சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 24, 2016

இதில் எந்தக் கஷ்டம் வேண்டும்? தீர்மானியுங்கள்!


வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இரண்டு கஷ்டங்களில் ஒன்றை அனுபவித்தே ஆக வேண்டும். ஒன்று நல்ல விளைவுகளுக்கான முறையான, ஒரு காலத்திய தொடர் உழைப்பு. மற்றது சோம்பலும் ஒழுங்கீனமுமான கட்டுப்பாடில்லாத வாழ்க்கை மூலம் பிற்காலத்தில் பெறும் கஷ்டங்கள். இந்த இரண்டையுமே தவிர்த்து சுகமாக வாழ்ந்து முடிக்கும் பாக்கியத்தை மனிதன் இன்னமும் பெற்று விடவில்லை.

இந்த இரண்டில் முதலாவது கஷ்டம் சிறியது. இரண்டாவது கஷ்டமோ பல மடங்கு கொடியது.

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியத்திற்கான உணவுக்கட்டுப்பாடும் கஷ்டம் தான். உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதும், நாக்கு ருசியைக் கட்டுப்படுத்துவதும் சுகமாக விஷயமில்லை தான். ஆனால் இந்தக் கஷ்டத்தைத் தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழந்து நோய்வாய்ப்படும் பெருங்கஷ்டத்தை நீண்ட காலம் அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் வயோதிகம் கொடுமையான காலக்கட்டமாகி விடும்.  முதலாமவன் நல்ல ஆரோக்கியத்தோடு பல சந்தோஷங்களை இழக்காமல் வாழும் போது, இரண்டாமவன் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்து உடல் உபாதைகளால் தினமும் கஷ்டப்படுவதை நாம் காணலாம்.

ஒரு நல்ல நிலையை எட்டும் வரை இளமையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதும், சோம்பலில்லாமல் புத்திசாலித்தனமாக உழைப்பதும் கஷ்டம் தான். ஆனால் அப்படி ஒருவன் கட்டுப்பாடாக வாழ்ந்து, கடும் உழைப்பு உழைத்துக் கொண்டிருக்கும் போது சோம்பி இருந்தும், கேளிக்கைகளிலும், வீண் பேச்சிலும், சுற்றித்திரிதலிலும் வேறொருவன் கழித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுமார் பத்து வருடங்கள் உருண்டு சென்ற பின் அவர்கள் இருவர் நிலையையும் பார்த்தால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, நன்றாக உழைத்தவன் உயர்ந்த நிலைக்குப் போயிருப்பதையும், இரண்டாமவன் வாழ்க்கையில் சொல்லும்படியான நிலையை எட்டாமல் அன்றாட வாழ்க்கையே பிரச்னைக்குரியதாய் கஷ்டப்படுவதையும் பார்க்க முடியும்.

முதலாமவன் முன்பு கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்பு அதற்கான பலனை பெருமளவில் பெற்று விடுகிறான். இரண்டாமவன் முன்பு கொஞ்சம் சுகப்படுவதாய் தோன்றினாலும் கடைசியில் தினசரி கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

இதற்கு ஆயிரம் உதாரணங்களை நீங்கள் பார்வைக்கு எட்டிய தூரங்களிலேயே பார்த்து விடலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் செல்வந்தரின் மகன். அவருக்குப் படிப்பு வரவில்லை என்று அவர் தந்தை அவருக்கு ஒரு கடை வைத்துக் கொடுத்தார். காலையில் பத்து மணிக்கு கடைக்குப் போய் ஒரு மணிக்குத் திரும்பி வீட்டுக்கு வந்து, சாப்பிட்டுத் தூங்கி, ஐந்து மணிக்குக் கடைக்குப் போய், இரவு எட்டுமணிக்கு வீடு திரும்பி விடுவார். இளமையில் அப்படி வாழ்ந்து நாளடைவில் எல்லாம் இழந்த அவர் இப்போது வயது எழுபதைத் தாண்டிய பின்னும் ஒரு சாதாரண வேலைக்குப் போய் அதில் வரும் சம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்கிறார் என்பது கூடுதல் தகவல். உழைக்க வேண்டிய வயதில் சோம்பி இருந்ததற்கு இந்த வயதிலும் அவர் விலை தர வேண்டியிருப்பது தான் வருத்தமளிக்கும் விஷயம்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு. “சோகமான வார்த்தைகளிலேயே உச்சக்கட்ட சோகமான வார்த்தை ‘அப்படி இருந்திருக்கலாம்என்று காலங்கழிந்து சொல்வது தான்”.  

அதைச் சொல்லும் துர்ப்பாக்கியசாலியாக நாம் இருந்து விட வேண்டாமே!

என்.கணேசன் 

3 comments:

  1. வரும் முன் காப்போம்...நன்றி ஜீ

    ReplyDelete
  2. Arumaiyana article

    ReplyDelete
  3. timely reminder to youngsters
    how many would follow... is a big question mark...

    ReplyDelete