சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 28, 2017

இருவேறு உலகம் – 63


ன் முன் வந்து நின்ற மனோகரை மாணிக்கம் கூர்மையாகப் பார்த்தபடி அமரச் சொன்னார். மனோகர் அமைதியாக அமர்ந்தான். அவன் அவர்களை வில்லங்கத்தில் மாட்டிவிடும் சூழ்ச்சியாளனா, இல்லை நட்பு பாராட்டி தான் வந்திருக்கிறானா என்பதை அவரால் அவன் தோற்றத்தை வைத்து ஊகிக்க முடியவில்லை. பேச்சைப் பதிவு செய்யும் அதிநுட்பக் கருவி ஏதாவது அவன் உடைக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.

மிகவும் கவனமாக மாணிக்கம் அவனிடம் சொன்னார். “நீங்கள் யாரோ எதிரியைப் பத்தி என்னவோ சொன்னதாய் மாமா சொன்னார். அந்த நபர் எங்க எதிரியே அல்ல. அவருக்கு நாங்க எந்தத் தீமையும் நினைக்கல. அவர் இப்பவும் நலமாய் தான் இருக்கார். குற்றமே நடக்கலைங்கறப்ப குற்றவாளியா யாரும் ஆகவும் முடியாது. குற்றம் செய்ய முயற்சி செய்தோம்கிறதுக்கு ஆதாரமும் எதுவுமில்லை. அரசியல் பகை காரணமாய் எங்களைப் பயமுறுத்த எங்கள் எதிர்க்கட்சிக்காரர்களோ, எதிரியோ அனுப்பின ஆளாய் நீங்கள் இருந்தா அவங்க கிட்டயே திரும்பிப் போய் “எங்களுக்கு மடியில் கனமுமில்ல, அதனால வழியில பயமும் இல்லை”ன்னு நீங்க சொல்லணும்…..”

அவர் புத்திசாலித்தனமாக எந்தப் பெயரையும் சொல்லாமல், குற்றம் பற்றியும் சொல்லாமல், குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் மறுத்தே தைரியமாய் பேசின விதம் சங்கரமணியை மனதில் சபாஷ் போட வைத்தது. ‘என் மருமகனா கொக்கா?’

மனோகர் அமைதியாகச் சொன்னான். “நான் எதிரி அனுப்பின ஆளும் இல்லை. நம்ம பேச்சை பதிவு பண்ணிக்கவும் நான் நினைக்கலை. அதனால நீங்க பயப்படவே வேண்டாம். செந்தில் நாதன் புள்ளிகள் இருந்தால் போதும் சரியா சேர்த்து கோலம் போடத் தெரிஞ்ச ஆள். அவர் க்ரிஷ் காணாமல் போன மலைப்பக்கத்துல உங்க மாமாவை பார்த்ததாய் ஒரு ஆள் சொன்னவுடனேயே உங்க மாமாவோட செல்போன் கால்ஸை எல்லாம் செக் பண்ணிருக்கார். அதுலே க்ரிஷ் காணாமல் போன சில நாட்களுக்கு முன்னாலே இருந்து ஒரு நம்பருக்கு அடிக்கடி போன கால்ஸ் பத்தின விவரங்களைச் சேகரிச்சிருக்கார். அந்த நம்பர்க்காரன் ஒரு வாடகைக் கொலையாளின்னும் அவன் பாம்பு கடிக்க வச்சு சில பேரைக் கொலை செய்திருக்கான்னும் கண்டுபிடிச்சிருக்கார். உங்க மாமா பத்தி முதலமைச்சருக்கு முதல்லயே நல்ல அபிப்பிராயம் கிடையாது…..”

மாணிக்கம் உள்ளூரப் படபடத்தாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாக இடைமறித்தார். “முதலமைச்சருக்கு சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்யறது எங்க கடமை. அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்க கிளம்புங்க….”

மனோகர் அமைதியாகவே சொன்னான். “இவர் அந்த மலையடிவாரம் வரைக்கும் அந்த வாடகைக் கொலையாளியோட அன்னைக்கு ராத்திரி போனதுக்கும் அந்தப் பாம்போட அந்த வாடகைக்கொலையாளி மலை மேல போய் க்ரிஷைக் கொன்னுட்டு வர்ற வரைக்கும் இவர் கார்லயே உட்கார்ந்திருந்ததுக்கும் என் கிட்ட ஆதாரம் இருக்கு. கொலை முயற்சி பண்ணி ஆள் சாகாட்டியும் கொலை முயற்சியே குற்றம் தான்னு உங்களுக்குத் தெரியாமலிருக்காது….”

மனோகர் இஸ்ரோ புகைப்படம் ஒன்றை அலட்சியமாய் எடுத்து எதிரிலிருந்த டீப்பாயில் போட்டான். அதில் பாம்போடு வாடகைக் கொலையாளி காரிலிருந்து இறங்குவதும், அந்தக் காரில் சங்கரமணி அமர்ந்திருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. மாணிக்கமும், சங்கரமணியும் சிலையாய் சமைந்தார்கள். இருவர் முகங்களும் வெளுத்தன.

“இது ஒரு சாம்பிள் ஃபோட்டோ தான். மீதியும் என் கிட்ட இருக்கு. ஒரு செட்டை நான் ராஜதுரைக்கும், இன்னொரு செட்டை கமலக்கண்ணனுக்கும் அனுப்பி வைக்கிறேன்…. அவங்க இதைக் கொலை முயற்சியா இல்லையான்னு தீர்மானிச்சுக்கட்டும்….”

சங்கரமணி கைகள் நடுங்க அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தார். அது நிஜமான புகைப்படம் தான். அதில் இருப்பது அவர் தான் என்று மூன்று வயதுக் குழந்தை கூட அடையாளம் காட்டும்.

மாணிக்கம் மிகவும் கஷ்டப்பட்டு அமைதியாகச் சொன்னார். “நீங்க ப்ளாக்மெயில் செய்யறது ஒரு அமைச்சரைன்னு மறந்துடாதீங்க. அரசியல்ல பல களங்கள் பார்த்தவன் நான்…..”

“இந்த ஃபோட்டோஸ் அவங்க ரெண்டு பேர் கைலயும் கிடைச்சதுக்கப்பறமும் நீங்க அமைச்சரா இருக்க முடியும்னு நினைக்கிறீங்களா?” மனோகர் அதே அமைதியுடன் கேட்டான். “நீங்க அமைச்சர் பதவியை இழந்துட்டா அப்பறம் பார்க்கப் போறது களம் அல்ல, ஜெயில்….”

மனோகர் எழுந்து கிளம்பத் தயாரானான். மாணிக்கம் பலவீனமான குரலில் சொன்னார். “தயவு செஞ்சு உட்காருங்க. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க”

மனோகர் மறுபடி அமர்ந்தான். “என் நோக்கம் உங்களைப் பயமுறுத்தறது அல்ல. நான் வந்தது உங்களுக்கு உதவத் தான். நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கிற பொது எதிரியை அழிக்க உங்களை பலப்படுத்த தான் வந்தேன். நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா ஜாக்கிரதையா இருக்கிறதா நினைச்சு என்னை அவமானப்படுத்தினதால தான் இந்த ஃபோட்டோவையே காண்பிக்க வேண்டி வந்துச்சு…..”

போன உயிர் பாதி திரும்பி வந்தது போல் இருந்தது சங்கரமணிக்கும், மாணிக்கத்துக்கும். மாணிக்கம் மெல்லக் கேட்டார். “அந்த லாரி….?”

மனோகர் ஆமாம் என்று தலையசைத்தான்.

மாணிக்கம் பெருமூச்சு விட்டார். “மன்னிச்சுக்கோங்க. இப்ப எல்லாம் பத்திரிக்கைக்காரனுகளும், டிவிகாரனுகளும் கூட வந்து தங்களோட யூகங்களை எல்லாம் சொல்லி நம்ம வாயில இருந்து வார்த்தைகளை வரவழைக்கப் பார்க்கறது அதிகமாய் இருக்கு. அதனால தான் சந்தேகப்பட்டேன்….”

மனோகர் அலட்டாமல் சொன்னான். “பரவாயில்லை. இனி  ஒழுங்கா பேசிக்கலாமா?”

மனோகர் தலையசைத்தார். “நான் என்ன செய்யணும் சொல்லுங்க”

“நீங்க முதலமைச்சராகணும்….”

மாணிக்கம் தன் காதில் விழுந்த வார்த்தை சரிதானா என்கிற சந்தேகத்தோடு மனோகரைப் பார்த்தார். அவன் மௌனமாக இருந்தான்.

மாணிக்கம் சொன்னார். “ராஜதுரை அண்ணன் இப்பவும் மக்கள் மனசுல உயர்ந்து நிற்கிற ஒரு தலைவர். அவர் இருக்கறப்ப வேற யாரையும் மக்கள் முதலமைச்சரா ஏத்துக்க மாட்டாங்க. எம் எல் ஏக்களும் அவருக்கு எதிரா நிக்க மாட்டாங்க…”

மனோகர் சாதாரணமாகச் சொன்னான். “அவருக்கு இதயக்கோளாறு இருக்கு. என்னேரமும் போய்ச் சேர்ந்துடலாம்…..”

அவன் சொன்ன விதம் மாணிக்கத்தின் ரத்தத்தைச் சில்லிட வைத்தது. எப்போது வேண்டுமானாலும் அவரை அப்புறப்படுத்தி விடலாம் என்று அவன் சொன்ன மாதிரி இருந்தது. இவன் ஆபத்தானவன் என்று ஒருபுறம் மனம் எச்சரித்தது. இன்னொரு புறம் மனம் அடுத்த முதலமைச்சராக ஆனால் எப்படி இருக்கும் என்று கனவு காண ஆரம்பித்தது. இதெல்லாம் நடக்குமா என்பது போல அவனை அவர் பார்த்தார்.

மனோகர் சொன்னான். “அதிர்ஷ்டம் கதவைத் தட்டறப்ப தயார் நிலையில் இருக்கறவன் தான் புத்திசாலி. ராஜதுரை இறந்தால் அந்தச் சூழ்நிலையைச் சாதகமா பயன்படுத்திக்க நீங்க தயாரா?”

“என்ன செய்யணும்?”

மனோகருக்கு அந்த ஆள் மீது கோபம் தான் வந்தது. இப்போதும் அமுக்கமாய் தான் என்ன செய்வதென்று கேட்கிறான்….

“சேர்த்த காசைச் செலவு செய்யணும். எம்.எல்.ஏக்களை உங்க பக்கம் இழுத்துக்கணும். முதலமைச்சராகணும்…”

மாணிக்கம் சங்கரமணியைப் பார்த்தார். சங்கரமணி தலையசைத்தார். ‘செலவு செஞ்சதை ஆறு மாசத்துல மீட்டுடலாம்’ என்று அவர் அனுபவ அறிவு சொன்னது.

மாணிக்கத்திற்கு இப்போதும் சின்னதாய் ஒரு நெருடல் இருந்தது. முதலமைச்சர் கனவு கூட இதுநாள் வரை ராஜதுரைக்குப் பின் என்பதாகத் தான் இருந்ததே ஒழிய, ராஜதுரையைத் தீர்த்துக்கட்டி முதலமைச்சராவதற்கு அவர் எப்போதுமே நினைத்ததில்லை….. இவன் இன்னமும் இவனுக்கு ஆக வேண்டியதைச் சொல்லி விடவில்லை. என்ன கேட்பானோ!

அப்போது அவர் செல்போன் இசைத்தது. யார் என்று பார்த்தார். ராஜதுரை! கை நடுங்க செல்போனை எடுத்துப் பேசினார். “வணக்கம் அண்ணா சொல்லுங்க”

ராஜதுரையின் குரல் இறுக்கமாக இருந்தது. “மாணிக்கம் உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நாளைக்கு காலைல பத்து மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்துடு”. வேறு எதுவும் பேசாமல் ராஜதுரை இணைப்பைத் துண்டித்து விட்டார்.

அவர் நாளை பேசப் போவது தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. “அவர் நாளைக்கு காலைல பேச கட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்றார்.”

“நீங்க எனக்கு முழு ஒத்துழைப்பு தர்றதாய் இருந்தால் காலைல அவர் கட்சி அலுவலகத்துக்கு வர மாட்டார். ஆஸ்பத்திரில இருப்பார்” மனோகர் அலட்டாமல் சொன்னான்.

மாணிக்கம் சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார். ஆனால் மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கடைசி ஆயுதமாய் அவருடைய நிலைமையை மனோகர் சொன்னான். “உங்க முன்னாடி ரெண்டு வழி இருக்கு. ஒன்னு இருக்கற அமைச்சர் பதவியும் இழந்து விசாரணைக்கு உட்படறது. இன்னொன்னு முதலமைச்சராய் ஆகறது. நான் சொல்றபடி கேட்டா ரெண்டாவது பலிக்கும். இல்லைன்னா முதலாவது பலிக்கும்…..”

எச்சிலை முழுங்கிக் கொண்டு மாணிக்கம் சொன்னார். “நீங்க சொல்றபடி கேட்கறேன்.”

(தொடரும்)
என்.கணேசன்  

Monday, December 25, 2017

ஜனவரி 1 முதல் என் புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி”



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நான் நீண்ட காலமாக எழுத ஆசைப்பட்டு எழுதாமல் இருந்த சத்ரபதி சிவாஜியை மையமாகக் கொண்ட வரலாற்று நாவலை 2018ல் ஆரம்பித்தே தீர்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். “சத்ரபதி” என்ற புதிய வரலாற்று நாவல் 2018 ஜனவரி ஒன்று முதல் இந்த வலைப்பூவில் ஆரம்பமாகி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் வரலாற்று நாவல் எனக்குப் புதிய முயற்சி தான். என் மற்ற நாவல்களுக்கு நீங்கள் அளிந்து வந்த பேராதரவு இந்தப் புதிய வரலாற்று நாவலுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த வருடத்தின் முதல் நாளே நம் வரலாற்றுப்  பக்கங்களில் காலடி எடுத்து வைக்கிறேன்.

1.1.2018 அன்று  வாருங்கள்.  சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு மகத்தான சரித்திரத்துக்குள் சேர்ந்து பயணிப்போம்.

அன்புடன்
என்.கணேசன்   

Thursday, December 21, 2017

இருவேறு உலகம் – 62


ர்ம மனிதன் வேகமாக முடிவுகள் எடுப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் என்றுமே முன்னிலை வகிப்பவன். அவனையே க்ரிஷின் வேகமான அணுகுமுறை அசர வைத்தது. திட்டமிட்டு மாஸ்டரின் எதிரியாக க்ரிஷை இருத்தி வைக்க அவன் நிறையவே மெனக்கெட்டிருக்கிறான். முதல் சந்திப்பிலேயே மாஸ்டரின் எதிரி என்கிற நிலையிலிருந்து இருந்து சீடன் என்கிற பாதுகாப்பான நிலைக்கு க்ரிஷ் இடம் மாறுவான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஹரித்வார் கூட்டம் மாஸ்டரின் முடிவை எந்த விதத்திலும் மாற்றாது என்பதை அவன் அறிவான். ஒரு வார்த்தை கொடுத்து விட்டால் எந்த நிலையிலும் அவர் அதிலிருந்து பின்வாங்குபவரல்ல. அவரது வார்த்தை ஒவ்வொன்றும் அவரைப் பொருத்த வரை சத்தியப் பிரமாணம் தான். இயக்க உறுப்பினர்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தால் தலைமைப் பதவியிலிருந்து விலகுவாரே ஒழிய முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார். அப்படித் தலைமைப் பதவியிலிருந்து அவர் விலகினால் அது அவனுக்குப் பல விதங்களில் அனுகூலமாக இருக்கும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

க்ரிஷ் இனி புதிதாக எதைக் கற்றுக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறான் என்று மர்ம மனிதன் யோசித்தான். எவ்வளவு வேகமாகக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ச்சி பெற க்ரிஷுக்குக் குறைந்த பட்சம்  சில வருடங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். அதற்குள் மர்ம மனிதன் கட்டுப்பாட்டுக்குள் எல்லாமே வந்திருக்கும்…. அப்படியிருக்கையில் கடைசி கட்டத்தில் இருந்து கொண்டு அவன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதன் அர்த்தம் மர்ம மனிதனுக்கு விளங்கவில்லை. அவனுடைய இந்த முடிவைப் பார்க்கையில் அந்த ஏலியன் அவன் சொன்னது போலவே போய்விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஏலியன் இருந்திருந்தால் அந்த ஏலியனிடமே அவன் ஏதாவது கற்றிருக்கலாம். உயிரைக் காப்பாற்றிய அந்த ஏலியன் மற்ற உதவிகள் எதுவும் செய்யாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. வாடகைக் கொலையாளியைக் கொன்ற ஏலியன் ஏன் தன்னுடைய வழியில் குறுக்கிடவில்லை என்றும் தெரியவில்லை…..

இப்போதைக்கு க்ரிஷ் மாஸ்டரை மாற்றிய வேகம் தவிர வேறு எதுவும் பயப்படும்படி இல்லை. என்ன தான் சொல்லிக் கொடுக்க மாஸ்டர் ஒப்புக் கொண்டாலும் குருவைக் கொன்றவனின் ஆள் என்கிற எண்ணம் அவர் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே தான் இருக்கும். அது இருக்கிற வரை மாஸ்டர் க்ரிஷுக்கு அபாயமானவர் தான். அந்த எண்ணம் அவரிடமிருந்து விலகுவதற்குள் அவன் காயை நகர்த்தியாக வேண்டும். நன்றாக யோசித்ததில் க்ரிஷை நெருங்க மாஸ்டர் தேர்ந்தெடுத்த வழியே சிறந்தது என்று தோன்றியது. மாணிக்கம்……! சங்கரமணி மூலமாக மாணிக்கத்தை அணுகுவது என்று அவன் முடிவெடுத்தான்….


முன்னறிவிப்பு இல்லாமல் பார்க்க வரும் ஆட்களை சங்கரமணிக்குப் பிடிக்காது. ஆனால் அதற்கு ஒரு விதிவிலக்கு இருந்தது. அப்படிப் பார்க்க வரும் ஆட்களால் நல்லதொரு தொகை கிடைக்க வாய்ப்பு இருந்தால் சங்கரமணி சகித்துக் கொள்வார். அன்றும் மனோகர் அவரைச் சந்திக்க வந்த போது அவர் அந்த வாய்ப்பை உணர்ந்தார். அவன் வந்திறங்கிய பென்ஸ் கார், அவன் அணிந்திருந்த ஆடைகள், கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம், கழுத்தில் போட்டிருந்த கெட்டியான தங்கச்சங்கிலி எல்லாம் ‘பணம் பணம்’ என்றன. அதனால் தான் அவனை அவர் உட்காரவே சொன்னார்.

அவன் “உங்க நண்பன் நான்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

’எனக்குத் தெரியாமலேயே எனக்கு இப்படி ஒரு நண்பனா? அப்படின்னா கழுத்தில போட்டிருக்கிற அந்த எட்டு பவுன் சங்கிலியை கழட்டிக் கொடேன்’ என்று மனதில் எகத்தாளம் பேசிய சங்கரமணி “நான் உங்களைப் பார்த்ததாய் ஞாபகம் இல்லையே” என்றார்.

”நான் நண்பன்னு சொன்னது எதிரிக்கு எதிரிங்கற அர்த்தத்துல” என்று அவன் விளக்கினான்.

சங்கரமணி “எனக்கு எதிரிகள் ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க. என்னோட எந்த எதிரியைச் சொல்றீங்க….”

”க்ரிஷ்” என்று ஒற்றைச் சொல்லில் பதில் அளித்தான் மனோகர்.

சங்கரமணி எச்சரிக்கை அடைந்தார். செந்தில்நாதன் அனுப்பிய ஆளாய் இந்த ஆள் இருப்பானோ என்கிற சந்தேகம் அவருக்கு வந்தது. உஷாரானார். “அவன் என் பேரனோட நண்பனாச்சே. அவன் குடும்பமும் என் மருமகன் குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னாய் பழகறவங்க….”

மனோகர் சலிப்புடன் சொன்னான். “எனக்கு சுத்தி வளைச்சு பேச நேரமில்லை. சொல்லப் போனா உங்களுக்கும் கூட அதிக நேரமில்லை. உங்க தலைக்கு மேல் கத்தி தொங்குது. செந்தில் நாதன் போய் ரிப்போர்ட் பண்ணினதுல உங்க மேல ராஜதுரைக்குச் சந்தேகம் வந்துடுச்சு. என்னேரமும் உங்களை விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரிக்கலாம்….”

சப்தநாடியும் ஒடுங்கிப் போய் சங்கரமணி மனோகரையே அதிர்ச்சியுடன் பார்த்தார். கடைசியாகப் பலவீனமாய் கேட்டார். “உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”

“இப்போதைக்கு உங்க மருமகன் கிட்ட நேரடியா பேசணும்….”


ங்கரமணி வந்து சொன்ன போது மாணிக்கமும் இது சூழ்ச்சிவலையோ என்று தான் எடுத்தவுடன் சந்தேகப்பட்டார். ”நீங்க எதாவது ஏடாகூடமாய் பேசி அவன் அதை ரெக்கார்ட் பண்ணியிருக்க வாய்ப்பில்லையே?”

சங்கரமணி மீண்டும் அவன் சொன்னதையும் தான் சொன்னதையும் வார்த்தைக்கு வார்த்தை விடாமல் ஒப்பித்தார். மாணிக்கம் யோசித்தார். க்ரிஷுக்கு ஒரு சக்தி வாய்ந்த எதிரி ஒருவன் இருப்பதை முன்பே அறிந்து இருந்ததால் அந்த எதிரியாக இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. லாரி மூலம் கொல்லப் பார்த்த எதிரியாக இருந்தால் அவனைச் சந்திக்க மறுப்பது நஷ்டமே என்றும் தோன்றியது. அந்த ஆளிடம் கவனமாய் பேசிப் பார்த்து முடிவெடுக்க நினைத்த அவர் “சரி அந்த ஆளை வரச் சொல்லுங்க” என்றார்.


க்ரிஷ் மாஸ்டரின் வீட்டிலிருந்து வந்த பின் நிறைய யோசித்தான். மாஸ்டர் எதை வைத்து அவனை எதிரியின் ஆளாய் நம்புகிறார் என்பதற்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. எதையும் புதிதாய் கற்றுக் கொள்வதில் அவனுக்கு என்றுமே ஆர்வம் இருந்த போதிலும் மாஸ்டரிடம் அவனுக்கு கற்றுக் கொள்வதை விட அவரது எதிரி என்ற ஸ்தானத்திலிருந்து விலகுவது தான் அதிக முக்கியமாக இருந்தது. அதைச் சாதித்து விட்ட பிறகும் மனதில் நெருடல் இருந்து கொண்டே இருந்தது. காலம் அதிகமில்லை. எதிரி யார் என்றும் தெரியாது, எதிரி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றும் தெரியாது, அவன் என்ன, எப்படி செய்யப் போகிறான் என்றும் தெரியாது. இப்படியொரு குழப்பமான நிலையில் அவன் இருக்கையில் அவன் யார் என்பது எதிரிக்குத் தெரியும். அதனாலேயே அவன் என்ன செய்கிறான் என்பதையும் எதிரியால் கண்காணிக்க முடியும். “இது நியாயமே இல்லாத களம். இதில் எதிரியை வெல்லச் சொல்லி விட்டு நீ போய் விட்டாய். எதிரி யார் எங்கிருக்கிறான் என்றே எனக்குத் தெரியவில்லை. முதலில் அவனை நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்” என்று மனதில் வேற்றுக்கிரகவாசியை நினைத்துப் புலம்பினான்.

திடீரென்று முன்பு தெரிந்த காட்சி நினைவுக்கு வந்தது. இருட்டில் தெரிந்த பாழடைந்த காளி  கோயில், உடுக்கை சத்தம், கண்கள் நெருப்பாய் ஜொலிக்க காளியின் அழகான நடனம், அத்தனையும் நின்று போக வைத்த இருட்டில் தெரிந்த உருவம். அதுவல்லவா எதிரி என்று வேற்றுக்கிரகவாசி சொன்னான். காரணம் இல்லாமலா அன்று அந்தக் காட்சி வந்தது? முகம் தெரியா விட்டாலும் அந்தக் காட்சியிலேயே அவனுக்கு அறிமுகமானவன் அல்லவா எதிரி?  இந்தக் காட்சியில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது……! என்ன அது? அந்தக் காட்சி என்ன சொல்ல வருகிறது? க்ரிஷ் யோசிக்க ஆரம்பித்தான்.


இருட்டில் தெரிவது ரகசியமானவன் என்று அறிவிப்பது போல் இருக்கிறது. அழகாய் நடனமாடிக் கொண்டிருந்த காளியின் நடனம் அவன் நெருங்க ஆரம்பித்தவுடன் நிற்கும் காட்சி அவன் கடவுள் பக்தி இல்லாதவனாகவும், கெட்டவனாகவும் இருப்பதை உணர்த்துகிறது. காளி கோயிலோடு காண்பிக்கப்படுவதால் அவன் இந்தியனாகத் தான் இருக்க வேண்டும். மகாசக்தி படைத்தவன் என்று வேற்றுக்கிரகவாசியே சொல்லி இருக்கிறான். சாதாரண மனிதர்களை யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். கண்டுபிடிக்க முடியாமல் கூடப் போகலாம். ஆனால் மகாசக்தி படைத்தவர்கள் மற்றவர்கள் கவனத்துக்கு வராமல் போக முடியாது…… அவனைப் பற்றித் தெரிந்து கொள்வது சற்று முன் நினைத்த அளவுக்குக் கஷ்டமல்ல என்று தோன்றியது. க்ரிஷுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது மெல்லப் புலப்பட ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, December 20, 2017

Monday, December 18, 2017

ஷாமனின் சக்தி யாத்திரை!

அமானுஷ்ய ஆன்மீகம் – 24


ஷாமனாக மாறுவது என்பது ஒருவருக்கு மறுபிறவியைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பழையது அனைத்தையும் புறந்தள்ளி நீக்கி விட்டு, புதியது ஒன்றாக முழுவதுமாக மாறி விடுவது யாருக்குமே எளிதான அனுபவமாக இருக்க முடியாது. ஆனால் பழையதைப் பிடித்துக் கொண்டே இருந்தால் புதியதில் புகுதல் முடியாது என்கிற இக்கட்டான நிலையில் அறியாமையும், பலவீனமுமான பழைய வாழ்க்கையை நிராகரித்து ஞானமும், சக்தியும் நிறைந்த புதிய வாழ்க்கைக்கு ஒரு ஷாமன் முழு மன உறுதியுடனேயே நுழைய வேண்டியிருக்கிறது.  

எடுத்திருக்கும் புதிய அவதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் புதியது என்பதால் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும், பயத்துடனேயுமே ஒரு ஷாமன் சில காலமாவது  அணுகவேண்டி வருவது இயற்கையாகவே இருக்கிறது. எனவே ஷாமனாக வாழ்வைப் புதிதாகத் துவங்கும் காலகட்டத்தில் பயம், சந்தேகம், குழப்பம் ஆகியவற்றை ஷாமன் அதிகமாகவே வெளிப்படுத்த வேண்டி வருகிறது. உணவில் அதிக விருப்பம் இல்லாமை, மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் நாட்டமில்லாமை, வெறித்த பார்வை, அதிக தூக்கம், அதிக மௌனம் முதலானவை ஷாமனின் புதிய சக்தி யாத்திரையில் ஆரம்ப நிலைகளாக இருக்கின்றன.

ஷாமன்கள் அனைவரும் இணையான சக்திகள் படைத்தவர்களாக இருப்பதில்லை என்பது ஷாமனிஸத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். ஷாமனிஸத்தில் கடவுள் என்கிற உச்ச தெய்வீக சக்தி அதிகம் பேசப்படுவதில்லை. மனித சக்திக்கும், இறை சக்திக்கும் இடைப்பட்ட பலவித மகாசக்திகளே அதிகம் பயன்பாட்டு சக்திகளாக கவனிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஷாமனும் தன் இயல்பிற்கும், தகுதிக்கும் தகுந்த அந்தவகை ஒரு மேல்நிலை சக்தியாலேயே தொடர்பு கொள்ளப்படுகிறார். அந்த சக்தியும் தனக்கு இணையான சக்திகளையே அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்தவும், பயிற்சிகள் தரவும் செய்கின்றன. எனவே அந்த சக்தி அல்லது சக்திகளின் எல்லைகளே அந்த ஷாமனுடைய எல்லைகளாகவும் அமைந்து விடுகின்றன.

அதனால் ஷாமன்களில் பல சக்தி நிலைகள் கொண்ட ஷாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த நிலைகளிலேயே ஷாமனிஸம் ஏற்றுக் கொள்கின்றது. அந்த ஷாமன்களை அவர்களுக்குரிய ஸ்தானங்களையே தந்து அந்த அளவிலேயே பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு ஷாமனின் நோய்க்காலம் முடிந்து ஷாமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த பின்னர் மூத்த ஷாமன்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அந்த ஷாமன் வரவழைக்கப்படுகிறார். புதிய ஷாமனிடம் அவர்கள் சில கனவுகளுக்கு அர்த்தம் என்ன என்று  கேட்பார்கள். தாவர, மிருக சக்திகளிடம் அறிந்தவை என்ன, அவை அனுப்பிய செய்திகள் என்ன என்றெல்லாம் கேட்பார்கள். பதில்களை புதிய ஷாமன் விவரித்துச் சொல்ல வேண்டும். அந்தப் புதிய ஷாமன் தான் அடைந்திருக்கும் சக்தியை அவர்கள் முன் நிரூபிக்கவும் வேண்டும். அதையெல்லாம் வைத்தே அவர்கள் புதிய ஷாமனின் வெற்றி குறித்தும், புதிய ஷாமனைத் தொடர்பு கொண்ட சக்திகள் குறித்தும், புதிய ஷாமனின் சூட்சும அறிவுத் திறன் குறித்தும் ஒரு முடிவுக்கு வருவார்கள். அந்த தாவரம், மிருகம் சம்பந்தப்பட்ட உடைகளும், சின்னங்களையுமே அந்த ஷாமன் அணிவது வழக்கமாகப் பின்பற்றப்படும். அதனால் ஷாமன்கள் அணியும் உடைகள், அணிகலன்கள், சின்னங்கள் வைத்தே ஒருவர் அந்த ஷாமன் குறித்த விவரங்கள் பலவற்றையும் அறிய முடியும்.

ஷாமனிஸம் பின்பற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஷாமன்களின் எண்ணிக்கை ஏறத்தாழவும் ஒரே அளவில் இருக்காது. உதாரணத்திற்கு சைபீரியா பகுதியில் ஷாமன்கள் மிக அபூர்வமாக அங்கொருவரும், இங்கொருவருமாகத் தான் இருப்பார்கள். ஆனால் அமேசான் பகுதியில் ஷாமன்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும்.     

ஷாமன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அவர்களுக்குத் தீட்சை அளித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு விடுவதில்லை. ஷாமன்கள் தாங்கள் அறிந்தவற்றையும், தங்கள் சக்திகளையும் மெருகேற்றி, பலப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உரிய காலம் தரப்படுகின்றது. கவனம் சிதறாமல், அலட்சியம் இல்லாமல் ஷாமன்கள் தாங்கள் அறிந்த சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் முழுவதுமாகத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு தீட்சை அளிக்கப்படுகின்றது.

தீட்சையின் போது ஷாமன் தன்னை நிரூபித்தாக வேண்டும். அந்த முறைகள் சில பகுதிகளில் மிகவும் கடினமானதாக இருக்கும். உதாரணத்திற்கு வடகிழக்கு சீனப்பகுதியில் மஞ்சு இனத்து மக்களின் ஷாமன் பொது இடத்தில் எரியும் நிலக்கரியின் மீது நடக்க வேண்டும். நம் ஊரின் தீ மிதித்தல் சீனாவின் அப்பகுதியிலும் உண்டு. அப்படி ஷாமன் நடந்து காலில் எந்த தீக்காயமும் இல்லாமல் இருந்தால் தான் உயர்சக்திகள் அல்லது ஆவிகளின் அருள் பெற்றிருக்கிறார் என்று நம்பினார்கள். அதே போல் பனிக்காலத்தில் பனிப்பரப்பில் ஒன்பது குழிகள் தோண்டி ஒரு குழியில் இறங்கி மறு குழி வழியாக மேலே வர வேண்டும். அப்படி ஒன்பதாவது குழி வரை இறங்கி ஏறி வந்தால் தான் அந்த ஷாமன் சக்தி படைத்த ஷாமன் என்று ஒத்துக் கொள்வார்கள்.

சீனாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த கடுமையான சோதனை அருகே இருந்த திபெத் மூலமாக வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். திபெத்திலும் இது போன்ற கடுமையான சோதனைகள் உண்டுஅங்கும் கடும் உறைபனிக்கால இரவில் நனைந்த துணிகளை தன் வெற்றுடம்பின் சூட்டாலேயே ஒரு யோகி உலர்த்திக் கொடுக்க வேண்டும். அந்த அளவு சூட்டைத் தன் உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் உருவாக்கிக் கொடுக்க முடிந்தவரே ஷாமன் என்று அங்கீகரிக்கப்பட்டார். உறைபனிக்காலத்தில் உடல் சூட்டை எந்த அளவு உயர்த்த முடியும் என்பதை வைத்தே எஸ்கிமோக்களும் ஷாமனாக ஒருவரை அங்கீகரிக்கிறார்கள். சில பகுதிகளில் இரண்டு ஷாமன்கள் சண்டையிட்டு வெற்றி வாகை சூடுபவர் சிறந்த ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.


பிற்காலத்தில் அது போன்ற கடுமையான சோதனைகள் கைவிடப்பட்டன. உடல் சக்தியை விட, நிகழ்த்த முடிந்த அமானுஷ்ய அறிவுசக்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள். அதே போல அவர்கள் ஆவியுலகில் இருந்து பெற்றுத்தரும் ஆலோசனைகள் எந்த அளவு பலன் அல்லது வெற்றி தருகின்றது என்பதை வைத்தே ஷாமன்கள் மதிக்கப்பட்டார்கள்.

ஒரு ஷாமனின் சக்தி யாத்திரையில் அவர் மூன்று வித்தைகளில் முழுவதுமாகத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒன்று மூலிகைகள் குறித்த முழுமையான ஞானம். இது தாவர சக்திகளைத் தொடர்பு கொண்டு அவற்றின் ஆசி பெற்றவர்க்கே முழுமையாக வாய்க்கும் என்று ஷாமனிஸம் நம்புகிறது. அதனால் எந்த நோய்க்கும் எந்தத் தாவரத்தின் எந்தப் பகுதி மருந்தாகலாம் என்று சொல்வது மட்டுமல்லாமல் அந்தத் தாவரப் பகுதியை உடனடியாகத் தருவித்து உயிர்காப்பது கைதேர்ந்த  ஷாமனின் அத்தியாவசியத் திறமையாக ஷாமனிஸம் கருதுகிறது.

இரண்டாவது ஒரு ஷாமன் மிகுந்த மனோ தைரியம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று ஷாமனிஸ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆபத்துக் காலங்களில் அந்த மனோதைரியம் இல்லா விட்டால், எதிரில் வரும் சக்தி கண்டு அந்த ஷாமன் பயந்து அதன் ஆளுமைக்கு உட்பட்டு விட்டால் ஷாமன் தானும் அழிந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று எண்ணினார்கள். ஒரு ஷாமனுடைய முக்கிய வேலையே பல அமானுஷ்ய சக்திகளைக் கையாள்வதில் இருப்பதால் அதை மனம் நடுங்காமல் ஆளுமையோடு செய்யும் திறன் ஷாமனுக்கு இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

மூன்றாவது ஒரு ஷாமன் அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொள்ள முடிந்த தியான மயக்க நிலைக்குச் செல்லும் சக்தியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாதாரண உணர்வு நிலையில் எந்த அமானுஷ்ய சக்தியையும் ஒருவரால் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் குறுகிய நேரத்தில் அந்த உயர் தியான மயக்க நிலைக்குப் போய் அந்த அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிந்து தன் இன மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆபத்துக் காலங்களில் ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது என்பதால் விரைவாகச் சரியாகச் செயல்பட ஷாமனின் காலம் தாழ்த்தாத விரைவான தகவல் அறியும் முறைக்கு அதிமுக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒரு ஷாமனின் சக்தி யாத்திரை பரிபூரணமாகிறது.

(அமானுஷ்யம் தொடரும்)


என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 18.08.2017

Thursday, December 14, 2017

இருவேறு உலகம் – 61

                           
தயின் கார் நெருங்கிய போது க்ரிஷ் ஜன்னலோரம் தெரிந்தான். அவன் இருட்டில் நின்றிருந்த மர்ம மனிதனைக் கவனிக்கவில்லை. அவன் தன் அண்ணனுடன் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தான். மர்ம மனிதன் தன் முழு சக்தியையும் திரட்டி க்ரிஷ் மீது செலுத்தினான். பொதுவாக மர்ம மனிதனின் இது போன்ற சக்திப் பிரயோகங்களில் எதிராளிகள் செயலற்றுப் போய் விடுவது வழக்கம். அவர்கள் இரும்புச்சங்கிலியால் இறுக்கமாகக் கட்டப்பட்டவர்கள் போல் உணர்வார்கள். அசையவோ பேசவோ முடியாது. மர்ம மனிதனாகத் தீர்மானித்து அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் அப்படியே தான் இருக்க வேண்டி வரும். ஆனால் முதல் விதிவிலக்காக க்ரிஷ் இருந்தான். அவன் அண்ணனைப் பார்த்துக் கொண்டே பேசியது சிறிய அளவிலும் தடைப்படவில்லை. மர்ம மனிதன் அனுப்பிய சக்திகள் க்ரிஷை அடையவே இல்லை. உதயின் கார் சிறிது நேரத்தில் மர்ம மனிதனின் கண்பார்வையிலிருந்து மறைந்தது.

இப்படி ஆகலாம் என்று மனதின் ஒரு மூலையில் முன்பே உள்ளுணர்வு சொல்லி இருந்த போதும் அவனுக்கு அதை முழுமையாக நம்பிவிட முடிந்திருக்கவில்லை.  மாஸ்டரைப் போல் மாஸ்டரை விட ஒருபடி மேலே சக்திகள் சேர்த்து வைத்திருந்த தானும் தோற்றுப் போனது அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. எத்தனையோ பெருந்தலைகளுடன் மோதி ஜெயித்தவன், மாஸ்டரிடமே அவ்வப்போது கண்ணாமூச்சி விளையாட முடிந்தவன் ஒரு பொடியனிடம் தோற்று நிற்பது சகிக்கக் கூடியதாக இல்லை. உள்ளுக்குள் எழுந்த கோபம் விஸ்வரூபம் எடுத்தது. இனி அவன் ஓயப்போவதில்லை. அந்தக் கோபமே இனி அவனது பெருந்தூண்டுதலாக இருக்கும். அந்தக் கோபம் அவனை மேலும் பலப்படுத்துவதாகவும், முயற்சி செய்ய வைப்பதாகவும் இருக்கும். மாஸ்டரும் க்ரிஷைப் படிக்க முடியாததை அவமானமாகவே நினைத்திருப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதும், மாஸ்டருடன் க்ரிஷ் என்ன பேசினான், அங்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்தால் தான் அடுத்து என்ன செய்வது என்பதை அவன் தீர்மானிக்க முடியும்….


தய்க்கு தம்பி ஒரு சூப்பர் மேனாகத் தெரிந்தான். அவன் ஒருவனிடம் போன் பேசி முடித்து வருவதற்குள் அவனை விட அதிகமாக க்ரிஷ் மாஸ்டரிடம் நெருங்கி விட்டது ஆச்சரியமாக இருந்தது. அவன் அவரிடம் எதையோ கற்றுக் கொள்ளப் போவதாகவும், அதை அவர் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து விட்டதாகவும் தெரிந்த போது கண்கள் விரியத் தம்பியைப் பார்த்தான். அவரைப் பார்க்க அனுமதி கிடைத்ததும் சந்தித்ததும் கூடப் பெரும் பாக்கியமாக நினைப்பதாக மாணிக்கம் போன்றவர்களே சொல்கையில் இவன் சில நிமிடங்களிலேயே எப்படி இதைச் சாதித்தான் என்று பிரமிப்பாக இருந்தது. ஆனால் க்ரிஷின் முகபாவனையில் இருந்து எதையும் அவனால் யூகிக்க முடியவில்லை. இவன் நேர்மை, மனசாட்சி என்பதை எல்லாம் கொண்டாடாதவனாக இருந்திருந்தால் அரசியலில் அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருப்பான்…. கல்லுளிமங்கன் காணாமல் போன போது நடந்த எதையும் வீட்டாரிடம் கூடச் சொல்லவில்லை. இப்போதும் ஒன்றுமே தெரியாதது போல் தான் முகத்தை வைத்திருக்கிறான்…. அந்த அழுத்தம் கூட உதய்க்கு நினைக்கப் பெருமையாக இருந்தது. மெலிதாகப் புன்னகைத்தான்.

க்ரிஷ் கேட்டான். “என்ன விஷயம்?”

”நீ அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்…..”

“ஆமா அது ஒன்னு தான் பாக்கி”

“வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…”

“உதய் நான் ஒன்னு கேட்டா நேர்மையா பதில் சொல்லுவியா?அரசியல்வாதி தப்பு செய்யறதுல எத்தனை கட்டாயத்துல? எத்தனை பேராசையில….”

உதய் பதில் பேசவில்லை. இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. அதை எப்போது தாண்டுகிறோம் என்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய கோடு அது. தாண்டியபின் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை…..


க்ரிஷ் போன பிறகு சுரேஷால் மாஸ்டரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “க்ரிஷ் வசியக்கலை கத்துகிட்ட மாதிரி இருக்கு மாஸ்டர்…”

மாஸ்டர் புன்னகைத்தார். சுரேஷ் முகத்தில் பெரிய குழப்பம் தெரிந்தது. அவரை ஆகாய அளவு உயர்த்தி வைத்துப் பூஜிப்பவன் அவன். அவர் திடீரென்று கீழே இறங்கி வந்து விட்டது போல் அவன் உணர்ந்தது அவன் தவறல்ல. க்ரிஷைச் சந்திப்பதற்கு முன் அவனைச் சீடனாக அவர் ஏற்றுக் கொள்வார் என்று யாராவது சொல்லியிருந்தால் அவரே சொன்ன ஆளை ஏளனமாகத் தான் பார்த்திருப்பார். அவர் க்ரிஷைச் சீடனாக ஏற்றுக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம் அவனுடைய சமரசமில்லாத நேர்மை தான். அவன் எதிரியின் ஆளாய் இருந்தால் கூட அவனுடைய நேர்மையை அவரால் சந்தேகிக்க முடியவில்லை….

சுரேஷிடம் மென்மையான குரலில் சொன்னார். “பெற்ற ஞானமெல்லாம் ஒரு விதத்தில் கடன் தான் சுரேஷ். தகுதி வாய்ந்த சீடன் வந்து கேட்டால் தந்தே ஆக வேண்டிய கடன்……”  

“கேட்டவன் நம் குருவைக் கொன்ற எதிரியின் ஆளாக இருந்தால் கூடவா..?”

“ஆமாம்…. அவனுக்கு அந்தக் குற்றத்தில் பங்கில்லாத வரையில்…”

“உங்களிடமிருந்து கிடைத்த ஞானத்தை அவன் தவறாகப் பயன்படுத்திக்க வாய்ப்பு இருக்கில்லையா மாஸ்டர்”

“யாருமே ஞானத்தைத் தவறாகப் பயன்படுத்திக்க முடியாது சுரேஷ். தவறாகப் பயன்படுத்த முடிஞ்சா அது ஞானம் அல்ல. அது வெறும் அறிவு மட்டும் தான். அறிவை யாரும் நல்லதுக்கும் பயன்படுத்திக்கலாம் கெட்டதுக்கும் பயன்படுத்திக்கலாம்…. ஆனால் அறிவின் இந்தப் பிரச்னை ஞானத்துக்கு இல்லை…. ஞானம் நல்ல வழியை மட்டும் தான் காட்டும்….”

அவன் பேச்சிழந்து சிறிது நேரம் மௌனமாக நின்றான். ”ஆனாலும் இதுக்குப் பின்னால் எதோ சூழ்ச்சி இருக்கிற மாதிரி எனக்கு இப்பவும் தோணுது மாஸ்டர்…. நம்ம குருவைக் கொன்னவனோட ஆளாகவே மட்டும் பார்க்கறதால அப்படித் தோணுதான்னு தெரியலை. ஆனா தோணுது”

அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தார். அவன் தொடர்ந்து சொன்னான். “நம்ம இயக்கத்துலயும் இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு எனக்குத் தெரியல மாஸ்டர். எல்லாருமே க்ரிஷை எதிரி ஸ்தானத்துல வெச்சு தான் பார்க்கறாங்க. நீங்க வாரணாசி போயிருந்த போது இயக்கத்து ஆள்களைக் கூட்டி விஸ்வம் ஐயா குருவோட மரணத்தைச் சொன்ன போது எல்லாருமே கொதிச்சுப் போனதை நான் என் கண்ணால பார்த்தேன். எதிரியின் ஆளை நீங்க சிஷ்யனாய் ஏத்துகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியுமான்னு பயப்படறேன்…..”

தனிமனித சுதந்திரங்கள் தலைவருக்கு இருப்பதில்லை. இதனாலேயே தலைமைப் பொறுப்பு பல நேரங்களில் முள் கிரீடமாய் மாறிவிடுகிறது…. பிடிக்கிறதோ இல்லையோ தன்னைச் சார்ந்திருக்கும் மக்களை அனுசரிக்கும் அவசியமும், அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிற பொறுப்பும் தலைவனுக்குக் கண்டிப்பாக இருக்கிறது…. பெருமூச்சு விட்ட மாஸ்டர் அமைதியாக சுரேஷிடம் சொன்னார். “விஸ்வத்து கிட்ட சொல்லி நம்ம இயக்கத்து ஆள்களை எல்லாம் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல் சுரேஷ் நான் அவங்க கிட்டே பேச வேண்டியிருக்கு…..”

சுரேஷ் திகைத்தான். இதற்கு முந்தைய ஹரித்வார் கூட்டத்தில் எதிரி மீதும் க்ரிஷ் மீதும் வெறுப்பை உமிழ்ந்த உறுப்பினர்கள், க்ரிஷை சீடனாக ஏற்றுக் கொண்ட மாஸ்டரிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பயந்தான்.

அதை மாஸ்டரால் படிக்க முடிந்தது. ஆனால் அவன் பயம் அவரைத் தொற்றிக் கொள்ளவில்லை. ஒருவேளை தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேர்ந்தால் சிறு மனச்சுளிப்பு கூட இல்லாமல் அவர் விலகத் தயாராக இருந்தார்….

அது சுரேஷுக்குப் புரிந்தே இருந்தது. ஒரு சந்திப்பிலேயே க்ரிஷ் மாஸ்டரை இப்படி ஒரு நிலைமைக்கு வரவழைத்து விட்டானே என்று மனதுக்குள் பொருமினான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, December 13, 2017

முந்தைய சிந்தனைகள் - 26

நான் எழுதியதில் இருந்து சில சிந்தனை அட்டைகள் -











என்.கணேசன்

Monday, December 11, 2017

ஒரு ஷாமன் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?


அமானுஷ்ய ஆன்மீகம் - 23 

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஷாமனிஸம் என்கிற ஆன்மிக முறை இப்போதும் உலக நாடுகளின் பல பகுதி மக்களின் கவனத்தைக் கவருவதற்கும், அதில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு ஷாமனால் கடவுளுடனும், மற்ற சக்திகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிய முடிகிறது என்பதே அந்தக் காரணம். தொடர்பு கொள்ள முடிந்த மற்ற சக்திகளில் தாவரம், விலங்குகள், ஆவிகள் என்று எல்லாமே சேர்கின்றன. அறிய முடிந்த விஷயங்களில் ஆரோக்கியம், ஞானம், வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற அனைத்து நன்மைகள் எல்லாம் சேர்கின்றன. இப்படி மனிதனின் தினசரி வாழ்க்கைக்கும், அவனுக்கு வேண்டிய சுபிட்சத்துக்கும் என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்துவதால் ஷாமனிஸத்தில் ஒருவித நெருக்கத்தை நவீன மனிதனும் உணர முடிகிறது என்கிறார்கள் ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் இதை எல்லாம் அறிந்து சொல்கிற ஷாமன் அந்த சமூகத்தில் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது அடையாளம் காணப்படுகிறார் என்பது சுவாரசியமான விஷயம். ஷாமனிஸம் உலகத்தின் பல பகுதிகளில் சிற்சில வித்தியாசங்களுடன் பின்பற்றப்படுவதால் ஷாமனாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் கூட அதே போல் சில வித்தியாசங்களுடன் பொதுவானதாகவே இருக்கிறது.

ஷாமனாக ஒருவர் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கும் போதே ஷாமன் அதற்கேற்ற தகுதிகளுடன் வித்தியாசமாகவே பிறக்கிறார் என்று பல பகுதிகளில் பின்பற்றப்படும் ஷாமனிஸமும் நம்புகின்றது. சில சமயங்களில் ஒரு விரலோ, ஒரு பல்லோ, ஒரு எலும்போ கூடுதலாக அந்த நபரிடம் இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது பிரத்தியேக அம்சம் பார்ப்பவர் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து கொள்ளும்படி அந்த நபர் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். சில நேரங்களில் ஏதாவது ஊனம் இருந்து, கூடவே அதீதமான நுட்பமான உயர் உணர்வுநிலை இருக்கும் பட்சத்தில் அதுவும் ஷாமனுக்கான அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆசைப்படுவதால் யாரும் ஷாமனாகி விட முடியாது என்றும் மேலான சக்திகள் தாங்கள் மனிதர்களிடம் தெரிவிக்க விரும்பும் செய்திகளைச் சரியாக அறிய முடிந்த நுண்ணறிவு படைத்த ஒருவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்றும் ஷாமனிஸம் நம்புகிறது.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிவது பெரும்பாலும் பிள்ளைப் பிராயம் முடிந்து இளமை அரும்பும் காலகட்டத்தில் தான். தத்ரூபமாக திவ்ய தரிசனமாய் ஏதாவது விசேஷக் காட்சிகள் தெரிதல், அடிக்கடி மயக்கமாதல், கடுமையாக உணர்ச்சிவசப்படுதல் முதலான அனுபவங்கள் தொடர்ந்து பல வாரங்கள் அவர்களுக்கு இருக்குமாம். பின் இறுதியாக ஒருநாள் அவர்கள் கனவில் மேலான சக்தி அல்லது ஆவி தோன்றி அவர்கள் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்குமாம். அந்த நபருக்குள் அவரே அறியாமல் மறைந்திருக்கும் சக்திகளையும், அந்த நபரிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது என்னவெல்லாம் என்பதையும் தெரிவிக்குமாம்.

அப்படி ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாரும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சிலர் பொதுவான இயல்பான வாழ்க்கை வாழ விரும்புவதும் உண்டு. ஆனால் அவர்கள் ஷாமனாவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரும் வரை அவர்களை அந்த மேலான சக்தி அல்லது ஆவி ஏதாவது வகையில் வாட்டிக் கொண்டிருக்குமாம். மறுத்து விட்ட பின் அவர்கள் சரியாக உறங்குவதோ, நிம்மதியாக இருப்பதோ முடியாத காரியம் என்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் மானசீகமாக சம்மதம் தெரிவித்தபின் தான் அவர்கள் நிம்மதியாக இருக்க அந்த சக்தி அல்லது ஆவி அனுமதிக்குமாம். அதன் பின் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். அதை ஷாமனின் நோய்க்காலம் என்கிறார்கள். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் அந்த உறக்க காலம் சில வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்குமாம். அந்த நேரங்களில் வெளியுலக சத்தங்கள், நிகழ்வுகள் எதுவும் அந்த ஷாமனைப் பாதிப்பதில்லை.


அந்த நீண்ட தூக்க சமயத்தில் தான் மேலான சக்திகள் ஷாமனின் சூட்சும சரீரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து ஷாமனை அமானுஷ்ய சக்திகளுக்குத் தயார்ப்படுத்தும் என்கிறார்கள். அந்த சக்திகள் மேலும் பல சக்திகளை அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்துவதுடன் சில ரகசியங்களையும் வெளிப்படுத்தும் என்கிறார்கள். சக்திகளின் பாதையில் சூட்சும நிலையில் அது நீண்ட யாத்திரையாகவும், பல புதிய பரிமாணங்களின் படிப்பினையாகவும் அந்தப் புதிய ஷாமனுக்கு அந்தக் காலம் இருக்கும் என்கிறார்கள். அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் வெளியுலகப் பார்வைக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அந்த ஷாமன் தேர்வாளர் சில சமயங்களில் அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருப்பாராம். சில சமயங்களில் மயக்க நிலையிலேயே எழுந்து அங்குமிங்கும் ஓடுவதும் உண்டாம். அதன் பின் மீண்டும் பிணம் போல அசைவில்லாமல் படுத்துக் கிடப்பாராம்.  

சைபீரியா போன்ற பகுதிகளில் ஷாமனின் பிள்ளைகளில் ஒருவர் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தன் தந்தையிடமிருந்து ஷாமனிஸ யாத்திரைக் கதைகள் கேட்டு, தந்தையின் ஷாமனிஸ செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்து குழந்தைப்பருவத்திலிருந்தே தயாராவது இயல்பாக அப்பகுதிகளில் கருதப்படுகிறது. ஆனால் ஒரு ஷாமனின் எல்லாக் குழந்தைகளும் ஷாமனாக மாறிவிடுவதில்லை. மாறிவிடவும் முடியாது. அதற்கென்று பிரத்தியேக குணங்கள் ஒரு குழந்தைக்காவது தரப்பட்டிருக்கும் என்றும் அந்தக் குழந்தை ஷாமனாக உருவாகும் என்று நம்புகிறார்கள்

ஆனால் அப்படி உருவாகும் ஷாமன் கூட தந்தையிடமிருந்து அனைத்தும் கற்றுக் கொள்ள முடியாது. உண்மையான ஷாமனிஸ சூட்சுமங்களையும், ரகசியங்களையும் மேலுலக சக்திகள், ஆவிகளிடமிருந்தே அந்த ஷாமனும் பெற்றாக வேண்டும். அதனால் உண்மையான கற்றல் என்கிற நிகழ்வு அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் சூட்சும உலகிலேயே நடைபெறுகிறது. எல்லாம் கற்ற பின் தன் நோயைக் குணமாக்கிக் கொண்டு தெளிவாகிய பின்னரே ஒரு ஷாமன் புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.

அமெரிக்கப் பழங்குடி இன ஷாமனிஸ மக்கள் ஷாமனைத் தேர்ந்தெடுக்கும் விதம் சற்று வித்தியாசமானது. ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின் தங்கள் பிள்ளைகளை அவர்கள் காட்டுக்கு அனுப்பி விடுவார்கள். காட்டில் தங்களை தற்காத்துக் கொண்டு பட்டினி கிடந்தும், மேலுலக சக்திகளிடம் பிரார்த்தனை செய்தும் அவர்கள் வாழ வேண்டும். அவர்களில் ஓரிருவருக்கு மட்டுமே மேலுலக சக்திகள், ஆவிகள் உயர்ந்த ஞானத்தின் திவ்ய தரிசனம் ஏதாவது ஒன்றைக் காட்டும். மற்றவர்கள் சாதாரணமாகத் திரும்பி வரும் போது அந்த ஓரிரு பிள்ளைகள் மட்டும் ஞானத்தின் திவ்ய தரிசனம் பெற்றவர்களாகத் திரும்பி வருவார்கள். அவர்கள் அங்குள்ள ஷாமனிடம் தங்கள் அனுபவத்தைச் சொல்ல அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட அந்த ஷாமன் மேலும் சில கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில்களை வைத்து அந்தப் பிள்ளைகள் உண்மையில் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்று தீர்மானிப்பார்.

அந்தப் பிள்ளைகள் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் அந்த ஷாமனிடம் மேலும் சில பாடங்கள் பெறுவார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கனவில் மேல் உலக சக்திகள் பேசி நேரடியாகச் சிலவற்றைச் சொல்லி, அந்தப்பிள்ளைகளும் ஷாமனாக சம்மதித்து ஒரு நீண்ட உறக்க மயக்க நிலையில் கிடந்து, முறையான பாடங்களையும் உண்மைகளையும் சூட்சும உலகில் பெற்ற பின்னரே ஷாமனாக மாற முடியும்.

மேலுலக அழைப்பு வந்த பின்னும் ஷாமனாக ஒருவர் சம்மதிக்கா விட்டால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு ஷாமனிடம் கேட்ட போது மரணம் தான் நிகழும்என்று அந்த ஷாமன் சொல்லியிருக்கிறார். “நானே ஷாமனாக இருந்திராவிட்டால் என்றோ இறந்திருப்பேன்.”
                                                             
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாமன் பின் சந்திக்கும் நிலைகள் என்ன? அந்த அமானுஷ்ய ஆன்மிக சுவாரசியங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

(அமானுஷ்யம் தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 11.8.2017