சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 15, 2024

யோகி 45

 

ஷ்ரவன் அன்றிரவே குமரேசனை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தான். ஆட்கள் அதிகமில்லாத அந்த ஓட்டலில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள். குமரேசனிடம் யோகி ரகுராமன் என்பவரைத் தெரியுமா என்று கேட்ட போது அவன் விழித்த விதத்தில் அவனும் அந்தப் பெயரை முதல் முறையாகத் தான் கேள்விப்படுகிறான் என்பது தெரிந்தது.

 

அந்தப் பேர்ல யாராவது தோட்டக்காரன் வர்றதுண்டா?”

 

இல்லை. அந்தப் பெயரிருக்கற தோட்டக்காரன் யாரும் அங்கே வர்றதில்லை…”

 

பரசுராமன் சைத்ராவைச் சந்தித்திருக்கக்கூடிய இடமாக ஒரு தோட்டத்தைச் சொல்லியிருக்கிறார் என்பதை ஷ்ரவன் குமரேசனிடம் தெரிவித்தான்.  குமரேசன் யோகாலயத்தில் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைத் தெரிவித்தான்.  யோகாலயத்தில் பொதுவெளியில் வெளியாட்களுடன் எந்த சந்திப்பும் நிகழ்வதில்லை என்பதை அவன் சுட்டிக் காட்டினான்.

 

ஷ்ரவன் யோகாலயத்தில் தோட்ட வேலைக்கு வரும் ஆட்களை எல்லாம் விவரிக்கச் சொன்னான். குமரேசனின் வர்ணனைகள் எதுவும் ஒரு யோகியை அடையாளம் காட்டுவதாய் இருக்கவில்லை. அங்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் தான் இரண்டாம் கேட்டைத் தாண்டி உள்ளே செல்லும் வெளியாட்கள் என்பது மட்டுமல்ல, அந்த வகையினரிலும் மேல்மட்டத்து ஆட்களே அப்படிச் செல்ல முடியும் என்பதையும் குமரேசன் மறுபடியும் சொன்னான். அந்த இரண்டாம் கேட்டைத் தாண்டி துறவிகள் வசிக்கும் பகுதிக்கு, கால்நடையாய் யோகாலயத்துக்கு வரும் சாதாரண மனிதன் போய்விட முடியாது என்பது தெரிந்தது. சிவசங்கரன் சொன்ன யோகியோ கால்நடையாகத் தான் தோட்ட வேலைக்குச் சென்றவர். காலப் போக்கில் அவரும் மாறி விலையுயர்ந்த காரில் போயிருக்க வாய்ப்பில்லை.

 

அப்படியிருக்கையில் சைத்ரா அவரை எப்போது எப்படி சந்தித்திருக்க முடியும்? கொலை செய்யப்பட்டு இறந்த பின்னும், கொலையாளியைப் பற்றி எதுவும் சொல்லாமல் அந்த யோகியைப் பற்றி மட்டும் ஏன் அவள் தாத்தாவிடம் சொன்னாள்? குழப்பமாக இருந்தது.

 

ஷ்ரவன் சைத்ராவின் ஆவி தெரிவித்த தகவலை குமரேசனிடம் சொன்னான். குமரேசனுக்கு ஆவி பேசுவதையே நம்ப முடியவில்லை. அவன் பார்த்த பார்வையைப் பார்த்துப் புன்னகைத்த ஷ்ரவன் சைத்ராவின் குரலிலேயே ஆவி பேசியது என்று சொன்ன போது குமரேசன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.

 

சிறிது யோசனைக்குப் பின் குமரேசன் சொன்னான். “தமிழ்நாட்டில மத்த பகுதில இருந்தும், வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மடாதிபதிகள், பிரபலமான ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் கூட வர்றதுண்டு. ஆனால் அப்படிப்பட்டவங்களும் சிஷ்யப்படைகள், சேவகர்கள் கூட தான் வர்றாங்க. அப்படி வர்றவங்க தான் பிரம்மானந்தாவைப் பார்க்க முடியும். அப்படி வர்றவங்க கூட பிரம்மானந்தாவைப் பார்த்துப் பேசிட்டு போயிடுவாங்க. சில சமயங்கள்ல பாண்டியன் அல்லது கல்பனானந்தா கூட இருக்கறதுண்டு. அவ்வளவு தான். மத்த துறவிகள் எல்லாம் அந்த ஆள்களைக் கூடப் பார்த்துப் பேச முடியாது. அதனால சைத்ரா இந்த வழக்கமான முறைப்படி அந்த யோகியைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.”

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஷ்ரவனுக்கு சைத்ரா கண்டிப்பாக யோகாலயத்தில் எந்த யோகியையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் வலுத்தது. சைத்ரா யோகாலயத்தில் அந்த யோகியைச் சந்திக்கவில்லை என்றால் எங்கே எப்படி அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கும்?

 

ன்ஸ்பெக்டர் செல்வம் யோகாலயத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட பதிலால் கடும் அதிருப்தியடைந்தார். இந்த நன்றி கெட்ட மனிதர்களுக்கு உதவி ஏமாந்ததை அவரால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. நேற்றிலிருந்தே அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இன்று அதிகரித்து விட்டது. இன்று கைதான இரண்டு பிக்பாக்கெட் திருடர்களை நையப்புடைத்து அவர் தன் ஆத்திரத்தைச் சிறிது தணித்துக் கொண்டார்.  ஆனாலும் பெருமளவு ஆத்திரம் அவர் மனதில் தங்கியிருந்தது.

 

தபால்காரர் தந்து விட்டுப் போன தபால்களைப் பிரிக்கவும் மனதில்லாமல் செல்வம் அமர்ந்திருந்தார். தூத்துக்குடியில் அவர் போகவிருக்கும் போலீஸ் ஸ்டேஷனின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள நேற்றிரவு ஒரு நண்பருக்குப் போன் செய்திருந்தார். அந்த நண்பர் சொன்னதையெல்லாம் கேட்டபோது அவருக்கு வயிற்றைக் கலக்கியது. ஏற்கெனவே அவர் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் மோசம் என்றால் புதிதாய் கேள்விப்படும் இப்போதைய நிலைமை படுமோசமாக இருந்தது. எல்லாம் அறிந்த பின் அவரால் நேற்றிரவு உறங்க முடியவில்லை. சம்பளமல்லாத சம்பாத்தியம் சிறிதுமில்லை, சமாளிக்க முடியாத பிரச்சினைகள் ஏராளம் என்ற இரட்டை நரக வாழ்க்கைக்குப் பயணமாகப் போவதை எண்ணி நொந்தபடி, அன்று வந்த தபால்களை அவர் மேலோட்டமாய் பார்த்தார். அலுவலக ரீதியாய் வந்த கடிதங்களைப் படிக்கப் போவதில்லை என்று அவர் தீர்மானித்து விட்டார். புதிதாய் வருகிறவன் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். ’இனி இங்கு கிடைக்கும் கூடுதல் சம்பாத்தியமெல்லாம் அவனுக்குத் தானே கிடைக்கப் போகிறது. அவனே இந்த வேலையைப் பார்க்கட்டும்என்று தோன்றியது.

 

வந்த தபால்களில் ஒரே ஒரு தபால் அவருடைய பெயருக்கு வந்திருந்தது. அதை மட்டும் எடுத்துப் பிரித்தார். உள்ளே ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்துக் கிழித்து அனுப்பியதாக அது இருந்தது.

 

அன்பில்லாத செல்வம்

தெய்வம் மட்டுமல்ல, ஆவியும் நின்று கொல்லும். இனி தான் என் ஆட்டம் ஆரம்பம்!

சைத்ரா

யோகாலயம்

 

படித்த போது ஒரு கணம் செல்வத்தின் முகத்திலிருந்த ரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. சாதாரணமாக இதுபோன்ற கடிதங்களை அவர் பொருட்படுத்துபவர் அல்ல. அவர் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர் தான். ஆனால் சிறிதும் எதிர்பாராத விதமாய் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆகியிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கும் இந்தக் கடிதம் அவரை அமைதியிழக்க வைத்தது. இந்த இடமாற்ற ஆணையும் கூட ஆவியின் தூண்டுதலாலோ?

 

அவர் உடனே யோகாலயத்துக்குப் போன் செய்தார். ’பார்க்கலாம், இதற்காவது அசைகிறார்களா என்று.’

 

நல்லவேளையாக யோகாலயத்தில் பேசிய துறவி, செல்வம் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்த முறையும்பாண்டியன் சார் பிசிஎன்று சொல்லாமல் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரத்தில் பாண்டியனின் குரல் கேட்டது. “ஹலோ

 

செல்வம் படபடப்புடன் பாண்டியனிடமும் தனக்கு வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிச் சொன்னார்.  பாண்டியன் அமைதியாகக் கேட்டார். “அந்தக் கடிதம் சைத்ராவோட ஆவி அனுப்பினதுன்னு நினைக்கறீங்களா?”

 

என்ன நினைக்கறதுன்னு தெரியில. நேத்து தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர். இன்னைக்கு இந்த லெட்டர். பேருக்கு கீழே யோகாலயம்னு வேற போட்டிருக்கு. அதான் உங்களுக்கு உடனே போன் செஞ்சேன்...”

 

பாண்டியனுக்கு மனிதர்களின் அடிமுட்டாள்தனத்தைச் சகித்துக் கொள்வது எப்போதுமே முடியாத காரியம். அவர் கேட்டார். “அவ பேருக்குக் கீழே யோகாலயம்னு போடாம, உங்க போலீஸ் ஸ்டேஷன் பேரைப் போட்டிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

 

செல்வத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாண்டியன் சொன்னார். “ஆவி நேர்ல வந்து உங்களுக்கு எதாவது சொல்லியிருந்தால் அதை நம்பறதுல அர்த்தம் இருக்கு. ப்ரிண்டவுட் எடுத்து அனுப்பினதை எல்லாம் ஆவி அனுப்பினதாய் நினைக்கறதுல அர்த்தம் இருக்கா?”

 

பாண்டியன் செல்வத்தின் பதிலுக்குக் காத்திருக்காமல் ரிசீவரை வைத்து விட்டார்.  செல்வத்துக்கு பாண்டியன் கேட்டதில் தவறு தெரியவில்லை. யோசித்தபடியே செல்வம் கடித உறையில் இருந்த தபால் முத்திரையை வாசிக்க முயன்றார். அனுப்பப்பட்ட தபால் ஆபிஸ் முத்திரை படிக்க முடிந்ததாய் இருக்கவில்லை. ஆனால் செல்வத்துக்கு கடிதம் யோகாலயத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பு சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் அனுப்பிய நபர் இப்போது இதை அனுப்பியிருக்கலாம்… ’அதைப் புரிந்து கொள்ளாமல் சின்னப் பையனுக்குப் பாடம் நடத்துவது போல் இந்த ஆள் பேசுகிறார். போனை வைக்காமல் இருந்தாலாவது அந்தச் சந்தேகத்தை அவரிடம் சொல்லியிருக்கலாம்...’ 


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, April 11, 2024

சாணக்கியன் 104

 

ரவு விருந்தின் போது யூடெமஸ் புதிய அவதாரமாகத் தெரிந்தான். முன்பு கடுமையாகப் பேசியவன் என்பதற்கான அறிகுறியே அவனிடம் இல்லை. சிரிக்கச் சிரிக்க அவன் பேசியதைக் கேட்டு திகைத்தது புருஷோத்தமனும், இந்திரதத்தும் மட்டுமல்ல க்ளைக்டஸும் தான். ‘இவன் என்ன பச்சோந்தி போல இப்படி நிறம் மாறிக் கொண்டேயிருக்கிறான். இப்படிச் சிரித்துப் பேசுவது யானை விவகாரத்தை மறக்கடித்து விடும் என்று நினைக்கிறானா என்ன?’ என்று க்ளைக்டஸ் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அவனுக்கு நடப்பதெல்லாம் நல்லதுக்கல்ல என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. நாளை இவர்களுக்குள் பேச்சுத் தகராறு வந்தாலும் அதையும் மொழிபெயர்க்கும் கொடுமையான வேலை அவனுக்கு மட்டுமே இருக்கிறது. ’கடந்த நாட்கள் இனிமையானவை. இனி கடக்கவிருக்கும் நாட்கள் கொடுமையாகவே தெரிகிறது...’

 

புருஷோத்தமன் விருந்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. யூதிடெமஸ் மறுநாளே போகப் போவதாக முன்கூட்டியே சொன்னதால் அவனுக்குத் திருப்தி தரும் விதமாகவே விருந்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நடன மங்கையரின்  நாட்டியமும் பாடகர்களின் இன்னிசையும் இருந்தது. அதை எல்லாம் ரசித்தபடியே யூடெமஸ் கேட்டான். “சத்ரப் ஆன பிறகு ஆம்பி குமாரன் வரவில்லையா?”

 

புருஷோத்தமன் சொன்னார். “இல்லை. ஒரு காலத்தில் எங்களுக்கு மிகத் தொந்தரவாகவே ஆம்பி குமாரன் இருந்திருந்தாலும், சத்ரப்பான பிறகு அவனால் எங்களுக்கு எந்த இம்சையும் இல்லை.”

 

க்ளைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னதில் யூடெமஸின் கவனம் இருக்கவில்லை. அவன் பார்வை கேகய இளவரசனான மலயகேதுவின் மீது நிலைத்தது. புருஷோத்தமனின் கடைசி மகனான மலயகேது திடகாத்திரமான இளைஞனாக இருந்தான். அவன் நடனமங்கையரின் நாட்டியத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சற்று முன் யூடெமஸை அவர் அறிமுகப்படுத்திய போதும் சத்ரப் என்ற பதவியின் முக்கியத்துவத்தை அவன் அறிந்தது போலவோ மதித்தது போலவோ தெரியவில்லை. சாதாரணமாகப் பெரியவர்களைப் பார்த்தால் வணங்குவது போல வணங்கி விட்டு அவன் விலகியிருந்தான். என்ன தான் வெளிப்பார்வைக்குச் சிரித்துப் பேசியபடி இருந்தாலும் யூடெமஸ் இது போன்ற மரியாதைக் குறைவுகளை உள்ளுக்குள் சகிக்க முடியாதவனாக இருந்தான்.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த இந்திரதத் கேட்டார். “என்ன சத்ரப் நீங்கள் ஆழ்ந்த யோசனையில் இறங்கி விட்டது போல் தெரிகிறது

 

உடனே முகமெல்லாம் புன்னகையான யூதிடெமஸ் சொன்னான். “என்ன செய்வது அமைச்சரே? பெரிய பொறுப்புகள் வரும் போது சேர்ந்தே பல யோசனைகளும் வந்து தொலைந்து விடுகின்றன. சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் இடத்தை யார் எப்போது நிரப்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் யாரிடம் கணக்கு தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்பதும் புரியவில்லை. புஷ்கலாவதியில் ஆக வேண்டிய வேலைகள் நிறைய தலைக்கு மேல் இருக்கின்றன

 

இந்திரதத் மனதில் சொல்லிக் கொண்டார். “அத்தனை வேலைகளுக்கிடையே இங்கே நீ வந்து தொலைய வேண்டிய அவசியம் தான் என்ன யூடெமஸ்?”

 

அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தால் அன்று அவரால் உறங்க முடிந்திருக்காது. ஒரு திட்டத்தோடு வந்திருந்த யூடெமஸ் உணவருந்தி முடித்த பிறகு புருஷோத்தமனிடம் சொன்னான். “நான் தங்களிடம் தனியாக சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மற்றவர்களை அனுப்பி விடுங்கள். மதுவருந்திக் கொண்டே நாம் பேசுவோம்

 

புருஷோத்தமன்மறுபடியுமா?’ என்பது போல சலிப்புடன் பார்த்தார். யூடெமஸ்புரட்சிப்படை வீர்ர்களுக்கு எதிராக நாம் எதிர்காலத்தில் அமைக்க வேண்டிய வியூகத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறதுஎன்றான். அவன் சொன்ன பதிலில் அவர் நிம்மதியடைந்தார். அவன் படைகள் தேவை குறித்து மறுபடி பேச ஆரம்பித்து விடுவானோ என்று அவர் பயந்தது அனாவசியம் என்பது புரிந்தது. .

 

இந்திரதத் புருஷோத்தமனைப் பார்த்தார். “நானிருக்கவா, போகவா?” என்று அவர் பார்வை மன்னரைக் கேட்டது.

 

புருஷோத்தமன் பதில் சொல்வதற்கு முன் யூடெமஸ் சொன்னான். “நீங்கள் செல்லலாம் அமைச்சரே

 

புரட்சிப்படை வீரர்களுக்கு எதிரான எதிர்கால வியூகம் பற்றிப் பேசுவதானால் இந்தக் கோமாளியைச் சமாளிப்பதில் எனக்குப் பிரச்னை இல்லை. நீ போகலாம்என்று பார்வையாலேயே புருஷோத்தமன் சொல்ல இந்திரதத் மற்றவர்கள் கிளம்பும் போது தானும் கிளம்பினார்.

 

முடிவில் புருஷோத்தமனும், யூடெமஸும், க்ளைக்டஸும் மட்டுமே இருந்தார்கள். அரசியல் இரகசியங்கள் பேசப்படும்போது சாதாரணப் பணியாளர்கள், காவலர்கள் கூட அருகில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அவர்களும் அகன்றார்கள்.

 

மதுவருந்திக் கொண்டே யூடெமஸ் புருஷோத்தமனிடம் கேட்டான். “புரட்சிப் படையினரை வாஹிக் பிரதேசத்திலிருந்து விரட்ட நாம் முயன்றால் முடியாதா கேகய அரசே?”

 

புருஷோத்தமன் சொன்னார். “நம் மொத்தப் படைகளும் ஓரணியில் திரண்டு சென்றால் அது ஒன்றும் முடியாத காரியமல்ல

 

மொத்தப் படைகளும் என்றால்?”

 

கேகயப்படைகளும், காந்தாரப் படைகளும், உங்களிடமிருக்கும் படைகளும்

 

யூடெமஸ் திகைப்புடன் கேட்டான். “அந்த அளவுக்கு புரட்சிப் படையினர் வலிமையானவர்களா என்ன?”

 

புருஷோத்தமன் சொன்னார். “அந்த அளவு புரட்சிப்படையினர் வலிமையானவர்கள் அல்ல. வாஹிக் பிரதேசத்தில் மொத்த மக்களுமே கூட நமக்கு கடுமையான எதிர்ப்பும், அவர்களுக்கு பலத்த ஆதரவும் தருகிறார்கள். அதனால் புரட்சிப்படையினரோடு மக்களையும் சேர்ந்தே சமாளிப்பதற்குப் பெரிய படையோடு செல்வது அவசியமாக இருக்கும்

 

யூடெமஸ் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். புருஷோத்தமன் தன் கோப்பையில் மதுவை நிரப்பினார். திடீரென்று யூடெமஸ் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியங்களில் ஒரு போர்க்களக் காட்சியைச் சித்தரித்த ஓவியத்தைக் காட்டி அவரிடம் கேட்டான். “அது எந்தப் போரைச் சித்தரிக்கிறது அரசே?”

 

புருஷோத்தமன் அது அவருடைய தந்தை வென்ற ஒரு போரை விளக்குவதாகச் சொல்லி விட்டு அதில் உள்ள சூட்சுமங்களை விளக்க என்று எழுந்து ஓவியத்தினருகே சென்றார். அவர் செல்கையில் யூடெமஸ் வேகமாகத் தனது குறுவாள் உறையில் சொருகி வைத்திருந்த ஒரு மிகச் சிறிய குப்பியை எடுத்து அதில் உள்ளதை புருஷோத்தமனின் மதுக்கோப்பையில் கொட்டினான்.

 

க்ளைக்டஸ் அதிர்ச்சியில் உறைந்தான். ‘என்ன செய்கிறான் இவன்?’

 

க்ளைக்டஸ் பார்த்து விட்டதை யூடெமஸ் கவனித்துகண்டு கொள்ளாதே.” என்று கள்ளத்தனமாய் சமிக்ஞை செய்தான். க்ளைக்டஸ் குழப்பத்துடன் யோசிப்பதற்குள் புருஷோத்தமன் அந்த ஓவியத்தைத் தொட்டுக் காட்டியபடி திரும்பியிருந்தார். அந்தப் போர்க்காட்சியில் நுட்பமாக விளக்கியிருந்த விஷயங்களை சுவாரசியத்துடன் விவரிக்க ஆரம்பித்தார். க்ளைக்டஸ் அவர் சொல்வதை அரைகுறையாய் தான் மொழிபெயர்த்தான். அவன் மனதில் ஏராளமான கேள்விகள். அந்தக் குப்பியில் இருந்தது என்ன? போதை வஸ்துவா? மயக்க மருந்தா? பேதி மருந்தா? விஷமா? ஏன் இதைக் கலக்கினான்? அந்த மருந்து கேகய அரசனை என்ன செய்யும்?

 

யூடெமஸ் எந்தக் கவலையுமில்லாமல் அமர்ந்திருந்தான். புருஷோத்தமன் தன் தந்தை பங்கு பெற்ற அந்த விசேஷப் போரின் நினைவுகளில் மனம் லயித்தவராகத் திரும்பி வந்து அமர்ந்து தன் மதுக்கோப்பையை எடுத்து அருந்தினார். அவருக்கு மதுவின் ருசியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்பதை க்ளைக்டஸால் யூகிக்க முடிந்தது. அவன் மனதில் பெரும் போரே நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

யூடெமஸ் திடீரென்று எழுந்தான். “கேகய அரசே. நான் கிளம்புகிறேன். சிறிது உறங்கி விட்டு அதிகாலையில் கிளம்புகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

 

புருஷோத்தமன் அவன் பழையபடி படைகள் எதுவும் கேட்காமல், கிளம்புவதில் பெரும் நிம்மதியை உணர்ந்தார். அவர் எழுந்து கைகூப்பினார். உபசார வார்த்தைகள் எதாவது சொல்ல வேண்டும் என்று அவர் நினைத்தாலும் பேச விடாமல் நெஞ்சை எதோ அடைத்தது.

 

க்ளைக்டஸும் அவரை வணங்கி விட்டு யூடெமஸைப் பின் தொடர்ந்தான். விருந்தினர் மாளிகையை அவர்கள் எட்டிய பின் அவன் குழப்பத்துடன் யூடெமஸைக் கேட்டான். “நீங்கள் அந்த மதுவில் என்ன கலந்தீர்கள்?”

 

யூடெமஸ் க்ளைக்டஸின் காதில் சொன்னான். “விஷம். கிழவன் நாளைய சூர்யோதயத்தைப் பார்க்க உயிரோடிருக்க மாட்டான்

 

க்ளைக்டஸ் அதிர்ந்து போனான். “ஏன்?”

 

யூடெமஸ் வெறுப்புடன் சொன்னான். “நான் சொல்வதை அனுசரிக்காதவன் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?”

 

க்ளைக்டஸ் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனான். அவன் முகம் போன போக்கைப் பார்த்த யூடெமஸ் சொன்னான். “கவலைப்படாதே. நாம் அவன் உயிரோடு இருக்கும் போதே அரண்மனையிலிருந்து வெளியேறியதை காவலர்களும், பணியாளர்களும் பார்த்திருக்கிறார்கள். வயதான ஆள் தூக்கத்திலேயே உயிரை விடுவது எங்கும் நடக்காததல்ல.”

 

(தொடரும்)

என்.கணேசன்





Monday, April 8, 2024

யோகி 44

ரசுராமன் அவன் மனதில் நினைத்த அந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க முற்படவில்லை. அவர் சொன்னார். “உயிரோட இருக்கறப்ப புரியாத எல்லா உண்மைகளும் இறந்த பிறகு, அதாவது ஆவியான பிறகு, புரிய வரும். ஆனால் அவர் யோகிங்கறது அப்படி இறந்த பிறகு சைத்ராவுக்குத் தெரிஞ்ச மாதிரியில்லை. பார்த்த ஆரம்பத்திலேயே அவரை தாத்தா சந்திச்சா பரவசமாவார்னு நினைச்சதா சொல்லியிருக்கா...”

 

ஷ்ரவன் யோசித்தான். ’இவர் சொல்வது போல் சைத்ரா எப்படி அந்த யோகியை அடையாளம் கண்டு கொண்டாள்? பிரம்மானந்தாவுக்கு யோகியை சிவசங்கரன் அடையாளம் காட்டிய மாதிரி வேறு யாராவது சைத்ராவுக்கு அடையாளம் காட்டியிருப்பார்களோ? அப்படியே அடையாளம் தெரிந்தாலும், தாத்தாவிடம் அதை மட்டும் குறிப்பாக அவள் ஏன் சொல்கிறாள்? ஒருவேளை அவள் மரணத்துக்கும், அந்த யோகியைச் சந்தித்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாமோ?’

 

ஷ்ரவனுக்கு விடைகள் கிடைக்கவில்லை. அவற்றைப் பிறகு சிந்திப்பதற்கு ஒதுக்கி வைத்து விட்டு, ஷ்ரவன்  அவரிடம் ஆர்வமாகக் கேட்டான். “டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு மொட்டைக்கடிதம் எழுதியது யாராய் இருக்கும்னு உங்களால சொல்ல முடியுமா சுவாமிஜி

 

பரசுராமன் தன்னால் கூடுதலாய் எதுவும் சொல்ல முடியவில்லை என்றார்.  

 

சில விஷயங்களை தன் அபூர்வ சக்திகள் மூலமாய் அறிந்து பட்டென்று சொல்லும் பரசுராமன், சில விஷயங்களில் அவனைப் போலவே சாதாரண ஆளாக, எதையும் அறிய முடியாதவராக இருப்பதை ஒத்துக் கொள்ள முடிவது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்த நேர்மை பலருக்கும் இருப்பதில்லை...

 

அவன் அவரிடம் சொன்னான். “உங்களைப் பத்தி நெட்ல பார்த்தப்ப, உங்களைக் கூடப் பலரும் யோகின்னு சொல்லியிருக்கறது தெரிஞ்சுது.”

 

அப்படி சிலர் யோகின்னு சொல்றாங்க. சிலர் மந்திரவாதின்னு சொல்றாங்க. சிலர் மேஜிக் வித்தை காட்டறவன்னு சொல்றாங்க.. சிலரோ போலிச் சாமியார்னு சொல்றாங்க. இப்படி பலரும் பல விதமாய் சொல்றாங்க. நான் எதையும் பெருசா லட்சியம் பண்ணறதில்லை. பண்ணினா பைத்தியம் புடிச்சுக்கும். நான் யாருன்னு எனக்குத் தெரியும். மாயை அதைக்கூடச் சில சமயம் மறக்க வெச்சுடும். அதனால நான் ரொம்ப கவனமாய் இருக்க வேண்டியிருக்கு.” என்று பரசுராமன் புன்னகையுடன் சொன்னார்.

 

அவர் அவனை மிகவும் கவர்ந்தார். அவர் கற்றுத் தேர்ந்திருக்கும் கலையில் அவனுக்கு நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கு இப்போது அவனுக்கு நேரமில்லை. கண்டிப்பாக ஒரு நாள் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

 

ஷ்ரவன் அவருடன் பேசுகையில் சைத்ராவின் மரணத்தில் யோகாலயத்தினர் காட்டிய அலட்சியத்தையும், செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் சுகுமாரன் பேசிய அலட்சியப் பேச்சையும் சுட்டிக் காட்டி வருத்தப்பட்டான். நாட்டின் சட்ட திட்டங்கள், பணமும், செல்வாக்கும் இருப்பவர்கள் ஏய்த்துப் பிழைக்கவும், அலட்டாமல் அராஜகங்களில் ஈடுபட வசதியாகவும் இருப்பதை வருத்தத்துடன் சொன்னான். “சாதாரண மனுஷங்க மேல் உடனடியாய் நடவடிக்கை எடுக்க முடியற மாதிரி செல்வாக்கு உள்ளவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சமயங்கள்ல எல்லாம் எனக்கு ரத்தம் கொதிக்கும். கவனமாய் அதைக் கையாண்டு காலப்போக்குல தண்டிக்க முடியும்னாலும் காத்திருந்து செய்கிறப்ப பல தடவை பொறுமையே போயிடும்…”

 

அவனுடைய நியாய உணர்வும், அநியாயத்தைக் கண்டு கொதிக்கும் உணர்வும் அவருக்குப் பிடித்திருந்தது. பிரபஞ்சம் இவனைப் போன்ற ஆட்களைப் படைத்து தான் உலகை ஓரளவு சமன்படுத்திக் கொள்கிறது என்று அவருக்குத் தோன்றியது.

 

ஷ்ரவன் சொன்னான். “கண்டிப்பாய் குற்றவாளின்னு ஊர்ஜிதம் ஆகியிருக்கற சுகுமாரனுக்கும், யோகாலயத்துக்கும் இடையே தொடர்பு இருக்குன்னு கூட எங்களால இன்னும் நிரூபிக்க முடியலை சுவாமிஜி. எங்கள் ஆள் கோவிட் நோயாளிகள் பத்தி விசாரிக்கப் போன பிறகு கூட சுகுமாரன் பிரம்மானந்தாவையோ, யோகாலயத்தையோ நேரடியாய் தொடர்பு கொள்ளலைவேற ரகசிய வழிகள்ல தொடர்பில் இருக்காரான்னு தெரியல…. பிரச்சனை என்னன்னா கிணத்துல போட்ட கல் மாதிரி குற்றவாளிகள் அவங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லாம இப்ப அமைதியாய் இருக்காங்க. செயல்பட்டுட்டு இருக்கிற குற்றவாளிகளைத் துப்பறியறது சுலபம்…”

 

பரசுராமனுக்கு அவன் சொல்வது புரிந்தது. அவர் தன்னால் முடிந்த எதாவது உதவியை அவனுக்குச் செய்ய விரும்பினார். ”பிரச்சினையைத் தீர்க்கறது தான் கஷ்டம் ஷ்ரவன். பிரச்சினையை உருவாக்கறது ரொம்பவே சுலபம். வேணுமானால், வெளிப்படையாய் குற்றவாளின்னு நமக்குத் தெரியற சுகுமாரன் சும்மா இருக்க முடியாதபடி ஒரு பிரச்சினையை உருவாக்கிடலாம்.”

 

ஷ்ரவன் யதார்த்த நிலைமையைச் சொன்னான். “அவங்க பிரச்சினைகளைத் தீர்க்கறதுல கெட்டிக்காரன்களாய் இருக்கற மாதிரி தான் தெரியுது சுவாமிஜி. எதையும் அலட்டிக்காம அமைதியாய் கையாளும் ரகமாய் தான் இருக்காங்க.”

 

பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “அடிக்கடி சந்திக்கிற பிரச்சினையை சமாளிச்சுப் பழகி தான் அதைத் தீர்க்கறதுல யாருமே கெட்டிக்காரனாக முடியும்.  ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத, தலைகால் புரியாத பிரச்சினை வந்தால், எப்படிப்பட்டவனும் அமைதியிழப்பான். அப்படியொரு பிரச்சினையை உருவாக்கறது பெரிய விஷயமில்லை. அரண்டு போகிற மாதிரி ஒன்னை உருவாக்குவோம்குற்றவாளிகள் தாங்களாய் ஒன்னு சேர்ந்து அலைமோத ஆரம்பிப்பாங்க.... அது உனக்கு உதவலாம். ஆனால் அப்படியொரு பிரச்சினையை அவங்களுக்கு உருவாக்க நீ எனக்கு ஒரு வேலை செய்து தரணும்

 

ஷ்ரவன் உற்சாகமானான். “சொல்லுங்க சுவாமிஜி. நான் என்ன செய்யணும்?”

 

பரசுராமன் சொல்ல ஆரம்பித்தார்.

 

செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் சுகுமாரனின் அறை, சிறப்பு மருத்துவர்களின் அறைகள் இருக்கும் வரிசையில் கடைசியாக இருந்தது. எலும்பு, இதயம், நியூரோ, மருத்துவர்களைத் தாண்டி இருக்கும் கடைசி அறை அவருடையது. அந்த வரிசையில் இருந்த இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தன. சில சமயங்களில் பார்க்க வந்த மருத்துவர் அறைக்கு வெளியே இடம் கிடைக்கா விட்டால், அடுத்ததாக அருகில் எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கு நோயாளிகளும், உடன் வருபவர்களும் அமர்ந்து கொள்வது இயல்பாக நடக்கும் விஷயம் தான். ஆகவே சுகுமாரன் அறைக்கு வெளியே இருந்த இருக்கைகளும் காலியாக இல்லை.

 

அவர் அறைக் கதவருகே இருந்த முதல் இருக்கையில் அமர்ந்து இருந்த இளைஞன் அங்கே எந்த மருத்துவரைப் பார்க்க வந்தவனும் அல்ல.  ஆனால் பார்க்கிறவர்கள் யாருக்கும் அவன் எந்த வித சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் பார்வை அடிக்கடி நியூரோ மருத்துவரின் அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் அந்த மருத்துவரைப் பார்க்க அமர்ந்திருக்கிறான் என்று தோன்றும்படி அவன் அமர்ந்திருந்தான். அவன் வந்து ஒரு மணி நேரமாகப் போகிறது.

 

அவன் வந்ததிலிருந்து சுகுமாரனின் அறைக்குள்ளே மூன்று ஆட்கள் போய் வந்து விட்டார்கள். இப்போது நான்காவது நபர் உள்ளே போய் சுகுமாரனுடன் பேசிக் கொண்டிருக்கிறான். உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பது லேசாக அவன் காதில் விழுந்தது. ஆனால் அதை அவன் அதிக சிரத்தையுடன் கேட்டுக் கொள்ளவில்லை.  அவன் வந்திருக்கும் உத்தேசம் அதுவல்ல.

 

சிறிது நேரத்தில் அந்த நான்காவது நபர் வெளியே வந்தார். ஐந்தாவதாக யாரும் உள்ளே போகவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து சுகுமாரனும், கைபேசியில் யாருடனோ பேசியபடி வெளியே வந்தார். அவர் பார்வை மேலோட்டமாக அவர் அறைக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள் மீது விழுந்தது. அவர் அறிந்த முகம் அங்கு இல்லாததால் அவர் பார்வை பிரத்தியேகமாக யார் மீதும் நிலைக்கவில்லை. அவர் மிடுக்கான நடை நடந்து அவர்களைக் கடந்து போனார்.

 

அவர் தூரப் போய் மாடிப்படி ஏறும் வரை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் தன் அருகிலிருந்த நபரைப் பார்த்தான். அந்த நபர் கைபேசியில் உள்ள செய்தியில் ஆழ்ந்து போயிருந்தது தெரிந்தது. அந்த இளைஞன் மெல்ல எழுந்து நின்றான். யார் கவனமும் அவன் மேல் இல்லை. சடாரென்று அவன் சுகுமாரனின் அறைக்குள் நுழைந்தான். அவன் பார்வை சுகுமாரனின் மேஜையை அலசி, மேஜை மீது இருந்த பேனாவில் நிலைத்தது. சற்று நெருங்கி வந்தவன் நாற்காலியின் ஓரத்தில் விழுந்திருந்த சுகுமாரனின் கைக்குட்டையைப் பார்த்தான். அவன் முகம் பிரகாசித்தது. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் உறையை எடுத்துப் பிரித்தான். தன் வலது கையின் இரண்டு விரல்களின் நுனியில் அந்தக் கைக்குட்டையை எடுத்து அந்த ப்ளாஸ்டிக் உறையில் போட்டுக் கொண்டு அந்த ப்ளாஸ்டிக் உறையைப் பழையபடி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தான். யார் பார்வையும் இங்கில்லை. நிம்மதியாக வெளியே வந்தவன் அமைதியாக வெளியேறினான்.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, April 4, 2024

சாணக்கியன் 103


யூடெமஸ் புஷ்கலாவதியிலிருந்து கிளம்புவதற்கு முன்பே க்ளைக்டஸுக்கு, கேகயம் வந்து தனக்காகக் காத்திருக்கும்படி தகவல் அனுப்பியிருந்தான். கேகயத்தில் அவனுக்கு உதவியாளனாகவும், மொழிபெயர்ப்பாளனாகவும் இருக்க க்ளைக்டஸ் தேவைப்பட்டான்.

 

தட்சசீலத்தில் இருந்து கேகயம் வந்து சேர்ந்த களைக்டஸை புருஷோத்தமன் அழையா விருந்தாளியைப் பார்ப்பது போலப் பார்த்தார். அலெக்ஸாண்டரின் மறைவு பாரதத்தில் யவனர்களின் நிலைமையை இப்படியாக்கி விட்டதே என்று களைக்டஸ் மனம் நொந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. யூடெமஸ் வரப்போவதாகவும், அதற்குத் தன்னை முன்பே வந்திருக்கச் சொல்லியிருப்பதாகவும் சொல்லி க்ளைக்டஸ் தன் வருகையை நியாயப்படுத்த வேண்டியதாயிற்று.  

 

புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். சசிகுப்தனின் தகவல் சரி தான் என்றாகி விட்டது என்று அவர் பார்வையால் சொன்னதை இந்திரதத் புரிந்து கொண்டு மெல்லத் தலையசைத்தார். க்ளைக்டஸுக்கோ தன்னைப் பற்றி அவர்கள் சங்கேத பாஷை பேசிக் கொள்வதாகப் பட்டது. அவனுக்கு யூடெமஸ் மீதும் நல்லபிப்பிராயம் கிடையாது. இந்த மூவரிடமும் சிக்கிக் கொண்டு இங்கே இருப்பதை விட தட்சசீலத்தில் ஆம்பி குமாரன் ஒருவனைச் சமாளித்துக் கொண்டு இருப்பது மேலாகத் தோன்றியது.

 

மறுநாளே யூடெமஸ் வந்து சேர்ந்தான். அவன் எதிர்பார்த்த வரவேற்பு கேகய மன்னனிடம் கிடைக்காதது அவனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவன் க்ளைக்டஸிடம் கேட்டான். “இது தான் ஒரு சத்ரப்புக்கு இவர்கள் தரக்கூடிய மரியாதையா?”

 

க்ளைக்டஸ் விரக்தியுடன் சொன்னான். “எல்லா மதிப்பு மரியாதையும் நம் சக்கரவர்த்தியோடு போய் விட்டது”

 

கசப்பான உண்மைகளைச் சகிக்க முடியாத யூடெமஸ் தன் முகத்தில் காட்டிய அதிருப்தியையும் புருஷோத்தமனும், இந்திரதத்தும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. முகபாவனைகளை வைத்து அதிருப்தியைப் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்களிடம் வெளிப்படையாகத் தான் அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டும் என்று யூடெமஸ் முடிவு செய்தான்.

 

அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு புருஷோத்தமனிடம் சொன்னான். “நான் படைகள் அனுப்பச் சொல்லியும் படைகளுக்குப் பதிலாக முடியாது என்று கடிதம் எழுதி அனுப்பியதை நான் ரசிக்கவில்லை”

 

களைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னவுடன் புருஷோத்தமனுக்கு இந்த முட்டாளிடம் பேசினால் பொறுமையிழந்து விடுவோம் என்று தோன்றியதால் இந்திரதத்தைப் பார்த்தார்.

 

புரிந்து கொண்டு இந்திரதத் பொறுமையாகப் பதில் சொன்னார். “சத்ரப். நீங்கள் இங்குள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது நல்லது. சக்கரவர்த்தி இங்கிருந்த காலத்திலேயே குறைந்தபட்சத் தேவையளவுக்குத் தான் இங்கே படைகளை விட்டுச் சென்றிருக்கிறார். மற்ற படைகள் எல்லாம் அடுத்தடுத்த போர்களில் ஈடுபட அவருடன் சென்று விட்டன. அந்தக் குறைந்தபட்சப் படைகளை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் நாங்கள் விழித்துக் கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் புரட்சிப் படைகள் வந்து தாக்கும் அபாயம் எங்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் கூடுதல் படைகளை உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  புஷ்கலாவதியில் உங்களைச் சுற்றிலும் உங்கள் ஆட்களும், நட்புகளும் மட்டுமே இருப்பதால் மிகவும் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மனம் வைத்தால் அங்கிருக்கும் படைகளில் ஒருபகுதியை நீங்கள் இங்கே அனுப்பி வைப்பது நியாயமாக இருக்கும்.”

 

க்ளைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னவுடன் யூடெமஸ் கடுங்கோபம் அடைந்தான். முதலாவதாக புருஷோத்தமன் பதில் சொல்வதைக் கூட கௌரவக் குறைச்சல் என்று எண்ணி அமைச்சரைப் பேச விடுவதாக நினைத்தான். அந்த அமைச்சர் பேசியது நியாயமாகவும், உண்மையாகவும் இருந்து பதில் எதுவும் சொல்ல முடியாதபடியும் இருந்து விட்டதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

அவன் கடுமையான குரலில் சொன்னான். “யவனர்களுக்கு என்று ஒரு தனி கௌரவம் இருக்கிறது. சத்ரப் நிர்வாகிக்கும் தலைநகர் என்கிற போது அந்த கௌரவத்திற்கேற்றபடி எல்லாப் படைகளும் புஷ்கலாவதியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.  நீங்கள் சொன்னபடி இங்கும் படைகளின் அவசியம் இருக்குமானால் யானைகளையாவது கணிசமான அளவில் அங்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்”

 

இந்திரதத் இந்த முட்டாளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாக இருந்தார். பதில் ஏதும் அவரிடமிருந்து வராததால் யூடெமஸுக்குத் தான் சரியான பதில் சொல்லி வாயடைத்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் படைகளைப் பார்வையிட விரும்புவதாகச் சொன்னான். படைகளைப் பார்வையிட புருஷோத்தமன், இந்திரதத், சேனாதிபதி மூவரும் அவனை அழைத்துப் போனார்கள். அலெக்ஸாண்டருக்கும் மேலான பாவனையை முகத்தில் ஏற்படுத்திக் கொண்டு அனைத்தையும் அவன் பார்வையிட்டான். பின் அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே அபத்தமான கேள்விகள் கேட்டான்.

 

மொழிபெயர்த்த க்ளைக்டஸுக்கே கேட்பதெல்லாம் மகா அபத்தமாக இருந்தன. முடிந்த வரை மொழிபெயர்ப்புத் திறனில் கேள்விகளுக்குப் பொருள் சேர்க்க அவன் பாடுபட்டான். ஆனால் முடிவிலும் அவை அபத்தமாகவே வெளிப்பட்டன.  சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ பதில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அவனது கோமாளித்தனங்களைச் சகிக்க முடியாத புருஷோத்தமன் “சத்ரப் எனக்குத் தலைவலிக்கிறது. சற்று ஓய்வெடுக்கிறேன். நீங்கள் பார்வையிட்டு அரண்மனைக்கு வாருங்கள்.” என்றார்.

 

யூடெமஸ் அதிசயமாக அக்கறையுடன் சொன்னான்.நீங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் கேகய அரசே. அமைச்சரே தாங்கள் மன்னரை அழைத்துச் செல்லுங்கள். என்னுடன் சேனாதிபதி இருந்தால் போதும். நான் நாளையே புஷ்கலாவதிக்குத் திரும்பிச் செல்வதாக இருப்பதால் இன்றே முக்கிய வேலைகளை முடித்துக் கொள்கிறேன்.”

 

இந்திரத்ததும், புருஷோத்தமனும் யூடெமஸ் சொன்ன செய்தியில் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். அரண்மனையில் இரவு விருந்துக்கு அவனுக்கும் க்ளைக்டஸுக்கும் அழைப்பு விடுத்து விட்டு “சரி இரவு விருந்தில் சந்திப்போம்.“ என்று கூறிவிட்டு அங்கிருந்து விடுபட்டார்கள்.

 

அவர்கள் சென்ற பிறகு சேனாதிபதியுடன் சேர்ந்து சிறு படைத்தலைவர்களை எல்லாம் சந்தித்து அலெக்ஸாண்டரின் பெருமைக்குச் சிறிதும் பங்கம் விளைவித்து விடாதபடி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், புரட்சிப் படை வீரர்கள் வருவார்களேயானால் அனைவரும் தக்க பதிலடி தர வேண்டும் என்றும் அறிவுரை சொன்னான்.

 

பின் யூடெமஸ் யானைப் படைகளைப் பார்வையிட்டான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளைப் பார்க்கையில் அவன் கண்கள் விரிந்தன. அவன் உற்சாகத்தைப் பார்த்த சேனாதிபதி யானைகளின் வீரதீரப் பராக்கிரமங்களை விவரித்து மேலும் சந்தோஷப்படுத்தினான்.  யூடெமஸ் யானைகளுக்கு மத்தியில் அதிக நேரம் செலவிட்டான்.

 

பின் அவன் யவனப் படைவீரர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசினான்.  அவர்களுக்கு அங்கு ஏதாவது பிரச்னைகள் உள்ளனவா, பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று அக்கறையோடு கேட்டான். அவர்கள் அங்கு தங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார்கள். க்ளைக்டஸ் மெல்லச் சொன்னான். “நம் வீரர்களுக்கு இங்கும் காந்தாரத்திலும் உண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை”

 

யூடெமஸ் சொன்னான். “நல்லது. இதே சூழல் நாம் சீக்கிரத்திலேயே மீட்கப் போகிற நம் பழைய பகுதிகளிலும் நிலவப் போகிறது. பார்த்துக் கொண்டே இருங்கள்” யவன வீரர்கள் முகத்தில் உற்சாகம் தெரிந்தது.  

 

யூடெமஸ் கேட்டான். “இங்கு நம் வீரர்களில் எத்தனை பேர் யானைகளை இயக்கும் திறன் படைத்தவர்கள்?”

 

ஐம்பத்திரண்டு யவன வீரர்கள் கையுயர்த்தினார்கள். அவர்களிடம் யூதிடெமஸ் சொன்னான். “நல்லது நீங்கள் புஷ்கலாவதிக்குக் கிளம்பத் தயாராகிக் கொள்ளுங்கள். நாளை அதிகாலையில் கிளம்ப வேண்டும்.”

 

பின் சேனாதிபதியிடம் சொன்னான். “நான் அரசரிடம் பேசியாகி விட்டது. ஐநூறு யானைகளை என்னுடன் அனுப்ப அவர் சம்மதித்திருக்கிறார். அவர்களுடன் இந்த யவன வீரர்களையும் அழைத்துச் செல்கிறேன். ஐநூறு யானைகள், யானைப் பாகன்கள், பயிற்சியாளர்களும் என்னுடன் நாளை அதிகாலை செல்லத் தயார்ப்படுத்துங்கள். சமயம் அதிகமில்லை நம்மிடம்”

 

சேனாதிபதி தலையசைத்தான். க்ளைக்டஸ் திகைத்தான். யூடெமஸ் வந்த கணத்திலிருந்து அவன் கூடவே தான் இருக்கிறான். கூசாமல் ஐநூறு யானைகளை அனுப்ப புருஷோத்தமன் சம்மதித்து விட்டதாக இவன் கூசாமல் பொய் சொல்கிறானே.  புருஷோத்தமன் கண்டிப்பாக இதற்குச் சம்மதிக்க மாட்டானே. எல்லாம் எதில் கொண்டு போய் முடியுமோ?

 

(தொடரும்)

என்.கணேசன்