சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 2, 2017

இருவேறு உலகம் – 55


க்ரிஷுக்கு அவள் சொன்ன வலியை ஆழமாகவே உணர முடிந்தது. காதல் ஜெயிப்பது கல்யாணத்தில் அல்ல. காலமெல்லாம் மனதில் கலையாமல், தேயாமல் கடைசி வரை நிலைத்திருக்கும் போது மட்டுமே காதல் ஜெயிக்கிறது. கலைந்தும், தேய்ந்தும் காணாமல் போகும் போது கல்யாணம் ஆன போதிலும் காதல் தோற்றுத்தான் போகிறது. ஹரிணி சொன்னது போல நினைத்துப் பார்க்க நல்ல நினைவுகள் இருக்கையில் அதைக் கெடுக்கும் விதமாய் கசப்பான பின் நிகழ்வுகள் இருக்காத வரை காதல் என்றும் இனிமையானது தான். கூட இருந்தாலும் சரி, தூர இருந்தாலும் சரி ஏன் இறந்தாலும் கூடத்தான்….. க்ரிஷ் அவள் சொன்னபடி சத்தியம் செய்து கொடுத்தான்.

அவள் அதற்குப் பின் அவன் சொல்ல விருப்பப்படாத எதையும் துருவிக் கேட்காமல் போய் விட்டாள். எத்தனை பேருக்கு இது முடியும் என்று க்ரிஷ் யோசித்த போது அவன் மனதில் ஹரிணி மிக உயர்ந்து போனாள். அவள் என்றைக்குமே சராசரியாக இருந்து விடவில்லை என்பதை நினைத்தபடியே அவன் கன்னத்தைத் தடவிக் கொண்டான். கன்னம் இப்போதும் எரிந்தது. க்ரிஷ் கண்ணாடியில் முகம் பார்த்தான். கன்னம் நன்றாகவே சிவந்திருந்தது.

உதய் மெல்ல உள்ளே நுழைந்தான். “என்னடா கன்னம் இப்படிச் சிவந்திருக்கு?”

அண்ணனை க்ரிஷ் முறைத்தான். ’எல்லாம் இவன் வேலை தான்இவன் தான் அவன் காதலிப்பதை அவளிடம் எப்படியோ தெரிவித்திருக்கிறான்…. அம்மாவிடமும் சொல்லியிருக்கிறான்

தம்பியின் முறைப்பைப் பொருட்படுத்தாமல் அவனை உதய் ஆராய்ந்தான். அந்தப் பெண் சொன்னபடியே நன்றாகவே அறைந்திருக்கிறாள்…. கூடவே தம்பியின் உதடுகளிலும் கூடுதல் சிவப்பைப் பார்த்தவுடன் உதய் குறும்பாகக் கேட்டான். “முதல்ல சிவந்தது கன்னமா, உதடா?”

வெட்கத்தில் முகம் சிவக்க க்ரிஷ் அண்ணனை அடிக்க முயல உதய் வேகமாக அங்கிருந்து ஓடினான். க்ரிஷ் துரத்திக் கொண்டு ஓட சமையல் அறையில் இருந்து வெளியே வந்த பத்மாவதி இருவருக்கும் நடுவே இடைமறித்து நின்று, ”டேய் சின்னப் பசங்களாடா நீங்க….” என்று திட்டினாலும் வீட்டில் பழையபடி கலகலப்பு திரும்பியதை ரசித்தாள். ”என்னடா ப்ரச்சனை?”

சொல்லட்டாடா?” என்று உதய் பத்மாவதிக்குப் பின்னால் நின்றபடி  கேட்டான்.

க்ரிஷ் வெட்கப்பட்டான். தம்பி வெட்கப்படுவதைப் பார்க்க உதய்க்குப் பிடித்திருந்தது. க்ரிஷ் தன் கன்னச் சிவப்பை அம்மாவுக்குத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அண்ணனை முறைத்தபடி சொன்னான். “இவன் ஆள் வளர்ந்திருக்கான். ஆனா அந்த அளவு அறிவு வளரல. அதான் ப்ரச்சனை

அது தெரிஞ்சது தானே. அதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்….” என்ற பத்மாவதியை பின்னால் இருந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு நெறிப்பது போல் உதய் பாவனை செய்தபடி சொன்னான். “சின்னப் பையன் திரும்ப வந்த பிறகு உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு

பாவி உன் சக்திய எல்லாம் என் கழுத்துல காட்டாதேஎன்ற பத்மாவதி திடீர் என்று நினைவு வந்தவளாய் சொன்னாள். “க்ரிஷ் நீ நாளைக்கே போய் அந்த மாஸ்டர் சாமியைப் போய் பார்த்து கும்பிட்டுட்டு வரணும். அது தான் மரியாதை…… உதய் நீ இவனைக் கூட்டிகிட்டு போடா….”


ஸ்ரோவின் பெங்களூரு ISTRAC ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளனான வினோத் தன் வழக்கமான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் தான் பெண் விஞ்ஞானி உமா நாயக்கின் போன்கால் வந்தது. “வினோத். எங்கே இருக்கே?”

ஆபிஸ்ல தான். வீட்டுக்குக் கிளம்பிகிட்டிருக்கேன். ஏன்?”

புனேல இருந்து டைரக்டர் வர்றார். நான் அவரை ஏர்போர்ட்டுல இருந்து கூட்டிகிட்டு வர்றேன்…. Astrosat இருந்து வந்த லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் எடுத்து வை….”

வினோத் ஆச்சரியத்துடன் கேட்டான். “என்ன விஷயம்?”

அந்தப் பையன் க்ரிஷ் திரும்ப வந்துட்டானாம்…. அவன் அந்த மலைலயே வந்து சேர்ந்துட்டதா தகவல் வந்திருக்கு….”

எப்ப?”

ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி…. அதனால அந்தப்பகுதி சம்பந்தப்பட்ட ஃபோட்டோஸ் எடுத்து வை….. நாங்க எப்படியும் ஒரு மணி நேரத்துல வந்துடுவோம்….”

வினோத் பரபரப்புடன் மறுபடி அமர்ந்து மறுபடி கம்ப்யூட்டரை ஆன் செய்தான்.


செந்தில்நாதன் க்ரிஷ் வந்து சேர்ந்தவுடன் முதலமைச்சர் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பு முடிந்து விட்டதாகவே நினைத்திருந்தார். க்ரிஷ் எல்லாவற்றையும் முழுவதுமாகச் சொல்லி விடவில்லை என்பதும் எதையோ மறைக்கிறான் என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால் அவன் காலில் இருந்த வடு பாம்பு கடித்த வடுவாகவே தெரிந்தது. அவன் மயக்கமாகி விட்டதும் பொய்யென்று தோன்றவில்லை. பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று அவன் சொன்னதைப் பொய் என்று நிரூபிக்க அவரிடம் எந்தத் தடயமும் இல்லை.  பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும், சங்கரமணி மற்றும் மாஸ்டர் ஆகியோர் மேல் இருந்த சந்தேகம் போய் விடவில்லை என்றாலும் காணாமல் போனவன் கிடைத்து விட்ட பிறகு அந்தப் புதிர்களுக்குப் பதில் தேடும் அவசியமும் இல்லாமல் போய் விட்டது. முதலமைச்சரிடம் சொல்லி விட்டு இதில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று நினைத்து க்ரிஷ் வீட்டிலிருந்து கிளம்பிய போது உதய் சொன்ன லாரி விவகாரம் திகைக்க வைத்தது.. உதய் அந்த நிகழ்ச்சியைச் சொல்லி எப்படியோ எல்லோரும் தப்பித்தோம் என்று சொன்ன போதுநீங்க அந்த லாரி நம்பரை நோட் பண்ணினிங்களா?” என்று செந்தில்நாதன் கேட்டார்.

நோட் பண்ணினேன்.” என்ற உதய் அந்த லாரி எண்ணை அவரிடம் சொன்னான். அவர் அதைக் குறித்துக் கொண்ட போது அவரிடம் புன்னகையுடன் சொன்னான். “அவனுக மோசமான உத்தேசத்துல வந்த மாதிரி தெரியல. ப்ரேக் பிடிக்காத லாரிய எப்படியோ கஷ்டப்பட்டு கடைசி நிமிஷத்துல நிறுத்திட்டானுக. நிறுத்தியிருக்காட்டி நாங்க நாலு பேருமே பரலோகம் போய் சேர்ந்திருப்போம். அப்படி நிறுத்துன லாரிய திரும்பவும் அவங்களால ஸ்டார்ட் பண்ண முடியல……”   

செந்தில்நாதன் தற்செயல் என்ற சொல்லில் நம்பிக்கையில்லாத போலீஸ் அதிகாரி என்பதால் தன்னுடைய திருப்திக்காக அதையும் ஒரு முறை விசாரித்து விடுவது என்று தீர்மானித்தார். சம்பவ இடத்துக்குப் போய் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் உதய் சொன்னதை உறுதிப்படுத்தின. அந்த இடத்தில் நிறைய நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயிருந்ததால் பலரும் அந்த லாரியைக் கஷ்டப்பட்டு பக்கத்தில் இருந்த கேரேஜுக்கு இன்னொரு லாரி மூலம் இழுத்துக் கொண்டு போனதைச் சொன்னார்கள்

செந்தில்நாதன் அந்தக் கேரேஜுக்கும் போனார். லாரி அங்கே நின்று கொண்டிருந்தது. அவரைப் பார்த்தவுடன் கேரேஜ் உரிமையாளர் எழுந்து வந்தார். வணக்கம் தெரிவித்து நின்ற அவரிடம் செந்தில்நாதன் கேட்டார். “இந்த லாரி தான் பக்கத்துல ஆஃப் ஆகி நின்ன வண்டியா?”

ஆமா சார்

இதை ரிப்பேர் செஞ்சாச்சா?”

இல்லை சார்என்று கேரேஜ் உரிமையாளர் சொன்ன போது மெக்கானிக்கும் அங்கு வந்து சேர்ந்தான்.

வண்டில என்ன பிரச்சனை?”

தெரில சார்….” என்றான் மெக்கானிக்.

செந்தில்நாதன் கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தார். அவன் சொன்னான்.  ப்ரேக் வயர் அறுந்து போயிருந்துது. அதை சரி பண்ணிட்டேன்…. ஆனா மத்தபடி ப்ரச்சன எதுவும் இருக்கறதா தெரில. ஆனாலும் வண்டிய ஸ்டார்ட் செய்ய முடியல….”

எங்கே லாரி டிரைவரும் க்ளீனரும்?”

அவங்களோட முதலாளி கிட்ட பேசிட்டு வர்றதா போனாங்க. ஆனா இன்னும் வரக்காணோம்….”

எப்ப போனாங்க…”

ரெண்டு மணி நேரமாவது ஆயிருக்கும் சார்….”

செந்தில்நாதன் லாரியில் ஏறி உள்ளே சோதித்தார். வண்டியில் ஆர் சி புக் உட்பட எந்த ஆவணமும் இல்லை.   ”வண்டியோட பேப்பர்ஸ் எல்லாம் எங்கே?”

தெரியலயே சார். டிரைவர் கிட்டயே தான் இருக்கும் போல…”

லாரி டிரைவரும், க்ளீனரும் அங்கு இல்லாததும், வண்டியின் ஆவணங்கள் வண்டியில் இல்லாததும் சந்தேகத்தைக் கிளப்ப செந்தில்நாதன் ஒரு எண்ணுக்குப் போன் செய்தார். “மஹாராஷ்ட்ரா ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி நம்பர் சொல்றேன், நோட் பண்ணிக்கோங்க……. எனக்கு இந்த லாரி யார் பேர்ல இருக்கு, அட்ரஸ் என்னன்னு தெரியணும்…… ஓக்கே…….”

இருபது நிமிடங்களில் அவருக்குப் பதில் வந்தது. லாரி எண் பொய். உண்மையில் அந்த எண்ணுடைய லாரி ஒரு பெரிய டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் லாரி. அது தற்போது நாக்பூரில் இருக்கிறது.

ஆட்களை விட்டு அக்கம்பக்கத்தில் அந்த லாரி டிரைவர், க்ளீனர் இருவரும் தென்படுகிறார்களா என்று செந்தில்நாதன் தேடிப்பார்க்கச் சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. மாயமாய் மறைந்திருந்தார்கள். மெக்கானிக்கிடம் அவர் லாரி டிரைவர் க்ளீனர் பற்றியும், அங்கு வந்த போதைய அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்தார். மெக்கானிக் சொன்னதெல்லாம் வைத்துப் பார்க்கையில் லாரி டிரைவருக்கு வண்டி எப்படி நின்றது என்பதே புதிராக இருந்தது என்பது தெரிந்தது. அப்படியானால் லாரி டிரைவர் உதய் சொன்னது போல லாரியைக் கஷ்டப்பட்டு நிறுத்தவில்லை…. அது தானாக நின்றிருக்கிறது. அவன் உத்தேசத்துக்கு எதிராக லாரி எப்படி நின்றது என்பதே அவன் குழப்பத்திற்கும், திகைப்புக்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு கொலை முயற்சி தான் அது என்பது புரிந்த போது புதிர்கள் விலகுவதற்குப் பதிலாக இறுகுவதை செந்தில்நாதன் உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


7 comments:

  1. காதலுக்கு மிக அருமையான விளக்கம் தந்திருக்கிறீர்கள் கணேசன். அற்புதம். க்ரிஷ் குடும்பம் சூப்பர். கண் முன் அனைவரும் நிற்கிறார்கள்.

    ReplyDelete
  2. Your combine all elements of life beautifully in your novels. Whether it is love or philosophy or thrilling every thing is at the best only. Thank you sir. Congrats for your new two books.

    ReplyDelete
  3. "வேலை முடிந்ததுனு நினைக்கறப்ப...மறுபடியும் ஆரம்பமாகிறது.." அப்ப செந்தில்நாதன் நமக்கு இன்னும் சில உளவியல் நுணுக்கங்களை கற்று தரப்போகிறார்.

    ReplyDelete
  4. காதல் பற்றிய புது விளக்கம் அருமை ஐயா...

    அடுத்து வரவிருக்கும் ஆராய்ச்சிக்கூட நிகழ்வுகளும்.மாஸ்டர்,கிரிஷ் சந்திப்பும்...எங்களை அடுத்த வாரத்தை எதிர்பார்க்க வைக்கிறது.

    ReplyDelete
  5. அம்மா, மகன்கள் bonding அழகாக, ரசிக்கும் படியாக இருந்தது....So no more separations between K and H.....love definition lovely......G...
    கிரிஷூம் ,மாஸ்டரும் சந்திக்கப் போகிறார்கள்.......செந்தில் நாதனுக்கு, அடுத்த investigation ரெடி.......waiting for the next Thursday......

    ReplyDelete
  6. புதிர்கள் புதை குழியா இழுக்க போகிறது என்பதை அறிய போகிறாரா இல்லை வியப்பெய்தபோகிறாரா ?செந்தில்
    நிர்பந்தம் இல்லா காதல் நிலைத்து நிற்கும்
    இஸ்ரோவின் கண்டுபிடிப்பு என்னவாக இருக்க போகிறது

    ReplyDelete