு நமசிவாயம் என்ற பெயர் வைத்து இரண்டு குழந்தைகளையும் பாசத்துடன் வளர்த்தார்கள்.

இளைய பிள்ளை நமசிவாயம் மற்ற பிள்ளைகள் போலவே இருந்து வளர மூத்த பிள்ளை அருணாச்சலம் மட்டும் வித்தியாசமாக இருந்தான். குழந்தையாக இருக்கும் போதே அருணாச்சலம் பசிக்காக அழவில்லை. தாய் பால் தந்தால் குடித்த அந்தக் குழந்தை, தரா விட்டால் அமைதியாகவே படுத்துக் கிடந்தது. புதிய பொருள்களை அதிசயத்துடன் பார்க்கவோ, விளையாடவோ செய்யாமல், எதைக் கண்டும் பயந்தும் போகாமல், எப்போதும் மோன நிலையிலேயே இருந்தது. எழுந்து நடமாட ஆரம்பிக்கும் பருவம் வந்தவுடனே பத்மாசனத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தது. பேச்சு வர வேண்டிய வயதிலும் அது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மந்த புத்தி உள்ள தங்கள் மூத்த குழந்தை ஊமையாகவும் இருக்கிறதே என்று அந்தப் பெற்றோர் வருந்தினார்கள். மூத்த குழந்தையின் மழலைச் சொல் கூடக் கேட்க முடியாததைத் தங்களின் பெரிய துர்ப்பாக்கியமாகவே அவர்கள் கருதினார்கள். 

மகனின் இந்த நிலைக்குத் தங்கள் ஊழ்வினையே காரணமாக இருக்க வேண்டும் என்று நம்பிய அந்தப் பெற்றோர் அதைப் போக்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று புரியாமல் தவித்தார்கள். அருணாச்சலத்தின் வயது ஐந்தைக் கடந்த போது கீழாலத்தூருக்கு ஒரு சிவனடியார் வந்தார். சிவசிதம்பரம் பிள்ளை அந்தச் சிவனடியாரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரை வணங்கி வரவேற்று தங்கள் மூத்த மகனைப் பற்றிச் சொல்லி சிவசிதம்பரம் பிள்ளையும், மீனாம்பிகையும் வருத்தப்பட்டார்கள். எங்கள் மகனை எப்படியாவது பேச வைத்து நாங்கள் காதாரக் கேட்டு மகிழ எங்களுக்கு அருள் புரியுங்கள் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.  

சிவனடியார் உங்கள் மகனைக் காட்டுங்கள் என்று சொன்னார். உள் அறையில் கண்களை மூடிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அருணாச்சலத்தைப் பெற்றோர் சிவனடியாருக்குக் காட்டினார்கள். முதல் பார்வையிலேயே அருணாச்சலம் ஊமை அல்ல என்பதைச் சிவனடியார் கண்டு கொண்டார். அவர் சிவசிதம்பரம் பிள்ளையிடம் “உங்கள் மகன் ஊமை அல்ல. அவனிடம் நீங்கள் தாராளமாகப் பேசலாம். ஏதாவது பேசுங்கள்என்று சொன்னார்.

சிவசிதம்பரம் பிள்ளை தன் மகனிடம் கேட்டார். “மகனே, கண்களை மூடி நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

கேள்வி கேட்டாரே ஒழிய அவர் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இத்தனை நாட்களாய் ஒரு வார்த்தை கூடப் பேசாத தன் மூத்த பிள்ளை திடீரென்று பேசுவான் என்கிற நம்பிக்கை அவருக்கு உடனடியாக வந்து விடவில்லை. ஆனால் அதிசயமாக அவர் மகன் தெளிவாகப் பதில் சொன்னான். “நான் சும்மா இருக்கின்றேன்

எந்தக் குழந்தையும் முதன் முதலில் சொன்ன வாக்கியம் அதுவாக இருக்க முடியாது. அந்தத் தந்தை திகைத்துப் போனார். சும்மா இருக்க முடிவது எல்லோருக்கும் முடிகிற காரியமா என்ன? அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல என்பதைப் புரிந்து கொண்ட சிவனடியார் அடுத்த கேள்வியைக் கேட்டார். சும்மா இருக்கிற நீ யார்?

சிவனடியாரின் மெய்ஞானக் கேள்விக்குத் தத்துவார்த்தமாகவே பதில் வந்தது. நீரே நான். நானே நீர்

அத்வைத சித்தாந்தத்தின் உட்கருத்தாகவே பதில் வந்ததும் “சத்தியம், சத்தியம்என்ற சிவனடியார் அங்கிருந்து மறைந்தார். சிவசிதம்பரம் பிள்ளையும், மீனாம்பிகையும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அருணாச்சலமோ இன்னும் கண்களை மூடியபடியே அமர்ந்திருந்தான். சிவனடியாராக அங்கு வந்து மகன் ஊமை அல்ல என்பதை உணர்த்தி விட்டு மறைந்தது சாட்சாத் அருணாச்சலேஸ்வரரே என்று நினைத்த பெற்றோருக்கு நீரே நான். நானே நீர்என்று பதில் அளித்த தங்கள் மகன் யாராக இருக்கும் என்ற சந்தேகம் வரவில்லை. பெரும் பாக்கியசாலிகளாகத் தங்களை உணர்ந்தார்கள் அவர்கள்.

அந்த நாளுக்குப் பிறகு அருணாச்சலம் மிக அவசியமான நேரங்களில் மட்டும் ரத்தினச்சுருக்கமாகப் பேசினான். ஒரு முறை சிவசிதம்பரம் பிள்ளை வெளியூர் செல்லக் கிளம்பினார். அவரிடம் அருணாச்சலம் சொன்னான். “உங்களைச் சந்திக்க உறவினர் இருவர் இன்னும் பத்து நாழிகையில் வரவிருக்கிறார்கள்”  (ஒரு நாழிகை என்பது 24 நிமிட காலம். அக்காலத்தில் நாழிகை அளவில் தான் காலம் கணக்கிடப்பட்டது. பத்து நாழிகை என்பது நான்கு மணி நேரம்).

மகன் அப்படிச் சொன்னதும் சிவசிதம்பரம் பிள்ளை வெளியூர் செல்வதைத் தள்ளிப்போட்டு அன்று வீட்டிலேயே தங்கினார். அருணாச்சலம் சொன்னது போல் நான்கு மணி நேரத்தில் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வந்தனர்.    

அதே போல் இன்னொரு நாள் ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவசிதம்பரம் பிள்ளை சிதம்பரம் போகக் கிளம்பிய போதும் அருணாச்சலம் சொன்னான். “நாளை காலை இருபது நாழிகை அளவில் உங்கள் தாயார் இறக்கப் போகிறார்கள்”.

சிவசிதம்பரம் பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அவருடைய தாயார் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். அப்படி இருக்கையில் மகன் இப்படிச் சொல்கிறானே என்று எண்ணிய அவர் “என் தாய் நலமாகத்தானே இருக்கிறார்கள். பின் எப்படி இறப்பார்?என்று கேட்டார்.

“புரை ஏறி விக்கல் வந்து இறப்பார்என்று அருணாச்சலம் சொன்னான்.

மறு நாள் காலை எட்டு மணியளவில் சிவசிதம்பரம் பிள்ளையின் தாயார் அருணாச்சலம் சொன்னது போலவே இறந்து போனார். இது போன்ற நிகழ்வுகளால் மூத்த மகனை முக்காலமும் உணர்ந்த தெய்வப்பிறவியாகவே  பெற்றோர் மதிக்கத் தொடங்கினார்கள். இளைய மகனைப் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அருணாச்சலம் தந்தையிடம் கேட்டான். “ஏன் என்னை மட்டும் பள்ளியில் தாங்கள் சேர்க்கவில்லை

தந்தை சொன்னார். “எல்லாம் அறிந்த உனக்கு பள்ளியில் படித்துத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று நினைத்து விட்டு விட்டேன். நீ விருப்பப்பட்டால் உன்னையும் பள்ளியில் சேர்த்து விடுகிறேன்

அவர் சொன்னபடியே அருணாச்சலத்தையும், நமசிவாயத்தையும் பள்ளியில் சேர்த்து விட்டார். அருணாச்சலமும் தம்பியுடன் பள்ளி செல்லத் தொடங்கினான். பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடாமல் கையில் சுவடிகளை வைத்துப் பார்த்துக் கொண்டோ, அல்லது சுவடிகளை கட்டி எதிரில் வைத்து விட்டு கண்மூடிக் கொண்டோ அமர்ந்திருப்பது அருணாச்சலத்தின் வாடிக்கையாக இருந்தது.

அப்படி கண்மூடி அமர்ந்திருக்கையில் பள்ளி ஆசிரியர்  அருணாச்சலத்திடம் கேட்டார். “தம்பி கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறாயே, படிக்க வேண்டாமோ?

“படித்தாயிற்றுஎன்று பதில் அளித்தான் அருணாச்சலம்.

ஆசிரியருக்கு சந்தேகம். அவர் “அப்படியானால் படித்ததைச் சொல் பார்ப்போம்.என்று சொல்ல அருணாச்சலம் சுவடியில் இருந்ததை அப்படியே பிழையில்லாமல் ஒப்பிக்க ஆரம்பித்தான். வியந்து போன ஆசிரியர் இன்னொரு சுவடி எடுத்துப் படிக்கத் தந்தார். அதை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு அருணாச்சலம் கீழே வைத்து விட்டான்.

திகைப்படைந்த ஆசிரியர் “புதிய பாடமும் படித்தாயிற்றா?என்று கேட்க அருணாச்சலம் படித்தாயிற்று என்று பதிலளித்தான். ஆசிரியர் சொல்லச் சொன்ன போது அருணாச்சலம் அதையும் அப்படியே ஒப்பிக்க ஆசிரியர் பிரமித்துப் போனார். அவருக்கும் அருணாச்சலம் சாதாரண பிள்ளை அல்ல என்பது புரிய ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 14.08.2015

1 comment: